Monday, May 2, 2022

BAJAGOVINDAM

 ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


' கும்பிடு கூப்பிடு  கோவிந்தனை....'-1

இன்று வரை இந்த புனிதமான பாரத தேசம்  இன்னொரு ஆதி சங்கரரைப் பெறவில்லை. 7ம் நூற்றாண்டில் கேரள தேசத்தில் காலடி க்ஷேத்ரத்தில் அவதரித்த  ஆதி சங்கரர் பரமசிவனின் அம்சம். 32 வயதில்  ஸம்ஸ்க்ரிதத்தில் அவர் சாதித்ததை  இன்னும் எவரும் மிஞ்சவில்லை. பண்டிதனும் பாமரனும் போற்றி மகிழும் அவரது பஜகோவிந்தம் என்னும் 31 ஸ்லோகங்கள் கொண்ட பொக்கிஷத்தை பற்றி தான் இங்கு தெரிந்து கொள்ளப்போகிறோம். எளிய நடை, ஆழமாக பொதிந்த அற்புத கருத்துகள். வேதாந்த அறிவுரைகள், பக்தியின் சிறப்பு, இவை கலந்த ஒரு படைப்பு தான் அற்புதமான அவரது  ''பஜகோவிந்தம்''.
மூதறிஞர் ராஜாஜி இந்த காவியத்தை பற்றி சொன்னதை ஆங்கிலத்திலேயே படித்தால் தான் அதன் சுவை  ரசிக்க முடியும்.

"When intelligence matures and lodges securely in the heart, it becomes wisdom.
When that wisdom is integrated with life and issues out in action, it becomes devotion.
Knowledge, which has become mature, is spoken of as devotion.
If it does not get trans- formed into devotion, such knowledge is useless tinsel"

எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா ராஜாஜி!

'' புத்தி முதிர்ந்து இதயத்தில் ஆழமாக அசையாது பதிந்தால் அதுவே  ஞானம் ஆகும்
அந்த ஞானம் வாழ்வில் கலந்து செயலில் பரிமளித்தால் அதன் பெயர் பக்தி
அறிவு பெருகி முதிர்சசி அடைந்தபோது அதுவே பக்தியாகிறது
அப்படிக்  கற்ற கல்வி கேள்வி ஞான அறிவானது பக்தியாகாவிட்டால் அது வெறும் பள பள ஜரிகை பகட்டு''

பாரத ரத்னங்கள் இருவர் சேர்ந்து அளித்தது இந்த பஜகோவிந்தம். எல்லா  ஹிந்து  வீடுகளிலும் ஒலிப்பது ''பஜகோவிந்தம்?''   ஆரம்பம்  ராஜாஜியின்  குரலில்  மேற்கண்ட வாக்கியம். தொடர்வது இசைக்குயில் M .S .சுப்புலக்ஷ்மி யின்  மனம் கவரும்  ராகமாலிகையில் '' பஜகோவிந்தம்''. அர்த்தம் தெரியாமலேயே சிறிய வயதில் நான் இதை மனப்பாடம் செய்தது அந்த குரலின் காந்த சக்தியாலும் இசையின் கவர்ச்சியாலும் ஈர்க்கப்பட்டு என்னை நான்  இழந்தபோது.

மானுடர்களே, கொஞ்சம் நில்லுங்கள்:
'செல்வோம்'' என்று சொல்லிவிட்டு செல்லும் ''செல்வத்தை'' (பணத்தை) தடுத்து நிறுத்தி சேர்த்து வைத்து அதன் பயனாய் நீங்கள் பெறுவது எண்ணற்ற சிக்கல்களும் துன்பங்களும் தான். ஏதோ வாழ்க்கை என்கிற  வண்டி ஓடுவதற்கு தேவையான பணம் கிடைக்க பாடுபடுவதில் நியாயம் உண்டு. பேராசை கொண்டு , செல்வத்தைச் சேர்க்க, மேலும் மேலும் தேவை என்ற ஒரு தாகம் பசி என்று அலைந்தால் அது தான் கடைசியில் சொல்லொணாத்  துயரில் ஆழ்த்தும். சேர்த்த அந்த பணம் களவு போகும். உறவினரை பகைவராக்கி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். பணம் அன்பை விலக்கி பயத்தை நெருங்க வைக்கும். அகம்பாவத்தை வளர்க்கும். கொடுப்பதில் உள்ள சுகம், பெருமை எல்லாம் அறியாமல் பண்ணிவிடும்.

எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமானாலும் நஞ்சு தானே. தனமோ, தான்யமோ, உடையோ, ஆபரணமோ, தேவைக்கு மிஞ்சி னால் அது சந்தோஷத்தை தின்றுவிடும். அளவை மீறும்போது கவலையை கொண்டு சேர்க்கும்.

