Wednesday, November 16, 2022

YATHOTHKAARI PERUMAL




  சொன்னதை செய்வேன்  வேறொன்றும் தெரியாது  

நங்கநல்லூர்  J K SIVAN

மிருகங்கள்  பறவைகளை பழக்கினால்  நாம்  சொன்னதை அவை செய்யும்.  ஆனால்  நாம்  பெரியவர்கள், ஞானிகள் வேதங்கள் சாஸ்திரங்கள் சொன்னதை செய்வதில்லை.  பகவான் சர்வ சக்தி கொண்டவர்  என்றாலும் பக்தர்கள் சொன்னதை செய்ததாக நிறைய  புராணங்கள் ஆன்மீக நூல்கள்  (பக்த விஜயம் போல் ) சொல்கிறது. ஒரு ஆழ்வார் வாழ்க்கையிலும்   இப்படித்தான் பெருமாள் ஒரு ஆழ்வார் சொன்னபடியே செய்திருக்கிறார்.
காரணம்  ஆழ்வாரின் பரிபூர்ண பக்தி. எல்லோருக்கும் இது  கிடையாதே.

காஞ்சிபுரத்தில்  ஒரு  பெருமாளுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்று  பெயர். ஸம்ஸ்க்ரிதத்தில்  “யதோக்தகாரி”. ‘யதோக்த’ – ‘யதா உக்த’: ‘சொன்னபடி’, ‘சொன்னவண்ணம்’; ‘காரி’ – செய்பவர்.

யார் சொன்னபடி பெருமாள் என்ன செய்தார்?   
ஒரு  ஆழ்வார்  தன் சிஷ்யன் ஊரைவிட்டுப் போகிறான், அப்போது பெருமாளும் அவன் பின்னே துரத்திக்கொண்டு ஓடவேண்டும்; அப்புறம் அவன் ஊருக்கே திரும்பி வருகிறான். அப்போதும் அவன் பின்னேயே துரத்திக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று பகவானுக்கே ஆர்டர் போட்டார்! அவர் சொன்னபடியெல்லாம் பகவானும் பண்ணினான். அதனால் தான்   யதோக்தகாரி என்று பெயர் வாங்கினான்.

அந்த குரு யார்? சிஷ்யப்பிள்ளை யார்? ஏன் இப்படி (குரு) ஆர்டர் போட்டார்?  இதை அறிந்து கொள்ளவே இந்த சுருக்கமான பதிவு.
சென்னையிலிருந்து   ரெண்டு மணி  தூரத்தில்  ஒரு  ஊர் பூந்தமல்லி.  (ஒரிஜினல் பெயர் பூவிருந்த வல்லி). ஹமில்டன் வாராவதி  அம்பட்டன் வாராவதி- - ஆங்கிலத்தில் ''Barber's  bridge என  மொழி பெயர்ப்பு வேறு!!   ஆனது போல், பூவிருந்த வல்லி  பழைய  அழகிய செடி கொடி  மலிந்து கம்மென்ற மணமிழந்து தனது   பேரையும்  அடையாளம்  இழந்து விட்டது. இதன்  அருகே  மற்றொரு  அருமையான  புனித  கிராமம்  திருமழிசை.

பன்னிரு ஆழ்வார்களில் திருமழிசையாழ்வார்  ஒருவர். திருமழிசை கிராமத்தில் பிறந்தவர்.  அப்போதெல்லாம் மரியாதை  காரணமாக  பெரியவர்களின் பேரைச்  சொல்லமாட்டார்கள். ஊர்க்காரர்  என்று அவர் ஊரோடு அடையாளம் காட்டுவார்கள்.  சிலர்  புரிந்த காரியத்தை வைத்து, அல்லது அவர்களுடைய மஹிமையைக் குறிப்பிடுகிற   மாதிரி இன்னொரு பெயரைச் சொல்வார்கள்.  உதாரணமாக  பெரியாழ்வார் – பெரிய ஆழ்வார், நம்மாழ்வார் – நம்முடைய, அதாவது நமக்கு ரொம்ப ஸொந்தமான ஆழ்வார் --  இப்படி தான் காரணப் பெயராக இருந்து  அதுவே  ப்ரஸித்தி பெற்று, அம்மா அப்பா வைத்த பெயர் மறந்து, மறைந்து போய்விடுவதுமுண்டு.    

