Thursday, October 14, 2021

VIJAYA DASAMI

  விஜய தசமி --   நங்கநல்லூர்  J .K. SIVAN


இன்று  விஜய தசமி,  ஒரு முக்கிய நாள்.   குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்யும் நாள். தரைஹ்யில் நெல் பரப்பி  அனா  ஆவன்னா  எனக்கு  கையைப்பிடித்து எழுத கற்றுக் கொடுத்தநாள் .  ''ஹரி நமோஸ்து சததம் ''  சொல்ல சொல்லி  மழலையாக  சொன்ன நாள்.  எல்லா வாத்யார்களுக்கும் நமஸ்காரம்.

விஜயதசமி  எடுத்த காரியம் நிறைவேறும் நாள்.  சில  அபூர்வ சம்பவங்கள் நடந்த தினம். குறிப்பாக ஒரு சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.  

மஹான்கள்  என்றாலே  நம்மை விட  உயர்ந்தவர்கள்,  சிறந்தவர்கள், அதிகம் பேசாமல் ஆடம்பரமின்றி, அமைதியாக தக்க சமயத்தில் தேவையான வற்றிற்கு, தேவயானவர்க்கு மட்டும் தமது அதீத சக்தியை வெளிப்படுத்தி நன்மை புரிபவர்கள்.

குழந்தையானந்த ஸ்வாமிகள் என்பவரைத் தெரியுமா? கேள்விப்பட்டதுண்டா?  ரொம்பவே  புதிரானவர். நான்கு இடங்களில் ஜீவசமாதியானவர். கிட்டத்தட்ட 250 வயது வாழ்ந்தவர் என்கிறார்கள்.   இவர் சமாதியாவதற்கு விஜயதசமியை தான்  தேர்ந்தெடுத்தார்.
.
ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்கிற ஸ்ரீவித்யா உபாசக தம்பதிகளுக்கு  புத்ர பாக்யம் இல்லை. மதுரை மீனாக்ஷியை  சென்று வேண்டினார்கள்:
' அம்மா மீனாக்ஷி , உன்னருளால் ஒரு குழந்தை பிறந்தால், அதை உனக்கே அர்ப்பணிக்கிறோம்''  பிரார்த்தனை பலித்து ரெண்டு குழந்தைகள். ராமன், லட்சுமணன் என்று பெயர் வைத்தார்கள். மூத்தவன் ராமன் தெய்வீக சக்தி கொண்டவன். கண்களில் பளிச்சிடும் ஞான ஒளி. காலில் சங்கு, சக்ர ரேகைகள். அழகான குழந்தை. அழவுமில்லை. அம்மாவிடம் பாலும் குடிக்கவில்லை.   இப்படி ஒரு குழந்தை இருந்தால் கவலை இருக்காதா? யார் யாரோவிடமெல்லாம் சென்று குழந்தைக்கு என்ன குறை, என்ன தெய்வ குத்தம் என்று கேட்டார்கள்.  ஆலய அர்ச்சகருக்கு அருள்வாக்கு வந்தது  
''குழந்தை பிறந்தால் அம்பாளுக்கு அர்பணித்துவிடுவதாக சொன்னாயே?
''ரெண்டு பிள்ளைகளில்  யார்   காலில்  சங்கு சக்ரம் உள்ளதோ  அவனை  அர்ப்பணி''.
ஆகவே முதல் பிள்ளை ராமன்  மதுரை மீனாட்சி கோவிலில் விடப்பட்டான்.  அம்பாள் அர்ச்சகர்கள் அருளால் வளர்ந்து , பராமரிக்கப்பட்டு, உபநயனமும் முடிந்து,  ராஜகோபாலன் என்று தீக்ஷா நாமமும் ராமனுக்கு  சூட்டப்பட்டது.  மதுரை மீனாட்சி தரிசனத்துக்கு காசியிலிருந்து வந்த கணபதி பாபா அவனை சிஷ்யனானாக ஏற்று காசிக்கு சென்றான்.   

