Thursday, August 16, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி  J.K. SIVAN 
சேஷாத்ரி ஸ்வாமிகள் 
                                                           
           12    அதிர்ஷ்டம் யாருக்கு இருக்கோ?

திருவண்ணாமலையில்  நிறைய கடைகளில் இன்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் படம் இருக்கும். அதற்கு முதலில் கற்பூரம் காட்டி வணங்கி விட்டு தான் வியாபாரம் ஆரம்பிக்கும். அவர் இருந்த காலத்தில் எப்போது எந்த கடைக்குள் நுழைவாரோ தெரியாது. பார்த்தவை எல்லாவற்றையும் எடுத்து வீசுவார். காசு வைக்கும் கல்லா பெட்டியை திறந்து அலசுவார். காசை எடுத்து இறைப்பார். சென்று விடுவார். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு கடைகளாவது அவரால் விஜயம் செய்யப் படும். அன்று அந்த வியாபாரிக்கு அமோகமாக வியாபாரம் நிகழும். ஒவ்வொருவரும் தினமும் வரிசையாக கடை வாசலில் நின்று கொண்டு அவர் வருகிறாரா என்று பார்ப்பார்கள். வணங்கி வரவேற்பார்கள். அவர் லக்ஷியம் செய்யாமல் சென்று கொண்டிருப்பார். எப்போது தோன்றுமோ? எந்த கடையோ ? அது பாக்கியம் செய்தது.

அப்படி பாக்யம் செய்த ஒரு கடை முத்தியாலு செட்டியார் கடை.    அடிக்கடி அதற்குள் செல்வார். செட்டியாருக்கு ரெண்டு கடை யில்  வியாபாரம் நடந்தது.  . ஒன்று மளிகை கடை. இன்னொன்று துணிக்கடை. கற்பூரத்தை மட்டும் தானே வியாபாரம் செய்வார். அவர் கொடுக்கும் காலணா கற்பூரம் மற்ற கடைகளில் எட்டணாவுக்கு கிடைக்கும் அளவுக்கு அதிகமாகவே கொடுப்பார்.

''செட்டியார், எதற்கு நிறைய கற்பூரம் தருகிறீர்கள். நஷ்டம் இல்லையா?'' என கேட்டால்

''ஏண்டா, முட்டாப்பயலே,   கற்பூரத்தை திங்கவா முடியும். அருணாசலேஸ்வரனுக்கு நிறைய நம்மிடமிருந்தே போகட்டுமே! புண்யமில்லையா?'   'என்பார். கோபம் வராது. கடையில் வேலை செய்பவர்கள் திருடினாலும் வேலையிலிருந்து நீக்க மாட்டார்.

''மடையா,   இனிமே இப்படி பண்ணாதே'' என்பதோடு சரி.

சாதாரணமாக சொல்ப பணத்தில் ஆரம்பித்த செட்டியார் கடை சேஷாத்திரி ஸ்வாமிகள் நுழைந்தவுடன் பல லக்ஷங்கள் மதிப்புள்ள  சாமான்கள் கொண்ட கடையாகி விட்டது .

ஒருநாள் சுவாமி திடுமென செட்டியார் மளிகை கடைக்குள் நுழைந்தவர் கண்ணில் ஒரு நெய் டப்பா பட்டுவிட்டது. அதை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டுவந்து தெருவெல்லாம் நீர் தெளிப்பது போல் தெளித்து காலியாக்கி டப்பாவை கடைக்குள் எறிந்துவிட்டு போனார். செட்டியார் கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டு சும்மா நின்றார். என்ன ஆயிற்று தெரியுமா? முன்னூறு ரூபா நெய் போனாலும் ஆச்சர்யமாக அன்று மாலை வெகு வருஷமாக ஏமாற்றிக் கொண்டிருந்த ஒரு கடன்காரன் கொடுக்க வேண்டிய பாக்கி வட்டி எல்லாமாக சேர்த்து எழுநூற்றி ஐம்பது ரூபாயை மூட்டை கட்டி கொண்டு வந்து கொடுத்தான். அது வராது என்று எள்ளும் நீரும் செட்டியார் எப்போதோ பல வருஷங்களுக்கு முன்னால் இறைத்து விட்டாரே. இதற்கு ஸ்வாமிகள் செயலே காரணம் என்று நம்பினார்.

செட்டியாரின் துணிக்கடைக்குள் ஒரு நாள் சென்று எல்லாவற்றையும் பார்த்த  ஸ்வாமிகள்  ஒரு விலையுயர்ந்த ஜரிகை வேஷ்டியை கையில் எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தவர் திடீரென அதை நார் நாராக கிழித்துவிட்டார். அந்த கிழிந்த ஜரிகை வேஷ்டி துண்டுகளை எச்சம்மா வீட்டுக்கு போய் அங்கிருந்த எருமை, பசு,   கொம்புகளில் கட்டி விட்டார்.

