Friday, August 31, 2018

NATAARAJA PATHTHU

யாத்ரா விபரம்   J.K SIVAN 





             சிறுமணவை நிரஞ்சீஸ்வரர்
                                                                    

19.8.2018    - நண்பர்களோடு ஒரு  சிறு   மாலை -யாத்திரை சென்றேன். வெகுநாட்களாக  சிறுமணவை செல்ல விருப்பம். தாகம்.  இன்று நிறைவேறியது.
.
 சென்னையையடுத்த திருவள்ளூர் ஜில்லாவில் பேரம்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் சின்னமண்டலி என்ற கிராமம் தான் அக்காலத்தில் சிறுமணவை.  திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. சென்னை அரக்கோணம் மார்கத்தில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தூரம். சென்னையிலிருந்து ஏறக்குறைய  70 கி.மீ. தூரம்.  

இன்று  சிறுமணவை இல்லை. அது சின்னமண்டலி ஆகிவிட்டாலும், அதில்  மிக பெருமை வாய்ந்த  நிரஞ்சீஸ்வரர் ஆலயம் இருப்பது  அங்கே அடுத்த தெருவில் இருப்பவருக்கு கூட தெரியாது போலிருக்கிறது.  ''ஈஸ்பரன்'' கோவில் எங்கே இருக்கிறது என்றால் ரொம்ப கஷ்டமான அணு ஆராய்ச்சி  கேள்வி கேட்டது போல் நெற்றியை சுருக்கிக்கொண்டு  இங்கே எதுவும் இல்லை என்று சிலர்.     நிரஞ்சீஸ்வரர் என்றால் ஏதோ
அதிசயமாக  வார்த்தை சொன்னது போல்  பார்த்தவர்களை சந்தித்தேன்.     எப்படியோ பலபேரில் சிலர் சொல்லி நிரஞ்சீஸ்வரரை ஒரு சிறு ஆலயத்தில் கண்டுபிடித்தோம்.  ஆலயம்  சில பக்தர்களின் முயற்சியால்  புதுப்பிக்கப்பட்டு மரகதவல்லி சமேத நிரஞ்ஜீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பல  நூறு வருஷங்களுக்கு முன்பு ஆதி சங்கரர் திருவாலங்காடு செல்லும் வழியில் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்ததாக தெரிகிறது. 

அந்த அமைதியான கிராமத்தில் அதிகம் பேர் இல்லை. எங்கும் சுற்றி நெல், பயிறு, வயல்கள். கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்து நீர்ப்பாசனம். காய்கறி தோட்டங்கள். வயல்கள். அங்கும் இங்குமாக ஒரு சில வீடுகள், கட்சி கொடிகள் மரத்தில், கம்பங்களில் ......இங்கு  விவசாயிகள்  சிறிய சில்லறை வியாபாரிகள்  தான் அதிகம். மரங்கள், நிழலில் காளைகள், கலப்பைகள், வைக்கோல் போர், குடிசைகள். நிறைய  கட்டம் போட்ட லுங்கிகள்  அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு இங்கும் அங்கும் செல்வதும்,  முடிச்சாக அங்கங்கே உட்கார்ந்து  எதையோ பேசிக்கொண்டு பொழுதை கழிப்பதையும் காண முடிந்தது.  
+++
ஒரு பெரிய குளத்தங்கரையில் இருந்த சிறிய சிவன் கோவிலுக்கு வருபவர்கள் கம்மிக்கு  காரணம் ஊரிலேயே  ஆட்கள் கம்மி.

கோவிலை ஒட்டி ஒரு சந்து. அதில் ஒரு ஒட்டு வீட்டில் இருந்து முதியவர் கொம்பை ஊன்றிக்கொண்டு கொண்டு வெளியே வருகிறார். கால்கள் தானாகவே அந்த சிறிய பழைய சிவன் கோவில் நோக்கி நகர்கிறது. அந்த முதியவரை ஊரில் எல்லோருக்கும் தெரியும் . முனிசாமி முதலியார் என்றாலே நடமாடும் சிவன் என்று தான் ஊரில் அவருக்கு பெயர்.

நாள் தோறும் அந்த முதியவர் நிரஞ்சீஸ்வரனை வணங்கிவிட்டு அங்கே ஒரு தனி இடத்தில் இருந்த நடராஜர் சிலை முன் வந்து ஆர அமர உட்கார்ந்து கொள்வார். ''சிதம்பரம் நடராஜன் தான் இவன்''  என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்வார். நெற்றி நிறைய பட்டையாக விபூதி, கழுத்தில் ருத்ராக்ஷம், காவி உடை, நீண்ட வெள்ளிக்கம்பி தாடி மீசை. கணீர் குரல். கொட்டும் மழையானாலும், தினமும் அங்கே வந்து அமர்ந்து நடராஜனை கண்கொள்ளாமல் நேரம் காலம் பார்க்காமல் தரிசிப்பார். அவரே சிறுமணவையை சேர்ந்த முனுஸ்வாமி முதலியார்.

கண்கள் மூடியிருக்க, பனிக்க, தாரை தாரையாக ஆனந்தக்கண்ணீர் வடிய அந்த முதியவர் தனது மனத்திலும் எதிரே சிலையாகவும் நடராஜனைக் கண்டு வெள்ளமாக தன் மனதிலிருந்து எழும் பக்தி பரவசத்தோடு, பாடல்களை பாடுவார். அவரைச் சேர்ந்த சிலர் அந்த பாடல்களை எழுதிக் கொள்வார்கள். அவருக்கு, தான் பாடுவதோ, அதை மற்றவர்கள் வெளி உலகுக்கு அவரது பாடல்களை அறிமுகப் படுத்துவது பற்றியோ சிந்தனையே இல்லை.

