Thursday, October 28, 2021



 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள் 50-52 .   நாமங்கள்: 184 -204

निस्तुला, नीलचिकुरा, निरपाया, निरत्यया ।
दुर्लभा, दुर्गमा, दुर्गा, दुःखहन्त्री, सुखप्रदा ॥ 50 ॥

Nistula nilachikura nirapaya niratyaya
Durlabha durgama durga dukha-hantri sukhaprada – 50

நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |
துர்லபா துர்க்கமா துர்க்காது:க்கஹந்த்ரீ ஸுகப்ரதா || 50
 
दुष्टदूरा दुराचार-शमनी दोषवर्जिता ।
सर्वज्ञा सान्द्रकरुणा समानाधिक-वर्जिता ॥ ५१॥

Dushta-dura duracharashamani doshavarjita
Sarvagyna sandrakaruna samanadhika varjita – 51

துஷ்டதூரா துராசார சமநீ தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா ஸமாநாதிக வர்ஜிதா || 51

सर्वशक्तिमयी सर्व-मङ्गला सद्गतिप्रदा ।
सर्वेश्वरी सर्वमयी सर्वमन्त्र-स्वरूपिणी ॥ ५२॥

Sarva-shaktimaei sarvamangala sadgatiprada
Sarveshvari sarvamaei sarvamantrasvarupini – 52

சர்வஸக்திமயீ ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா |
ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ || 52

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (184-200) அர்த்தம்

* 184 *निस्तुला - நிஸ்துலா --
ஸ்ரீ லலிதை ஒப்பிலாமணி. யாருடன் எதனுடன் அவளை ஒப்பிடுவது? ஹிமாசல கைலாச மலையை வேறு எந்த மலையுடன் ஒப்பிட முடியும். அவள் ஹிமவான் மகள் அல்லவா?
 
*185*  नीलचिकुरा  நீலசிகுரா -
கன்னங்கரேர் என்ற கருநாக கூந்தலுடையவள் அம்பாள் என்கிறார் ஹயக்ரீவர். ஆக்ஞா சக்ரத்தை கருநீல வர்ணம் என்பார்கள். பின் மண்டையில் முகுளம் பகுதியில் மேல் இருக்கும் இந்த சக்ரத்தை கேசங்கள் மறைத்து இருக்கும். இது வெளியில் பிறர் கண்களில் படக்கூடாது என்பதற்காகத்தான் இன்றும் தலை மழித்தாலும் சிறிய சிண்டு, சிகையாவது பின் மண்டையில் மரியாதையோடு வைத்துக் கொள்வது. அம்பாள் பக்திக்கு எடுத்துக் காட்டு.உச்சிக்குடுமியின்  தாத்பர்யம் இது தான். 

* 186 * निरपाया - நிரபாயா -
எந்த சக்தியாலும் அழிக்கமுடியாதவள் அம்பாள் என்று இந்த நாமம் குறிப்பிடுகிறது. ஒரு அபாயமும் இல்லாதவள். பிரம்மத்தை எவரால் நெருங்கமுடியும்?. அதற்கு மாறுதல் எது? ஏது?

 187 * निरत्यया -    நிரத்யயா |
 காமேஸ்வரி சாம்ராஜ்ய மஹாராஜ்னி . அவள் இடும் சட்ட திட்டங்களை, எல்லையை மீறாதவள். மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக தான் இருப்பவள். என்ன ஒரு அற்புத குணம் அம்பாளுக்கு!
உதாரண புருஷி!

* 188 *दुर्लभा - துர்லபா -
எட்டாத நிலையில் இருப்பவள் ஸ்ரீ லலிதாம்பாள் என்று இந்த நாமம் சொன்னாலும் பக்தர்களுக்கு கிட்டாதவள் அல்ல அவள். ஆத்ம விசாரம், பக்தியால் அவளை எளிதில் அடையலாம். சக்தி உபாசகர்கள் இதை நன்குணர்ந்தவர்கள்.

* 189 * दुर्गमा -துர்க்கமா --
நெருங்கமுடியாதவள். கடின சாதனையாலும் வழிபாட்டினாலும் உயரிய பக்தியாலும் அவளை லலிதாம்பாளாக தரிசிக்கலாம். காமகலாவாக குண்டலினியாகி யோக பயிற்சியால் அனுஷ்டா னத்தில் உணரலாம்.