திருமழிசையாழ்வாருக்கு பக்திஸாரர் என்று ஸம்ஸ்க்ருதப் பேர்.  பெருமாளிடம் அதிக  பக்தி கொண்டவர் என்பதால் கூட இருக்கலாம்.    ''மழிசை'' என்பது ‘மஹீஸாரம்’ .  பூமிக்கே ஸாரமான ஊர் அது என்று அர்த்தம். மஹீஸாரம்   காலப்போக்கில் மழிசையாக மழிக்கப்பட்டிருக்கிறது.  

திருமழிசையிலிருந்து  ஆழ்வார் காஞ்சீபுரத்துக்கு வந்து வாஸம் பண்ணிய  போது ,  அருகில்  ஓ\ரு பெருமாள்
கோவிலில் பாசுரம் பாடிக்கொண்டும், உபதேசம் பண்ணிக் கொண்டும் அவ்வப்போது அப்படியே யோக ஸமாதியில் பெருமாளோடு ஒன்றியும்  இருந்தார்.

மஹா  பெரியவா  திருமழிசை ஆழ்வார் பற்றி என்ன சொல்கிறார்:
முதலாழ்வார்கள்  – பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்ற மூவரும்  மஹாவிஷ்ணுவின் பரம பக்தர்க ளென்றாலுங்கூட ஸமரஸ மனப்பான்மையோடு சிவனையும் உயர்வாகச் சொல்லிப் பாடினவர்கள்; திரு மழிசையாழ் வார்தான் வீர வைஷ்ணவமாகவே சொல்ல ஆரம்பித்தவர்’ என்று சொல்வதற்கு இடமிருக்கிறது.  அவரது திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி ஆகியவற்றில் விஷ்ணுவிடம் பரம பக்தியையும், யோக மார்க்கத்தின் உத்தம ஸ்திதிகளைப் பற்றியும் பார்க்கிறோம். இத்தனை நாழி ஒருவரிடமே அநன்ய பக்தி பண்ணுவது பற்றி சொன்னேனே, அப்படி விஷ்ணு பக்தர்களை ஒரே குறியாக அந்த ஒரு மூர்த்தியிடமே ஈடுபடுத்துகிற நோக்கத்தில்தான் அவர் இதர தெய்வங்களை மட்டம் தட்டினாலும் பரவாயில்லை என்று பண்ணியிருக்கிறாரென்று ஸமாதானம் செய்து கொள்ளலாம். அது இருக்கட்டும்.  பகவானுக்குப் பாசுரம் ஸேவிப்பது, பாகவதாளுக்கு உபதேசம் செய்வது, அப்படியே யோக நிஷ்டையில் போய் விடுவது என்று அவர் கோவிலிலேயே வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். (அது) வரதராஜர்  கோவிலென்று நினைத்தால் அது தப்பு''.
++

 7ம்  நூற்றாண்டில்  திருமழிசை  வெறும்  மூங்கில்   காடாக இருந்த  சமயம்.   ஒரு நாள்  காலையில்  பார்கவ ரிஷி என்ற ஒரு  பக்தர்  கனகாங்கி என்னும்  தனது பத்னி யோடு    மனம் நொந்து  அந்த காட்டிற்கு  வந்தார்.அவள்  கண்ணில்  காவேரி .அவர் கையிலோ  12 மாசம்  கருவில் இருந்தும் உடல்  உறுப்புகள் இன்றி  ஒரு உயிரற்ற மாமிச  பிண்டமாக ( கிட்டத் தட்ட நாம்  இப்போது  சொல்கிறோமே ஸ்டில் பார்ன்  என்று  அதுபோல்)  பிறந்த  ஒரு ஆண்  சிசு.

''இறைவா  இதுவும் உன் திரு விளையாட்டோ?  அப்படித்தான்  என்றால் உன் எண்ணப்படியே நடக்கட்டும் !! மிகவும்  மனமுடைந்து  பார்கவ  ரிஷி  பரமனை  வேண்டினார்.   மேற்கொண்டு  சிந்தனை  இன்றி  ஒரு மூங்கில்  புதரில் அந்த அரை குறை உயிரை, உடல்  அசைவு இல்லாத  சின்னஞ்சிறு  சிசுவை பெற்றோர்கள் கை விட்டனர்.   இதயம் வெடித்து  சிதற  இருவரும் அங்கிருந்து  சென்றனர்.

