Monday, October 18, 2021

pesum deivam

 பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர் J K  SIVAN -


88.   பணிவே செல்வம் 

11.11.1932  அன்று  மஹா பெரியவா  நிகழ்த்திய  ஒரு சொற்பொழிவை  படிக்க நேர்ந்தது.  வழக்கம் போல் அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள அதன் சுருக்கத்தை தருகிறேன்:  

இந்த  உபன்யாசத்தில்  ''வினய சம்பத்'' என்றால்  நமது தமிழில் வள்ளுவர்  கூறிய  ''கனியிருப்ப காய் கவராமல்''   இருப்பது.    அமைதியாக  சுருக்கமாக தெளிவாக  மிருதுவாக பேசுவது, பணிவு.   இது தான் ஒருவனுக்கு பெருமையளிக்கும் செல்வம்.

சௌந்தர்ய லஹரி ஆதி சங்கரர் இயற்றிய அற்புத நூல். சௌந்தர்யம் என்றால் மிதமிஞ்சிய அழகு. லஹரி என்றால்  ப்ரவாஹம் , பொங்கி வழிந்து வேகமாக ஓடுவது. வெள்ளம் என்று வைத்துக் கொள்வோம்.  அம்பாள் அழகு அப்படி  பொங்கி வெள்ளமாக வழிகிறது.

நாம்  ஏதாவது எழுதினால்   கொட்டையாக பேர்  போட்டுக்கொள்வோம்.  பகவானே மனிதனாக காலடியில்  பிறந்து எழுதிய புத்தகம் அல்லவா? நம்மைப்போல் அம்பாளை அவரும் ஸ்தோத்ரம் பண்ணுகிறார். உண்மையில் பகவானுக்கு  அம்பாளை ஸ்தோத்ரம் பண்ண அவசியம் இல்லை அல்லவா? மானிடனாக நம்மைப் போல  காலடியில் பிறந்ததால்  ஸ்தோத்திரம்  பண்ணி, அதைப் பண்ணுவதால் கிடைக்கும்  பலனை அம்பாளுக்கே அர்ப்பணம் பண்ணிவிடுகிறார்.

சீதை கங்கையை கடக்கும்போது  ராமாயணத்தில் வால்மீகி அவள் கங்கா  மாதாவை வேண்டுவது போல் ஒரு ஸ்லோகம் எழுதியிருக்கிறார். ''அம்மா கங்கா மாதா, நாங்கள்  ஜாக்கிரதையாக கங்கையைக் கடந்து திரும்பினவுடன்  உனக்கு  ஆயிரம் குடம் மது நிரப்பி  ஆராதிக்கிறேன் ''  இப்படி ஒரு வேண்டுதல்  மஹா லக்ஷ்மி  அவதாரமான சீதைக்கு அவசியம் இல்லை. இருந்தாலும் நம்மைப் போல் அவளும்  மானுட உருவில் சீதையாக வந்ததால்,  நாம் வேண்டுவது போல் அவளும் வேண்டிக் கொள்கிறாள்.

प्रदीपज्वालाभिर्दिवसकरनीराजनविधिः
सुधासुतेश्चन्द्रोपलजललवैरर्घ्यरचना।
स्वकीयैरम्भोभिः सलिलनिधिसौहित्यकरणं
त्वदीयाभिर्वाग्भिस्तव जननि वाचां स्तुतिरियम्॥

ப்ரதீப ஜ்வாலாபி-ர்திவஸகர-னீராஜனவிதிஃ
ஸுதாஸூதே-ஶ்சன்த்ரோபல-ஜலலவை-ரக்யரசனா |
ஸ்வகீயைரம்போபிஃ ஸலில-னிதி-ஸௌஹித்யகரணம்
த்வதீயாபி-ர்வாக்பி-ஸ்தவ ஜனனி வாசாம் ஸ்துதிரியம் || 100 ||