* 190 *  दुर्गा -துர்க்கா -
அழகிய சிறிய ஒன்பது வயது பெண்ணாகக்  கூட  அம்பாளைக்  காணலாம். துர்க்கை என்றாலே துன்பங்களை, கஷ்டங்களை நிவர்த்தி பண்ணுபவள் என்று அர்த்தம். நெருப்பு மாதிரி ஜ்வாலையாக ஜொலிப்பவள். துர்கா சூக்தம் விடாமல் சொல்வது கஷ்டங்களில் இருந்து நிவாரணம் பெற. இதில் முதல் ஸ்லோகம் ம்ரித்யுஞ்ஜய மந்த்ரம். காலனை வெல்லும் மந்திரம். த்ரியம்பகம் யஜாமஹே........ என்ற சக்திவாய்ந்த மந்திரம்.  கிராமங்களில் நாலு எல்லையிலும் எல்லையம்மனை, துர்க்கையை வழிபட்டவர்கள் நமது முன்னோர்கள். ரட்சிக்கும் கடவுள் அம்பாள்.

* 191 * दुःखहन्त्री - துக்கஹந்த்ரீ --
பக்தர்களின் துயரங்களை, துன்பங்களை, துக்கங்களை, நீக்குபவள் அம்பாள். எல்லா துன்பத்துக்கும்  அடிப்படை காரணம் சம்சார பந்தம். இந்த பற்று விடத்தான் பற்றற்றவனான காமேஸ்வரன், பரமேஸ்வரனின் திருவடிகளை பற்றிக்  கொள்வது. உலக வாதனைகளிலிருந்து மீள்வதற்கு.

* 192 *सुखप्रदा - ஸுகப்ரதா -
சந்தேகமற பக்தர்கள் வேண்டியதற்கும் மேலாக சுகத்தை, சந்தோஷத்தை அருள்பவள் அம்பாள். மறுபிறவியின்றி தப்புவதே அதி சுகமானது அல்லவா? இந்த ஆனந்தத்தை தரும் அம்பாள் ஆனந்தி.

* 193 * दुष्टदूरा - துஷ்டதூரா -
துஷ்டனை கண்டால் தூர விலகு என்கிறோமே அதே தான். அம்பாள் துஷ்டர்களை அணுக விடமாட்டாள். நாம் பயந்து தூர ஓடுபவர்கள். அவளோ அவர்கள் பயந்து அவள் இருக்கும் பக்கமே நெருங்காதவர்களாக பண்ணுபவள்.

* 194 * दुराचारशमनी - துராசார சமநீ -
சாஸ்த்ர விரோத தவறான செயல்களை புரிவது துராசாரம் எனப்படும். ஸ்ரீ லலிதாம்பாள் இத்தகைய செயல்களை புரிவோர்களை தண்டிப்பவள் .

* 195 * दोषवर्जिता - தோஷவர்ஜிதா-
எந்த விதமான தோஷமும் தன்னை நெருங்க விடாதவள் அம்பாள்.ப்ரம்மத்திடம் எந்த தோஷம் நெருங்கும்?

* 196 *सर्वज्ञा - ஸர்வஜ்ஞா -
சகல ஞானமும் இருப்பிடமாக கொண்டவள் ப்ரம்ம ஸ்வரூபிணி அம்பாள். அவளறியாதது என்ன இருக்கிறது? சகலமும் அறிந்தவள்,

* 197 * सान्द्रकरुणा - ஸாந்த்ரகருணா-
கருணா சமுத்திரம் காமேஸ்வரி. நாம் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் தானாகவே  பத்து அடி எடுத்து நம்மை அணுகி வந்து ரட்சிக்கும் தாய் அல்லவா ? பிரபஞ்சத்தின் தாயாயிற்றே. அவள் கண்கள் தயை, அன்பு, காருண்யம் இவற்றால் நிரம்பியவை. எல்லையற்றவை.

* 198 * समानाधिकवर्जिता - ஸமாநாதிக வர்ஜிதா -
ஈடிணையற்றவள் சிவசக்தி. சர்வேஸ்வரியை யாருடன் ஒப்பிடுவது? ஞானமயம் அவள். ப்ரம்மணி. அர்ஜுனன் க்ரிஷ்ணனிடம் சொல்கிறானே '' நீ அகிலபுவனமும் போற்றும் சர்வ சக்தி வாய்ந்தவன் உனக்கு யாரை சமமாக சொல்வேன் ?'' அம்பாள் அதே தான்.

