Monday, May 2, 2022

AKSHAYA THRITHIYAI

 


அக்ஷய த்ரிதியை    --   நங்கநல்லூர்    J K  SIVAN

தினசரி காலண்டர் ஷீட்டை கிழிக்கும்போது  ''டேய் , இன்று அக்ஷய த்ரிதியை'' என்று சொல்லியதே அப்போது என்ன தோன்றியது? 

அட்சய திருதியை என்றால் தங்கம் வாங்கவேண்டும் என்று   எண்ணினால் அது விஷமம்.  இன்று தங்கத்தின் விலை  ஒரு கிராமுக்கு ரூபாய்  4800க்கு மேல்.  ஒரு சவரன் கிட்டத்தட்ட ரூபாய் 33000. அதால் என்ன பிரயோசனம். அறுத்துக்கொண்டு ஓடுபவனுக்கு தான் அதிர்ஷ்டம்.  பின்
னா ல் துரத்திக்கொண்டு ஓடி விழுந்து  இடுப்பு, காலை ஒடித்துக்கொண்ட  மாமிக்கு மேலும் ஆஸ்பத்திரி செலவு தான் மிச்சம்.  யாரும் ரெண்டு சவரனுக்கு குறைவாக  கழுத்தில் நகைகள்  போட்டுக்  கொள்வதில்லை.   


யாரோ  ஒரு  பைத்தியம்  தினமும் இரவும் பகலும்  கழுத்தில் 5 கிலோ தங்க  நகையை மாட்டிக் 
கொண்டு சுமக்கிறதாம்.  என்ன பாவம் பண்ணியதோ அதற்கு இந்த சுமை.  அந்த தங்கத்தின் மதிப்பு குறைந்தது  ரெண்டரை கோடி ரூபாய்.  எளிதில் எவன் வேண்டுமானாலும் அந்த பைத்தியத்தைக்
கடத்திக் கொண்டு போய்  விடுவானோ?

ரொம்ப தப்பு. அட்சய திருதியை நாளில், தானங்கள் செய்யவேண்டும். இதைத்தான் சாஸ்திரங்கள் வலியுறுத்து கின்றன.  அட்சய திருதியை அன்றுமட்டும் அல்ல, என்றும்  இல்லாதோருக்கு உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாத, மிக உன்னதமான நாளில், தானம் செய்வோம். நாமும் நம் சந்ததியும் குறைவின்றி வாழ்வோம்! இப்போது கொரோனா காலத்தில்  எண்ணற்றவர்  சரீர, சம்பத், சாப்பாடு  உதவிக்கு வசதியின்றி,  வாடுகிறார்கள்.  நம்மால் ஆன  ஒத்துழைப்பைக்  கொடுப்போம்.  அதைச்  செய்யும்போது  பாதுகாப்பு விதிகளை கடைப் பிடிப்போம்.

இன்று  சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி அக்ஷய த்ரிதியை!    மகத்துவம் வாய்ந்த இந்தத் திருநாளன்று எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.  என்னால் முடிந்தது பஜகோவிந்தம்  தொடர் எழுத ஆரம்பித்து விட்டேன். 

அக்ஷயம் என்றால் பூரணமானது,   எல்லையில்லாதது,  நிறைவு மிகுந்தது என்று அர்த்தம். குறையவே குறையாதது என்று பொருள். அதாவது, அழியாத பலன் தரக்கூடியது என்பார்கள். ‘வளருதல்’ என்றும் அர்த்தம் உண்டு. இந்தத் திருநாளில் துவங்கும் நற்காரியங்கள், பன்மடங்கு பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்! கொரோனாவைத் தவிர மற்றெல்லாம் வளரட்டும்.
 
அக்ஷய த்ரிதியையின்  முக்யத்வம்:
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள். .
விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாள் .
திரேதா யுகம் தொடங்கிய நாள்.
பகீரதன் தவம் செய்து  ஆகாசத்திலிருந்து கங்கை நதியை பூமிக்கு வரவழைத்த  நாள்.    சமண தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிஷபதேவரின் நினைவு நாள்.  
வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்ட நாள்.  
காசியில் அன்னபூரணி  தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது  பிக்ஷை  பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்ற நாள்.
பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அக்ஷய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்த  நாள்.  
நமது ஹிந்து சனாதன தர்ம நம்பிக்கையில்  மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்களகர மானவை
சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது  வருஷ பிறப்பு.   ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமி  வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’’அக்ஷய த்ரிதியை'' .

வேதத்தில் அக்ஷய  த்ரிதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறப் பட்டுள்ளது.   பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.  எரிவாயு, பெட்ரோல், காய்கறிகள் தங்கத்தின் விலையை விட கூட என்று தோன்ற வைக்கிறது.  அப்படியும்  வருமானம் குறைந்த காலத்திலும் தங்கம் வாங்க  க்யூவில் நிற்கும் ஜனங்கள் உலகில் நாம் தான்.

அநேக ஹிந்துக்கள்  இந்த நாளில் உண்ணாநோன்பு  இருந்து பூசை செய்கிறார்கள்.   விசிறி, அரிசி, உப்பு, நெய். சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக் கின்றனர்.  விஷ்ணுவை  வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிப்பார்கள்.

வங்காளத்தில், இன்று  "அல்கதா" எனும் விழா கொண்டாடுவார்கள்.  அது விநாயகர் மற்றும் லக்ஷ்மியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். வங்காளிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் செய்கின்றனர்.

இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற் காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்வார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு நிமித்தங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன.

அக்ஷயத்ரிதியை   கல்யாணத்துக்கு   ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.

செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸ சரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபட்டு  இருந்த இடத்திலிருந்து கொண்டே  அங்கெல்லாம்  ஸ்னானம்  செய்வோம்.  ,மேலே சொன்னபடி  கொரோனா காலத்தில் அவசர அவசிய உதவி தேவையானவர்களுக்கு  தாராளமாக உதவுவோம்.

இன்றைய நிலையில்  அடுத்தது யார் மூலம்  கொரோனா வருமோ என்கிற கவலையில், தங்கம் வாங்க போவோர்  இந்த வருஷம் கம்மி என்று சொல்லலாமா?  தங்கம் விற்பதற்கென்றே சில  சரவணாக்கள்  இருக்கும் வரை கும்பல் குறையாது. உடனே கொடுக்கவேண்டாம், மாதாமாதம் கொடு, லாட்டரி அடித்தால்  மீதி கட்டவேண்டாம்... என்றெல்லாம்  எலிக்கு மசால்வடை. 
 கொரோனாவுக்கு முன்பு,  ரேஷன் கடையில்   சர்க்கரை  பருப்பு  பாமாயில், அரிசி வாங்க  நிற்கும் க்யூவை விட தங்கம் வாங்கும் கூட்டம் எப்போதும்  பெரியதாக  இருப்பது நமது துரதிர்ஷ்டம்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...