செட்டியாருக்கு அன்று ரெண்டாயிரம் ரூபாய் லாபம். வேஷ்டி இருநூற்று எண்பது ரூபாய் தானே.

ஒருதடவை ஒரு மாம்பழக் கடை வாசலில் மலைபோல் மாம்பழங்கள் குவிந்திருந்தது ஸ்வாமிகள் கண்ணில் பட்டவுடன் வேகமாக போய் ஒரு மாம்பழத்தை எடுத்தார். கடைக்கார முதலாளி இல்லை. இருந்திருந்தால் அப்படியே விழுந்து வணங்கி இருப்பார்.  அந்த  தெருக்கடையில்   இருந்தவனோ புதிதாக ஒரு வேலையாள். அவன் ஸ்வாமியை  பார்த்ததில்லை. அவரைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன். 

''காசு எங்கே,  பழத்தை எடுத்தியே, அதுக்குள்ளே  கடிச்சுட்டியே காசு தராமல்?''

''ஸ்வாமிகள்  அவனைப் பார்த்து காசு இல்லை என்று ஜாடை காட்டினார்.''

அவன் கோபமடைந்து   கெட்ட வார்த்தைகளால் திட்டி அவர் கையிலிருந்த பழத்தை பிடுங்கி வைத்துக் கொண்டான்.   ஒன்றும் சொல்லாமல்  சேஷாத்ரி  ஸ்வாமிகள்  போய் விட்டார்.
ரெண்டு மூன்று தினங்கள் ஆகியும் ஒரு பழம் கூட விற்காமல் மலைபோல் இருந்த அத்தனை பழங்களும் அழுகி நாசமானது தான் மிச்சம். ஊரெல்லாம் பல மாதங்கள் இதே பேச்சு. கடைக்காரன் அந்த புது ஆளை நையப் புடைத்து  வெளியே விரட்டிவிட்டான்.

முருகன் ஒரு வண்டி மாட்டு வைத்து ரயிலடிக்கு சவாரி ஓட்டுபவன்.  திருவண்ணாமலை சாது சத்திரம் பக்கத்தில் அவனுக்கு  ஓட்டு வீடு.

ஒருநாள் சுவாமி அந்த பக்கமாக நடந்து வந்தவர் அவன் வீட்டில் புகுந்து விட்டார். முருகனின்  அம்மா
உண்ணாமுலைக்கு ஸ்வாமிகளைத் தெரியும். அவள் அவரது  பக்தை.   அவரை வரவேற்றாள். 

''பசிக்குது. கூழு வச்சிருக்கியா. குடு ''

''ஒரு மிடாவில் இருந்த கூழை மோர் விட்டு கலக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு போட்டு கொடுத்தாள் . 

ஸ்வாமிகளுக்கு  ரெண்டு மூன்று நாளாக சாப்பிடாமல்  பசி.    கூழ்  முழுதும் குடித்துவிட்டு ''இன்னும் கொஞ்சம்'' என்கிறார்.

ரெண்டாவது தடவையும் பாத்திரம் முழுதும் குடித்தார்''

''டே,  முருகா எழுந்திருடா சாமி வந்திருக்கு கும்பிடு '' என்று திண்ணையில் தூங்கிய முருகனை எழுப்பினாள் தாய்.    தூக்க கலக்கத்தில் அவன் எழுந்து ''தூங்கிட்டேன் சாமி '' என வணங்கினான்.

''ஏன் வண்டி ஓட்டலை இன்னிக்கு?''என்கிறார்.
''வியாபாரம் இல்லை சாமி. மாட்டுக்கு தீனி வாங்க கூட காசு போதலை. வண்டியிலே ரிப்பேர் இருக்கு. சரி பண்ண வழியிலேயே சாமி. ஒன்னும் தெரியாம முழிக்கிறேன்''

''நாளைக்கே வண்டியை மாட்டை எல்லாம்  வித்துடு. உனக்கு இனிமே அது வேண்டாம். உடனே வித்துடு '' என்று சொல்லிவிட்டு போனார்.   முருகன் அன்றே ஒரு ஆசாமியிடம் வண்டியையும் மாட்டையும் கை மாற்றி விட்டான்.

ஒரே வாரத்தில் முருகனுக்கு கல்யாணம் திடீரென்று நிச்சயம்  ஆச்சு. வெகு வருஷங்களாக பார்க்காத ஒரு நெருங்கிய உறவுக்காரர் தனது ஒரே பெண்ணை முருகன் வீடு தேடி வந்து நிச்சயம் பண்ணி கல்யாணம் நடந்தது. சென்னையில் ஒரு இடத்தில் வசதியான குடும்பம். பல ஆயிரங்கள் மதிப்புள்ள (இப்போது லக்ஷமோ கோடியோ) அந்த சொத்துக்கு முருகன் தான் அதிபதி. நிறைய நகைகள் வேறு. உண்ணாமுலையின் கூழுக்கு இப்படி ஒரு பரிசா!! 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...