* 199 *सर्वशक्तिमयी -   ஸர்வ சக்திமயீ.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டினால் போல் அம்பாள் சர்வ சக்தி உருவானவள். தச மஹா வித்யா சக்தி உடையவள். சக்தி என்பது இங்கு அம்பாளின் தலைமையில் உள்ள இதர உப தெய்வங்களையும் (வாராஹி, அஸ்வாரூடா போன்ற மந்த்ரிணீ சக்திகள் )குறிக்கும்.

* 200 *. सर्वमङ्गला - ஸர்வமங்களா  -
 புனித ஸ்வரூபி. சிவம் என்றாலே மங்களம். அவள் சிவை. புனிதத்தின் பிறப்பிடம் அம்பாள். சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே .... என போற்றுகிறோமே ,அவள்!

* 201 * सद्गतिप्रदा - ஸத்கதிப்ரதா --
 நல்வழி காட்டுபவள் . ''உலக பந்தங்களில் சிக்காதே. முள் குத்தும். இப்படிப்போ'' என்று வழிகாட்டு பவள். தாயல்லவா? அவள் காட்டும் பாதையில் சென்றால் பிரம்மத்தை அடையலாம்.

* 202 *सर्वेश्वरी  ஸர்வேச்வரீ --
சகல அகில புவன லோகங்களுக்கும் உண்டான ஒரே தெய்வம் ஸ்ரீ லலிதாம்பிகை.அவளுக்கு மிஞ்சியதோ, சமமோ வேறொன்றும் இல்லாதவள்.

* 203 * सर्वमयी -ஸர்வமயீ -
எல்லாமும் தானே ஆனவள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி...... இது அவளே தான். அவள் எங்கில்லை?, எதில் இல்லை?. சர்வம் என்பது 36 தத்துவங்களை குறிக்கிறது. அந்த விவரத்துக்குள்  இப்போது செல்ல  அவகாசம் இல்லை. 

* 204 * सर्वमन्त्रस्वरूपिणी - ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ -
எல்லா மந்திரங்களுக்கும் உருவம் கொடுத்தால் அது அம்பாளின் உருவமாகத்தான் தோன்றும். சமஸ்க்ரிதத்தின் 52 அக்ஷரங்களையும் தொடுத்து மாலையாக அணிபவள் அம்பாள்.

ஒரு அம்பாள் உபாசகி, நமது முகநூல் சகோதரி,  எனக்கு ஒரு அதிசய செயதி சொன்னார்: ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அம்பாள் அனுகிரஹத்தோடு இயற்றிய ஒரு கீர்த்தனை (ஆரபி ராகத்தில் அமைந்தது) யை ஒரு தடவை ரசித்து மனமுருகி பாடினால் நவா வர்ண கடின பூஜை செய்வதன் பலன் கைமேல் கிடைக்கும் என்றார். இந்த அற்புத பாடலை அம்புஜம் வேதாந்தம் என்ற அம்மையார் மூலம் பலர் கற்றவர்கள். தீக்ஷிதரின் அகிலாண்டேஸ்வரி கீர்த்தனை கேட்டிருப்பீர்கள்.  த்விஜாவந்தி என்கிற அற்புத ராகத்தில் அமைந்தது. ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.   இந்த  க்ரிதியும்  அகிலாண் டேஸ்வரிமேல் பாடப்பட்டது  தான்:

அகிலாண்டேஸ்வர்யை - ராகம் ஆரபி தாளம் ஆதி
பல்லவி
''அகிலாண்டேஸ்வர்யை நமஸ்தே,
அணிமாதி சித்தீஸ்வர்யை நமஸ்தே,
அனுபல்லவி:
நிகிலாகம ஸன்னுத வரதாயை
நிர்விகாராயை நித்ய முக்தாயை
ஸம்ஸார பீதி பஞ்சனாயை
சரத் சந்திரிகா ஸீதளாயை
ஸாகர மேகலாயை த்ரிபுராயை (அகிலா)
யாரவது பாடி அனுப்புங்கள் எல்லோரும் கேட்போம்.

இதில் வரும் அம்பாளின் நாமங்களை தான் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அறிந்து வருகிறோம். அந்த சகோதரிக்கு உங்களோடு சேர்ந்து நன்றி தெறிக்கிறேன். 

