Friday, November 11, 2022

QUESTION AND ANSWER

 கேள்வி பதில்   -   நங்கநல்லூர்   J.K. SIVAN


எட்டு வயது பேரன் ஒரு தடவை கேட்டான்.
''தாத்தா , தாத்தா, நீ அடிக்கடி படிக்கிறியே, பாடறியே, அந்த கிருஷ்ணன் யாரு?''
''கிருஷ்ணன் நம்ப உம்மாச்சிடா பேராண்டி , கையிலே புல்லாங்குழல் வச்சிண்டு காலை பின்னிண்டு, நீலமா இருப்பாரே பார்த்திருக்கியா''
''தெரியுமே. கோமு அக்கா கூட அவர் மாதிரி வேஷம்போட்டு சோப்பு டப்பா ப்ரைஸ் ஸ்கூல்லே வாங்கினாளே. ஆனா யார் அவர், எதுக்கு அவரைப்பத்தி படிக்கிறே, பாடறே?''
''என்னமோடா, எனக்கு சொல்ல தெரியலே. அவரைப்  பார்த்துண்டே இருக்கணும். அவரை நினைக்கணும். அவரைப் பத்தி எழுதணும் என்று மட்டும் தோணுகிறது. நான் தெரிஞ்சிண்டாவரையிலே அவர் நமக்கு எல்லா நன்மையையும் செய்யற தாலே நாம் எல்லாம் அவரை நன்றியோடு வணங்குகிறோம்''
'''நன்மை'' என்றால் என்ன  தாத்தா. புரியும்படி சொல்லு. அந்த கிருஷ்ணன் அப்படி என்ன செய்யறார்?''
''நாம் நினைக்கும் விஷயங்கள், செய்யும் காரியங்கள் பழகும் விதம்,  எல்லாமே எல்லோருக்கும் பிடிக்கும் படியாக இருக்க உதவி செய்யறார்?''
''எப்படி? நேரில் வந்து உன்கிட்ட சொல்வாரா?'' எப்போ வருவார்?''
''ஒவ்வொருத்தர் கிட்டயும் நேர வந்து சொல்றது முடியற காரியமாடா ? அதனாலே இப்படி பேசு, அப்படி செய் என்றெல்லாம் நிறைய சொல்லியிருக்கிறார். அதை புஸ்தகத்தில் எல்லாம் நிறைய போட்டிருக்கு. அதை எல்லாம் படிக்கும்போது நமக்கு அவர் சொன்ன படி செய்யவேண்டும் என்கிற எண்ணம் தானாகவே வரும். அதனால் நாம் நல்லதே செய்வோம்''
''போ, தாத்தா நீ என்னன்னவோ சொல்றே. புரியலே. புரியறமாதிரி சொல்லேன் ?''
''இதோ பாருடா கோபு, உனக்கு ''அனா,  ஆவன்னா'' எல்லாம் எழுத எப்படி தெரிஞ்சுது உனக்கு?   ஒருத்தர் முதல்லே இப்படி எழுதணும் என்று உன் கையைப் பிடிச்சுண்டு   மெதுவா,  பக்கம் பக்கமா நோட்டிலே எழுத வைச்சு அப்பறம் தானே நீ நிறைய எழுதறே  இல்லையா?
அது போல சில நல்ல விஷயங்கள் பழக்கங்கள், நீதி நெறி எல்லாம் தெரியவில்லை என்பதற்காக இதெல்லாம் செய்யாதே. இப்படியெல்லாம் செய் என்று அந்த கிருஷ்ணன் சொல்லி இருக்கிறதை தான்  கீதை  புராணம்  என்கிற புஸ்தகத்தி
லே எல்லாம் படிக்கிறோம். அது முதல்லே உன்னைப்   போலவே நிறைய பேருக்கு புரியாது. கொஞ்சம் கொஞ்சமா படிச்சு யோசித்தால் புரியறமாதிரி இருக்கும். இன்னும் விடாது படித்துக்கொண்டே வந்தால் புரியும். அப்புறம் அது சொல்ற மாதிரியே செய்தோமானால் நாம் எல்லோருமே ரொம்ப உன்னதமானவர்களாகிவிடுவோம். ''
''அது போல எல்லோரும் செய்யறாளா தாத்தா?''
