Friday, August 3, 2018

VITHTHU



''வித்து'' - J.K. SIVAN

கிருஷ்ணா உன்னை சந்தித்து வெகுநாளாகி விட்டதே என்றான் யுதிஷ்டிரன்.
புன்னகையோடு தலை அசைத்தான் கிருஷ்ணன். ''ஆமாம்''

எங்கே சென்றிருந்தாய் கிருஷ்ணா?

எங்கே எப்போது எதற்கு செல்கிறேன் என்பது எனக்கே தெரியாது யுதிஷ்டிரா. ஏதேனும் ஒரு வேலை, யாருக்கோ, எங்கோ எதற்கோ உதவ நான் சொல்லவேண்டியிருக்கிறது. பழக்கமாகி விட்டது. அதுசரி
யுதிஷ்டிரா, உன்னுடையநாட்டில் மக்கள் எல்லோரும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது.!"

''ஆமாம் இந்திரப்பிரஸ்தம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு வருகிறது. நாங்கள் சகோதரர்கள் ஐவரும் நாட்டு மக்களின் நலன் ஒன்றே பிரதானமாக பாடு பட்டு வருகிறோம். மக்களை ரட்சிப்பது மன்னனின் கடமை அல்லவா கண்ணா?" என்றான் தர்மன் .

"இந்த்ரப்ரஸ்தத்தில் இப்போதெல்லாம் எங்கிருந்தெல்லாமோ வந்து நிறைய பேர் குடியேறுகிறார்களாமே. அண்டை நாடுகளில் ராஜாக்களுக்கு இது பொறாமையாமே. கதவுகளே இல்லாத வீடுகளாம். திருடர் பயம் இல்லையாம் இரவிலும் கூட பெண்கள் தனித்து நடமாடலாமாம். யார் வீட்டிலும் தனி சமையல் இல்லையாம். உன் அரசாட்சியில் ஒவ்வொருநாளும் மக்கள் குதூகலமாக உள்ளனராம்!! ஊரெங்கும் இதே பேச்சு. கேள்விப்பட்டேன் சந்தோஷமாக இருந்தது யுதிஷ்டிரா !" .

"கிருஷ்ணா, உனக்கு தெரியாததா. நான் உன்னைப் பின்பற்றுபவன். உன் துவாரகை ராஜாங்கத்தின் அருமையில் ஒரு சிறு அம்சமாகவாவது என் இந்த்ரப்ரஸ்தம் இருக்கவேண்டும் என்று எனக்கு ஆசை இருக்காதா ?""

"அது சரி நீ ஏன் ஒரு பெரிய மாளிகை கட்டிகொள்ளவில்லை?".

"எங்கள் ஐவருக்கும் போதுமான இடம் இந்த சிறிய அரண்மனையில் இருக்கிறதே கண்ணா!".

"நீ ஒரு மகாராஜா. உன் சகோதரன் துர்யோதனனை பார் ஹஸ்தினாபுரம் மாளிகை எவ்வளவு பெரியதாக கட்டியிருக்கிறான்!"

"கிருஷ்ணா, எனக்கு அதில் எல்லாம் விருப்பமில்லையே.!"

"அரசனுக்கு என்று ஒரு அந்தஸ்து இருக்கிறதே. அதை கடைபிடிக்கவேன்டாமா? பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ சில நிர்பந்தங்களுக்கு நீ உன்னை கட்டுப்படுத்திக்கொண்டு ஆகவேண்டும்!".

"இதால் என்ன பிரயோஜனம் கண்ணா?".

" பலன் எதிர்பார்க்காதே தர்மா. வெயிலும் மழையும் இரவும் பகலும், இயற்கைவிதி. அதுபோல் மனிதன் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டும் கலந்தே வரும். நீ அனைத்தையும் சமமாகவே ஏற்றுக்கொள். உனக்கு பிடித்த சிலவற்றை செய்வாய் அதால் பிறர்க்கு துன்பம் வரும். உனக்கு கூடாது என்று ஒரு கொள்கை வைத்துகொள்வாய். அதால் மற்றவர்க்கு பேராபத்தும் நேரலாம். எது எப்போது அமையவேண்டுமோ அது அவ்வாறே நிகழட்டுமே!" .

"கண்ணா எல்லாம் நீ சொல்படியே . நீ காட்டிய வழியில் செல்பவன் நான். நானும் பாண்டவர்க்கு என்று ஒரு மாளிகை கட்டிகொள்கிறேன். அர்ஜுனனுக்கும் இப்படி ஒரு எண்ணம் வெகுநாளாக உண்டு" என்றான் தர்மன்.

"கவலை வேண்டாம் நானே மயனிடம் பேசி ஏற்பாடு பண்ணுகிறேன் " என்றான் கிருஷ்ணன். அவன் விதானத்தில் ஒரு கள்ள சிரிப்பு தோன்றி மறைந்தது.

மயன் இதுவரை எவரும் காணா அளவுக்கு இந்த்ரப்ரஸ்தத்தில் ஒரு மாளிகை எழுப்பினான். யுதிஷ்டிரன் பெரிய ராஜ சூய யாகம் நடத்தி ராஜாதி ராஜனாக பிரகடனம் செய்யப்பட்டான். அண்டை அயல் ராஜாக்கள் அனைவரும் வரவேற்கப்பட்டு துரியோதனனும் குடும்பத்தோடு வந்தான். அன்றிலிருந்து துரியோதனன் தூங்கவே இல்லை.

பிறகு நடந்தது தான் தெரியுமே. சகுனி மாமா திட்டம் தீட்டி தர்மனை சூதாட்டம் ஆடவைத்து இந்த அரண்மனை மாளிகை, ராஜ்ஜியம், சகோதரர்கள், மனைவி எல்லாம் இழந்தது வனவாசம் தலைமறைவாக ஒருவருடம், பின்னர் போரில் வென்றது.

கிருஷ்ணன் இதையெல்லாம் உணர்ந்து தான் தர்மனை மாளிகை கட்ட சொன்னானோ. பாரத போருக்கு மாளிகை தான் வித்தோ?

காரணம் இன்றி காரியமேது. கிருஷ்ணாவதாரத்தின் காரண காரியம் துவங்கிவிட்டதோ !!!"

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...