Friday, November 4, 2022

RAMAGIRI

 ஒரு  அற்புத சிவன் கோவில் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


இது  ஒரு  ராமாயண  கால விஷயம். நம்பரில் சொன்னால், சரித்ரக்காரர்களை  நம்புவதாக இருந்தால் இது 17,50,000   வருஷங்களுக்கு  முந்தியது.  இவ்வளவு பழைய விஷயம் சொல்வதில் ஒரு வசதி. யாரும் அப்படி இல்லை, இது தப்பு என்று சண்டைக்கு வரமாட்டார்கள். ஒரு சிலரைத்  தவிர.  அவர்களிடம் ஏதாவது ஒரு ஆதாரம் வைத்திருப்பார்கள்.

விடிகாலையில் உள்ளும் புறமும் சுத்தமாக  காரில்  தூரத்தில் ஏதாவது சில ஊர் கோவில்களை பார்க்க எனக்கு  ரொம்ப பிடிக்கும். ஆயிரக்கன்னைக்காக  கோவில்கள் இப்படி  நண்பர்களோடு சேர்ந்து தரிசித்திருக்கிறேன்.  மனதுக்கு படு குஷி.  அப்படி ஒரு அனுபவம் இது.  பல வருஷங்களுக்கு முன்பு அனுபவித்ததை இன்று மறுபடியும் சொல்கிறேன்.

சென்னை - ஆந்திரா  பாதையில்  திருப்பதிக்கு போகும்போது தமிழ்நாட்டு எல்லை அருகே  நாகலாபுரம் சாட்டூர்(ஊத்துக் கோட்டை பக்கம்) ஒரு  சின்ன ஊர்.  90 கிமீ. தூரம்.  திருக்கள்ளில் என்ற பழம்பெயரும் திருக்கண்டலம் எனும் புதுப் பெயரும் கொண்ட  குக்கிராமம். 

''இங்கே ஏதாவது சைவ சாப்பாடு ஹோட்டல் இருக்கிறதா?
 திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒருவரை கேட்டேன் .
 '' நாஷ்டாவுக்கா?'' என்றார்.    அதன் அர்த்தம் என்ன என்று யோசிக்கும் முன்பே வலது கரத்தை நீட்டினார் .
  ''இங்கே பீச்சக்கை பக்கம் ரெண்டு கடை இருக்குது'' 
 நான் அவரைக் கேட்டதன் காரணம் கைவசம்  ஆகாரம்  இல்லாதவர்கள் பயன் பெற. நாங்கள் அதி புத்திசாலிகளாக கையிலே கொண்டு சென்ற எங்கள் வீட்டு இட்டலிகளை காரில் அமர்ந்தவாறே சாப்பிட்டோம்.

நமது முன்னோர்கள் எவ்வளவு சமயோசிதமாக இட்டிலியை பூப்போல மெத்து மெத்து என்று சூடு பறக்க ஆவியிலிருந்து எடுத்து அதன் மீது நைசாக அரைத்த மிளகாய்ப்  பொடியை தூவி அது இப்போதெல்லாம் பெய்யும் மழையில் தெரு நனைவது போல் மெல்லிதாக நல்லெண்ணெய் பூச்சுடன் முழுதும் வெண்மை நிறத்தை இழந்து நாக்கில் நீரூற வைத்து சிறு சிறு விள்ளல்களாக உள்ளே போகும் சுகத்தையும், அதை விழுங்கியவுடனேயே கள்ளிச்சொட்டு பில்டர் காப்பி அதை உள்ளே அன்போடு கை கோர்த்து அழைத்துச் செல்லும் இன்பம் சொல்லி மாளாது.

அங்கிருந்து இருபது கி.மீ. தூரத்தில் ஒரு அற்புத பழைய கோவில் ஒன்று இருக்கிறது என்று முன்பே தெரியும். ரெண்டு மூன்று தடவை  அதைக்காண  முடியாமல்  ஏதோ ஒரு  தடங்கல்.  இந்த முறை கண்டிப்பாக சென்று தரிசனம் செய்ய முடிவு.

அது ஒரு எட்டாம் நூற்றாண்டு பல்லவ கால சிறிய மலைக் கோவில். மலைக்கு ராமகிரி என்று பெயர். நந்திக்கு எதிரே ஹனுமான். மலைமேல் வழக்கம்போல்  குன்று தோராடும் குமரன் குடி கொண்டிருக்கிறான். இதன் அருகே தான் கைலாஸ கோனே நீர்வீழ்ச்சி. அங்கே சென்று குளித்திருக்கிறேன்  26  வயதில் 

ராமகிரி ஆலயத்தை பெரியபாளையத்திலிருந்து புத்தூர் சாலைவழியே நாகலாபுரம் பக்கமாக கூட  அடையலாம்.
ராமகிரி அடிவாரக் கோயிலில்  சக்தி வாய்ந்த கால பைரவர் நிற்கிறார். 

