Sunday, May 8, 2022

SUNDARAMURTHI NAYANAR

 


தம்பிரான்  தோழர் -   நங்கநல்லூர்   J K  SIVAN 
சுந்தரமூர்த்தி நாயனார்  


''பறிபோன பரிசுகள்''


சிறந்த சிவபக்தரும்  தனது  நண்பருமான  சேரநாட்டு ராஜா,  சேரமான் பெருமாள் தந்த சன்மானங்கள், பரிசுகள், பொருள்களுடன் சுந்தரர் திருவாரூர் புறப்பட்டார் அல்லவா?  அத்தனை பரிசுகளையும் சுமந்து தூக்கிக்கொண்டு வர அரசன் சில ஆட்களையும்  அனுப்பினான் அல்லவா?. 
       
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  எங்குமே   காட்டுப் பாதைகள் தான்.    இயற்கை தரும் சூரிய  சந்திர  ஒளியைத் தவிர  சில தீ வார்த்தைகள் இரவில் வெளிச்சம் தந்த காலம்.  இரவும் பகலுமாக  பல  நாட்கள் நடந்து சென்ற  சுந்தரரும்  அவருடன் வந்தவர்களும்   திரு முருகன் பூண்டி எனும் ஊரை வந்து அடைந் தார்கள்.   இரவு நேரம் ஆகிவிட்டதால்  எங்காவது தங்க இடம் தேடினார்கள்.  அந்த நேரம் பார்த்து   திடீரென்று  சில  வேடுவர்கள்  ஆயுதங்களுடன் அங்கே அவர்களை சூழ்ந்து கொண்டார்கள்.  சுந்தரருடன் வந்த  ஆட்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை.  வேடர்கள் பலசாலிகளாகவும் ஆயுதம் தாங்கி ளாகவும் வேறு இருந்தார்கள்.  சேரமான்  பெருமாள் தந்த அனைத்து பரிசு பொருள்கள், நாணயங்கள், துணிமணிகள் எல்லாவற்றையும்   பறித்துக்கொண்டு வேடர்கள் சென்று விட்டார்கள்.  சுந்தரர் திகைத்து நின்றார்.  

அவருக்குத்  தெரிந்த ஒரே விஷயம் எதையும்  தனது தோழன்  பரமேஸ்வரனிடம் சொல்லிவிடுவது.   பரமேஸ்வரனுக்கு தெரியாத எந்த ரகசியமும் சுந்தரரிடம் இல்லை.  ஆகவே  இப்போது நடந்ததற்கு ம் அவனையே பொறுப்பேற்க செய்வது என்று முடிவெடுத்தார்.   ஆகவே  அங்குள்ள ஒரு சிவாலயத்தை  தேடி செல்கிறார்.  அங்கே  சிவனைத்  தரிசிக்கிறார். தனது குறையை சொல்லி வருந்துகிறார்

‘’கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
 விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
 டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
 பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.7.49.1


499  வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
 விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
 கூறை கொள்ளு மிடம்
 முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
 பூண்டி மாநகர் வாய்
எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர்
 எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே’’

 
''அடே   பரமசிவா,  வில்லையும், ஈட்டியும், வேலையும்,  கத்தி போன்ற  ஆயுதங்களைக்  காட்டியம்  எங்களை  விரட்டி மிரட்டி  வேடுவர்கள் இந்த ஊரில் என்னிடமிருந்த  பொருள்களைச்   சூறையாடினபோது இந்த  எல்லையில்   எல்லோரையும் காக்கும்  பாதுகாவலனாக இருந்தும்,   இந்த முருகன் பூண்டியில்  நீ  ஏன்  ஒன்றும்  செய்யாமல்  சும்மா இருக்கிறாய்?   நீ எதற்காக இந்த ஊரில் ஒரு தெய்வமாக  பயனின்றி   இருக்கிறாய் சொல்  பரமேஸ்வரா?  வந்தவன் யாரோ,  உன்  திருக்குமரன் முருகன்  என்ன செயகிறான், ?  என்று  உரிமையோடு சாடுகிறார் சுந்தரர்.  பத்து பாடல்களும் அருமையானவை.

