Friday, November 4, 2022

TAMIL POETS

 இதைக் கேளப்பா ..    #நங்கநல்லூர்_J_K_SIVAN


 
என் தாத்தா  என்  தந்தை போன்றவர்கள் தமிழ் ஆங்கிலம்  சமஸ்க்ரிதம்  எல்லாவற்றிலும்  சிறந்த கல்விமான்களாக இருந்தார்களே  நான் ஏன் இப்படி ? என்று அடிக்கடி தோன்றும்.  என் தாத்தா  அநேக பாக்கள்  அறிந்தவர் இயற்றியவர். எனக்குத் தெரிந்த பாக்கள்   சித்தப்பா, பெரியப்பா, அப்பா, முஸ்தபா,  PU சின்னப்பா ஆகியவை தான்.   தமிழ் ஞானமே இவ்வளவு என்று அறிந்தபின் என  சமஸ்க்ரித  ஆங்கில ஞானம் பற்றி சொல்ல  ஆரம்பித்தவுடன்  எல்லோரும் ஏன்  ஓடுகிறீர்கள்?

 உலகத்தில் இருக்கும் அத்தனை சமுத்ரங்களையும் ஒன்றாக  சேர்த்தாலும்  அது நமது தமிழ்க்கடலுக்கு ஈடாகாது என்று சொல்லும் அளவுக்கு எத்தனையோ  விஷயங்கள்  இருக்கிறது  நமது தமிழ் இலக்கியத்தில்.  நான் அப்பப்போ  தேடும்போது சில அற்புதங்கள் கண்ணில் படுகிறது. 

அது பற்றி ரெண்டு விஷயங்கள் சொல்கிறேன்.

ஒரு புலவர், வழக்கம்போல் வறியவர். காசு என்பதை  வாசனை பார்க்கக்  கூட  ஒருநாளும்  கிடைக்காதவர். முன் ஜென்ம புண்ய பலனாக  ஒருநாள் ஒரு தனவந்தரைச்  சந்திக்கிறார்.  ஆனால் புலவரது துரதிர்ஷ்டம்  அந்த  தனவந்தர் அந்த சமயம்  நொடித்து போன நிலையில் இருப்பவர்.  இருந்தாலும்  ஏதோ கடன் கிடன்  வாங்கி கொஞ்சம்  புலவருக்கு பரிசளிக்கிறார்.  அவரளித்த பரிசைப்  போற்றி  புலவர்  ஒரு கவி பாடுகிறார். ரொம்ப சிம்பிள். அர்த்தம் இட்லி சாப்பிடுவது போல் எளிதாக இருக்கிறது.

''இந்த காவிரி ஆற்றங்கரையில் நான்  நிற்கிறேன்.  காவிரியில் நிறைய  வெள்ளம்  ஓடும்போது வளம் கொழிக்கிறது. தண்ணீர் பாய்ந்து எத்தனையோ நிலங்கள் உயிர்கள் சந்தோஷம் அனுபவிக்கிறது.  தண்ணீர் வற்றிவிட்டது இந்த ஆற்றில். அப்போதும்  மக்கள் காவிரியைத் தேடி வருகிறார்களே. ''என்னிடம் தண்ணீர் இல்லை, ஓடுங்கள்''   என்று காவிரி அப்போது விரட்டுகிறதா?  ஆஹா வாருங்கள்,  என் மேல் தண்ணீர் போடாவிட்டாலும்  இதோ  என் மண்ணைத்   தோண்டிப் பாருங்கள் கொஞ்சமாவது நீர்  ஊற்று இருக்குமே.  அதனால் உங்கள் தாகம் தீர்க்கிறேன்'' என்கிறது.   ஆற்று மணல்  ஊற்று  தாகம்  தீர்த்து மகிழ்விக்கிறது. 

இந்த காவிரி  ஆற்றைப்  பார்த்தபோது எனக்கு ஆதரவளித்த அந்த தனவந்தர் ஞாபகம் தான் வருகிறது.  பாவம் பிச்சை எடுத்தாவது எனக்கு தானம் செய்கிறாரே..   இது தான் அந்த  புலவர் பாடிய  பாடல்.


''கொடுத்தாவி காக்கின்ற காவேரி வற்றிக் குறைந்திடினு
மடுத்தோண்டி நீருண்ணுவார் அதுபோல் இந்த மானிலத்தி
லடுத்தாரை ரட்சிக்குந் தாதா வென்பார்க்கு அடையாளம் பிச்சை
யெடுத்தாகிலுங் கொடுப்பார் வெள்ளை நாவல் இருப்பவனே''

அதே புலவரோ  வேறு யாரோ  இன்னொருவரோ  ரொம்ப  நடந்து  களைத்து,அலுத்து பசியோடு திருப்போரூர் வந்து விட்டார்.  அடேடே  இங்கே  முருகன் இருப்பானே.  தமிழ்க்  கடவுளாச்சே.  அவனைத்  தரிசித்து  முறையிடுவோம்  என்று  கந்தசாமி முன்னே  நிற்கிறார்.    ஓ வென்று கதறுகிறார்.  

''நான்  எந்த  இலக்கணப்  பிழையும்  இல்லாமல்  பாடினாலும்  எவர் காதிலும் விழவில்லையே . உன் தந்தை, தாய், மாமன் மாமி ஒருத்தருக்கும் கூட  ஏன்  காது கேட்கவில்லை?  அப்பா முருகா, நீ  தமிழ்க்  கடவுள். நீயாவது உன் கையில் இருக்கும்  வேலை கொஞ்சம் கீழே வைத்துவிட்டு என் பாக்களை கேட்டு அருள் புரியக்கூடாதா?எல்லோரையும் புகழ்ந்து போற்றி, எனக்கு தெரிந்த, சந்தப்பா, விருத்தப்பா, கலிப்பா, வெண்பா, இசைப்பா, கொச்சகப்பா, தனிப்பா   எவ்வளவோ ''பா'' க்களில்  என் சாமர்த்தியம் காட்டினேன்.ஹுஹும்..  இதெல்லா பாவிலும் சுவையான ப்பா கறந்த  பால், வெல்லப்பாகு  போல் இனிமையாக பாடினேன். சிரிக்க சிரிக்க விகடப்பாவும் பாடிக்  காட்டினேன்  ''அட, போப்பா''  என்று காதிலே கூட வாங்காமல் விரட்டுகிறார்கள், இனி நான் செய்வது ஏதப்பா?  பேசாமல் உன் திருப் ''பா''தத்தை பிடித்துக் கொள்கிறேன்.   அப்பனே, கந்தப்பா, முருகப்பா, திருப்போரூர் வாழும் வேலப்பா, மெய்யான தெய்வமே, மெய்யப்பா, உன்   கை  காட்டப்பா  ( நானிருக்க பயமேன் என்று  காட்டும்  பகவானின் அபய  ஹஸ்தம்).

எனக்கு  இந்தப் பா ஆனந்தத்தை தந்தது. உங்களுக்கு??
இந்த தனிப்பாடல் தான் அது:

''சந்தப்பா, விருத்தப்பா, கலிப்பா, வெண்பா
தாழிசைப்பா ,கொச்சகப்பா , தனிப் பாவுக்கும்
விந்தை யப்பாவாகிய கிரந்தப் பாவும்
வெல்லப் பாவது போல விகடப் பாவும்
எந்தப்பா வுரைத்திடினும் ஒரு பேறில்லா
ஏதப்பா விக்குநின திணைப் பாதத்தைக்
கந்தப்பா முருகப்பா போரூர் வாழ்வே
கையப்பா மெய்யப்பா காட்டப் பாவே.''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...