Friday, October 22, 2021

oru arpudha gnani

 ஒரு அற்புத ஞானி - நங்கநல்லூர் J.K.. SIVAN-

மஹான் சேஷாத்ரி ஸ்வாமிகள்.

'' இப்பவே ராமேஸ்வரம் போ''

அண்மையில் வாழ்ந்திருந்தாலும் சிலர் பெயர்கள் நம் மனதில் பதிவதில்லை. என்றோ எப்போதோ சில காலம் மட்டுமே வாழ்ந்திருந்தாலும், அவர்களின் பெருமை , மஹிமை அவர்கள் வெளிப்படுத்தாமலேயே உலகெங்கும் பரவி பக்தர்கள் மனதில் என்றும் குடிகொண்டுள்ள சில மஹான்களும் உண்டு. அப்படி ஒருவர் தான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். தனக்கென வாழாமல் பிறர்க்கெனவே வாழ்ந்த ஒரு ப்ரம்மஞானி.

இப்படிப்பட்ட ப்ரம்மத்தோடு சதா லயித்திருக்கும் ஞானிகளின் பேச்சு நம்மைப் போல உலகசம்பந்தம் கொண்டதாக இருக்காது. அதிகம் பேசவும் மாட்டார்கள் எனவே ஒன்றிரண்டு வார்த்தைகள் அவர்கள் பிரயோகிப்பது நமக்குத் புரியாததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

சேஷாத்ரி ஸ்வாமிகளின் பேச்சு இப்படித்தான் பூடகமாக இருக்கும். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல் தோன்றும். ஆனால் அவை உபநிஷதங்கள் சாரமான மஹா வாக்கியம் போன்றவை. அவற்றுக்கு வியாக்யானம் எழுத நிறைய ஞானம் வேண்டும். மேலெழுந்தவாரியாக நம் போன்றவர்களுக்கு அது ஏதோ ஒரு பைத்தியத் தின் உளறல் போல் தான் தோன்றும்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எளிதாக பெற்ற பட்டப்பெயர், விருது என்ன? இது ஒரு பைத்தியம்.
அவர் ஆடைகள், உருவம் நடத்தை எல்லாமே அதை சாஸ்வதப் படுத்துவது போல் அமைந்திருந்தது.

அவரை நிழல்போல் விடாமல் தொடர்ந்து அருகி லேயே இருந்தவர் குழுமணி நாராயண ஸ்வாமி சாஸ்திரிகள் .

ஸ்வாமிகள் திருவண்ணாமலையில் அவர் அடிக்கடி செல்லும் சாது சத்திரத்தின் திண்ணைமேல் வழக்கம்போல் காலாட்டிக்கொண்டு உட்கார்ந் திருக்கிறார். அவர் காலின் கீழே சாஸ்திரி தாழ்வாரத்தில் மண் தரையில். சரியான குரு சிஷ்யர்கள் இருவரும்.

ஸ்வாமிகள் என்னென்னவோ புரியாத விசித்திர பேச்சுகள் பேசுகிறார். சாஸ்திரிகள் பேசாமல் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். திடீரென்று ஸ்வாமிகள் ஏதோ ஒரு ஸ்லோகத்தை சொல்கிறார்.
அதில் அர்ஜுனன் கிருஷ்ணனைப்பார்த்து கேட்பது போலவும் கிருஷ்ணனின் பதிலும் வருகிறது: அது கீதையில் எந்த அத்தியாயத்தில் வருகிறது என்று ராவும் பகலும் தேடிப் பார்த்துவிட்டேன். அப்படி ஒன்று கீதையில் இருப்பதாக என் கண்ணுக்குப் படவில்லை. எனக்குத் தெரியவில்லை:

சேஷாத்திரி ஸ்வாமிகள் தானாகவே க்ரிஷ்ணார் ஜுன சம்வாதத்தை சாஸ்திரிகளுக்கு பூடகமாக தனது ஸ்லோகமாக சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

அதன் அர்த்தம்:
'கிருஷ்ணா என்னைப் போல இருக்கும் அனாதை களுக்கு, திக்கற்றவருக்கு என்ன கதி சொல்?''
''அர்ஜுனா, அதற்குத்தானே நான் ஒரு ஸந்நியாசி யாக வேஷம் தரித்து ஞான உபதேசம் செய்கிறேன்!''

சேஷாத்ரி ஸ்வாமிகளும் ஒரு பரிசுத்த பூரண சந்ந்யாஸி அவர் உபதேசங்கள் இணையற்றவை என்று நான் சொல்லவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

ஒருநாள் காலை 9மணிக்கு சுள்ளென்று வெயில். எங்கோ வெகு தூரம் சென்று நடந்து திரும்பிய சாஸ்திரி சாது சத்திரம் போய் ஸ்வாமிகளை தரிசிக்க எண்ணினார்.

' நாம் ஸ்வாமிகள் இருப்பார் என்று நம்பிப் போகிறோம். ஆனால் ஸவாமிகள் இருப்பாரோ மாட்டாரோ? ஸ்வாமிகள் அனுக்கிரஹம் இருந்தால் அவர் தரிசனம் நமக்கு கிடைத்தால் அதிர்ஷ்டம்'' என்று எண்ணி சென்றபோது அங்கே திண்ணையில் ஸ்வாமிகள் இருந்தார். சாஸ்திரிகள் நமஸ்காரம் பண்ணினார் .

