Wednesday, August 8, 2018

lalitha sahasranamam



    ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (321 - 333)   -  J.K. SIVAN

काम्या, कामकलारूपा,
कदम्ब कुसुमप्रिया ।
कल्याणी, जगतीकन्दा,
करुणारस सागरा ॥ 73 ॥

Kaamya Kamakala roopa
Kadambha kusuma priya
Kalyani Jagathi kandha
Karuna rasa sagara

காம்யா காமகலாரூபா
கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ ஜகதீகந்தா
கருணாரஸ ஸாகரா || 73

कलावती, कलालापा,
कान्ता, कादम्बरीप्रिया ।
वरदा, वामनयना,
वारुणीमदविह्वला ॥ 74 ॥

Kalavathi Kalaalapa
Kaantha Kadambari priya
Varadha Vama nayana
Vaaruni madha vihwala

கலாவதீ கலாலாபா
காந்தா காதம்பரீ ப்ரியா |
வரதா வாமநயநா
வாருணீ மத விஹ்வலா || 74

                       
               ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  (321 -333)  அர்த்தம்


* 321 * காம்யா  -  அன்பினால்  ஆளவந்தவள் அம்பாள்.  காமம் என்றாலே  உடல்பசி என்ற தப்பான எண்ணம் நிலவுகிறது. காமம் என்றால் வடமொழியில்  பூரண அன்பு. காமாக்ஷி என்றாலே  தயை, கருணை பொழியும் கண்களை உடையவள் என்று தான் அர்த்தம்.   காமம் என்றால் நாம் விரும்புவது. மோக்ஷம் கேட்கிறோமே தருவது யார், யாரால் முடியும்.  அம்பாள் ஸ்ரீ லலிதை ஒருவளால்  தான் அதை அனுக்கிரஹம் செய்ய முடியும். 


* 322 * காமகலாரூபா --  அன்புக்கு ஒரு உருவம் தேடினால்  கிடைப்பது ஸ்ரீ லலிதாம்பிகை தான்.  நுண்ணிய  காமகலா ரூபத்தில்  ஸ்ரீ பரமேஸ்வரன் கண்ணுக்கு மட்டுமே புலப்படுபவள். 

* 323 * கதம்ப குஸுமப்ரியா   -- கட்டு கட்டாக பல நிறங்களில் கதம்ப மலர்கள் அடர்த்தியாக இருந்தால் மயங்காத பெண் இல்லை.  அம்பாள் அபரிமிதமாக  கதம்ப மலர்ப் பிரியை.  கதம்ப மலர் வனத்திலே வசிப்பவள் என்று அவளை சொல்வதுண்டு. ''கதம்ப வன வாஸினி''  .  ஐந்து புனித மரங்களில்  கடம்ப மரம் ஒன்று. மனோரஞ்சித மலர் தரும் மரம்.

* 324 * கல்யாணீ  --   நல்லதே செய்பவள், தருபவள் நடத்தி வைப்பவள்  அம்பாள்.  கல்யாணம் என்றால் சிறந்த, அற்புத, புண்ய, புனித நிகழ்வு. 

* 325 * ஜகதீகந்தா --  இந்த ப்ரபஞ்சத்திற்கே  ஆணி வேர் ஸ்ரீ லலிதாம்பிகை.   இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் பிரம்மம். அது அவளே அல்லவா?

*326*    கருணாரஸ ஸாகரா --   சுருக்கமாக சொல்வோமே  கருணைக் கடல். அது ஸ்ரீ லலிதாம்பிகை தான்.  தயை, கருணை, காருண்யம், அன்பு,  பாசம், நேசம் அனைத்தும் நம் மீது வைப்பவள்  நம் தாய் ஸ்ரீ அம்பாள் ஒருவள். அம்மாள் தான்  அம்பாள். 


*327*  கலாவதீ --  அம்பாள் 64 கலைகளின் ஸ்வரூபமானவள்.  எனவே அவள் நாமம் கலாவதி .  சௌந்தர்ய லஹரி 31 வது ஸ்லோகத்தில் “catuḥ-ṣaṣṭyā tantraiḥ sakalm”  ''சது சஷ்டிய  தந்த்ரை  சகலம் ''  அதாவது  இந்த 64 கலைகளும் தான் பிரபஞ்சத்தில் எல்லாம்  என்கிறது.  64 கலைகள் என்ன என்று மேலே சொல்லியிருக்கிள்றன். வேண்டுமானால் மீண்டும்  பார்த்துக் கொள்வோம்.

*328* கலாலாபா  --      சிலர்  ஏதோ ஒரு பாஷையில் பேசினாலும்  அது புரியாவிட்டாலும், அவர்கள்  பேசும் தன்மை, குரலின் இனிமை நம்மை  மேலும் மேலும் கேட்கவேண்டும் என்று தேட வைக்கும்.  எனக்கு இந்தி தெரியாத போதும்  லதா மங்கேஷ்கர், தலத் மஹ்மூத்,  ரபி  பாடல்கள், அவர்கள் பாடுவிதத்தில் லயிக்க வைக்கும்.   ம்ருது பாஷிணி என்று அம்பாளுக்கு பெயர்.  ''கலையை  ஆலாபனை''    (''கலா-ஆலாபா) '' செய்வது போன்ற குரல் உடையவள் அம்பாள் என்கிறது இந்த நாமம்.   

