Sunday, May 1, 2022

SURDAS

 

ஸூர்தாஸ் - நங்கநல்லூர்  J K  SIVAN

'' மறந்து விட்டாயா? ஏன் லேட்?''

எனக்கு தெரிந்து வேறு யாருமே  இல்லை நாராயணா.
நீ ஒருவன் தான்  கையில் சக்ரம் வைத்துக் கொண்டிருபவன்.  அதுவும் உன்னை விட்டுப் பிரியாத ஒரு சக்ரம். அதனால் தான் உன் பெயர் சுதர்சன தாரி.  எதற்கு உனக்கு சக்ரம், அதுவும்  எவராலும் வெல்லமுடியாத, எதிர்க்க முடியாத  அதி வேக சக்தி கொண்ட  ஆயுதம்?

ஓஹோ, ஒருவேளை,  யாரோ வேறு ஒருவர் உன்னைப்போல வேஷமிட்டு,  பெரிதாக   ஒரு  கருடன் மீது சௌகரியமாக பறப்பவர்  இருந்து  தீங்கு செய்ய முற்பட்டால் அதை தவிர்க்க இந்த  தற்காப்பா ?
நீ காக்கும் கடவுள் என்பதால்  எவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டி  இருக்கிறது!

அப்படிப்பட்ட நீ  தான் ஆயர்பாடியில்  நந்தகோபன் யசோதை தம்பதியின் செல்ல மகனா?  நாராயணா நீதான்  கிருஷ்ணனா ?  

''ஆம்''. நான் தான்  அது  என்று நீ  ஒருவன்   மட்டுமே பதில் சொல்லமுடியும்.
''கிருஷ்ணா  நீயே   அந்த   ''உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரிய, நிலஉலாவிய நீர் மலி மேனியன்,.
அலகிலா விளையாட்டுடையான் , எமது ஈடற்ற தலைவன்''

என் மனக்கலத்தை நீக்கி, சிந்தை தெளியவைத்து, ஆனந்தனுபவம் பெற வைப்பவன்  நீ ஒருவன் தான், கிருஷ்ணா .

''கிருஷ்ணா,  எத்தனை பேர்களின்  துன்பம், துயரம், கஷ்டம் எல்லாம்  இதுவரை தீர்த்திருக்கிறாய்? கணக்கிலடங்காதே!

உனக்கு  ஞாபகம் இருக்கிறதா? இல்லையென்றால் இதோ விரலை மடக்கி ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
 நந்தகோபன் அரண்மனை தோட்டத்தில் .....யம்லாக், அர்ஜுன் என்ற இருமரங்கள்...... மரங்களா அவை? பல யுகங்கள் சாபம் ஏற்று காத்திருந்து, உன்னால் சாப விமோசன விடுதலை பெற்று விண்ணுலகம் திரும்பக் காத்திருந்த குபேரனின் புதல்வர்கள், நளகூபரன், மணிக்ரீவன், ..அதற்காக தானே வெண்ணை திருடி நாடகமாடி, உரலில் உன்னை  கட்ட வைத்துக்  கொண்டு,  அந்த உரலாலேயே குபேரன் புதல்வர்களுக்கு விடுதலை அளித்தாய்.  சரியான  கபட நாடக சூத்ரதாரி  நீ.....
இது  மட்டுமா..இன்னும் நினைவிருக்கிறது சொல்கிறேன் கேள்.  
கஜேந்திரன் நீர் அருந்தி தாமரை பறித்து உனக்கு சாற்றுவதற்கு நீரில் இறங்கப்போய் அவன் உயிரே போகும் நிலை....கஜேந்திரன் நீர் குடிக்கும் முன்பு அவன் அவனது உயிரைக்  குடிக்கக்  காத்திருந்த பெரிய முதலை ஒன்று....எவ்வளவோ போராடி தோற்று, முடியாமல், தான் முடியு முன்பு, உன்னை ஆதிமூலமே என்று கதறி அந்த யானை கண்ணீர் மல்க அழைக்க அந்த குரலுக்காகவே  காத்திருந்தவன் போல் நீ  உடனே உன்   கருடன் மீதேறி உன் சுதர்சன சக்கரத்தால் முதலையை முடித்து கஜேந்திரனை காப்பாற்றினாயே....
இன்னொன்றும் கூட  சொல்லவேண்டும்.  யமுனை நதி அழகாக ஓடுகிறது.. அதன் நீர் அனைவரையும் ''வா வந்து குளி ,  எனது குளிர்ந்த நீரில் விளையாடு'' என்று அழைத்தும் நெருங்க முடியாமல்   ஒரு  கொடிய   ராக்ஷஸன்  காளீயன் கடும் விஷத்தோடு யமுனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக் கிறானே .   ஆயர்பாடி சிறுவர்களுக்கு யமுனையில்  மூழ்கி ஆட கொள்ளை ஆசை..  ஆனால் முடியவில்லையே..