காசி கணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் ராஜகோபாலன் பயின்று புனித ஸ்தல யாத்திரை சென்றான். வருஷங்கள் ஓடியது. ராஜ பூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் தனது குரு கணபதி பாபா மகா சமாதி அடைந்தவுடன் குருவின் சமாதிக்குப் பின் தனியறையில் பல வருஷங்கள் தியானம் நிஷ்டையில் இருந்தார். நேரம் வந்த பிறகு தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார். 

அவரது இன்னொரு அவதாரம்  தான்  ''த்ரைலிங்க சுவாமிகள்''.  நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார்  மூன்றாவது அவதாரம் தென்காசியில் . அப்போது பெயர் குழந்தை வேலப்பன். பல்வேறு அற்புதங் களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். 

நான்காவது அவதாரம்  மதுரையில் குள்ளமாக,  பருத்த தொந்தி, வட்ட முகம். எச்சில் ஒழுகும் வாயுடன் மழலைப் பேச்சுடன்,  குழந்தை தோற்றத்துடன்  சிரிக்கும்  குழந்தையானந்த ஸ்வாமிகள்.

''கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று யாரைப்  பார்த்தாலும் சொல்வார்.  ஒரு தரம் மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டார். வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்புப் பெட்டி அது. வெள்ளைக்காரன் மூட்டை முடிச்சோடு வந்தவன் தனது ஆசனத்தில் ஒரு அழுக்கு ஆசாமி உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் கடும் கோபம் கொண்டான்.
''எழுந்து போ இதை விட்டு உடனே ''
சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தார். வெள்ளைக்காரன் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தான். ஸ்டேஷன் மாஸ்டர் கல்யாணராமய்யர் சுவாமிகளிடம் டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.  சுவாமிகள் ஒன்றும் பேசவில்லை. பிளாட்பாரத்தில் சென்று அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன காரணத்தால் ரயில் என்ஜின் இயங்கவில்லை என்று தெரிய வில்லையே.
அங்கிருந்த சிலருக்கு குழந்தையானந்தரையும் அவர் மகிமையும் பற்றி தெரியும். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள் 

''என்னை மன்னிச்சுடுங்கோ தெரியாம  இப்படி பண்ணிட்டேன்''  .கல்யாணராம அய்யர் நமஸ்கரித்து  மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை வண்டியில் ஏற்றி அவர் முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு வேறு ஒரு பெட்டியில் சீட்  கிடைத்தது.
''டேய், ரயில் இனிமே போகும்டா.கிளப்பு ’ என்றார். டிரைவர் எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.

இன்னொரு  விஷயம்.   குழந்தையானந்த சுவாமிகள் பக்தர் ஒருவர் வீட்டில் சுவாமிகளின் திரு வுருவப்  படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரைலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அந்த வீட்டுக்குள்   திடுதிப்பென்று ஸ்வாமிகள் ஒருநாள் சென்றார்.
அங்கிருந்த தனது  ரெண்டு  படங்களையும் பார்த்த  ஸ்வாமிகள், ‘அடேய், என்னுடைய ரெண்டு வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன்

 அவர்தான் முந்தைய அவதாரத்தில் த்ரை லிங்க ஸ்வாமிகள் என்று இதனால் ஊர்ஜிதமாகியது.
இந்த மஹான் 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் அருள் பாலிக்கிறார்.    விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
விஜய தசமி ஷீர்டி சாய் பக்தர்களுக்கும் விசேஷ நாள்.

