Friday, August 10, 2018

ganga vijayam


                                                                                              கங்கா விஜயம் -- J.K. SIVAN 

(எதுவும் எவருக்கும் சொந்தமில்லை, கொண்டுவந்ததுமில்லை.கொண்டுபோகப்போவதுமில்லை. இது வாஸ்தவம்.
நான் சில மாதங்களுக்கு முன்பு எழுதிய ஒரு கட்டுரை எங்கெங்கோ சென்று திரும்பி என்னிடமே இன்று என் பெயரை இழந்து வந்தது. அதை படித்ததும் ''அட இது நன்றாக இருக்கிறதே. வர்ணனை, விவரங்கள் எல்லாமே என் மனதில் தோன்றுவதைப் போலவே இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டேன். சில இடங்களில் அடுத்த வரிகள் எப்படி இருக்கவேண்டும் என்று என் மனதில் பட்டதோ அதே அங்கே தோன்றியவுடன் தான் ஆஹா இது நான் வடித்தது என்ற பெருமை வந்தபோது ஒரு சிறு ஆதங்கமும் சேர்ந்தது. என் படைப்பு ஏன்,  எப்படி   எதற்கு   என் பெயரை  இழந்தது!!? .

பிடித்திருந்ததால்  யாரோ  பாவம் என் பெயரின்றி அதை உலவ விட்டிருக்கிறார்கள். இது நிறைய பேருக்கு சந்தோஷம் அளித்தால் எனக்கும் தானே மகிழ்ச்சி என்று சமாதானம் அடைந்தேன்.- ஜே .கே. சிவன்)

++                                           
என் பள்ளி காலத்தில் ஹிந்தி கற்றுக்கொள்ள வழியில்லை. பதினைந்து வயதில்..   பிறகு ஹிந்தி காணாமல் போனது. ஹிந்தி வேண்டாம் என்பதற்காக இருப்பது எல்லாவற்றையும் பற்ற வைத்தார்கள். ஒருவர் ஓடாத ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து ஹிந்தி ஒழிப்புக்காக உயிரையோ  தலையையோ கொடுப்பேன் என்று படுத்தார்.

ஆகவே  மூன்று ரூபாய் ட்யூஷன் பீஸ் ராதா அம்மாளுக்கு கொடுத்தேன்.ஹிந்தி  வாரத்தில்  ரெண்டு நாள்  சொல்லி கொடுத்தாள் . அப்போது படித்த ஹிந்தி பாடப் புத்தகத்தில் ஒரு மறக்கமுடியாத கதை.

கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில்.

ஒரு  பிராமண பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன் வேண்டுவான்.

அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். அவனோடு பேசுவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்தார். நன்றாக தைத்து கொடுத்தான்.   ''இந்தா கூலி '' என  அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வரமாட்டாரே .

''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை  தினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.

' இல்லை இல்லை,  உன் காசு எனக்கு வேண்டாம்.  நீ தைத்ததற்கு  கூலி. இலவசமாக சேவை  எனக்கு வேண்டாம்.'' --  பண்டிதர்.

''ஐயா அப்படி என்றால்  இந்த  ஏழைக்கு ஒரு உதவி செய்வீர்களா?  தூர இருந்து  கங்காமாதாவை அனுதினமும் வணங்குகிறேன் என்னால்  வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. என் காணிக்கையாக நீங்களே என் கூலியான இந்த  ஒரு அணா காசை  அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?'

''ஓஹோ,  உன்  ஓரணாவை கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி''

பண்டிதர் கங்கையில் இறங்கினார் வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். ''அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள்''     என்று சொல்லி வீசி எறிந்தார்.

நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது பேசியது.

''பண்டிதரே,  மிக்க மகிழ்ச்சி,    இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள்'' என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை  தன கையிலிருந்து கழற்றி கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான். அதை வாங்கினான்.

அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டான். கிழவினிடம் அது பற்றி ஒன்றுமே சொல்லாமல் வீட்டிற்கு போனான் .

'' கமலா, இதோ பார்த்தாயா, நான்  எதற்குமே பிரயோஜனம் இல்லை, ஏட்டுச் சுரைக்காய் என்பாயே'' இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?

''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்? உங்களைப் போல்  சில  உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள். இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். '' என்றாள் மனைவி.

''அசடே, இதைப் பார். என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால் நான்  பெற்றது. உனக்காக நான் சம்பாதித்தது'' என்று கங்காதேவி தந்த ஒற்றை வளையலை தந்தான் பண்டிதன். கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது. என்ன ஒருவளை தானா? இன்னொன்று?''

''அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன்'' என்று சமாளித்தான் பண்டிதன். இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள்.  இவ்வளவு விலை உயர்ந்த பொருள் நம்மிடம் இருப்பது தெரிந்தால்  திருடர்கள் கொள்ளையர்களால்  நம்  உயிர் போனாலும் போகலாம்.  உடனே ஒரு காரியம் செய்யுங்கோ''
இந்த ஒண்ணை வச்சுண்டு என்ன பிரயோஜனம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளையை  கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம். ரெண்டு வேளை சாப்பிடலாம்.

ராஜாவிடம்  வளையைக் கொடுத்தான். ராஜா வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையை கொடுத்தான். மிக்க மகிழ்ச்சி அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ''இன்னொன்று எங்கே?. எனக்கு உடனே அதையும் கொடுங்கள்  ஏமாற்றாதீர்கள்.''

ராஜா  ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வரச்  செய்தான்.

''ஹே ப்ராமணா. இன்னொரு வளை எங்கே? நீ  ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''

பிராமணன் தயங்குவதைப்  பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது. ''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையுடன் நீ வரவில்லை என்றால் உன் தலை  உனதல்ல. வளையா  தலையா  என முடிவு செய்து கொள்' என்றான். எம பயத்தோடு  பண்டிதன்  ஓடினான்  கங்கைக்கரைக்கு.

அந்த கிழவன் வழக்கம்போல் அதிகாலையில்   தூர நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கினான். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டான் அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.

திடீரென்று தன முன்னே பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.

''சாமி நீங்க என்ன செய்றீங்க?"' என்ன ஆச்சு உங்களுக்கு? மஹா பாவம் செய்யறீங்க.  உங்களை எப்போவும் நான் தானே வணங்கறது?''

''என்னை மன்னிச்சுடுப்பா. நான் துரோகி. கங்கா மாதா உனக்கு கொடுத்த பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன் அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது''.   அழுது கொண்டே   விஷயத்தை கக்கினான் பண்டிதன்.

''ஆஹா அந்த வளையால் உங்க உயிருக்கு இப்படி ஒரு ஆபத்தா?  நமக்கு யார் உதவி செய்வாங்க இப்போ ? எப்படி இன்னொரு வளையல் கிடைக்கும்? கங்காமாதாவையே வேண்டி உயிர் பிச்சை  கேட்போம்.

கிழவன் கண்ணை மூடினான். தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான். 

''அம்மா கங்கா நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.

மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.

அப்புறம் என்ன நடந்ததா??

பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றியே  கவலைப் படவில்லை. வீடு, கமலா எல்லாவற்றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று. அங்கேயே கிழவனின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.

என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினான் கிழவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...