பாவம் இன்னும் நிறைய பேர் கட்டு கட்டாக பணம் இருந்தால் தான் நிம்மதியும் சுகமும், இன்பமும் என்று மனப்பால் குடிக்கிறார்கள். இதனால் பணத்துக்கு அடிமையாகி மனச்சாட்சியை அடகு வைக்கிறார்கள், எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.

ரெண்டு பச்சை மூங்கில் கொம்புக்கு நடுவே சில குட்டி குட்டி கொம்புகள் கட்டிய படுக்கையில் கட்டப்பட்டு பிரயாணம் செல்லும்போது கட்டு கட்டு நோட்டு கூட வருமா? அந்த கட்டு 'குடும்பக் கட்டையே' நொறுக்கி விடுமே. ஒன்றோடொன்று எனக்கு உனக்கு என்று மோதும்போது அல்லவோ வேடிக்கை இருக்கிறது. ஒரு இந்த காகிதக் கட்டுக்காக ''வெட்டுக் குத்தும் 'உண்டே. சிலர் கொலை செய்யப்பட்டும் மடிவதை பார்க்கிறோமே. அனைவருமே சேர்த்து வைத்துவிட்டு போனவனை வாய் கூசாமல் இகழ்வார்கள். இது தான் அவன் புகழ்.

பணம்  ஒரு கொடிய   மூன்று எழுத்து கொண்ட  விஷம்.  அப்பப்பா எத்தனை பொய், கோபம், தாபம், ஏக்கம், பெருமூச்சு, கர்வம், விரோதம், பொறாமை, விஷமம்!! இதெல்லாம் கொண்டது அது.
இத்தனை  துர்க்குணங்களையும்  எப்படி இந்த சாதாரண காகிதம், பாவம், அந்த சிரிக்கும் காந்தி யோடு இணைக்கிறது? காந்தி நம்மைப்பார்த்து சிரிக்கிறாரா? அல்லது ஏண்டா என்னை இந்த ''கட்டில்'' போட்டு ''இக்கட்டில்'' மாட்டுகிறீர்கள் என்று ஏளனமாக நகைக்கிறாரா? அல்லது விரக்தி புன்னகையா?

எல்லாம் மாயை. அவ்வளவு சக்திவாய்ந்தது மாயை. நம்மை வெட்டிச்  சாய்த்து வீழ்த்துகிறது. கடவுள் மனிதனை படைத்தான். மனிதன் பணத்தை படைத்தான். தன்னையே அதால் சிறுக சிறுக அழித்துக் கொண்டு வருகிறான்.

பணத்தால் வராத அத்தனை இன்பமும்,  சுகமும்,  அமைதியும், பெருமையும், நன்மையும் பிறருக்கு உண்மையாக உழைப்பதில், பலனெதுவும் எதிர்பார்க்காமல் உதவுவதில் கிடைக்கிறது. ஆமாம் அப்படித்தான்,  அவ்வாறே தான் என்று  அனுபவித்துச்  சொல்பவர்கள்  நிறைய பேர்  இருக்கிறார்கள்.

பணம் உள்ளவன் இவ்வாறு உழைத்தால், சேவை செய்தால், அவனே கடவுள். திருவள்ளுவர் கூற்றுப்படி ஊரின் நடுவே உள்ள   பொதுக்கிணறு தரும் நீர் எப்படி எல்லோர் வீட்டிற்கும் தேவையான தண்ணீரை மனமுவந்து பாரபட்சமின்றி தருகிறதோ அதுபோல் அறிவுள்ள பணக்காரனின் அறிவுச்செல்வமும், பணமும் கூட வாரி வழங்கி அனைவரின் நல்லாசியை இறைவன் அருளாக தருமே. மேலும் பெருகுமே. இறைக்கும் கிணற்றில் தான் ஊற்று இருக்கும்.
ஆதி சங்கரரின் பஜகோவிந்தம் ஒரு அமர  காவியம். இறைக்க இறைக்க ஊரும் ஊற்றுக் கிணறு. புத்தியை தேய்த்து பாசி நீக்கி பளபளக்

க செய்யும் சக்திவாய்ந்த நாலு அடி மந்திரக்கோல்.
மொத்தம் 31 ஸ்லோகங்கள் இருக்கிறது. படிக்கவே அதன் சந்தம் இனிக்கிறது. அதை உங்களுக்கு தினமும்  கொஞ்சம் கொஞ்சமாக  வழங்க எனக்குள் ஒரு  ஆசை ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...