Sunday, October 10, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K SIVAN  --


84.  அறிவுரையும்  ஆலய விஜயமும் 

1932ல்  மஹா பெரியவா,  அப்போதைய  மெட்ராஸ், தங்கசாலையில்  இன்னும் இருக்கும்  குலபதி  ஸ்ரீ பாலகிருஷ்ண ஜோஷி நடத்திய ஹிந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு அறிவுரை அளித்ததின் சாராம்சம்:

“இந்த பிரபஞ்சத்தையே  ஒரு பெரிய  கூட்டு குடும்பம் என்று பார்த்தோமானால் நமக்கு அப்பா அம்மா  ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர்கள் தான்.  ரகுவம்சத்தில் காளிதாசன் இதை அற்புதமாக சொல்றான்.

वागर्थाविव सम्प्रुक्तौ वागर्थप्रतिपत्तये  जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ
vāgarthāviva sampruktau vāgarthapratipattaye  jagataḥ pitarau vande pārvatīparameśvarau

 இந்த  ஹிந்து தியோலாஜிக்கல் ஸ்கூல் லே  நீங்க எல்லோரும் வாத்தியார்கள் , மாணவர்கள்  எல்லாம் சேர்ந்த  ஒரு சின்ன குடும்பம் மாதிரி இருக்கணும். இந்த சின்ன வயசிலே தான் மாணவர்கள் நீங்கள் நிறைய  கற்றுக்  கொள்ளவேண்டும்.   படிக்கிற விஷயத்தில் ரெண்டு தெரிஞ்சுக்கணும்.  ஒண்ணு  பக்தி  இன்னொன்று  ஒழுக்கம். கோபமே படக்கூடாது. ஒருத்தரை பற்றி இன்னொருத்தர்  கிட்டே தப்பா பேசக்கூடாது.

வியாதிக்கு மருந்து சாப்பிடும்போது  பத்தியம் இருப்பது போல  மாணவர்களாகிய  நீங்கள் கல்வி கற்கும்போது,  உங்கள் சுதந்திரத்தை பற்றியோ, பெரியவர்கள்  கட்டளைகளை மீறுவது பற்றியோ நினைக்கவே கூடாது.  குரு பக்தி அவசியம். பணிவு,  பெரியோரிடம் பயபக்தி மரியாதை எல்லாம் மாணவர்களிடம் இருக்கவேண்டும்.   எந்த மாணவன் மிகவும்  பயபக்தியோடு  தன்னடக்கத்தோடு பெரியோர்களிடம், ஆசிரியர்களிடம், பெற்றோர்களிடம் கீழ்படிதலோடு  நடந்துகொள்கிறானோ,   அவன் பெரியவனாகிய பிறகு மிகவும்  உயர்ந்தவனாக திகழ்வான்.  மாத்ரு பக்தி, பித்ரு பக்தி , குருபக்தி எவனையும் வாழ்வில் உயரச்  செய்துவிடும்.  ஏனென்றால் இது  ஆணவத்தை சின்ன வயசிலேயே கிள்ளி எறிந்து விடும்.  ஒளவையார் சொன்னதை மறக்கவே கூடாது.  அன்னையும் பிதாவும் தான் முன்னறி தெய்வம்.   வேதங்கள் அதைத்தான் சொல்கிறது.   படிக்கும் வயதில் உலக விஷயங்கள் புத்தியில் ஏறவேண்டாம்.  அதென்ன  அப்படி சொல்றேள், உலகத்துக்கு நம்மாலான சேவை செய்யவேண்டாமா ?  என்று கேட்பீர்கள்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், முதலில் உலகத்துக்கு சேவை செய்ய அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். அது பள்ளிக்கூடத்தில் தான் முடியும்.  நீங்க நன்றாக படிப்பது தான் உலகத்துக்கு நீங்கள் செயகிற மகத்தான சேவை.''

சென்னையிலிருந்து கிளம்பும் போது  மஹா பெரியவா திருவொற்றியூர் தியாகராஜா திரிபுரசுந்தரி அம்பாள் தரிசனம் செய்ய ஏற்பாடு  செய்திருந்தார்கள்.

திருவொற்றியூர் தியாகேசன் ஆலயம் பற்றி சில வார்த்தைகள் இங்கு சொல்வது அவசியமாகிறது. இந்த ஆலயம் பற்றி அறியாதவர்களுக்கு இது உதவியாக இருக்குமே.