இப்படித்தான் அந்த அற்புத மனிதர் ''நடராஜ பத்து''  எனும் அற்புதமான பத்து   பதிகங்களை இயற்றியவர்.  அவரைப்பற்றி ஊர்  மறந்து போய்விட்டது. சந்ததி இல்லாமல் சென்றுவிட்டார் என்று அறிந்தேன். அவர் வணங்கிய  நடராஜருக்கு பதிலாக இன்னொரு நடராஜர் சிலை வைத்துள்ளார்கள். அந்த புது நடராஜரும் பூட்டப்பட்டு கண்ணில் படவில்லை. ஒரு துவாரத்தின் வழியாக பார் என்று சொன்னபோது எனக்கு நடராஜர் தெரியவில்லை. 

நடராஜ பத்து ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இருந்தபோதிலும்  ஒரு பாட்டு உதாரணத்துக்கு  கொடுக்கிறேன். இது முனுசாமி முதலியாரின்  நடராஜ பத்தின்  கடைசி பத்தாவது பதிகம். 

''இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோஇருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.'' 

எளிமையான பக்தி பாடல். இருந்தாலும்  கொஞ்சம்  அர்த்தம் சொல்கிறேன்.

'நிரஞ்சீஸ்வரா, இதுவரை நான் கெஞ்சியது போதாதென்றால் இன்னமும் சொல்லவா?
அவ்வளவு சொல்லியும் கரையாத உன் மனம் என்ன இரும்பாலானதா? பாறைக் கல்லா? அல்லது உன் தோடுடைய செவி தான் செவிடா?
நீ செய்வது உனக்கே அழகா? ஓஹோ,  உன் மனம் பூரா மரகதவல்லி மீதோ? ஒருக்கால் நான் சொல்வது உனக்கு கேட்கக்கூடாது என்று எனக்கே ஒரு சாபமோ? உன் பிள்ளைகளைப் பற்றிய கவலையா? யார் மீதாவது உள்ள கோபத்தை என்னிடம் காட்டுகிறாயோ?
இது மட்டும் நிச்சயம். நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை விடப்போவதில்லையே!
எங்கே போவேன் உன்னை விட்டு. இங்கே தான் சுற்றிக்கொண்டே இருப்பேன். உன் நிழலாக.
உன்னை அணுகி இருக்கும்போது எனக்கென்ன தீங்கு நேரும்?
யோசித்தால் ஒன்று புரிகிறது. இந்த நிலை எனக்கு ஏற்பட்டதற்கு நீயோ நானோ காரணம் அல்ல.
என்னை கடைக்கண்ணால் பார் என்றேனே. பார்த்தால் குற்றம் யாருடையதாக இருந்தாலும் குறை தீர்ந்து விடுமே. என்னைக் கரை சேர்க்க வருவாய் சிவகாமி நேசா, சிதம்பரம் வாழ் நடராஜனே.''
புராதன நிரஞ்சீஸ்வரர் கோயில் சிதிலமடைந்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. சில கல்வெட்டுகள் சிற்பங்கள் உள்ளன.  யாரவது ஒரு  நாகசாமி இதெல்லாம் படித்து அர்த்தம் சொல்வாரா?  கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் நிறைய இருக்கின்றன. யாராவது  இது விஷயமாக படித்தவர்கள் அதையெல்லாம்  அந்தந்த கோவில்களில்  இந்த கால தமிழில் எழுதி வைக்க கூடாதா?  பொறுப்பு யாருக்காவது இருக்கிறதா? 

இது வரை நடராஜ பத்து ரசித்தவர்களே முடிந்தால் இனி நேரே சென்று நிரஞ்சீஸ்வரர் தரிசனம் பெறுங்கள்.  எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.  நான் சென்ற அன்று மாலை  ஆலயத்தில் எவருமே இல்லை. பொறுப்புள்ள ஒருவர் என்னையே உள்ளே சென்று கற்பூர ஹாரத்தி காட்ட அனுமதித்தார். நிரஞ்சிஸ்வரரை  அம்பாளை அருகே நின்று ஸ்லோகம் சொல்லி கற்பூர ஹாரத்தி காட்ட எனக்கு ஒரு பாக்யம் கிடைத்தது நான்  நடராஜ பத்து எழுதி எல்லோருக்கும் என்னால் முடிந்தவரை அதை பரப்பியதாலா? 

ஒரு விஷயம்   நான் அறிந்தவரையில்  பல சிவன் கோவில்களில் இப்போதெல்லாம் நடராஜபத்து பாடுகிறார்கள் என்பது மனதுக்கு இனிய விஷயம்.

 ஒருகாலத்தில் கூவம், தக்கோலம் போன்ற ஸ்தலங்களைப்போல இன்றும் இருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த சிவாலயங்களில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் எத்தனையோ சிதிலமான கோவில்களில் இதுவும் ஒன்றாகி உள்ளூர் மக்களால் மீண்டும் புனருத்தாரணம் செய்ப்பட்டு ஒரு சிறு கோவிலாக  இன்றுள்ளது. கோவிலை ஒட்டி புஷ்கரணி. கோவிலை விட மூன்று மடங்கு பெரியது. .
எல்லோரும் ஒருமுறையாவது நிரஞ்சீஸ்வரரை சென்று அங்கே அமர்ந்து ஒரு ஐந்து நிமிஷம் நடராஜ பத்து படியுங்கள், பாடுங்கள். மனதுக்கு கிடைக்கும் நிம்மதியை  என்னால் எப்படி விவரித்து  எழுத முடியும் ?.

2 comments:

  1. Thanks. Could you get any further information in Sri Munuswami Mudaliaar who wrote Nataraja Pathu. Beautiful set of poems.
    SIVAAYA NAMAH!

    ReplyDelete

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...