எம்பெருமானின்  கருணையை  வார்த்தைகளில் ரொப்ப  முடியுமா?   தனித்து கை  விடப்பட்ட   "அது" அவர்கள் சென்ற சில  கணங்களிலேயே  பூரண தேஜஸோடு   முழு வளர்ச்சியடைந்த  குழந்தையாக அழுதது.    அந்த பக்கமாக அப்போது  மூங்கில் காட்டில்   உலவிக்கொண்டிருந்த  குழந்தைச்  செல்வமில்லாத இரு வயதான  காட்டுவாசி  தம்பதிகளான திருவாளன்  பங்கயற்செல்வி  இருவர் காதிலும்  குழந்தை அழும் ஒலி கேட்டது.  ஆச்சர்யத்தோடு குழந்தையை தேடி கண்டு பிடித்து  அந்த ஊர்  தெய்வத்தின் அருளாக  அவன் நாமத்தையே  நன்றியோடு  ''திருமழிசையான்'' என்றே  குழந்தைக்கு  பெயரிட்டு  வளர்த்தனர். மிக்க  ஆனந்தத்தோடு அதற்கு  பசும்பால்  ஊட்டினர். குழந்தையோ  ஆகாரமே  உட்கொள்ள வில்லை.

 "ஹே!  திருமழிசையானே  நீயே  அருளவேண்டும்,  இந்த சிசு  பாலுண்ண வேண்டும்''  என அந்த கிழ தம்பதியர் வேண்டி யவுடன்,  குழந்தை சிறிது   பால் அருந்தி விட்டு மீதியை   அவர்களையே 
குடிக்க வைத்தது.   என்ன ஆச்சர்யம்!   கிழ  வேடுவ  தம்பதிகள் இளம் தம்பதிகள் ஆகி அவர்களுக்கு  விரைவில் ஒரு குழந்தையும் பிறந்து  அவனுக்கு ''கணிக்கண்ணன்''  என்று பெயரிட்டு  அவன்   அண்ணா  திருமழிசையானுடன்  வளர்ந்தான்.  திருமழிசையான் கல்வி கேள்விகளில்   சிறந்தவனாகி  பல  மதங்களை ஆராய்ந்து பின்னர் சிவபக்த சிரோமணியாக  மாறி சிவ வாக்யர்  ஆனார்  என்றும்  பேயாழ்வார் அவரை நாராயணனின் மகத்வம் உணர வைத்து வைணவராக மாற்றி  திருமழிசைஆழ்வார் என   உலகுக்கு  அறிமுகம் செய்வித்தார்.  சிவவாக்யர்  பாடல்கள் மிகவும்  சக்தி வாய்ந்தவை.    சில பாடல்களை மட்டும்  உங்களோடு   அடிக்கடி சேர்ந்து ரசிக்கிறேன்  அல்லவா?  அவர்  எழுத்திலே  பல ''டன் '' அழுத்தம்,  சுமை,  வலிமையை  உணரலாம். ஒன்று உதாரணம்:

'' இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
 இல்லையென்று  நின்றதொன்றை இல்லையென்ன லாகுமோ
 இல்லையல்ல வொன்றுமல்ல இரண்டும் ஒன்றிநின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.''

பகவான்  இல்லாதது போல்  இருக்கிறான். இல்லை  என்றால் இல்லாதவ  னாவானா? எல்லாமாக  இருக்கும்  ஒன்று  என்றாலும்  இல்லவே இல்லை  என்றாலும்  இரண்டும் அவனே என்று  முடிவாக தெரிந்தவர்கள் ஜனனம்  மரணம்  சுழற்சி  முடிந்து இனி பிறவாவரம்  பெற்றவர்  என்கிறார்  சிவ வாக்யர். 

 திருமழிசை ஆழ்வார் கூடவே  இருக்கும்  தம்பி  கணிக்கண்ணன் ஆழ்வாரின் பிரதம சிஷ்யனானான்.