திருவொற்றியூர்  தியாகராஜ ஸ்வாமிகள்  ஆலயம்  புராதன  சிவாலய க்ஷேத்ரம்.  சென்னையிலிருந்து 10-12 கி.மீ. தூரத்தில் தானே  இருக்கிறது. . திருவொற்றியூர் எப்போ வேண்டுமானாலும்  போய்  பார்க்கலாம்.  நமக்கு முன்னால் ஒருவர்  பல காத  தூரம் நடந்தே கையிலே கம்புக்கு பதிலாக  கரும்பு ஊன்றிக்கொண்டு நடக்கிறாரே  அடையாளம்  தெரிகிறதா?.   ஏதோ ஒரு நாட்டுப்புற தாடிக்காரர் என்று தப்பான எடை போடாதீர்கள்.  தப்பான எடையை  ரேஷன் கடையில், மளிகை கடைகளில்  மட்டுமே  போட்டுவிட்டு போகட்டும். நாம்  சரியான படியே  எடை போடுவோம். அந்த தாடிக்காரர் நமக்கு பரிச்சயமானவர். வேறு யாருமில்லை. பட்டினத்தார். சென்னைப்  பட்டினத்தில் காவிரிப்பூம் பட்டினத்தார். அங்கே நம்மை போல் ஆலய தர்சனம் செய்ய மட்டும் வரவில்லை. தனக்கே ஒரு ஆலயம் இருக்கும்படி செய்து விட்டவர்.

ஒரு மாமா பேரும் புகழுமாக இருக்கிறார் என்றால்  அவருக்குப்  பின்னால் யாரோ ஒரு சக்திவாய்ந்த மாமி இருக்கிறாள் என்று புரியும், தெரியும் அல்லவா. இந்த தியாகராஜர் இங்கே திருவொற்றியூரில் வெற்றிக்கொடி நாட்டி சீரும் சிறப்புமாக இருக்க காரணம் திரி சக்திகளில் ஒருவளான வடிவுடை அம்மன் இங்கே அவரோடு ஆலயத்தில் அருள் பாலிப்பதால் தான்.

ஆயிரம் வருஷங்கள் வயதான இந்த ஆலயம்  பல்லவர்களால் கட்டப்பட்ட 7ம்  நூற்றாண்டு பாடல் பெற்ற
 ஸ்தலம்.  பின்னர் 11ம் நூற்றாண்டு சோழர்களால் விஸ்தரிக்கப்பட்ட   ஒரு ஏக்கர் பரப்புடைய  7 நிலை கோபுர கற்  கோவில்.  திருவாரூர்  தியாகராஜருக்கு  இணையானவர் திருவொற்றியூர் தியாகராஜர். ராஜேந்திர சோழனின் ஏற்பாடு இதெல்லாம்..

காஞ்சிபுரத்தை  தொண்டைமான் ஆண்டபோது  வண்ணன் ஒண்ணன்  என்ற ரெண்டு  குறுநில மன்னர்கள்  எதிர்த்தார்கள். ஒரு பூதம் அவர்களை ஆதரித்ததால்  தொண்டைமான் அவர்களோடு போரிட்டு  தோற்றான்.  தொண்டைமான் விரோமச ரிஷியிடம் தனது குறையைச்  சொல்லி வருந்தினான். அவர் ஒரு தர்ப்பையை கொடுத்து  ''ராஜா,   இந்தா,  நீ இந்த தர்ப்பையோடு அந்த பூதத்தின்  கிட்டே போய்  சண்டை போடு.  ஜெயிப்பாய்'' என்கிறார்.  நம்பிக்கையோடு தொண்டைமான் தர்ப்பையை தூக்கிக்கொண்டு பூதத்தோடு யுத்தம் செய்தான். அவன் எறிந்த தர்ப்பை ஒரு கூறிய மழுவாகி பூதத்தை துரத்த,  அது   ''வண்ணன் ஒண்ணனுக்காக'' உயிரை விட தயாரில்லை. அவர்களையே பலகாரம் செய்துவிட்டு  தப்பி ஓடியது.  தொண்டைமான் நல்ல சிவபக்தன்.  ஆகவே  திருவொற்றியூர்  தியாகராஜ சுவாமி ஆலயத்தை புதுப்பித்தான்.   அவன் உருவாக்கியவை தான் வடிவுடை அம்மன் சன்னதி, குணாலய விநாயகர், வட்டப்பாறை அம்மன், வளர்காளி அம்மன், அருள் ஜோதி முருகன், ஆகாசலிங்கம், ஸஹஸ்ர லிங்கம், 27 நக்ஷத்திரங்கள் சந்நிதி எல்லாமே.  சுற்றிலும் மதில் சுவர்,  கோபுரங்கள்  எல்லாம் கட்டினான்.
காசியிலிருந்து  500 சிவலிங்கங்கள் கொண்டுவந்தான். 500 பிராமணர்களையும்  காசியிலிருந்து வரவழைத்து

