Wednesday, November 23, 2022

GURU PEYARCHI

 குரு பகவான்  - நங்கநல்லூர் J K SIVAN 


பூமியில் வாழும் நமது வாழ்க்கை ஓட்டத்தை  கண்காணித்து நடத்தி செல்வது நவகிரஹங்கள் எனும் ஒன்பது  சுழலும் கோளங்கள் . ஒவ்வொன்றும் வித விதமான  ஓட்டத்தை கொண்டது.  இந்த ஒன்பது கிரஹங்களையும்  பன்னிரண்டு ராசி எனும் கட்டங்களின்  உள்ளமைப்பில் வான சாஸ்திரம்  கட்டுப்படுத்தி வைத்து  இருக்கிறது.  வித விதமான  ஓட்டத்தை கொண்டதால்  ஒரு  கிரஹம்  இடம்  பெற்ற  வீட்டிலிலேயே  வேறு சில  கிரஹங்களும் குடி புகும். அததன்  ஓட்டத்திற்கேற்ப இடம் மாறும்.  

நமது பிறப்பு  நக்ஷத்ரங்களை அடிப்படையாக கொண்டதால்  12 ராசிகளில் 27 நக்ஷத்ரங்களும்  அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகவே  எந்த ராசியில் எந்த நவகிரகம்  குடி இருக்கிறதோ அந்த ராசியில் உள்ள  நக்ஷத்ரக்காரர்களின் வாழ்க்கையில் நல்லவை கெடுதலான காரியங்கள் நடைபெற  கிரஹங்களே  காரணம் என்று நம்புகிறோம்.  அப்படி சில சக்தி உள்ள கிரஹங்கள் நல்லது செய்வதற்கு அவற்றை திருப்திப் படுத்த  பரிகாரங்களை தேடுகிறோம்.  அந்தந்த கிரஹம்  முக்கியமாக இருக்கும் க்ஷேத்ரங்களுக்கு  சென்று  பூஜைகள்  அர்ச்சனைகள் செய்கிறோம். 
  
அப்படி  இடம் பெயரும்  கிரஹங்களில் ஒருவர்  குரு பகவான். வியாழன்.  பிரஹஸ்பதி.  அவர்  வேகமாக  சஞ்சாரம் செய்யும்போது  அந்த  ஓட்டத்தை  அதிசாரம்  என்பார்கள். நவகிரஹங்களின் ஓட்டமே  சூரியனைச் சுற்றி வருதல் தான். 

ஜோசியர்கள்  ஜாதகத்தைப் பார்த்து  சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, போன்றவைகள் எப்போது, அதற்கு என்ன பரிகாரம் என்று சொல்வார்கள். 

உதாரணமாக  இது வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலும், 11-ம் வீட்டிலும் மாறி மாறி இருந்தாலும் பணவரவுக்கு குறைவில்லாமலும், வசதி வாய்ப்புகளையும், பிரபலங்களின் நட்புறவையும் ஏற்படுத்திக் கொடுத்த குரு பகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு விரய வீடான மீன ராசியில் ஆட்சிப் பெற்று அமர்கிறார்..

குருபெயர்ச்சி பற்றி சொல்லும்போது  ஒரு முக்கியமான விஷயத்தை மறுபடியும்  இங்கே  நினைவூட்டுகிறேன்.

குரு என்ற சொல்லுக்கு அறியாமையை-இருளைப்போக்கி ஞானத்தை,ஒளியை தருபவர் என்று இருளை நீக்கி ஒளி தருபவர்.
குரு என்ற பெயரில் ரெண்டு பேரை நாம் வழிபடுகிறோம். தக்ஷிணாமூர்த்தி எனும் தென் திசை நோக்கி அமர்ந்து மௌன த்யானத்தில் இருப்பவர் ஒருவர்.  அவர்  ஸாக்ஷாத் பரமேஸ்வரன்.  இன்னொரு குரு   வியாழன் எனும் நவகிரஹ  குரு. வியாழக்கிழமை நாம் தேடும் குரு பகவான். இவர் தேவகுரு பிரஹஸ்பதி.  

1.தக்ஷிணாமூர்த்தி:
தக்ஷிணம் என்றால் தெற்கு.தெற்கு நோக்கி வீற்றிருப்பதால்  பரமேஸ்வரனை  தக்ஷிணாமூர்த்தி என்றழைக் கிறோம்
.
சிவாலயத்தில் கருவறையின் வெளிப்புறத்தில், கோஷ்ட மூர்த்தி. ஆகம முறைப்படி   அவருக்கு தனிச் சன்னதி இல்லை. சிவ பெருமானுக்குறிய 64 திருமேனிகளுள் 25 திருமேனிகள் "மாஹேஸ்வர மூர்த்தங்கள்"  எனப்படும்.   அந்த  மாஹேஸ்வர மூர்த்தங்களுள் தக்ஷிணாமூர்த்தி ஒருவர்.  மேலான ஞானத்தை அருளும் ஞான குரு. நன்கு கற்று வல்லவர்களான சனகர் ,சனந்தனர் ,சனாதனர் ,சனத்குமாரர் என்னும் நான்கு மகரிஷிகளுக்கும் கல்லால மரத்தின் கீழிருந்து மௌனமாகச் சின் முத்திரை காட்டி  மௌன உபதேசம் செய்து ஞானத் தெளிவை தந்தவர் தக்ஷிணாமூர்த்தி.  கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டு, அக்  காலின் கீழ் முயலகன் எனும் அசுரன் இருக்க, நான்கு கரங்களுடன்- மேற்கரங்கள் இரண்டில் ஜபமாலை மற்றும் மழுவும் இருக்க, கீழ்க்கரங்கள் இரண்டில் வலக்கரம் சின்முத்திரை காட்ட, இடக்கரத்தில் சுவடி ஏந்தி காட்சிதருகிறார்.

