Monday, October 25, 2021

sri lalitha sahasranamam

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - (144 - 167)     நங்கநல்லூர்  J.K. SIVAN

ஸ்லோகங்கள்:  45-47   நாமங்கள்: 144-167.

नित्यमुक्ता, निर्विकारा, निष्प्रपञ्चा, निराश्रया ।
नित्यशुद्धा, नित्यबुद्धा, निरवद्या, निरन्तरा ॥ 45 ॥

Nityamukta nirvikara nisprapancha nirashraya
Nitya-shudha nitya-budha niravadya nirantara – 45

நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா || 45

निष्कारणा, निष्कलङ्का, निरुपाधि, र्निरीश्वरा ।
नीरागा, रागमथनी, निर्मदा, मदनाशिनी ॥ 46 ॥

Nishkarana nishkalanka nirupadhirnirishvara
Niraga ragamadhani nirmada madanashini – 46

நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா |
நீராகா ராகமதநீ நிர்மதா மதநாசிநீ || 46

निश्चिन्ता, निरहङ्कारा, निर्मोहा, मोहनाशिनी ।
निर्ममा, ममताहन्त्री, निष्पापा, पापनाशिनी ॥ 47 ॥

Nishchinta nirahankara nirmoha mohanashinee
Nirmama mamatahantri nishpapa papanashini – 47

நிச்சிந்தா நிரஹங்காராநிர்மோஹா மோஹநாசிநீ
நீர்மமா, மமதஹந்த்ரீ,  நிஷ்பாப பாபநாசிநீ || 47


நாமங்கள்  144-167  விளக்கம்:

144 *  नित्यमुक्ता - நித்யமுக்தா -
அம்பாள் நம்மைப் போல் இல்லை. சதா சர்வ காலமும் எந்த உலகப்பற்றுதலும் இன்றி, மோக்ஷ சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருப்பவள். ப்ரம்ம ஸ்வரூபம்.

*145 *  निर्विकारा - நிர்விகாரா -
விகாரம் என்றால்  வேறுபாடு.  துளியும் மாறுபாடு இல்லாதவள், மாறாதவள் அம்பாள். ப்ரம்மத்துக்கு என்ன மாறுதல் இருக்கமுடியும்.? ஸ்ருஷ்டி ரகசியமே ரெண்டால் தான். புருஷன் பிரகிருதி. புருஷன் தான் பரமாத்மா சக்தி. மற்றதனைத்தும் ப்ரகிருதி. சர்வ ஞானமும் கொண்ட படைப்பாளி புருஷன். அதில் அம்பாள் அடக்கம்.

ப்ரகிருதியில் 23 தத்துவங்கள் தான் மாற்றத்தை தருவன. மஹத் என்று அதை சொல்வோம். ரெண்டாவது தான் அஹம்காரம். புருஷன் என்றால் ஆண் என்று அர்த்தம் அல்ல. முதன்மை ஸ்தானம் வகிப்பவர். அம்பாள் இங்கு புருஷன் எனப்படுகிறாள். புருஷ சூக்தம்  எல்லாவற்றுக்கும்   முதன்மையான  காரணன் விஷ்ணுவைப் பற்றியது.

146 * निष्प्रपञ्चा -  நிஷ்ப்ரபஞ்சா -
இந்த உலக இயலுக்கு, சம்பந்தத்திற்கு அப்பாற்பட்டவள் . ஆதி சக்தி, அநாதி யானவள்.

* 147 * निराश्रया -  நிராச்ரயா -
எந்த ஆதரவும், துணையும், தேவையும், எதிர்பார்ப்பும் அற்றவள். தைத்ரிய உபநிஷத் ''அநிலையனே'' '' என்பது எதன் சார்பும் துணையும் அற்ற,எதையும் யாரையும் சார்ந்து இல்லாத.. என்ற இந்த நிலையை தான்.

* 148 * नित्यशुद्धा -  நித்யசுத்தா-
என்றும் எப்போதும் பரிசுத்தமானவள் ஸ்ரீ லலிதாம்பிகை.

* 149 *  नित्यबुद्धा -  நித்யபுத்தா -
அழிவற்ற சாசுவதமான இயற்கையான ஞானம் கொண்டவள்.

* 150 *  निरवद्या - நிரவத்யா -
குறையொன்றுமில்லாதவள், குற்றம் காணமுடியாதவள் அம்பாள். குறைகள் உண்டாக காரணம் அஞ்ஞானம், அம்பாள் பரிபூரண ப்ரம்ம ஞான ஸ்வரூபம் அல்லவா?

151 * निरन्तरा - நிரந்தரா -
என்றும் தொடர்ந்து இருப்பவள். முடிவற்ற, எல்லையில்லாத கருணாசாகரி. எங்கும் நிறைந்தவள்.

* 152 *  निष्कारणा -  நிஷ்காரணா -
 காரணங்களை கடந்தவள் . ப்ரம்மம் காரணங்களுக்கு அப்பாற்பட்ட பர வெளி. அவளே ஆதி காரணி. ஸ்ரீ சக்ர வழிபாட்டில் அம்பாள் ''காரணானந்த விக்ரஹே '' என்று போற்றப்படுகிறாள்.

