Sunday, May 22, 2022

KALABAIRVASHTAKAM

 #ஆதி_சங்கரர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN

காலபைரவாஷ்டகம்

அஷ்டகம் 8  

இந்த பதிவுடன்  ஆதி சங்கரரின்  கால பைரவாஷ்டகம் நிறைவு பெறுகிறது.  

சிவாலயங்களின்  ஸ்ரீ பைரவருக்கு ஒரு சந்நிதி உண்டு.  அவரை க்ஷேத்ர பாலர்என்கிறோம். பைரவர் என்றாலே நடுங்க வைப்பவர் என்று அர்த்தம் என்று  அம்மா  சொல்வாள்.
சிவனிடமிருந்து பெற்ற சக்தியால் நம்மை காப்பாற்றும் தெய்வம் கால பைரவர். யமதர்மன் காலன் என்ற பெயருடையவன். அவனையே சம்ஹாரம் செய்த மூர்த்தி காலசம்ஹார மூர்த்தியான சிவன், காலகாலன். கால பைரவர் சிவனின் அம்சம்.
காலம் வேகமாக நழுவக்கூடியது. அதை நல்ல முறையில் நாம் பயன்படுத்த உதவும் தெய்வம் கால பைரவர்.

சென்னைக்கு அருகே சிங்கப்பெருமாள் கோவில் பக்கம் உள்ள தெருவின் வழியாக சுலபத்தில் திருவடி சூலம் செல்லலாம். அங்கே அற்புதமாக ஒரு பைரவர் கோயில் இயற்கை சூழலில் தங்க நிறமாக ஜொலிக்கிறது. அமைதி ததும்பும் அந்த பைரவர் கோவிலுக்கு ரெண்டு மூன்று முறை  நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறேன்.

உள்ளே சிவலிங்க உருவத்தில் பன்னிரண்டு படிகள் ராசிகளை காட்டுகிறது. எல்லா ராசிக்காரர்களுக்கும் பாதுகாப்பளிப்பவர் பைரவர் இல்லையா? உச்சியில் க்ஷேத்திரபால பைரவர் கம்பீரமாக நிற்கிறார் சூலம் தாங்கி.
படி இறங்கினால் அஷ்ட பைரவர்கள், சப்த ரிஷிகள், சப்த கன்னிகைகள் தரிசனம் தருகிறார்கள்.

இந்த கோவிலில் ஒரு அதிசயம். பக்தர்கள் ஆளுக்கு ஒரு பிடி ''வாய்க்கரிசி'' சமர்ப்பிக்கலாம். நமக்கு கடைசி ''காலம்'' எப்படி அமையுமோ, அப்போதைக்கு இப்போதே ''வாய்க்கரிசி'' பைரவருக்கு சமர்ப்பித்தால், முடிவை உபாதை இல்லாமல் செய்பவர் பைரவர் அல்லவா?

கால பைரவர் சர்ப்பங்கள், கையில் ரத்தம் சொட்டும் பிரமனின் ஐந்தாவது சிரம், நீலகண்டம், முக்கண், கபால மாலை, நாய் வாகனம் சகிதமாக தரிசனம் தருபவர். பாதகமான சந்தர்ப்பங்களை சாதகமாக்கி தருபவர் பைரவர்.

பைரவா என்றால் என்ன அர்த்தம்  என்று தெரிந்து கொண்டதை சொல்கிறேன்;
''பை '' உலக ஈர்ப்புகள். ''ர '' என்றால் அழிப்பது, எதிர்மறைகளை நிர்மூலம் செய்வது, ''வ'' சாதகங்களை அளிப்பது என்பார்கள். ஒவ்வொருநாளும் பலமுறை பைரவா என்று வேண்டினாலே போதும். அந்த சப்தமே நம்மை காக்கும் சக்தி உடையது என்று நம்பிக்கை.

பைரவரை அஷ்டமிஅன்று பிரசித்தமாக உபாசிப்பார்கள். மஹா கால பைரவாஷ்டமி என்று பௌர்ணமிக்கு அடுத்த எட்டாம் நாள் அஷ்டமி அன்று வழிபடுவது வழக்கம். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பைரவர் சந்நிதி மிகவும் ஸ்ரேஷ்டமானது. எல்லா சிவன் கோவில்களிலும் பைரவர் சந்நிதி உண்டு. காசியில் காலபைரவர் ப்ரசித்தமானவர். அவரே ருத்ரன்.