சக்தி ஆலயம்:   வாழவைக்கும்  வாளாடி  உலகாயி   
வாளாடி  எனும்  கனவு  ''உலகத்தில்''   நான்  மூன்று நாள்  இருந்து   சில வருஷங்கள் ஓடிப் போய்விட்டது என்றாலும்  இன்னும்  நினைவில் பசுமையாக உள்ளது. உலகத்தை  ஆள்பவள்  உலகாயி.  ஆமாம் ஒரு  சக்தி வாய்ந்த அம்மன்  வாளாடியில் கோயில் கொண்டுள்ள உலகாயி  அம்மன்.  1908ம்  வருஷம்  அவளைக் கண்டு பிடித்து பிரதிஷ்டை பண்ணினார்கள்.  அன்று முதல்  எல்லா வயல்களிலும்  நெல்மணிகள் இடுப்புயரத்துக்கு வளர்ந்தனவாம். எங்கும்  வாழையும் கரும்பும்  ஆள் உயரத்துக்கு  செழித்து காற்றில் தலையசைக்கிறதாம்.  என்னப்பா  காரணம் என்று ஒருவரைக் கேட்டபோது  அவர் சொன்னது: 
''நெல்லுல பலம், வாழையிலே  குளிர்ச்சி,  கரும்புலே   தித்திப்புமாக    எங்க  உலகாயி  இருந்து கொண்டு  எங்களைக்  காப்பத்தறா. ஒண்ணும் வேணாம்.  ஒரு சின்ன கற்பூரம் போதும் அவளுக்கு.  குளிர்ந்து போய் நம்ம சந்ததிக்கே துணையா வருவா,  கூடவே  இருப்பா எங்க  உலகாயி'' , ஆமாம்  அவள் அப்படித்தான் என்று  கிராமத்தில்  ஏகோபித்து  எல்லோரும்  தலையசைக்கிறார்கள். 

வயலின் வித்வான் லால்குடி ஜெயராமனின் பாட்டி,  அதாவது  அப்பா கோபாலய்யரின் அம்மா, உலகாயியின் பக்தை. உலகாயி  யார் தெரியுமா? கொல்லி மலையிலிருந்து இங்கே வந்திருக்கும்  ஸ்ரீ வைஷ்ணவி. அவள் மேல் கும்மி பாட்டு  பாடி, அது பிரபலமாகி,   லால்குடி, பூவாளூர் னு  சுத்து  வட்டாரத்திலேருந்து எல்லாம் பக்தர்கள் வராங்க.''  என்கிறார்கள்.   அவளுக்கு  உலகாயி ன்னு பேரு . ஆனால்  கருவறையில் சப்தமாதாக்களாக  இருக்கா.  கோவில்ல  கருப்பண்ணசாமி , காத்தவராயன், சேவுக பெருமாள், மதுரை வீரன்  எல்லோருமே இருக்காங்க.   வேறென்ன வேணும்?

தை மாச அறுவடையாய்ட்டுதுன்னா  அடுத்து,  பங்குனிலே  என்ன விதைக்கறதுன்னு உலகாயி கிட்டே கேட்டுட்டு தான்  பயிர் வைப்பாங்க.   பங்குனிலே திருவிழா   அஞ்சு நாள்  ஓஹோன்னு நடக்கும். வாளாடிக்கு நிறைய  பேரு  வெளியாளுங்கள்லாம் வருவாங்க.  பங்குனி  முதல்  ரெண்டு புதன்கிழமையும்    காப்பு கட்டிட்டு,   திங்கக் கிழமை லேருந்து   அஞ்சு நாள்  பல்லாக்கு, சப்பரம், தேரு  எல்லாம்  ஊர்வலம் வரும்.    ஊர்  சனங்க, வெளியூர் பக்தர்கள்னு  எல்லோரும் வேண்டுதலை நிறைவேற்றுவாங்க.  முடி இறக்கறது , பாவாடை புடவை சாத்தறது, பொங்கல் படையல் எல்லாம் நடக்கும். அத்தினி பேருக்கும் சாப்பாடு.  வாளாடிக்கு வந்து உலகாயி அம்மனை ஒரே ஒருக்கா தரிசனம் பண்ணினாப் போதும்… அதுவரை நாம பட்ட கஷ்டமெல்லாம் ஓடிடும்; எல்லாக் கெட்டதுகளும் மறைஞ்சு, நல்ல நல்லதுங்க  நடக்க ஆரம்பிச்சிடும்” என்று மனநிறைவுடன் சொல்கிறார்கள், அம்மனின் பக்தர்கள். உணர்ச்சிபூர்வமாக அவர்கள் பேச்சு நெஞ்சைத் தொட்டது.