  சூரியனுக்கு  அவனுடைய  அம்சமான தீபத்தைக் கொண்டே  ஆராதனை காட்டுவது போல்,  பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருக்கே  நைவேத்தியம் பண்ணுவது போல்,   சந்திரனின் ஒளியால் பனிநீர்  பெருகும்  சந்திரகாந்தக்கல்லின் நீரை எடுத்து சந்திரனுக்கே   அர்க்யம்   செய்வது போல்,  வாக்தேவி,  வாக்குக்கு  அதிபதியான உனக்கு உன் க்ருபையால் கிடைத்த   வாக்சக்தியால் வாக் ஜனனி உன்னை  போற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறேன். சர்வ வாக்கின் இருப்பிடமே  உனக்கே இதை அர்ப்பணிக்கிறேன்''  என்கிறார் ஆச்சார்யார் சங்கரர்.

சங்கராந்தி அன்று  எல்லோர் வீட்டிலும் வாசலில் சூரியனுக்கு  நீர் தெளித்து,  ஆசனமிட்டு  கோல போட்டு அர்க்கியம்  பாத்யம்  அளித்து நீராஜநம் பண்ணுவது போல், சந்திர ஒளியால்  சந்திரகாந்தக் கல்லில் ஊறும் ஜலத்தால் சந்திரனுக்கு  அர்க்யம் அளிப்பது போல், நான் உன்னை உன் அருளால் கிடைத்த வாக்கால் ஸ்தோத்ரம் பண்ணியிருக்கிறேன் என்கிறார் ஆதிசங்கரர்.

ராமேஸ்வரத்தில் சமுத்ரராஜனுக்கு  வீட்டிலிருந்து கொஞ்சம் ஜலம் கொண்டு போய் ''ஆபோ ஹிஷ்டா'' மந்திரம் சொல்லி  அர்க்யம் விடுவது போல் ஆதிசங்கரர்  சௌந்தர்ய லஹரி ஸ்தோத்திரங்களை எல்லாம்   இயற்றி அதை அம்பாளுக்கே அர்பணித்துவிட்டார்.  எவ்வளவு பணிவு பாருங்கள். அம்மா கோடிக்கணக்கான உன் வாக்கினால்  உருவாகியவற்றில்,   ஒன்றே ஒன்றை மட்டும்  எடுத்து   உன்னை  ஸ்தோத்ரம் பண்ணி  அளித்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு அருள் பாலிக்க வேண்டும்.'' என்று முடிக்கிறார் ஆதி சங்கரர்.

பகவான் கிருஷ்ணனும்  கீதையில் (5.18)
विद्या विनय सम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनी | शुनि चैव श्वपाके च पंडिता : समदर्शिन :||
வித்யாவினயஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி |
ஶுனி சைவ ஶ்வபாகே ச பண்டிதாஃ ஸமதர்ஶினஃ || 18 ||   என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணன்.

எந்த வித்யையாக இருந்தாலும் அதை கற்கும்போதும் சரி, கற்றபின்னும் சரி வினயமாக  நடந்து கொள்வது தான் பிரயோஜனம்  ''செல்வம்'',   சம்பத்'' தான் வினய சம்பத். ஆச்சார்யாள் எந்த வித ஆணவமும் அகம்பாவமும் இல்லாமல் வினயமாக   சொல்லும் மேலே சொன்ன  சௌந்தர்ய லஹரி 100வது  ஸ்லோகத்தை பாராயணம் பண்ணினாலே போதும்,  சகல வித்யை களும் கற்று  பெறும்  விநய சம்பத் கிடைக்கும்.    ஸ்வாமிக்கு  எல்லா அர்ச்சனை, ஸ்தோத்ரம் பண்ணி  கடைசியில்  முடிவாக   கற்பூர நீராஜனம்  காட்டுகிறோம் அது போல் இந்த ஸ்லோகத்திலேயே  ''நீராஜனம் '' இருக்கிறதே.  இந்த ஸ்லோகம்  எல்லா ஸ்லோகங்களுக்கும்  முடிவானது என்று  அர்த்தமோ?  


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...