 சிறுவனாக இருந்தும் கிருஷ்ணா   அப்போது  உன்னால் எப்படியப்பா யமுனையில் பாய்ந்து குதித்து  காளீயன் சிரத்திலேறி, நர்த்தனமாடி யே அவனை அடி பணியச் செய்து உயிர்ப் பிச்சை அளித்து அங்கிருந்து அகற்ற முடிந்தது. என்ன கருணை உனக்கு?  கொல்ல முடிந்த போதும் , கொல்லாமல்  உயிர்ப்பிிச்சை அளிப்பதில் வல்லவன் நீ ஒருவனே. உன்னை இகழ்வார்க்கும்  அருள்பவன்.
''அடாடா, அந்த வானவர் தலைவன் இந்திரன் இருக்கிறானே, ஒரு சமயம்  அவன்   உன் மீதும், உன் மக்கள் பிருந்தாவன வாசிகள் மீதும் கோபம் கொண்டு வருணனை அனுப்பி ஒரு சுனாமி காட்சி நடத்ததே,  அப்போது நீ  என்ன செய்தாய்?  உனக்கு ஞாபகம் இல்லை யென் றால் நான் சொல்கிறேன் கேள்.
இந்திரனின் சீற்றம்,  வருணனின் விடாத ஆக்கிரமிப்பு...  கோப கோபியர்கள் கலங்கி உன்னிடம்  ஓடிவந்து  தங்களது கஷ்டத்தை சொல்கிறார்கள்.  இன்னும் கொஞ்ச நேரத்தில்  ஊரே  தண்ணீருக்குள்ளே  போய்விடும் போல் இருக்கிறதே.
'' ஓஹோ, அப்படியா சேதி, இதோ பார் என்று எந்த பரபரப்பும் இன்றி இடது சுண்டுவிரலால் உங்கள்  ஊர்   கோவர்தன மலையை தூக்கி குடையாக பிடித்து , ஓர் நிமிஷமா, மணியா,  ஒரு  நாளா,  அப்பப்பா,   ஏழு நாட்கள்  தாங்கி,   மக்கள், மாடு கன்று அனைத்துமே இந்திரனின் சீற்றத்திலிருந்து காத்து அவனை அடிபணிய செய்தவனாயிற்றே...

இதைச் சொல்ல மறந்துவிட்டேன் பார்.  ஹஸ்தினாபுரத்தில், அனைவரும் இருந்த சபையில், அபலை திரௌபதியை மான பங்கப்படுத்த துரியோதனன் ஆணையிட, கர்ணன் மற்றோர் ஆதரிக்க,  பீஷ்மர்  முதலானோர்  எவ்வளவு கெஞ்சியும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, துச்சாதனன் துகிலுரிய அந்த நேரத்தில், அல்ல, தக்க , சரியான  நேரத்தில் அவள் மானம் காத்தது யார்?,  முடிவில்லாத,  நீளளளளள.... .. 'ஸாரி SARI ' புடவை,  வஸ்திரம், எங்கிருந்து அவளது உடலைச் சுற்றி வந்துகொண்டே இருந்தது.   இழுத்துக்கொண்டிருந்த துச்சாதனன் கை வலிக்க, துவண்டு விழுந்தானே தவிர  திரௌபதி அல்லவே.... ''ஹரே கிருஷ்ணா, ஆபத்பாந்தவா'' என்ற ஒரே குரல் போதுமே உனக்கு...யாருக்கு வேண்டுமானாலும் அபயமளிக்க .

உண்மையிலேயே நீ ஒருவன் தான்  காக்கும் கடவுள். கிருஷ்ணா.  எல்லோருக்கும் ஓடி ஓடி வந்து கருணை காட்டும்   நீ,     நாளெல்லாம் உன்னையே  பாடி நினைத்து வாடிக் கொண்டிருக்கும் இந்த ஸூர்தாஸ் மேல் மட்டும் இன்னும் கருணை காட்டாதது எதனால், என்ன காரணம் கிருஷ்ணா? சொல்  நானும் உன் பக்தன் தானே.   ஏன் லேட்??

Chakra ke dharanhaar Garun ke aswaar
nand kumar mero sankat niwaro
Yamlaak arjun taryo gaj ke ubaryo
naag naathanhaar mero to sambharo
girivar kar pe dharyo indra garv daryo
vraj ke rakshanhaar deenan vicharo
drupad suta ki ber nikana ki aber
ab kyun aber sur sevak tiharo

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...