Friday, May 13, 2022

sheerdi baba

 மனிதருள் ஒரு தெய்வம் --  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஷீர்டி பாபா.

''ஸ்ரத்தா ,  ஸபூரி''

உலகில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று புதிது புதிதாக தலையெடுக்கும் போது பழைய வழக்கம் காணாமல் போகும். இதைத்தான் நாம்  பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிறோம்.  வாட்ஸாப்ப், டெலெக்ராம், முகநூல் இதெல்லாம் வந்தவுடன்  ஈமெயில்  குறைய ஆரம்பித்தது. புத்தகங்கள் பத்திரிகைகள்  மறைய ஆரம்பித்தன.
படிப்பது கேட்பது எழுதுவது எல்லாமே  பேப்பர் பேனா பென்சில் இல்லாமல்  ஆகிவிட்டது.  உலகம் என்பதே  சர்வமும் சதா  மாறிக்கொண்டே இருப்பது தான். 

நான் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.  எல்லோருக்கும் தெரிந்ததை எழுதும்போது வளவளவென்று நீட்டி எழுதவேண்டிய அவசியம் இல்லை. மேலும் இப்போது யாருக்கும்  இதற்கெல்லாம் அதிக நேரம் கிடையாது. படிப்பது என்பது மறந்து மறைந்து போகும் ஒரு கலையாகி விட்டது? 

ஷீர்டி சாயி பாபா என்ற பெயர் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப் படுவது. அவரைப் பற்றி எல்லா விஷயங்களும் எல்லோருக்கும் ஏற்கனவே தெரியும். ஆகவே கொஞ்சூண்டு  ஞாபகப்படுத் தினால் போதும் என்பதே என் எண்ணம்.

இருநூறு இருநூற்றிஐம்பது வருஷங்களுக்கு முன்பு ஷீர்டி கிராமம் ஒரே புழுதி படிந்த அழுக்கு கிராமம். அதிக மக்கள் தொகை இல்லை.  அங்கொன்றும்  இங்கொன்றுமாக   சில இடிந்த ஆலயங்கள், மசூதிகள் இருந்தன. அதில் யார் வந்து தங்கினாலும் கேட்பாரில்லை.  இப்படி ஒரு மசூதியில் அயல் நாட்டு தேசாந்திரிகள், பக்கீர்கள், வெளி யே அதிகம் தெரியாத ஞானிகள் மஹான்கள் வந்து தங்கினார்கள். 

ஷீர்டி  பாபாவுக்கு அந்த இடம் பிடித்து விட்டது. அங்கே போய் தங்க ஆரம்பித்தார். அங்கே வரும் தேசாந்திரி ஆன்மீகவாதிகளின் நட்பு பிடித்தது.. அவர்களிடம் அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டார். 

தேவிதாஸ் என்று ஒருவர் பல வருஷங்களாக அடிக்கடி ஷீர்டிக்கு  வந்து அங்கே தங்குவார். கங்கா பீர் என்கிற சாமியாரும் , ஜானகி தாஸ் என்கிற சாதுவும் கூட அடிக்கடி வருவார்கள்.  பாபா சும்மா இருப்பாரா. அந்த சிதிலமான மசூதியை சுற்றி நந்தவனம் அமைத்தார்.  பூச்செடி கொடிகள்  வளர்த்து அவற்றுக்கு நீர் வார்ப்பார்.  அங்கிருந்து  சற்று தூரத்தில் ஒரு பெரிய கிணறு. அதில் தாம்புக் கயிற்றால் நீர் சேந்தி தோளில் மண் குடம் நிறைய நீர் சுமந்து கொண்டு வருவார். பூச்செடிகள் ஆவலாக அவர் அளிக்கும் நீருக்கு காத்திருக்கும்.   நன்றாக வளரும். கொடுத்த வைத்த புண்யம் பண்ணிய செடி கொடிகள்!.

கங்கா பீர் சந்தோஷமாக ஒருநாள் மற்றவர்களிடம் ''இந்த மனிதர் பாபா ஒரு  சாதாரண மனிதர் அல்ல. அவர் இங்கே வந்ததிலிருந்து ஷீர்டி புனிதமடைந்து விட்டது. இந்த பூக்கள் எவ்வளவு ஆனந்தமாக பூக்கின்றன  பார்த்தீர்களா, எல்லாம்  அவரால் தான்.   அவர் ஒரு சிறந்த ஆபரணம்  இந்த ஷீர்டி கிராமத்துக்கு'' என்றார்.

ஏவாளை மடம் என்ற ஒன்று அங்கே இருந்தது. அதை சேர்ந்த அனந்தநாதர் என்கிற துறவி பதில் சொன்னார்:
 ''கங்கா பீர், சாதாரண ஆபரணமா இந்த பாபா? ...இல்லை. அவர் விலையுயர்ந்த வைர வைடூர்யம்'' என்றார்.

சாமந்தி, நந்தியாவட்டை, பல வாசனை பன்னீர் பூக்கள் செடிகளை எல்லாம் பாபா பக்கத்து கிராமம் ரஹதாவுக்கு சென்று கொண்டு  வந்தார். அவைகளை நட்டு, நிறைய தண்ணீர் ஊற்றி அவை மளமளவென்று வளர ஆரம்பித்தன.

