Friday, November 25, 2022

THIRUPATHI TEMPLE




திருமலேசன் வழிபாடு 'திட்டம்' -
#நங்கநல்லூர்_j_k_SIVAN
 
சனிக்கிழமை  விசேஷ செய்தி

நாம் நினைப்பது போல் இல்லை. யாரோ  எதுவோ  செய்கிறார்கள் நாம்  பார்க்கிறோம் என்று இல்லை.  திட்டமிட்டு முறைப்படி  தான்  கோவில்கள் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன.  முக்கியமாக  திருப்பதி பெருமாள் கோவிலில்  ஒவ்வொருநாளும் எப்படி என்னென்ன செய்யவேண்டும் என்று பல  விஷயம் தெரிந்தவர்கள் கூடி கலந்தாலோசித்து வழிமுறைகளை, வழிபாடு நெறிகளை  பல நூற்றாண்டுகள் முன்பே  வகுத்துள்ளனர்.  

1803ல் கிழக்கிந்திய  கம்பெனி வெள்ளைக்காரன்  ஆட்சியில் திருப்பதி கோவில் அவர்கள்  கட்டுப்பாட்டில் இருந்த போது  கர்னல் மெக்கென்ஸி  தான்  அதிகாரி. அவன் கோவில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல்  பக்தர்கள்  மனம் கோணாமல்  ஆகம  விதிகளுக்குட் பட்டு பெருமாளுக்கு சேவைகள் செய்பவை பற்றி ரொம்ப ரொம்ப  ஆழ்ந்து கவனம் செலுத்தி ஒன்று விடாமல் எழுத  வைத்து,  அதை அப்படியே தவறாமல் பின்பற்ற கட்டளை  இட்டிருக்கிறான்.  ''திட்டம்'' என்று அதற்கு பெயர். மராத்தி மொழியில்  நாராயண ராவ்  எழுத்தில் வடித்தது. TTD தேவஸ்தானம் இன்றும் அதன்படியே  நடக்கிறது. அதில் சில ருசிகர விஷயங்கள்  இருப்பதை அறிந்தேன். கொஞ்சம்  இப்போது சுருக்கி தருகிறேன்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு வெளியூர் காரர்கள் வந்தால் ''பரஸா '' என்ற  காணிக்கை தர வேண்டும். 1800 ல்   ஜீயங்கார், ஏகாக்கிகள்,  கோவில் நிர்வாகத்தை  பொறுப்பாக கவனிததாக தெரிகிறது. .  திருப்பதி திருமலை வாழ் மக்களிடமும், ஏழைகளிடமும் கட்டணம் வசூலிக்க கூடாது.  எல்லோரும்  பெருமாள் முன் நின்று  ஆர அமர  தரிசனம் செய்யட்டும்.  வசதி படைத்தவர்கள் பணக்காரர்களிடம்  குறிப்பிட்ட தொகை காணிக்கையாக  கட்டி  தரிசனம் பெற அனுமதிக்க வேண்டும்.  

திருமலை ஏறுவதறலோ இறங்குவதற்கோ ஏழைகள் பணம் கட்டவேண்டாம். பணக்காரர்கள் பணம் கட்டாவிட்டால் இறங்கும்போது அரசாங்க  காவல் காரர்கள் பிடித்து பணம் வசூலிப்பார்கள்.

இல்லாவிட்டால் சிறை. 24 துக்காணி, தம்பிடி, தான் மலையேற இறங்க சார்ஜ். யோகிகள் பைராகிகள் பிச்சைக்காரர்கள் இலவசமாக ஏறி இறங்கலாம். 
ஒவ்வொரு அதிகாலையிலும்   கோவில் காப்பாளர்  பெரிய ஜீயங்கார் மடத்துக்கு வந்து சாவி வாங்கி போகவேண்டும்.கோவில் வாசல் பூட்டு திறந்து உள்ளே  உக்ராணம் கதவு பூட்டு திறந்து  அன்றைக்கு  தளிகைக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு அரிசி, நெய் சர்க்கரை,பருப்பு வகைகள் எடுத்து ஸ்வயம்பாகிகளுக்கு(ஆலய  சமையல்காரர்கள்)  அளந்து கொடுப்பார்கள்.