வித்யைகள்  பதினெட்டு வகைப்படும்:  சிக்ஷா, கல்பா, வ்யாகர்ணம், நிருக்தம், ஜ்யோதிஷம்,  சந்தஸ், ரிக்வேதம், யஜுர்வேதம்,  சாமவேதம், அதர்வ வேதம்,  பூர்வ, உத்தர மீமாம்சம், நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், நீதி  சாஸ்திரம். இவையெல்லாம் தெரியாவிட்டாலும் பேராவது தெரிந்து கொள்வோம்.

*329*  காந்தா--  காந்த சக்தி கொண்டு ஈர்ப்பவள் அம்பாள்.  வைத்த கண் வாங்காமல் என்று சொல்வோமே  அப்படி பார்க்கவைப்பவள்  ஸ்ரீ லலிதாம்பிகை. 

*330* காதம்பரீ  -   காதம்பரம்   ஒரு வகை மது.  கடம்ப மலர்களை பிழிந்து வடிகட்டி பெறுகிற மது. மழைநீர் கடம்ப மரத்தின் பொந்துகளில் நிரம்பி மலர்கள்  பூக்கின்ற போது அவற்றின் தேனோடு சேர்ந்து  வடிக்கின்ற  மதுவிற்கு  காதம்பரி  என்று பெயர்.  மிகுந்த போதை தருவது.     இடக்கை  வழிபாடு என்று தாந்த்ரீக சாஸ்திரத்தில் உண்டு.  அதில் ஐந்து ரகம்.  மது வர்க்கம்,  மாம்சம்,  மத்ஸ்யம்  எனும் மீன்,  மைதுனம் (இனச் சேர்க்கை), முத்திரை, (சைகை).   அம்பாள்  இவ்வாறு மனதிற்கு பரப்பிரம்ம  போதை அளிப்பவள் என்று இந்த நாமத்தை கொள்ளலாம்.

*331* வரதா  -   வரம் தருபவள். வலது கரம் தான் வழக்கமாக வரம் தரும் கை .  அம்பாள் வலது உள்ளங்கை காட்டி வரம் அருளவில்லை.  அவளுடைய புனித திருவடிகள் வரம் தருபவை.  அவள் காம தாயினி.  கேட்டதை, விரும்பியதை அருள்பவள்.   சௌந்தர்ய லஹரி நாலாவது ஸ்லோகம்  சொல்வதை கேளுங்கள்: ''அம்மா, நீ தான் சகல புவனத்துக்கும் அடைக்கலம் தருபவள். மற்ற தெய்வங்கள் எல்லாமே  வரம் கேட்கும் பக்தர்களுக்கு  கரங்களைக் காட்டி  அருள்கிறார்கள்.  நீ ஒருவள் தான் அம்மா, வரத  ஹஸ்தமோ, அபய ஹஸ்தமோ காட்டாதவள்.  ஏனெனில் உன் தாமரைத் திருவடிகள் பயம் தீர்ப்பவை,  வேண்டியதை விட பன்மடங்கு வாரி வழங்குபவை.''

332*  வாம நயநா  --    அழகிய , கவர்ச்சியான விழிகள் கொண்டவள்  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி.   வாம: வினைப்பயன்  - அயனம்  என்றால் பாதை, வழி,  இப்படி எடுத்துக்கொண்டால் என்ன அர்த்தம் வரும்?  ''ஒருவன் செய்த  வினைப்பயன் நன்றாக இருந்தால் அது தானாகவே  அது வழி தேடி அம்பாளை அடையச் செய்யும்'' ஆஹா! இந்த அர்த்தம் அம்ருதமாக அல்லவோ இருக்கிறது! சந்தோக்யோபனிஷத் இதையே சொல்கிறது:  ''சர்வாணி வாமானி நயதி''  --   எதெல்லாம் நல்லதோ, நன்மையோ, பரிசுத்தமோ அது  தோன்றும் இடம் அம்பாள் '' என்று பொருள் படுகிறது.

*333*  வாருணீ  மத விஹ்வலா  -  பேரீச்சையை காய்ச்சி பிழிந்து வடிகட்டிய மது தான் வாருணீ. போதை தருவது. சுற்றுமுற்றும் எல்லாவற்றையும் மறக்க செய்வது. அம்பாள்  தனது மனதில் சிவனையே தியானித்து மற்றதெதுவும் நினைவில் இன்றி சிவாநுபவத்தில் இருப்பதை இப்படி வாருணீ என்று ஹயக்ரீவர் கூறுகிறார்.

சக்தி பீடங்கள்  51 என்றும்  சிலர்  108 என்றும் சொல்லட்டும்.  நம்மைக் காட்டிலும்  ஆதி சங்கரருக்கு  கூடவே தெரியும். அவர்  அஷ்டாதச (பதினெட்டு) சக்தி பீடங்களை குறிப்பிடுவதால் அவற்றை ஒவ்வொன்றாக அறிவோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...