Sunday, November 6, 2022

TWO RAMAYANAS

 


ரெண்டு  ராமாயணங்கள் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

நேற்று என்ன சாப்பிட்டோம், என்ன செய்தோம் என்பதே  மறந்து போய்விடுகிறது.  ஒரு சம்பவத்தை  ரெண்டு நிருபர்கள் பார்த்து எழுதும்போது எவ்வளவு வித்யாசங்களோடு ரிப்போர்ட் செயகிறார்கள். பத்திரிகை டிவி யூட்யூப் அதைக்  காட்டுகிறதே. அப்படி இருக்க  தொழில் நுட்பம் இல்ல்லாத ஒரு யுகத்தில் 7000 வருஷம்முன்பு நடந்ததை  ரெண்டு கவிஞர்கள்  வெவ்வேறு இடத்தில் காலத்தில் பிறந்து எழுதும்போது  கொஞ்சமாவது வித்யாசம் இருக்காதா? .  அப்படி தான் இதை பார்க்கவேண்டும். மொத்தத்தில் கதை ஒன்று தான். அதில் மாறுதல் இல்லை.  ருசி  அற்புதமாக  மாறுகிறது. ரெண்டு  பேருக்கும் தேங்க்ஸ்.

ஏதாவது ஒன்றை எழுதும்போது பாதி கற்பனை பாதி எங்கோ எப்போதோ யாருக்கோ, நமக்கோ நடந்த சம்பவத்தின் நினைப்பு.   ராமாயணத்தை  வால்மீகி  ராமருடன் த்ரேதா யுகத்தில் வாழ்ந்தவர். நேராக பார்த்த அப்பட்டமான உண்மை விஷயம்.  ராம  அயணம் என்றால்  ''ராமன் வாழ்க்கை கதை, சரித்திரம்''  . அதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. துளசிதாசர்  கலியுகத்தில்  வாழ்ந்தவர்.  துளசி தாசர்  எழுதிய  ''ராம் சரித மானஸ் 'என்பதில்  3  வார்த்தை. ராம சரித்திரம் என்ற  அகண்ட  ஏரி போன்ற விஷயம். 

வால்மீகி  ஹனுமனை  ''வன் நரன்''  வனத்தில் வாழ்ந்த  நர  குலத்தவன் என்கிறார்.  துளசிதாஸ்  அவனை  நாம்  அறிந்த  குரங்கினமாக காட்டுகிறார்.

வால்மீகி  மிதிலை ராஜா  ஜனகன்  தனது பெண் சீதையின்  கல்யாணத்துக்கு ஸ்வயம்வரம் எதுவும் நடத்தவில்லை.  அவரிடமிருந்த கனமான  பெரிய  சிவ தனுசுவை  எந்த மஹா வீரன் பலசாலி தூக்கி  நாண்  ஏற்றுகிறானோ அவனுக்கு  சீதை பரிசு  என்று தான் அறிவித்தார்.  விஸ்வாமித்ரர்  இதை கேள்விப்பட்டு  ராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்று '' நீ அந்த  வில்லைத்  தூக்கி நாண் ஏற்றடா ராமா''  என்கிறார்.    துளசி தாசர்  தனது ராமாயணத்தில்  ஜனகன்  ஸ்வயம்வர விழா நடத்தி  அநேக  ராஜாக்கள் வந்திருந்தார்கள் என்கிறார்.

சீதையை ராவணன்  பலவந்தமாக இழுத்துக் கொண்டு  தேரில் தூக்கிச் சென்றதும்  அவள்  அசோகவனத்தில்  பட்ட  கஷ்டங்களை வால்மீகி விவரிக்கிறார். ராமன்  ராவணனைக்  கொன்று அக்னி பரிக்ஷை செய்தபின்  சீதை ராமனை அடைந்தாள் என்று கதை செல்கிறது.

துளசி தாசர் கற்பனை வேறு.  ராவணன்  நிஜமான  சீதையை கடத்திச் செல்லவில்லை.  ராமனுக்கு  ராவணன் வரப்போவது தெரிந்து  அவளை அக்னி தேவனிடம் ஒப்படைத்துவிட்டு  போலி சீதையை ராவணன் கடத்தினான். அதனால் தான்  ராவண வதம் முடிந்து  ராமர்  அக்னி தேவனிடமிருந்து  ஒரிஜினல் சீதையை மீண்டும் பெற்றான்  என்கிறார்.

ராம ராவண யுத்தத்தில், வாலமீகி சொல்வதைப் பார்த்தால்  ராவணன்  ரெண்டு இன்னிங்ஸ்ல்  வருகிறான். ஆரம்பத்தில் வந்து தோல்வியுற்று உயிரோடு திரும்பி கடைசியில் யுத்தம் முடியும் சமயம்  மீண்டும் வந்து உயிர் விடுகிறான்.  துளசி தாசர்  ராவணன் ஒரே ஒரு முறை கடைசியில் யுத்தத்துக்கு வந்து கொல்லப்பட்டான் என்கிறார்.

ராமன்  புருஷோத்தமன்,  மரியாதா  புருஷோத்தமன், அருமையான குணாதிசயங்கள் கொண்டவன், உயர் ரக மனிதன் என்கிறார்.    துளசி தாசருக்கு ராமன் மனிதனில்லை  கடவுள் அம்சம், அவதாரம், அவன் செய்யும் காரியங்களில் தெய்வீகம் இருக்கிறது என்கிறார்.  துஷ்ட நிக்ரஹ  சிஷ்ட பரிபாலனம் செய்து  தர்மம் காக்க  வந்த தெய்வம் என்கிறார். 

வால்மீகி  ராமாயணத்தை   ராமன் சீதையின்  மறைவுக்கு பிறகு,  லக்ஷ்மணன்  சரயு நதியில் மூழ்கியபின்   வருத்தத்தோடு  இனி தனக்கு வேறு ஜோலி எதுவும் இல்லை, என்று தானும் சரயுவில் மூழ்கி மறைந்ததோடு முடிக்கிறார்.  துளசிதாசர்  கொஞ்சம்  கடுகு தாளித்துக் கொட்டி இருக்கிறார்.   லவ குசர்கள் ரெட்டைப்  பிள்ளைகளாக    வால்மீகி ஆஸ்ரமத்தில் பிறந்து வளர்ந்து  ராமனை சந்திக்கிறவரை நீட்டுகிறார்.  லக்ஷ்மணன் சீதா  ஆகியோர் எப்படி மறைந்தார்கள் என்று சொல்லவில்லையே, ஏன்?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...