 தாதியா என்கிற உள்ளூர் குயவன் ரெண்டு சரியாக வேகாத பானைகளை அவருக்கு இலவசமாகக்  கொடுத்தான். அவற்றில் நீரை மொண்டு கிணற்றிலிருந்து தூக்கி வந்து  அவர் தங்கிய வேப்ப மரத்தடியில் அந்த ரெண்டுநீர் நிரம்பிய பானைகளை வைத்திருத்தார்.   சாயந்திரத்துக்குள் வேகாத பச்சை களி மண் பானைகள் கரைந்து விரிசல் விட்டு நீர் பூமியில் இறங்கிவிட்டது.

பாபாவால் வளர்க்கப்பட்ட பூந்தோட்டம் இன்றும் ''சமாதி மந்திர்'' எனும் ஷீர்டி சாயி பாபா ஆலயத்தில் உள்ளது.

இன்னொரு குட்டிக்கதை சொல்லி முடிக்கிறேன்.

 ஷீர்டி க்கு அருகில் இருந்த ஒரு ஊரில் வசித்த ஒரு பக்தர் பெயர்  பாய் கிருஷ்ணாஜி அலி பாக்கர். அவருடைய குரு அக்கல்கோட் மஹாராஜா என்ற  மகான்.  குருவின்  பாதச்சுவடுகளை வணங்குபவர். தனது ஊரிலிருந்து அடிக்கடி  அந்த பக்தர் அக்கல்கோட் கிராமத்துக்கு நடந்து போவார்.  ஒரு சமயம்  உடல் நிலை காரணமாக  அவரால்  குரு வின் ஊரான  அக்கல்கோட் போகமுடியவில்லை.   எப்படியாவது   அடுத்தவாரம் ஒருநாள் அக்கல்கோட் போகவேண்டும் என்ற மனதில்  வேண்டிக்கொண்டார்.   அந்த இரவே  அவர்  கனவில்  குரு  அக்கல் கோட் மகாராஜ் துறவி காட்சி அளித்தார்.

''பாய் கிருஷ்ணாஜி, நீ அவ்வளவு தூரம் அக்கல்கோட் வரவேண்டாம். நான் இப்போது நீ இருக்கும் ஊருக்குப்  பக்கத்திலேயே  உள்ள ஷீர்டி கிராமத்திலேயே இருக்கிறேனே.'' என்று சொல்லி மறைந்தார்.

பாய் கிருஷ்ணாஜி மறுநாள் பொழுது விடிந்தும் விடியாததுமாக ஷீர்டிக்கு  நடந்தார். அங்கே சாய் பாபா என்று ஒருவர் இருப்பதை  அறிந்தார்.  ஒரு வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருந்த  பாபாவைப்  பார்த்தார். வணங்கினார். மனம் அமைதியுற்றது. அக்கல்கோட் மகாராஜ் அவதாரம் தான் அவர் என்று மனதில் தீர்மானமாக பட்டது. அங்கே அந்த வேப்ப மரத்தடியில் பாபாவை வணங்கி அவர் பாதச்சுவடுகளை பதித்து பிரதி ஷ்டை செய்து அதை புனித பாதுகா ஆலயமாக்கினார். விடாமல் பூஜைகள் நைவேத்தியங்கள் அங்கே நடந்தது.

“சதா நிம்பவிருக்ஷஸ்ய மூலாதிவஸத் சுதஸ்ரவினம் திக்தம்பியபிரியம் தம் தரும் கல்பவிருக்ஷாதிகம் சதா யந்தம் நாம மஹேஸ்வரம் சத்குரும் ஸாய்நாதம், சத் குரும் ஸாய்நாதம்'' என்கிற மந்திரத் ஸ்லோகத்தை விடாமல் சொல்லி வந்தார்.

ஷீர்டியில் முஹைதீன் தம்போலி என்கிற வஸ்தாத் பயில்வான் ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள் அவன் பாபாவை தன்னோடு மல்யுத்தத்துக்கு அழைத்தான். அவனோடு மோதி பாபா  தோற்றுப் போனார். அதற்கு காரணம் தன்னுடைய ஆடை என்று தோன்றியதோ என்னவோ? அதற்குப் பிறகு நீளமான ஒரு தொளதொள அங்கி உடுக்க ஆரம்பித்தார். அதற்கு கப்ஃனி KAFNI என்று பெயர். இடுப்பில் ஒரு நாடாவை இறுக்கி முடிந்துகொள்வார். தலையில் ஒரு துண்டு சுற்றி இடது காதோரம் முடிச்சு.

 அது தான் நாம் இன்றும்  காணும் பாபா உருவம். எப்போதும் ஒரு கோணியில் அமர்வார். அது தான் ஆசனம்  பாபாவின்  வாக்கியம்    'ஸ்ராத்தா  ஸபூரி ''  '

ஏழ்மை, எளிமை, நம்பிக்கை,  பொறுமையோடு உழைப்பு '' இது தான் ஒருவனுக்கு  ராஜ அந்தஸ்து தரும்.   பகவான் தீன தயாளன்இல்லையா? '' என்பார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...