தொண்டமான் ஆகம சாஸ்த்ர விதிப்படி  கோவிலுக்கு புனருத்தாரணம் செய்தவன் . நிலங்களை  மானியமாக
  வேதவ்ரித்தி, பட்டவ்ருத்தி, வைத்திய வ்ருத்தி, அர்ச்சனா வ்ருத்தி என்று பங்கிட்டு கொடுத்தான்.  கோவில் வளர்ந்தது. நிறைய கல்வெட்டுகள் இருக்கிறது.

இந்த   க்ஷேத்திரத்திற்கு   ஆதி சங்கரர் வந்தார். சோழ ராஜா  கண்டராதித்தர் விளக்கு  தீபத்துக்கு   என்று   90 ஆடுகள், இலுப்பை எண்னெய்  கொடுத்தாராம்  -- கல்வெட்டு சொல்கிறது. ஆட்டுக்கும் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எண்ணெய் ஆட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆட்டு எண்ணெய்  தெரியாது.   ஆடுகளை வளர்த்து விற்று  அதில் வரும் பணத்தை  எண்ணெய்  வாங்கி இருக்கலாம்.  

வலங்கை தாசிகள்  சிவனுக்கும் இடங்கை தாசிகள்  அம்மனுக்கும் இங்கே  ஆடினார்களாம்.  சங்கரர் வந்தது ஆகர்ஷிக்க,  மாலிக்காப்பூர் வந்தது அழிக்க. சுருட்டல் மன்னன். அப்பாவி அவன். தெரிந்து கொள்ளையடித்து கெட்ட பேர் வாங்கினான். இப்போது  கும்பலாக சேர்ந்து கொண்டு தெரியாமலே பல கோவில்களில் கொள்ளையாமே. தெரியாது...

மூலவர்  மண்ணாலான  ஆதிபுரீஸ்வரர். கவசம் அணிந்தவர்.  கார்த்திகை பௌர்ணமி  அன்று   கவசமின்றி காட்சி அளிக்கிறார்.  புனுகு, ஜவ்வாது சாம்பிராணி தைல  காப்பு தரிசனம்.   அம்பாளின்  உக்கிரம்  தணிய  ஆதிசங்கரர் ஒரு யந்த்ரம் ஸ்தாபித்து  அம்பாள் இப்போதெல்லாம்  சௌம்ய ஸ்வரூபி அவள் பெயர் திருபுரசுந்தரி.
ஒரு அருமையான தேவார பாடல் இதோ:

"வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே."

''அடே பக்தா, உனக்கு வேதம் ஓதிய, ப்ரவாகமாய் ஓவென்று பெருகி ஓடிவந்த கங்கையை தடுத்து சிரத்தில் ஏந்திய சிவன் திருவடி பெறவேண்டுமா?  உள்ளத்தில்  கள்ளத்தை  எரித்து, உடலை ,புலன்களை  வென்று  சாம்பலாக்கிய ஞானிகளை த்தேடி  திருவொற்றியூரில்  சேர்ந்து கொள்''.  

எங்கும் மரம் செடி கொடி , காடுகளாக  சுகந்தவனம் என்று பேர் கொண்ட திருவொற்றியூரில் இப்போது  போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.   எண்ணூர்  துறைமுகம் செல்லும் எத்தனையோ  ராக்ஷஸ பல சக்கர லாரிகள்   ஓடுகிறது.   ஏதாவது  ஒன்று  மேலே ஏறி மோக்ஷம் அனுப்பிவிட வாய்ப்பு அதிகம் என்பதால் ஜாக்கிரதையாக போகவேண்டும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...