''எல்லோரும் செய்யணும்டா . சில பேர், பலபேர் செய்யறான்னு தான் தெரியறது. அவர்கள் மத்த பேருக்கு அதை சொல்லியும் தருகிறார்கள். அதாலே நமக்கு இன்னும் நன்றாக தெரிந்து முடிகிறது.''
''நீ சொல்றதைப்பார்த்தா  கிருஷ்ணன் ரொம்ப நல்லவர் என்று தோன்றுகிறது தாத்தா.''
''ஆமாம். நல்லவருக்கு நல்லது செய்வார். கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்றுவார்.''
''கெட்டவர்களாகவே இருந்து மற்றவர்களுக்கு கெடுதல் செய்தால்?''
''ஹஹ ஹா''
''என்ன தாத்தா சிரிக்கிறே ?''
''இல்லேடா கோபு, இதப்பாரு. நம்ம உடம்பிலே ஏதோ ஒரு பாகத்திலே நோய் இருக்கு. டாக்டர் கிட்ட போறோம். மருந்து, ஊசிலே , குணமாகலே, கடைசிலே டாக்டர் என்ன சொல்றார். ''சார், இந்த பாகத்தை ஆபரேஷன் பண்ணி எடுத்தாதான் மற்ற பாகத்தை காப்பாத்தணும்'' என்று நம்ம உடம்பிலே ஒரு பாகத்தை வெட்றதுக்கு நாமே பணம் கொடுத்து அது வெட்டி எடுத்தப்   பறம் டாக்டருக்கு நன்றி சொல்றோமே அது மாதிரி தான்.
 கிருஷ்ணன் தானே இந்த பூமியிலே வந்து (அவதாரம் பண்ணி) நிறைய கெடுதல் செய்ற அசுரர்கள், அரக்கர்களை எல்லாம் சம்ஹாரம் செய்திருக்கிறார்''
''அது தான் பகவத் கீதைலே வருதா?''
''இல்லை. இதெல்லாம் பாகவதம் , பாரதம் இதிலெல்லாம் வரும். கீதைலே நாம் எப்படி வாழணும் எப்படி நடந்துக்கணும் என்கிறதை எல்லாம் தான் தெரிஞ்சிக்கறோம்.
''அப்படியென்றால் அவர் படைத்த மனிதர்கள் எல்லோரும் நல்ல குணம் கொண்டவர்கள் இல்லையா தாத்தா?''
''மனித நேயம் கொண்டவர்கள் தான் மனிதர்கள். யாருக்கு மனித நேயம் இருக்கிறது என்று வெளியே பார்த்தால் தெரியாது. ஒரு புலி, சிங்கம், குரங்கு, நாய், கழுகு, கரடி, கிளி, பாம்பு இதையெல்லாம் பார்க்கும்போது அதன் குணம் என்ன, அருகில் சென்றால் அது என்ன செய்யும் என்று ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் பற்றி சொல்லிவிடலாம். மனிதர்களைப் பார்க்கும்போது ஒருவன், ஒருத்தி, எப்படிப்பட்டவர் என்று சொல்லவே முடியாது. பழகின பிறகே தெரியும்.''
''எப்படி மனித நேயத்தை வளர்த்துக்கிறது தாத்தா?''
''அதுக்காகத்தான், கீதை படிக்கறது, அதை விளக்கமாக சொல்றவர்கள் பேச்சை கேட்பது, எழுதியிருந்தால் படிப்பது. சிந்திப்பது. நல்ல மனித நேயம் கொண்டவர்களோடு பழகுவது. இப்படியே நாமும் நல்லவர்களாக, நல்ல மனித நேயம் கொண்டவர்களாக மாறலாமே.
''நானும் இனிமே கீதை படிக்கப்போறேன். புரியல்லேன்னா

சொல்லித்தருவியா?"
''ஆஹா. பேஷா. நானும் தெரிஞ்சுண்டு புரிஞ்சுண்டு உனக்கும் சொல்றேண்டா  பேரா''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...