பெரிய  ஜீயங்கார் குளித்துவிட்டு  ஆலயம் செல்ல தயாராக இருப்பார்.  கொல்லவார் எனும் உத்தி யோகஸ்தர் அவரை அழைப்பார். எல்லோரும் தரிசனத்துக்கு காத்திருப்பார்கள். கோவில் கர்பகிரஹ சாவியோடு ஜீயங்கார் செல்வார். நமஸ்காரம் பண்ணிவிட்டு  கதவை திறப்பார்.  நம்பி என்கிற  அர்ச்சகர் அங்கே தயாராக இருப்பார்.  ப்ரம்ம தேவ தீபம்,  நெய்  திரி யோடு ஏற்றி,  முதல் நாள் அலங்கார புஷ்பங்கள், நிர்மால்யம் எல்லாம் களைந்து,  சயன அறை  பள்ளியறை  கட்டிலில் இருந்து புஷ்பங்கள் எடுத்து, ஸ்ரீனிவாச மூர்த்தி உத்சவ விகிரஹத்தை எடுத்து நகைகள் ஆபரணங்கள்,  பூஜா பாத்திரங்கள் எல்லாம் சரிபார்த்து,  அர்ச்சனை பண்ணி விட்டு, தீர்த்த கந்த அபயஹஸ்தம் தொட்டு அர்ச்சகர்  பெரிய ஜீயங்காருக்கு தீர்த்தம் அளிப்பார்.சடாரி  சார்த்துவார். கொல்லவாருக்கும் உண்டு. கையில் தீவர்த்தி எடுத்துச் செல்பவரும் அருகே இருப்பார்.  கொல்லவார் திருமஞ்சன கட்டிலில் இருக்கும் வஸ்திரங்கள், தலையணை எல்லாம் அகற்றுவார் .  அப்புறம்  வத்த பாராயண  குரூப் வரும், ஆசார்ய புருஷருடன் சேர்ந்து ஸ்தோத்ரங்கள்  சொல்லி மங்கள ஆரத்தி.
அப்பறம் பால்  நைவேத்யம்  பெருமாளுக்கு. ஏகாங்கிகள்  குடும்பம் இல்லாத  அர்ச்சகர்கள்.  பெரிய  ஜீயங்கார் மங்களார்த்தி தயார் செய்து ஏகாங்கிகளிடம் கொடுக்க அவர்கள் நம்பியிடம் கொடுக்க   அவர் பெருமாளுக்கு  தீபாராதனை செய்கிறார். பிறகு ஜீயங்காருக்கு தீர்த்தம் சாதிப்பார்.  அப்புறம் எல்லா பக்தர்களுக்கும்  தீர்த்த பிரசாதம்.  எல்லோரும் விடை பெற்றபின் கர்பகிரஹம் ஆகாச கங்கை ஜலத்தாலும்  ப்ரம்ம பாவி கிணற்று   நீராலும் சுத்தம் செய்யப் படும்.மலர்மாலைகள்  கந்த திரவியங்கள் நந்தவனத்தி லிருந்து  கொண்டுவரப்பட்ட மலர் மாலைகள் அணிவிக்கப்படும்.  அப்புறம்   தோமாலை சார்த்தப்பட்டு  கற்பூர ஆரத்தி காட்டுவார். 

தோமாலை சேவைக்கு பிறகு ஸ்ரீனிவாச மூர்த்தியை ரங்க மண்டபத்தில் கொலுவுக்கு  ஏளப்பண்ணுவார்கள் . அர்ச்சனை, மந்திர உச்சாடனங்கள்  நடைபெறும். யாத்ரா தானம்  பிராமணர்களுக்கு  அளிப்பார்கள். பஞ்சாங்கம் படித்து விட்டு,  பெரிய ஜீயங்காரின் குமாஸ்தா  அன்றாட வரவு செலவு கணக்கை ஸ்ரீனிவாசனுக்கு படித்துக் காட்டுவார்.  வாகன, அன்னதான, பிரசாத  செலவுகள்,  காணிக்கைகள் வஸ்திரங்கள், ஆபரணங்கள் கணக்கு ஸ்டாக் நிலவரம்  சொல்லப்படும்.  கணக்கு முதல் நாள் காலை வரை அளிக்கப்படும்.