* 153*  निष्कलङ्का - நிஷ்களங்கா -
எந்த குறைபாடு, மாசு மரு , அற்ற பரிபூரணி ஸ்ரீ லலிதாம்பிகை என்று போற்றுகிறார் ஹயக்ரீவர். சுத்த ப்ரம்ம பராத்பரம்.

* 154 * निरुपाधिः - நிருபாதி -
 இது தான் ஆதாரம் என்று எதுவுமே இல்லாத பரம்பொருள் பரமேஸ்வரி. எல்லையற்றவள்.

* 155 *  निरीश्वरा - *நிரீச்வரா -
 யாருடைய எந்த கட்டுப்பாடும் இல்லாதவள். தானியங்கி. அவளே ஈஸ்வரன் ஈஸ்வரி. சர்வ சக்தியான அவளுக்கு மேலே யார்?

* 156 * नीरागा -நீராகா --
எந்த ஆசையும், விருப்பமும் இல்லாதவள் ஸ்ரீ லலிதா. இல்லாதவன் தான் எதையாவது தேடுவான்? சர்வமும் ஆன பரப்ரம்மத்துக்கு எது தேவை?

* 157 * रागमथनी - ராகமதநீ -
சாதகர்கள், பக்தர்கள் மனதில் வளரும் ஆசைகளை, வேட்கைகளை, விருப்பங்களை, தேடல்களை, அளிப்பவள் அம்பாள். பதஞ்சலி யோகா சூத்ரம் (II.3) ஒருவனது வாழ்வில் ஐந்து இடையூறுகள், அவனை அலைக்கழிப்பவை எது என்றால் அவை, அறியாமை, அஞ்ஞானத்தால் விளையும், கர்வம், பந்தம், பொறாமை, உலகத்தின் பொருள்கள் மேல் பற்றுதல். அம்பாள் இந்த நோய்க்கு நல்ல டாக்டர். கிட்டவே சேர விடமாட்டாள்.

* 158 * निर्मदा - நிர்மதா -
எதிலும் நம்பிக்கை தேடுபவள் அல்ல பரமேஸ்வரி. நம்பிக்கை எதிர்பார்ப்பின் அஸ்திவாரத்தில் உருவாகிறது.

*159*  मदनाशिनी -  மதநாசிநீ -
 வீண் டம்பம், கர்வம் தலைகனம் , அகம்பாவம், தற்பெருமை எல்லாவற்றையும் பக்தர்களிடமிருந்து அழிப்பவள். இதெல்லாம் இருந்தால் எந்த ஜென்மத்தில் ஞானம், பெறுவது, எப்போது மோக்ஷ மடைவது?

* 160 *निश्चिन्ता - நிச்சிந்தா -
கவலை என்றால் என்ன என்று அறியாதவள். நமது வாழ்நாளின் பெரும்பகுதியை ஏதோ ஒரு கவலை, மன வியாகூலத்தில் கழித்து வாடுகிறோமே. அம்பாளை சரணடைந்தால் இதெல்லாம் கிட்டே வருமா? அம்பாளுக்கு என்ன கவலை இருக்கிறது. ஸ்ரீ லலிதாம்பிகைக்கு சகலமும் பொறுப்பேற்ற வாராஹி , சியாமளா இருக்கிறார்களே,

* 161 * निरहङ्कारा - நிரஹங்காரா --
சகல சௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீ லலிதாம்பிகை இருக்கு திசை பக்கம் கூட அஹம்காரம் நுழையாது. சத்வ ரஜோ தமோ குணங்கள் உள்ள இடத்தில்தான் அஹம்காரம் தலை காட்டும். நிர்குணமாக அருள் பாலிக்கும் அம்பாளிடம் அஹங்காரத்துக்கு என்ன வேலை?

* 162 * निर्मोहा -  நிர்மோஹா.
 எதன் மீதும் மோகம் அற்ற, பற்று இல்லாதவள் ப்ரம்ம ஸ்வரூப ஸ்ரீலலிதாம்பிகை. ஆத்மாவை அடைய முதலில் மனம் தூய்மையாக பற்றற்றான் பற்றினை பற்றவேண்டும். . அப்போது தான் அம்பாள் தென்படுவாள்.

* 163 * मोहनाशिनी -மோஹநாசிநீ .
 பாரதியார் பராசக்தி என் மோகத்தை கொன்றுவிடு என்று வேண்டினார் ஞாபகம் இருக்கிறதா? அம்பாள் மோகத்தை நாசம் செய்பவள். நம்மை அழிவுப்பாதைக்கு கூட்டிச் செல்வது மோகம். லலிதாம்பாள் பக்தன் மனதில் மோகத்தை அழிப்பவள்.