சுந்தரர்  பாடித்  தனது  குறையை அறிவித்த பிறகு  அவர் மனசு ரொம்ப  மனசு லேசாகிறது. ''இனிமேல் பரமேஸ்வரன்  சும்மா இருக்கமாட்டான்,  உடனே  சென்று பொருள்களை மீட்டுத் தருவான்'' என்ற  நம்பிக்கையோடு  ஆலயத்தை விட்டு வெளியே  வந்தார்.   என்ன ஆச்சர்யம்?  திருமுருகன் பூண்டி சிவாலயத்தின் வாசலில் அவரிடமிருந்து வேடுவர்கள் கவர்ந்து சென்ற அத்தனை பொருள்களும் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருப்பதைக்  கண்டதும்  சுந்தரருக்கு தனது கண்களை நம்பவே முடியவில்லை.

'' ஓஹோ,   இது சிவன் வேலை தானோ. அவனே என்னிடமிருந்து சிவ  கணங்களை  வேடுவர்களாக்கி  என் பொருள்களை  கவர்ந்து என்னை இங்கே வரவழைத்து பாடவைத்து,  தானே அதைத்  தனது கையால் தருகிறானோ''.  அப்போது அவருக்கு சிவன் எதற்காக அங்கே திருமுருகன் பூண்டியில் இருக்கிறான் என்று சமாதானம் ஏற்படுகிறது.
மனது ஆனந்த  மயமாகிறது.

 எனது நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கு திருப்பூர் சென்ற போது சில ஆலயங்களை இங்கே தரிசிக்க வழியுண்டா? என வினவினபோது ''இங்கே திருமுருகன் பூண்டி என்ற பழைய  ஆலயம் இருக்கிறது போவோம்'' என்று என்னை  அழைத்து சென்றார்கள். திருப்பூரிலிருந்து  அவிநாசி செல்லும் வழியிலே  அருகிலேயே இருக்கிறது இந்த  ஆலயம்.

திருமுருகன் பூண்டி  260வது தேவார பாடல்  பெற்ற  ஸ்தலம்.  கொங்குநாட்டில் ரெண்டாவது.  மற்றொன்று அவிநாசி.  திருமுருகன் பூண்டியில்  சிவனுக்கு  திரு முருகநாதேஸ்வரர் என்று பெயர். அம்பாள்  ஆலிங்க பூஷண  ஸ்தம்பிகை, தமிழில் முயங்குபூண் முலையம்மை.  ராஜகோபுரம்  இல்லை. மேற்கு பார்த்த சந்நிதிகள்.  வாசலில் ஒரு கல் விளக்கு கம்பம்.  சுந்தரர்  ஒரு  காலத்தில் இரவில் இந்த விளக்கு அந்த பக்கத்தின் இருட்டை நீக்கி இருக்கும். இந்த கோவிலில் நாம் மறக்காமல் காண வேண்டியது மூலவர் சந்நிதிக்கு வலது புறம் உள்ள மூன்று மூர்த்தங்கள்.  சிவன் வேடுவனாக காட்சி தருவது.  சுந்தரர் முகத்தில் கவலையோடு பறி கொடுத்து நிற்பது.   அடுத்து சகல பறிபோன பொருள்களை யும்  சிவன் மீட்டு தந்தபோது மலர்ச்சியோடு முகத்துடன் சுந்தரர் நிற்பது.   சிற்பிகள்  அந்தக்காலத்தில்  உயிரோட்டம் கொடுத்து சிற்பங் களை வடித்தார்கள்.  (கேவலமாக போய் விட்டோம் இப்போது.  ஒரு அம்மாவின் சிலையை வடிக்க சொன்னால் வேறு யாரோ ஒரு அம்மாவின் முகத்தை  சிலையாக  வடிக்கும் மேதாவிகளாக போய் விட்டோம்)

மன நோய்க்கு  குணம் பெற அநேகர் இங்கே வந்து தங்கி வழிபடுகிறார்கள். பார்த்தேன். அவர்கள் நலனுக்காக  நானும் பிரார்த்தித்தேன். 

சுந்தரர் நன்றியோடும் திருப்தியோடும்  சிவனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாரூர் செல்கிறார்.

சில காலம் சென்று மீண்டும் சேரமான் பெருமாளை சந்திக்க விருப்பம் கொண்டு குண்டக்கோளுர்  எனும் ஊர் போகும் வழியில்  திருப்புக்கோளியூர்  அவிநாசி அடைகிறார்.    அவிநாசியில்  சிவனைக் காண சென்றவருக்கு  திகைப்பு.  

''என்ன இங்கே  ஒரே சோக மயமாக எங்கும் அழுகுரல் கேட்கிறதே?  யாருக்கு என்ன நேர்ந்தது இங்கே என்று அந்த கூட்டத்தை நெருங்கு கிறார்.  அங்கே. ...?

தொடரும்  



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...