”எங்களுக்கு எல்லாமே உலகாயி அம்மன்தான்! வாளாடில பிறந்து வளர்ந்து, இன்னிக்குக் கடல் கடந்து எங்கேயோ போயிட்டாலும், சின்னதா ஒரு துக்கம்னாலும், ‘அம்மா உலகாயி… நீதாம்மா காப்பாத்தணும்’னு ஒரு நிமிஷம் கண்ணை மூடி பிரார்த்தனை பண்ணினாப் போதும்; மனசுல இருந்த சங்கடங்களும் சஞ்சலங்களும் சட்டுனு விலகிடும். இது எங்க எல்லோருடைய  அனுபவம்''  என்கிறார்கள் ஊர்க்காரர்கள். .

திருச்சி- லால்குடி  வழியிலே சமயபுரம் டோல்கேட் பக்கத்திலே   இருக்கிற  ஊரு  வாளாடி.   திருச்சி  சத்திரம்  பஸ்  நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ..  
 
ஒரு கதை இருக்குது  சொல்றேன் கேட்டுக்கிடுங்க  என்று ஒருவர் சொன்னார். கேட்டேன்.
 வாளாடியில்  ஒரு  கோயில்  கட்ற வேலை செய்யற ஸ்தபதியோட   குழந்தைக்கு    திடீரென்று  ஏதோ  நோய் வந்தூட்டுது.   பூச்சி கடியா  இருக்குமோன்னு  வைத்தியர்கிட்டே  போனாரு.  

‘ இன்னாபா  இது,  இந்தக் குழந்தைக்கு   இன்னா  நோய்,  எதனாலே  ன்னே  கண்டுபிடிக்க முடிய லியே, எனக்குத்  தெரியலியே ''ன்னுட்டார் வைத்தியரு .  
அப்புறம் ஸ்தபதி  உலகாயிகிட்டே வேண்டிகிட்டார்
''மாதா  என் தாயே,  நீ தான்மா  என் குழந்தையை காப்பாத்தணும்னுட்டு''  அழுது கொண்டே  வீட்டுக்கு வந்துட்டார்.   ராத்திரி  ஸ்தபதி  கனவிலே  உலகாயி  வந்தாள் .
‘போடா,  உன் குழந்தைக்கு ஒண்ணு மில்லேடா. சப்த மாதாக்களில் நானும் ஒருத்தி. கொல்லி மலையில் இருந்து நான் இங்கே வந்திருக்கிறேன். இதை இந்த ஊருக்கு நீ  தெரியப்படுத்தணும் .  என்  விபூதி சாம்பலை குழந்தை மேலே பூசு சரியாயிடும் பாரு.   நான்  இந்த ஊரிலே தங்கி   நீங்க எல்லோரும் நல்லா  இருக்க செய்யணும். எனக்கு நீ ஒரு கோயில் கட்டு .  இந்த இடத்திலே கட்டு''   என்று  ஒரு இடத்தையும்  அடையாளம் காட்டினாள்  உலகாயி''' ,  ஸ்தபதி எல்லார்கிட்டேயேயும் ஓடிப்போய் இதை சொன்னார்  அப்புறம் என்ன. கோவில் உயரமா வளந்துடுச்சு. 
உலகாயி அம்மன் கோயிலுக்கு ஒருமுறை வந்து, புடவை சார்த்தி, விளக்கேற்றி வழிபட்டால்… திருமணத் தடை அகலும்; சந்ததி சிறக்கும்; கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
வாளாடியை  வாழவைக்கும்  ஒரு பெரிய  அம்மா   உலகாயி .  ஆயி  அப்பன்  என்றால்  அம்மை+அப்பன்   உலகமெல்லாம்  வாழ  அருள்பவள். வாளாடி நாயகி! 

வாளாடிக்கு வந்து உலகாயியை  தரிசிக்க எனக்கு  உதவியவர்   வாளாடியில்  அற்புதமான  தர்ம கார்யங்களை செய்து கொண்டுவரும்  அருமை  முகநூல் நண்பர்  ஸ்ரீ  தத்தாத்ரேயன்  வீட்டில்   தங்கி  வாளாடி உலகாயியை தரிசித்தேன்.  அருகே  லால்குடி  குணசேகரம்   கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யும் பாக்யத்தை கொடுத்த புண்யவான்.  அந்த கோவில்களை பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். அந்த அக்ராஹார மக்களுடன் கலந்து பேசி, அன்பர் இதிஹாசம் சீதாராமனின்   வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்று  கதைகள்  சொல்லி  நிறைய க்ருஷ்ணார்ப்பணம் டிரஸ்ட் புத்தகங்களை பரிசளித்ததில்  மட்டற்ற மகிழ்ச்சி. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...