ராவண சம்ஹாரம் முடிந்து ராமன் ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க சிவாலயங்கள் சென்று பூஜித்து வழிபட்டான்..

'ஆஞ்சநேயா, கைலாசம் காசி எல்லாம் பறந்து போய் ஒரு சிவலிங்கம் கொண்டுவா'' என்றான். லிங்கத்தோடு வந்த ஹனுமான் வழியில் இங்கே காலபைரவரை பார்த்தான். தாகத்திற்கு ஒரு ஏரியை காட்டினார்.லிங்கத்தை இங்கே வைத்த ஹனுமான் அதை இங்கேயே பிரதிஷ்டை செய்தது போல் அசையாமல் நின்றுவிட்டது. ஸ்ரீரங்கத்தில் விபீஷணன் ரங்கநாதரை பிள்ளையாரின் தந்திரத்தால் தரையிலிருந்து மீண்டும் எடுத்துச் செல்லமுடியாதது  போல் தான் இதுவும். 

ராமகிரி வந்த ஹநுமானுக்கு தரையில் வைத்த லிங்கத்தை தனது பலமான வாலினால் சுற்றி இழுத்துச் செல்ல முடிய வில்லை. ராமகிரியில் சிவனுக்கு அதனால் ''வாலீஸ்வரர் என்று பெயர்.  அருகே ஒரு குளம். அதில் ஒரு கல் நந்தி முகம். அதன் வாயிலிருந்து இரவு பகலாக பல வருஷங்களாக ராமகிரி மலையிலிருந்து அருமையான சுனைநீர் ஊற்றிலிருந்து பெருகி வருகிறது. அந்த ஊரே கல்கண்டாக இனிக்கும் நந்தி வாய் மூலிகை நீரை பருகி சந்தோஷமடைகிறது. குளத்தில் இறங்கி ரெண்டு கை நிறைய நந்தியின் வாயில் இருந்து நீர் வாங்கி குடித்தேன். என்ன ருசி அப்பப்பா!

பஞ்ச முக சிவன் இந்த பகுதியில் இருக்கிறார். ஒன்று ராமகிரி வாலீஸ்வரர். ராமகிரிக்கு இன்னொரு பெயர் திரு ஏரிக்கரை - அது இப்போது திருக்காரிக்கரை  ஆகிவிட்டது. சிவன்  இங்கே  ஈசானன்
ரெண்டாவது சிவன் பள்ளிகொண்டீஸ்வரர் சுருட்டப்பள்ளியில். தத்புருஷன் .
மூன்றாவது முகம் சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவபுரம் எனும் ஆரணி (பெரிய பாளயத்துக்கருகே உள்ளது.) வாமதேவன். 
நான்காவது முகம் வரமூர்த்தி. அறியதுறை எனும் ஊரில். . ஸத்யோஜாதன்.
 தென் கோகர்ணம் என்று ஊருக்கு பெயர்.
ஐந்தாவது முக சிவன் சிந்தாமணீஸ்வரம் எனும் ஊரில் இருப்பவர். மீஞ்சூர் அருகே காட்டூர் என்கிற இடத்தில் இருப்பவர். அங்கே ப்ரம்மாரண்ய நதி கடலோடு சங்கமமாகிறது. இங்கே சிவன் அகோரமூர்த்தி.

ராமகிரியில் அம்பாள் மரகதாம்பிகை. தெற்கு நோக்கியவள். அழகான வல்லப கணபதி இங்கே தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் அழகே அழகு.
காலபைரவர் சந்நிதி முக்கியமானது. அவரது வாகனமான வாலை சுருட்டிக்கொண்டு நிற்கும் நாய் தத்ரூபமாக உள்ளது. அவரை சுற்றி நாலு பக்கமும் குட்டி குட்டியாக நாய் உருவங்கள். கிழக்கு நோக்கிய சிவன். நந்திக்கும் சிவனுக்கும் இடையே வாலால் கட்டி தூக்கிச்செல்ல முயன்று தோற்ற ஹனுமான்.

குளத்தின் அருகே இப்போதோ இதை நீங்கள் படித்த பிறகோ இடிந்து நொறுங்கும் நிலையில் ஒரு சிதிலமான சிவன் கோவில். உள்ளே ஒரே இருட்டு. மொபைல் டார்ச் வழியாக பார்த்தபோது அழகிய பெரிய சிவ லிங்கம். விவரம் தெரியவில்லை. ஹநுமானைத்தான் கேட்கவேண்டும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...