கற்பூர தீபம் மங்கள ஆரத்தி நடை பெறும் . கீதம் கணம், மங்கள வாத்யம் ஒலிக்கும்.  சாமரம் வீசப்படும், குடை பிடிக்கப்படும். கண்ணாடி காட்டி , ராஜோபசாரம் நடைபெறும்.  ஸ்ரீனிவாச மூர்த்திக்கு நைவேத்யம் ஆனபிறகு பிரசாத விநியோகம்.  சஹஸ்ரநாம அர்ச்ச னை,  புஷ்ப மாலார்ச்சனை, வெங்கடாசலபதி கத்யம், ஆகியவற்றை நம்பி முன்னிலையில் தொடரும்.  முதல் மணி ஒலிக்கும். பிரபந்தம்  ஆரம்பமாகும்.  தீர்த்த பிரசாதம், சடகோபம் எல்லாருக்கும் சார்த்தப்படும்.  ஆலவட்டம் விசிறுவார்கள்.

பரஸாக்கள் அப்புறம் தரிசனம் பெறலாம். காணிக்கை கள்  பெறப்படும். பெரிய  வெள்ளிப் பேலா , வாயக லமாக, கர்பகிரஹத்தி லிருந்து கொண்டுவந்து தங்கம் வெள்ளி, பணம்  காணிக்கைகளை அதில்  நம்பி கலெக்ஷன் பண்ணுவார்.  வெள்ளைக்கார உத்யோகஸ் தர்கள், கொல்லவாரோடு  சேர்ந்து  அதை கண் காணிப்பார்கள்.

கணக்கு பார்த்து  எழுதிக் கொண்டு காணிக்கைகள்  கோவில் நிர்வாகத்துக்கு அனுப்பப்படும்.சிப்பாய்கள் கூடவே போவார்கள்.  பெரிய  உண்டியை திரைக்குள் போர்த்தி வைத்திருப்பார்கள், திரை இடைவெளியில் கை  உயர்த்தி உண்டியல் வாய்க்குள்  காணிக்கை களை  வெங்கடாச்சலபாதிஹ்யை வேண்டிக்கொண்டு போடும் வழக்கம் உருவானது. உண்டியல் காணிக் கைகள்  துணியால் சுற்றி மூடி  ஹனுமான் முத்திரை , ஸ்ரீனிவாச முத்திரை  சீல் வைத்து ஜீயங்காரிடம் கொண்டு செல்வார்கள். உண்டியல் எடை பார்த்துவிட்டு நிர்வாகத்துக்கு போகும்.   மதியம் ரெண்டுமணிக்கு  கர்பகிரஹம்  நிலைக்கதவை   ஏகாங்கிகள்  பெருமாளுக்கு நைவேத்யம் சமர்ப்பித்துவிட்டு   சார்த்துவார்கள்.  அப்புறம் எல்லோருக்கும் தீர்த்த பிரசாதம்.

ரங்க மண்டபத்தில் தரிசனம் பெற  பக்தர்கள் அமர அனுமதி உண்டு.  அலங்காரம்  அர்ச்சனை  அபிஷேகங்கள் தரிசித்துவிட்டு காணிக்கை ககள் செலுத்துவார்கள்.  தேர் வாகனங்களை தரிசிப்பார்கள். கருட வாகன   தரிசனத்துக்காக   நிறைய பக்தர்கள் கும்பலாக காத்திருப்பார்கள். உத்சவர்  ஊர்வலம் போகும்போது காஸ் லைட்டுகள், தீவர்த்திகள்  ஜெகஜோதியாக இருக்கும் இருளை  இனிய  கானாம்ருத சங்கீதம்  கலைக்கும். பக்தர்கள் மனம்  மலையின் குளிர்ந்த காற்றைப்போல  நிறைய குளிரும். 

இன்னும் நிறைய விஷயங்கள்  அந்தக்கால புத்தகங்களில் இருக்கிறது.   அப்புறம் சேர்ந்து அனுபவிப்போம்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...