ஈஸ்வரனுடைய மூவகை வடிவங்களுள் தக்ஷிணாமூர்த்தி வடிவம் யோக  வடிவம் ஆகும்.இவரிடம் உபதேசம் பெற்ற நான்கு மகரிஷிகளும் இவருடைய திருவடிக்கீழ், வரிசையாகவோ, பக்கத்துக்கு இருவராகவோ கை கூப்பி அமர்ந்திருப்பார்கள். 
.
தக்ஷிணாமூர்த்திக்கு சின்முத்திரை, ஞான முத்திரை ஆகிய இரண்டும் உண்டு.இவருக்கு ஆலமர் செல்வர், தென்முகக் கடவுள்,தென்னவன் என்னும் பெயர்களும் உண்டு. சிவனின் த்யான ஸ்வரூபம். உபதேச குரு. குரு மூர்த்தம். அசையாமல் இருப்பவர். இடம் பெயர்வதில்லை. எனவே குருப்பெயர்ச்சிக்கும்  இவருக்கும்  துளிக்கூட  சம்பந்தமே இல்லை. 

ஆகவே  இவருக்கு மஞ்சள் துணியோ ,கொண்டை கடலை மாலையோ,முல்லை மலரோ அணிவிக்க தேவையே இல்லை. .சிவபெருமானுக்கு உரிய பூஜை பொருட்களே தான் இவருக்கும். இன்னும்  இதை பற்றி சிந்தக்காதவராகில் அநேகர் இருக்கிறார்கள். 


இப்போது அந்த இன்னொரு குருவான  நவகிரஹ குரு  பற்றி கொஞ்சம் அறிவோம்:
2.வியாழ பகவான் குரு.(பிரஹஸ்பதி)  தேவர்களுக்கு குரு.. ஆங்கீரச மகரிஷிக்கும் ஸ்ரத்தா தேவிக்கும் புதல்வராகப் பிறந்தவர். காசியில் சிவபெருமானை வழிபட்டு,தேவர்களுக்கு குருவாக ஆகும் பதவியை பெற்றவர்.  வியாழ பகவான் என்றும் அழைக்கிறோம்.  நவகிரஹ  மண்டலத்தில் ஐந்தாவதாகச் சூரியனுக்கு வடக்கில் விளங்குபவர். இவரை சுப கிரஹம் என்கிறோம். நல்ல பலன்களைக் கொடுப்பவர். குரு  பலன் கூடினால்தான் திருமணம் முதலிய சுபச் செயல்கள் நடைபெறும் என்கிறது ஜோதிடம்.

1867ல் வெளியிடப்பட்டுள்ள பழைய ஜோதிட நூல் ஒன்றில் உள்ள நவகிரகங்களின் பட்டியலில் வியாழ பகவானுக்கு 18 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன.அவை என்ன தெரியுமா?
1.அந்தணன், 2.அமைச்சன் 3.அரசன் 4.ஆசான் 5.ஆண்டளப்பன் 6.குரு 7.சிகிண்டிசன் 8.சீவன் 9.சுரகுரு 10.தாராபதி 11.தெய்வமந்திரி
12.நற்கோள்  13.பிரகஸ்பதி 14.பீதகன் 15.பொன்னன் 16.மறையோன் 17.வேதன் 18. வேந்தன்

நவகிரஹ  குரு வின் சக்தி- தாரா , நிறம்-பொன்னிறம், வாகனம்-யானை(அன்னமும்,குதிரையும் கூட வாகனமா கிறது).
நான்கு கரங்களில் ஜபமாலை ,யோக தண்டம்,கமண்டலம்,வரதம் கொண்டவர்.
குருவின்  ஸ்தலம் ஆலங்குடி. சென்னையில்  போரூர் சிவன் கோவில்.

எங்கள் தெருவில் செய்தித் தாள் போடும் காந்தி என்பவர் பேர் மட்டும் ஒன்றாக இருப்பதால் எப்போதும் பட்டினிகிடந்து, சிறை சென்று, சட்டை போட்டுக்கொள்ளாமல் நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர  இந்த பேப்பர் காரர் இல்லை. அவரை யாரும் சுடவும் இல்லை. அவர் தான் வீட்டில் அப்பளம் சுடுவார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...