''ஸ்வாமி. வழியெல்லாம் நடக்கும்போது யோசித் தேன். உங்களை தரிசித்து விட்டு போனால் ஒரு மாச காலம் மனம் சாத்வீகமாக திருப்தியாக இருக்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம் போல குரங்கு சேஷ்டை ஆரம்பித்து விடுகிறதே. என்ன செய்வது. எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்''
என்று மனம் உருகி கேட்டார் சாஸ்திரிகள்.
ஸ்வாமிகள் அதை காதில் வாங்கவே இல்லை. பேசவில்லை, அவர் கவனம் எங்கேயோ பேசாமல் திடீரென்று அங்கிருந்து எழுந்து போய்விட்டார்.

அன்று மாலையே மூன்று மணிக்கு கம்பத்து இளைய னார் கோவில் அருகே மறுபடியும் ஸ்வாமி யை பார்த்து விட்டு சாஸ்திரி நமஸ்கரித்தார்.

சாஸ்திரிகள் ஒன்றும் கேட்காதபோது தானாகவே அவரைப் பார்த்து ஸ்வாமிகள் என்ன சொன்னார்?

''நாராயணா, நீ காசிக்கு அப்புறம் போலாம். இப்பவே ராமேஸ்வரம் போ. ப்ரம்ம ஹத்தி தொலையும்''
எதற்கு திடீரென்று இப்படி ஒரு கட்டளை? .
சரி, ராமேஸ்வரம் போவோம். காசு? செலவுக்கு பணம் வேண்டுமே எங்கே போவேன்? எப்படி ராமேஸ்வரம் போவது?''

சாஸ்திரிகள் மனம் எண்ணுகிறதை சுவாமி புரிந்து கொள்ளாமலா இருப்பார். அவருக்கு தெரியாத ரகசியம் உண்டா ?
''ராமேஸ்வரம் போலாம். போக முடியும். பணம் எல்லாம் வழியிலே கிடைக்கும். கிடைக்கும். போ '' என்று ஸ்வாமிகள் தானாகவே சொன்னார்.

அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் பன்னீர் வாசனை தூக்கலாக கமகம என்றும் மணக்கும் அரைப்படி அளவு பெரிய விபூதி பாக்கெட் ஒன்றை ஸ்வாமிக்கு அளித்தார். ஸ்வாமிகள் கையில் கொடுத்து அவர் தொட்டபிறகு அதை வாங்கிக் கொள்ள விருப்பம் அந்த பக்தருக்கு.

ஸ்வாமிகள் பெரிய பாக்கெட் நிறைய இருந்த அத்தனை விபூதியையும் பிரித்து தலையிலும் நெற்றியிலும் உடம்பிலும் பூசிக்கொண்டார். கிட்டத் தட்ட விபூதி அபிஷேகம் தான் அங்கே நடந்தது.
கீழே சிந்தியதையும் தனது தலையிலிருந்து கொஞ்சம் எடுத்தும் சாஸ்திரியின் முகத்தில், கையில் உடம்பில் எல்லாம் தானே விபூதியைப் பூசினார்.
விபூதி பாக்கெட்டை கொண்டு வந்த பக்தர் தானும் கையை நீட்டி ''எனக்கு சுவாமி '' என்கிறார்.
''சீ போ அப்பால் கழுதை. ஓடு'' என்று அவரை விரட்டினார் சுவாமி.
''எதற்கு?? ஏன்?? இப்படி ஸ்வாமிகள் செய்தார்?
யாருக்கு தெரியும்?

அந்த மனிதர் ஸ்வாமிகள் கசக்கி தூரத்திலே போட்ட அந்த விபூதி பாக்கெட் காகிதத்தை எடுக்க சென்று குனிந்தார்.
''டேய், அதைத் தொடாதே. தொட்டே, உன்னை பாம்பு கடிச்சிடும். பேசாம போயிடு ''
என்ன ஆபத்தோ, எந்த வினையோ, சுவாமி அதை அந்த ஆளிடமிருந்து தான் வாங்கி கொண்டு விட்டாரோ!.
அதற்குள் மறுபடியும் ஸ்வாமிகள் கவனம் நாராயணஸ்வாமி சாஸ்திரிகள் மேல் திரும்பியது.
''சரி, நாராயணா, நீ இனிமே ராமேஸ்வரம் போலாம்'' என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார் ஸ்வாமிகள்.

சாஸ்திரிகள் திருச்சி போனார். அங்கே அன்றிரவு ஒரு யஞ மண்டபத்தில் உபந்நியாசம் யாரோ நடத்திக் கொண்டிருந்ததைக் கேட்டார். அங்கே பழைய அரசாங்க உத்தியோக அதிகாரி K . நடேச அய்யர் என்பவரை அங்கே பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தார். வெகுநாள் கழித்து பார்க்கும் நல்ல நண்பர்.

'' வாங்கோ எங்க அகத்துக்கு '' என்று ஐயர் சாஸ்திரி யை அழைத்து சென்றார். நல்ல நண்பர்களை உபசரிப்பது ஐயர் வழக்கம். உணவு படுக்கை எல்லாம் வசதியாக அமைந்தது.

மறுநாள் கிளம்பும்போது ''இந்தாங்கோ வழிச் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கோ ''.

கையில் சாப்பாடு மூட்டை. பழங்கள். ஒரு வேஷ்டி, துண்டு. நூறு ரூபாய் பணம், வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அளித்தார்.

அடுத்த க்ஷணமே சாஸ்திரிகள் ஸ்வாமிகளை தான் நினைத்தார். என்ன தீர்க்க தரிசனம். அவருக்கு ராமேஸ்வர புண்ய தரிசனம் ஸ்நானம் செய்விக்க அருள் புரிந்த ஸ்வாமியை நாமே கரங்கூப்பி வணங்கு கிறோம். சாஸ்திரிகள் சுவாமியின் கருணைக்கு நன்றிக்கண்ணீர் விடாமலா இருப்பார்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...