மிருகங்களில் நம்மை காப்பதற்கு நாம் வளர்ப்பது புலியோ சிங்கமோ, அல்ல நாய். செல்ல பிராணி. அதையே வாகனமாக கொண்டவர் நம்மை காக்கும் காலபைரவர்.

8.  भूतसंघनायकं विशालकीर्तिदायकं  काशिवासलोकपुण्यपापशोधकं विभुम् ।
नीतिमार्गकोविदं पुरातनं जगत्पतिं काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥८॥

Bhuuta-Samgha-Naayakam Vishaala-Kiirti-Daayakam Kaashi-Vaasa-Loka-Punnya-Paapa-Shodhakam Vibhum |
Niiti-Maarga-Kovidam Puraatanam Jagatpatim Kaashikaapuraadhinaathakaalabhairavam Bhaje ||8||

பூத சங்க நாயகம் விசால கீர்த்தி தாயகம் காசிவாஸ லோக புண்ய பாபா  சோதகம் விபும் 
நீதி மார்க்க கோவிதம் புராடனம்  ஜகத்பதிம் காசிகா புராதி நாத காலபைரவம்  பஜே 
 
கால பைரவேஸ்வர மகா பிரபு, நீ சகல தேவைதைகள், பைசாசங்கள், பூதங்களுக்கும் நாயகன், கணேஸ்வரன், எங்கள் ஆத்மாவை அறியச் செய்து ஞானம் அளிக்கும் குருநாதன். காசியில் வாசம் செய்வோரின் பாப நாசன். புண்ய தாயகன். ஞான மார்க்க பந்து. ஆதி பிரபஞ்ச காரணன். சர்வ லோகேசன். காசி மாநகர் சிறக்கச்செய்யும் அதிபதியே , கால பைரவா எனக்கு சொல்லத்தெரியாத இன்னும் என்னவெல்லாமோ சக்தி கொண்ட காக்கும் தெய்வமே,. உனக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

மனதை வருடும் காலபைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களும் ஞானம் தருபவை. நல்மார்க்கத்திற்கு வழி காட்டுபவை. புண்ய பலன் தருபவை. பாபங்களை, துன்பங்களை, வறுமையை, இச்சைகளை, கோபத்தை, தீர்ப்பவை. படிக்கும் நம்மை உயர்விப்பவை.

மனதை கவரும் புண்ய க்ஷேத்ரபாலகன் காலபைரவர் தரிசனம் கடாக்ஷம் அருள்பவை என்கிற பல ஸ்ருதியோடு நிறைவு பெறுகிறது.

कालभैरवाष्टकं पठंति ये मनोहरं ज्ञानमुक्तिसाधनं विचित्रपुण्यवर्धनम् ।
शोकमोहदैन्यलोभकोपतापनाशनं प्रयान्ति कालभैरवांघ्रिसन्निधिं नरा ध्रुवम् ॥९॥

Kaalabhairavaassttakam Patthamti Ye Manoharam Jnyaana-Mukti-Saadhanam Vicitra-Punnya-Vardhanam |
Shoka-Moha-Dainya-Lobha-Kopa-Taapa-Naashanam Prayaanti Kaalabhairava-Amghri-Sannidhim Naraa Dhruvam ||9||

காலபைரவாஷ்டகம் பஹந்தி யே மனோகரம் ஞானமுக்தி சாதனம்  விசித்ர புண்யவர்தனம் 
சோக மோஹ தைன்ய லோப கோப தப்ப  நாசனம்  ப்ரயாந்தி காலபைரவாம்க்ரி  சந்நிதிக்கு நரா த்ருவம்
            
இது வரை கால பைரவர் அஷ்டகம் என்ற தலைப்பில் நிறைய பைரவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அளித்தேன்.

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி கால பைரவ வழிபாட்டுக்கு விசேஷமானது.