எண்ணற்றோர் அன்றும் இன்றும்  பாபாவை நம்பிகையோடு  வேண்டி பயன் பெற்ற அதிசய  அபூர்வ சம்பவங்களை சொல்கிறார்கள்.  அவற்றை எல்லாம் எழுத நூறு வருஷமாவது ஆகும் அப்போதும் முற்றுப் புள்ளி வைக்க முடியாதபடி தொடரும். யாராலும் முழுமையாக  சொல்லவோ எழுதவோ முடியாது.
மைலாப்பூரில் வியாழக்கிழமைகளில் தெருவில் ஒரு அங்குலம்  இடைவெளி கூட கிடையாது. எண்ணற்ற சாய் பக்தர்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள். பார்க்கவே புளகாங்கிதம். ஏதோ ஒரு மந்திர சக்தி நம்மை பிணைக்கிறது. ஷீர்டி ஒரு புண்ய பூமி.
பாபா  பெரும்பாலும்  வெறும் காலோடு தான் நடந்தார்.   சில சமயம் மட்டும் காலணி அணிவார். நீள குர்தா  முழுக்கையோடு, முழங்கால் தாண்டி கீழே பாதிக் கால் வரை.
ஒரு தரம் ஷீர்டி பக்கம் பெரும் புயல். மக்கள்  பீதியுடன்  ஓடிவந்தனர். பொருள், மாடு கன்று, விளைச்சல் சேதம். பாபாவிடம் முறையிட்டனர். பாபா என்ன செய்தார்  தெரியுமா?
''ஏ புயலே என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?  நிறுத்து உன் அட்டகாசத்தை''  என்பது போல் கைகளை ஆட்டி  வானத்தை பார்த்து ஏதோ சொன்னார். அடுத்த சில நிமிஷங்களில் புயல் ஓய்ந்ததாம்.  இயற்கையைக் கட்டுப் படுத்தும் சக்தி மகான்களுக்கு உண்டு
ஒருநாள்  ''மஹல்ஸாபதி ,  உன் குடும்பத்தில் ஒரு துரதிர்ஷ்டம் நேரப்போகிறது.ஆனால் அதற்காக கவலைப்படாதே. யாமிருக்க பயமேது ' என்கிறார்   சில நாள் கழித்து அந்த குடும்பத்தில் அனைவருமே நோய் வாய்ப்பட்டனர். அவர்களுக்கு
பல டாக்டர்கள் மருந்து கொடுக்க வந்தபோது பாபா   ''நோய் சில நாள் தான் பாதிக்கபோகிறது. உங்கள் மருந்து பயன் தராது .போங்கள் '' என்கிறார். டாக்டர்கள் போய்விட்டார்கள். தனது கையில் ஒரு கட்டையோ செங்கல்லோ வைத்துக்கொண்டு தான் இருந்த மசூதியை சுற்றி வந்தார். '
'ஏ   நோயே, என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். உன்னால் இதை அணுக முடியுமா. ஓடு  இங்கிருந்து'' என்று தன்  கையில் இருந்த கல்லைக்  காட்டுகிறார். அடுத்த ரெண்டே நாளில்  மஹல்ஸாபதி வீட்டில் அனைவரும் குணமாகிறார்கள்.
 1918ல் அக்டோபர் 15  விஜயதசமி. அதற்கு ரெண்டு வருஷங்களுக்கு முன்பே 1916ல் ஷீர்டி சாய் பாபா ''நான் இன்னும் கொஞ்சம் காலத்தில் இதே தேதியில் மறைவேன் '' என ஜாடையாக உணர்த்தினார்.

அன்று சாயந்திரம் பக்தர்கள் சீமோலங்கன் கிராமத்திலிருந்து எல்லை கடந்து ஷீர்டிக்கு திரும்பி வந்தது பற்றி பாபாவுக்கு திடீரென்று ஏனோ ரொம்ப கோபம் வந்துவிட்டது. தலையை சுற்றி அணியும் துணியை எடுத்து விசிறினார். இடுப்பு துணி, நீண்ட குர்தா எல்லாவற்றையும் கழற்றி துண்டு துண்டாக எல்லாவற்றையும் கிழித்து அருகே எப்போதும் எரியும் அக்னி குண்டத்தில் (துனி) போட்டார். கண்கள் சிவக்க நின்றார். ''வாருங்கள் எல்லோரும். நான் இந்துவா முஸ்லிமா என்று சந்தேகம் தானே. வந்து பாருங்கள்'' என்று கத்தினார்.