*164* निर्ममा - நிர்மமா --
ஹயக்ரீவர் ஸ்ரீ லலிதாம்பாள் சுயநலம் இல்லாதவள் என்கிறார். ஏன்? ஏதாவது நம்மிடம் இல்லாதது தேவையாகிறது. அதை எப்படியாவது பிறரிடமிருந்து தனக்கென்று உடமைப் படுத்திக் கொள்ள தோன்றுவது தான் சுயநலம். தன்னிடம் இருப்பதை கொடுக்காததும் கூட. அம்பாளிடம் இல்லாதது என்ன. பிறர் யார்? எல்லாம் அவளே. அவளிடமிருப்பது அவளுக்கா பிறர்க்கா? சுயநலம் எங்கிருந்து வந்து இதில் கலக்கும்?*

* 165 * ममताहन्त्री - மமதாஹந்த்ரீ -
லலிதாம்பிகை பக்தர்கள் மனதில் குடிகொண்ட சுயநலத்தை அகற்றுபவள். பிறகு தான் அவளை அடையமுடியும்.

166 *  निष्पापा -   நிஷ்பாபா --
 பாபம் அணுகாதவள் ஸ்ரீ லலிதை. ஆசை தானே பாபம் செய்வதற்கு காரணம். ''அர்ஜுனா நான் செய்யும் காரியம் எதுவும் எனக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது. அதன் விளைவு எனும் கனியும் நான் விரும்பாதது''  என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில்.
 ஸ்ரீ அம்பாள் செய்யும் கர்மங்கள் அவளுக்காக அல்ல. நமக்காக. எந்த பலனும் அவள் எதிர்பார்ப்ப தில்லை. அவளை அதெல்லாம் அணுகாதவை.

* 167 *  पापनाशिनी -பாபநாசிநீ -
பாபம் துளியாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அப்படியே அதை அழித்து விடுபவள் மாதா லலிதாம்பிகை. ஆங்கில விஞ்ஞானி புதிதாக கண்டுபிடித்துவிட்டதாக உலகம் மெச்சுகிறதே அவன் என்ன கண்டுபிடித்தான்? ''ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான, எதிராக விளைவு மற்றொரு செயல் உண்டு'' ' for every action there is an equal and opposite reaction. இது என்ன புதுசு? ரிஷிகள் வேதங்கள் ஆயிரம் வருஷங்கள், யுகங்களில் முன்பே சொல்லியிருக்கிறதே.  ;;முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் கர்மா''    பற்றி.   ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே  கிருஷ்ணன் படித்துப்  படித்து அர்ஜுனன் மூலம் நமக்கு சொன்னது தானே இது. கர்மா நல்லதாக இருந்தால் நல்ல பலன். கெட்டதாக பாபமாக இருந்தால் அதற்கேற்ற  விளைவை அனுபவித்தே தீரவேண்டும். இதை இங்கிலீஷில் கொஞ்சம் சொன்னால் நியூட்டன் பெரிய விஞ்ஞானி .  சமஸ்க்ரிதத்தில் சொன்னால் காதில் ஏறாது.  பாபங்களை கொளுத்தி விடுபவள் அம்பாள்.

சக்தி  ஆலயம்  :    மயிலை கற்பகாம்பாள்:

சென்னையில் இருப்பவர்கள்   அடிக்கடி செல்லும், ( நான் சொல்வது ஹிந்துக்கள்)  ஒரு  ஆலயம்  மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் ஆலயம்.   பல்லவ  ராஜாக்கள் ஏழாம் நூற்றாண்டில் கட்டியது.   மயிலாப்பூரை   திருமயிலை , கபாலீச்சரம் என்று எல்லாம்  அறிகிறோம்.  புராணங்கள் சொல்லுகிற  விஷயம் :  இங்கே தான்    ஸ்ரீ பார்வதி  மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததால்,  மயில்கள்  ஆர்ப்பரிக்கும்  இடம்  மயிலார்ப்பூர்   காலக்கிரமத்தில், மயிலாப்பூர் ஆகிவிட்டது.  கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்கள் . தவிர  பரிவார மூர்த்திகளுக்கான சந்நிதிகளையும்  இங்கே  கோயிலில்  காண்கிறோம்.  பிற்காலத் தென்னக  கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு  கண்ணைப்பறிக்கிறது.

இப்போதிருக்கும் கோயில் வேண்டுமானால் அண்மைக்காலமாக இருப்பதாக கருதலாம். ஆனால் கோயில்புராதனமானது.  மயிலாப்பூர்  கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள்.   பல ஆண்டுகளுக்குப் பின்னர்  இப்போதிருக்கும் ஆலயம்  உருவானது.

திருஞானசம்பந்தர்  காலத்திலே, சிவனேசர் என்பவர் தனது  மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் பழ நம்பிக்கை. இன்றைய கபாலீசுவரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றது.

ஆலயத்தில்  தனிக்  கோயில் கொண்டுள்ள   கற்பக விருட்சமாக வீற்றிருக்கும் மயிலை கற்பகாம்பாள்  சக்தி மிக்க அம்பாள்.  பக்தர்கள் வேண்டும் வரங்களை கற்பக விருக்ஷமாக அருள்பவள்.   எண்ணிய காரியம் அனைத்தும் நிறைவேற்றுபவள் என்பதால்  லக்ஷக் கணக்கான  பக்தர்கள் அவளைத் தேடி வருகிறார்கள்.  மயிலயே கயிலை என்றவாறு  புகழ் கொண்டவள் கற்பகாம்பாள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...