சிவ பெருமானை எப்படி த்யான கோலத்தில் மௌன குருவாக கல்லால மரத்தினடியில் தக்ஷிணா முர்த்தியாக காட்சியளித்து வழி படுகிரோமோ அது போல் அவரை ரௌத் ராகாரமாக ஆதி மூல கால பைரவராகவும் வழிபடுகிறோம். கோபமிருக்கும் இடத்தில் குணமுண்டு. பைரவர் கோபம் பக்தர்களிடம் இல்லை. பக்தர்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது. காருண்ய மூர்த்தி கால பைரவர்.

எந்த காலத்திலோ, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள், முனீஸ்வரர்கள், தம்மை த்யானத்தில்  யோகத்தில் ஸ்புடம் போட்டு  உடல் வருத்தி அறிந்த உண்மைகளை, அவர்கள் அறிந்து, அனுபவித்து, நமக்கு அறிவித்ததை இப்போது, பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.(Centre Point of World’s Magnetic Equator). ஆம்  ரிஷிகள் த்யானத்தில்  ஞானத்தில் அறிந்ததை இப்போது விஞ்ஞானம் சொல்கிறது.

நாம் எப்போதுமே நம்மிடம் இருக்கும் அற்புத விஷயங்களை அறியாத ஒரு கூட்டம். இங்கிருந்து கெட்டிக்காரர்கள் அவற்றை கவர்ந்து கொண்டு போய் நமக்கு இங்கிலீஷ்ல சொன்னால் அவர்களை வணங்கி கை தட்டி வரவேற்பவர்கள்.

திருமூலரின் ஒவ்வொரு  பாடலும்  ஒரு மந்திரம்.  நமக்கு கிடைத்தவை  மூவாயிரம் மந்திரங்கள்.. ஒரு மந்திரம் எழுத ஒரு வருஷமாம். மொத்தம் மூவாயிரம் தான் நமக்கு கிடைத்திருப்பது  என்பதாலேயே   திருமூலர் என்ற பிரம ஞானி மூவாயிரம் வருஷங்கள் மரத்தடியில் உட்கார்ந்து சிந்தித்து எழுதியது என்று உணரமுடிகிறது.  நம்பாமல் சிரிப்பவன் சிரிப்பாய் சிரிக்கட்டுமே. நமக்கெதற்கு அந்த பிரச்னை.!!

இந்த பதிவோடு ஆதி சங்கரர் இயற்றிய கால பைரவாஷ்டகம் எட்டு ஸ்லோகங்களையும் படித்து கொஞ்சம் புரிந்து கொண்டோம். என்னாலியன்றதை நான் புரிந்து கொண்டதை எடுத்து சொல்ல முடிந்தால் அது பரமேஸ்வரன் க்ருபை என்று நம்புகிறேன். தவறுகள் இருந்தால் அது அத்தனையும் என் பாபமூட்டையை இன்னும் சுமக்கமுடியாத அளவு பெரிதாக்கி பளுவாக்கும் .

நான் சாதா சிவன். அவன் சதாசிவன். கால பைரவாஷ்டகம் முடிவடைந்தாலும் ஆதி சங்கரரின் எழுத்தில், வாக் வன்மையில் இந்த ஸ்லோக நாயகன், லோக நாயகன் சர்வேஸ்வரனை தொடர்ந்து பாடும் எண்ணற்ற எத்தனையோ ஸ்லோகங்களையும் காண முயல்வோம்.

பொருளைத் தேடும் நாம் அருளைத்தேட அவகாசம் இல்லை என்று இருப்பதால் அவ்வுலகம் நிச்சயம் இல்லை. அன்பில்லாத இடத்தில் சிவம் இல்லை. அவன் அருளாலே தான் அவன் தாள் வணங்க முடியும். நம்மை மற்றதில், மற்றோரில், காணும் பயிற்சி தான் பூரண அன்பு. அப்பாலுக்கு அப்பால் சிந்தனை போக வேண்டுமானால் உள்ளே ஆழமாக போகவேண்டும். அது ஆழ்கடல். வெளியே காணப்படும் சமுத்ரங்களைஎல்லாம் விட ஆழமா னது. பல ஜன்மங்களையும் தாண்டி உள்ளடக்கியது. அப்படி உள்வாங்கி நிமிர்ந்தவர்களின் நிலையே சமாதி நிலை. இத்தகைய யோகிகளால் மட்டுமே விழிப்பு, தூக்கம், ஆழ்ந்த உறக்கம் நிலைகளை கடந்து துரீயம் என்கிற நான்காவது விசேஷ நிலை அடைய முடியும். இதில் கடந்த, நிகழ், எதிர் கால (முக்கால) அனுபவமும் எளிதில் அறிவார்கள்.