அருகிலிருந்தோர் நடுங்கினார்கள். பயத்திலும் பக்தியிலும் யாரும் அவர் அருகே வரவில்லை. ஆடையின்றி நின்ற பாபாவின் அருகே மெதுவாக பாகோஜி ஷிண்டே எனும் குஷ்டரோகி பக்தர் சென்றார். தன் மீதிருந்த நீண்ட வஸ்திரத்தை பாபாவின் இடையில் சுற்றினார்.
''பாபா என்ன ஆயிற்று?'' என்று கேட்டார். இன்று சிமோலங்கன் -- தசரா நாள் என்கிறார்
''ஆமாம் தசரா. இது என்னுடைய சீமோலங்கன் - தசரா என்று தரையில் ஒரு கம்பினால் அடிக்கிறார் பாபா. இரவு 11 மணி வரை பாபாவின் கோபம் ஏனோ அடங்கவில்லை. வழக்கமாக நடக்கும் சாவடி ஊர்வலம் அந்த இரவு நடக்குமா என்று பக்தர்கள் பயந்தனர். நடு இரவு 12 மணிக்கு பாபா வழக்கம்போல் சாந்தமாக காணப்பட்டார். வழக்கமாக அணியும் உடைகளை அணிந்தார். சாவடி ஊர்வலம் நடை பெற்றது. கூடவே வந்தார். தசரா தான் உலகைக் கடக்கும் நாள் என்று உணர்த்திய சம்பவம் இது.
ஒரு பக்தர். ராமச்சந்திர பாடில். உடல் நிலை ரொம்ப தீவிரமாக பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். வீட்டில் என்னென்னவோ மருந்து மாயம் பண்ணி பார்த்தும் குணமில்லை. சில நாட்களோ மணிகளோ தான் பூலோக வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்த இரவு பாபா நள்ளிரவில் பாட்டிலின் படுக்கைக்கு அருகே வந்து நின்றார். பாட்டில் மெதுவாக எழுந்து பாபாவின் கால்களை பிடித்துக் கொண்டார்
''இனிமே  எனக்கு நம்பிக்கை இல்ல பாபா. எப்ப கிளம்புவேன் நிச்சயமாக என்று சொல்லுங்க பாபா ''
” நீ எதுக்கு அலட்டிக்கிறே. உனக்கு ஒண்ணும் ஆகப்போறதில்லை. உன் சீட்டு கிழியாது. ஆனா தாதியா பாட்டில் பத்தி எதுவுமே  சொல்லமுடியாது. அவன் இன்னும் ரெண்டு வருஷத்தில் விஜயதசமி அன்னிக்கு போயிடுவான்'' 
கேட்பானேன்,  அதற்கு அப்பறம், பாட்டீலுக்கு குணமாகி சைக்கிள் ஒட்டிக்கொண்டு சென்றார்.
பாபா  சொன்ன ரெண்டு வருஷம் ஓடியது. 1918 விஜயதசமி அன்று. தாத்தியா பாட்டீலுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்தார். பாபாவுக்கும் நல்ல ஜுரம். தாத்தியா பாட்டில் பாபாவின் பரம பக்தர். அவர் உடல் நிலை மோசமாகிக்கொண்டு வந்தது. நெஞ்சில் பாபாவின் நினைவு மட்டும் இருந்தது அவருக்கு.

பாபா சொன்னது நினைவுக்கு வந்தது. ராமச்சந்திர தாதா, பாலா ஷிம்பி இருவருமே பாபா சொன்னது போல் நடக்கப் போகிறது என்று பயந்தார்கள். தாதியா பாட்டிலின் இறுதிக்கணம் நெருங்கியது. பாபா அவர் அருகே ஜுரத்தோடு வந்தார். அவரை தொட்டு தடவிக்கொடுத்தார். பிறகு தான் ஜுரத்தோடு போய் அமர்ந்தார். படுத்தார். புதிதாக ஒரு வாடா அவருக்காக அமைத்துக் கொண்டிருந்தார்கள்.   எனக்கு  இந்த மசூதியிலிருப்பது சரிப்பட வில்லை. என்னை தூக்கிக்கொண்டு அந்த தகடி வாடாவில் கொண்டு விடுங்கள் '' என்று சொன்னார். அங்கே தான் இன்றும் அவரது சமாதியை தரிசிக்கிறோம். அங்கே முரளிதரனை ஸ்தாபிதம் பண்ண உத்தேசமாக இருந்தது. பாட்டில் பிழைத்தார். பாபா  தான் சொன்ன நேரத்தில் மறைந்தார்.
'நான் இந்த சமாதியிலிருந்து உங்களோடு தொடர்பில் இருப்பேன்'' யாமிருக்க பயமேன்'' -- பாபா.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...