ஒருநாள் அந்த ஊர்  ராஜா அந்த கோவிலுக்கு  வந்தான். பெருமாளை வழிபடும்போது    கணிக் கண்ணனின்  அழகு தமிழில் செவிக் கினிய பாசுர  மியற்றும் பாங்கில்  மயங்கி  ராஜா தன் மீது  பாடல்  இயற்ற உத்தரவிட்டதும், கணிக் கண்ணன்    "இறைவன்    மீதன்றி   மற்றவர் மேல்  புகழாரம்  அல்ல"  என  மறுத்ததும்,  ராஜா  கோபம் கொண்டு  கணிக்கண்ணனை  மறு நாள் காலைக்குள் (அந்த கால  ராஜாக்கள்  தலையை வெட்ட  ரொம்ப  நேரம்  அவகாசம் கொடுக்க மாட்டார்கள்)  ஊரை விட்டே போகச் சொன்னதும்,  கணிக் கண்ணன்  தன் குருவான  திருமழிசை  ஆழ்வாரிடம்

 "குருநாதா,  நான் உங்கள் நிழல்,எவ்வாறு உங்களை விட்டு பிரிந்து செல்ல முடியும்  என்றதும், ஆழ்வார் அமைதியாக  பெருமாளை  நோக்கி,

 "ஹே!!  நாக சயனா, கணிக்கண்ணன் போகின்றான்,  அவனில்லை  நான் இல்லை, எனவே நானும்  போகிறேன், நீயின்றி நானில்லை  எனவே  நீயும்  சட்டு புட்டு என்று உன்னுடைய இந்த ஆதிசேஷன் எனும்  நாக படுக்கையை சுருட்டி கொண்டு ஐந்தே நிமிஷத்தில்  கிளம்பு. மூவரும் இந்த  ஊரை விட்டே  செல்லலாம்"  என்று  ஆர்டர் போட்டார்!   அவ்வாறே பெருமாள் செய்தார்.  மூவரும் காஞ்சியை விட்டு அகன்றனர்.  ஊரே அஸ்தமித்து விட்டது. மண்மாரி   பெய்தது. ராஜாவுக்கு விஷயம் தெரிந்து அலறி புடைத்துக்கொண்டு ஓடிவந்தான்.   ஊருக்கு வெளியே  சென்று விட்ட  பெருமாள்,ஆழ்வார்,  கணிக் கண்ணன் மூவர்  காலிலும்  விழுந்தான். திரும்பி வாருங்கள் என்று கெஞ்சி  அழுது புரண்டான்.  
'பரமாத்மா, நான் மா பெரும் தவறிழைத்தேன். என்னை மன்னியுங்கள்,   நான்  திருந்தினேன்''   நீங்கள்  வராமல்   திரும்ப மாட்டேன்''  என்று  கெஞ்சினான்.
ஆழ்வார்   ''கணிக்கண்ணா   வா திரும்புவோம்'' என்றார்.   பின்னால்  நின்ற  பெருமாளை பார்த்து
"உனக்கும்  தான்,   நீயும்  தான், நீ  இல்லாமல் நாங்கள் ஏது? சுருட்டிய உன் பாம்பு படுக்கையை மீண்டும் அங்கு வந்து விரித்துக் கொள் "என்றார்  திருமழிசை ஆழவார்.  மூவரும் ஊர் திரும்பினர்

  திரு வெக்கா  எனும் சின்ன ஊர் ஆயிரம்  வருட  வயதுள்ள காஞ்சிபுரத்தில் உள்ள  ஒரு வைஷ்ணவ  திவ்ய  தேச  கோவில். யதோக்தகாரி எனும்   சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ஆலயம்.    வரதராஜ பெருமாள்  கோவிலில் இருந்து  ஒரு  கி.மீ  தூரம்  தான்.   விஷ்ணு  காஞ்சி  பஸ்  நிலையத்திலிருந்து  2 கி.மீ.   எதிரே  அஷ்ட புஜம் பெருமாள்  கோவில்  அசாத்யமாக  இருக்கிறது.  நான்  சென்று மகிழ்ந்தேன்.    நீங்கள்? .  
ஒன்று  நிச்சயம்.  காஞ்சிபுரம்  சென்றும்  இதை  தரிசிக்காதவர்கள் மூச்சிருந்தும்  பேச்சில்லாதவர்களுக்கு  சமம்.   நின் கடன் அடியேனையும்  தாங்குதல் என்  கடன்  பணி செய்து  கிடப்பதே  என்று   இறைவனே  மூச்சாக  வாழ்வோர்க்கு இறைவன் சொன்னதையும்  ஏன்   சொல்லாததையும் செய்வான்.    இறைவன்  பக்தனுக்கு அடிமை என்பதற்கு  இந்த கதை ஒன்றே சான்று. ஒரு நிமிஷம்.  இது கட்டுக்கதை அல்ல.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...