சிவராத்திரி கண் விழிப்பு வ்ரதத்தால் நான்கு கால (3மணி நேரம் x 4) இரவு 12 மணி நேரத்தில் சித்தத்தை சிவன் பாலே வைத்தவர்க்கு திரி குணாதீதன் திரு மூர்த்தி கிருபையால் தமோ, ரஜோ குணங்கள் நீங்கி சத்வ குணம் பாலிக்கும்.

சிவன் அபிஷேகப்ரியன். வெறும் ஜலம். ரெண்டு வில்வ இலை. பஸ்மம் போதும்.
ரிஷி கேஷில் சிவானந்த ஆஸ்ரமத்தில் சென்று தரிசிக்கும் பாக்யம் வெகு காலம் முன்பு இளம் வயதில் கிட்டிய போது பக்தியை உணரும் பக்குவம் எனக்கு இல்லை. பின்னர் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.

அங்கே அனைவரும் சிவராத்திரி கொண்டாடுவது எப்படி தெரியுமா?. ஒரு ஸ்பூன் நீர் கூட பருகாது நாள் முழுதும் உபவாசம். லோக க்ஷேமத்துக்காக, உலக அமைதிக்காக, ஹோமம். நாள் முழுதும் ஓம் நமசிவாய பஞ்சாக்ஷர ஜபம். தியானம். பகல் இரவு நான்கு காலத்திலும் சிவன் சந்நிதியில் நாம ஜபம். அபிஷேகம். யார் யார் விரும்பு கிறார்களோ அவர்களுக்கு சன்யாச தீக்ஷை.

அடுத்ததாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் மிக விசாலமானது. புராதனமான புனிதமான அக்னி க்ஷேத்ரம். பஞ்சபூத ஸ்தலம். அந்த பிரம்மாண்ட ஆலயத்தில் நான்காவது பிரகாரத்தில் காலபைரவர் சந்நிதி இருக்கிறது.

அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாவல் இந்த காலபைரவரின் பொறுப்பு. அங்கே எப்போதும் மணியடிக்கும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த மணி ஓசை துர் தேவதைகளை விரட்டும் சக்தி வாய்ந் தது. பாபத்தை போக்கவல்லது என்பார்கள். வல்லாள மஹாராஜா கோபுரத்துக்கு தென் மேற்கில் ப்ரம்ம தீர்த்தத்தின் கரையில் வடகிழக்கில் இந்த கால பைரவர் சந்நிதி உள்ளது.

ஆரம்ப காலத்தில் ரெண்டாம் பிரகாரத்தில் பள்ளியறை அருகே இருந்த இந்த காலபைரவர் எப்படி நான்காம் பிரஹாரத்துக்கு சென்றார்?  கேள்விக்குப்பதிலாக  ஒரு சோகமான குட்டிக்கதை சொல்ல வேண்டும்.

ஒரு பக்தை தன்னுடைய குழந்தையோடு ஆலயத்தில் நுழைந்தவள் ரெண்டாம் பிரகாரத்தில் கால பைரவர் சந்நிதியில் குழந்தையை பிரிந்து வெளியே வந்துவிட்டாள் . குழந்தையைத்  தேடி காலபைரவர் சந்நிதிக்கு அவள்  சென்றபோது சந்நிதி  கதைவை  குழந்தை உள்ளே இருப்பதை அறியாமல்  அர்ச்சகர்  மூடிவிட்டார்.

''என் குழந்தை வேண்டுமே என்று கத்துகிறாள். ஒரு அசரீரி குரல் கேட்கிறது. ''திரும்பி போ, உன் குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை, காலை சந்நிதி திறந்தபிறகு வந்து குழந்தையை ஜாக்கிரதையாக அழைத்துச் செல்''

''இல்லை, முடியாது என் குழந்தை இப்போதே வேண்டும் '' என்று அடம் பிடித்த தாய்க்கு கோபமாக கால  பைரவர் குரல் கேட்டது. ''உன் குழந்தை இந்தா எடுத்துக் கொண்டு போ '' அதை தொடர்ந்து பொத்தென்று கை கால்கள் பிய்ந்து போன குழந்தையின் உடல் வெளியே எறியப்பட்டது. இதற்கு காரணம் காரியம் எதுவும் கேட்க வேண்டாம். கால  பைரவர் மேல் நம்பிக்கை இல்லாத தாய் குழந்தையை இழந்தாள், ஏதோ முன்  வினை பாப கர்மம் செய்த பலன் அடுத்த குழந்தை ஜென்மத்தில் காலபைரவரால் தண்டிக்கப் பட்டது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இது நடந்ததாக அருணாச்சல ஆலய நூலில் இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு காலபைரவர் சந்நிதி வெளியே நாலாம் பிரஹாரத்துக்கு மாற்றப்பட்டதாம்.

உக்கிரமான காலபைரவருக்கு குளிர சந்தனம், பன்னீர், பால், இளநீர் பழரச அபிஷேகம் நடக்கிறது. புராண சித்திரங்கள் வண்ணத்தில் தீட்டப்பட்டு பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கிறது. பிரமன் ஐந்து தலைகளுடன், கர்வத்தால் சிவன் கோபத்தை சம்பாதித்துக் கொள்வது. சிவன் காலபைரவனை தோற்றுவிப்பது. காலபைரவர் பிரமனின் ஐந்தாவது தலையை கொய்வது போன்ற காட்சிகள்.

ஒரு எளிய பிரார்த்தனை :
''மகாதேவா, நானே நீ. என் மனமே பார்வதி. என் பிராணன் உன் கணங்கள். என்னுடம்பே உனது கைலாசம். என் ஒவ்வொரு செயலும் உன்னை வழிபடுதல். என் உறக்கமே சமாதி நிலை. என் நடை உன்னை வலம் வருதல். என் வார்த்தை உனக்குண்டான பிரார்த்தனை. எனவே எனது என்று ஒன்றில்லை அது உன்னைத்தவிர.''

கால பைரவேஸ்வர மகா பிரபு, நீ பூத நாயகன், கணேஸ்வரன், ஆத்மநாதன், காசி நாதன், பாப நாசன். புண்ய தாயகன். மார்க்க பந்து. ஆதி காரணன். சர்வ லோகேசன். எனக்கு சொல்லத்தெரியாத இன்னும் என்னவெல்லாமோ. உனக்கு நமஸ்காரங்கள்.

காலம்   யாருக்காகவும்  காத்து  நிற்பதல்ல.   ஓடிக்கொண்டே  இருப்பதே காலம்.   அதன் ஒட்டத்தில்  நாமும்  கடத்திச் செல்லப்படுகிறோம்.  ஒவ்வொரு  நிமிஷத்தையும்  நாம்  அதனால்நமது  உலக வாழ்வை  பயனுள்ளதாக  மாற்றிக்கொள்ள காலபைரவரை  வணங்குகிறோம்.   கால பைரவர்  என்று  நாம்  சொல்லும்போதே  அவர் காலத்தை   கடக்க  நமக்கு  வழி காட்டுபவர்  என்ற  அர்த்தம்  கிடைக்கிறது.    காலத்தை  வெல்லும  சக்தி கொண்டவர்   கால பைரவர்.. கால பைரவர்  சிவ பெருமானே.  காலனுக்கே  காலனானவர் அல்லவா.  

காலபைரவரின்  வாகனம்  நாய்.  நாய்களை பராமரித்தும்   அவற்றுக்கு  உணவளித்தும்  நிறைய  காலபைரவரை  வணங்குகிறார்கள்.  கால பிரவ  அஷ்டமி  டிசம்பர்/ஜனவரி மாதம்  வரும் அன்று  காலபைரவர்  சந்நிதியில்  பூஜைகள்  நடைபெறும். முக்கால்வாசி  சிவன் கோவில்களில்  காலபைரவர்   சந்நிதிகள் இருக்கும்.  திருவண்ணாமலை  காலபைரவர்  சந்நிதி  மிக  பிரசித்தி  வாய்ந்தது. காசியில்  உள்ள  காலபைரவர்  சந்நிதி  முக்யத்வம்  கொண்டது.   உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பைரவரை சென்று வழி படுங்கள். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...