Tuesday, October 26, 2021

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர் J K  SIVAN


26.  நித்ய ஸந்யாஸி 

அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு
மகந்தையின் றேலின் றனைமகந்தயே
யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே
யொவுதல் யாவுமென வோர்முமேவுமிந்த 26

ஒன்று நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த உலகில்  பகவான் நம்மைப்  படைத்து அனுப்பும்போது நமக்கு  ஆத்மா என்ற ஒன்றையும்  மனம் என்ற ஒன்றையும் சேர்த்தே உடலோடு அனுப்பியிருக்கிறேன்.  இந்த  மனம்  தேகத்தோடு குலாவி ஜோடி சேர்ந்துகொண்டு  அதனால்  அகம்பாவத்தை உருவாக்கி அது நம்மை அலைக்கழிக்கிறது.  வரும் அத்தனை துன்பங்களும், கஷ்டங்களும், துயரங்களும்  இந்த  அகந்தை எனும் அஹம்பாவத்தாலேயே.  அதை பற்றி தான் ஸ்ரீ ரமணர்  இந்த  செய்யுளில் அற்புதமாக விளக்குகிறார்.

 நமது எல்லா உலகியல் அனுபவங்களுக்கும்  காரணம்  அஹங்காரம் எனும் அகந்தை.  அதால் தான் நாம் அனைத்து காட்சிகளையும் வேறு வேறாக காண்கிறோம்.  அது இல்லாவிட்டால்  எந்த ஒரு காட்சியும் நமக்குத்தோன்ற வழியே இல்லையே. காரணம் இந்த அஹங்காரம் தான் நம் புலன்களை தன்  பால் இழுத்து  நம்மை செயல்படுத்துகிறது. 

''நான்'' என்று தவறாக  எழுகின்ற இந்த அகந்தை எங்கிருந்து உண்டாகிறது என்று  அந்தர்முகமாக ஆராய்ந்தோமானால்  அதுவே சர்வ சங்க பரித்யாக ரூபமான  சன்யாசம் என்கிறார்.     சுருக்கமாக  சொன்னால்,  ஆத்ம ஞானம் ஒன்றே  ஸன்யாஸ லக்ஷணம்.

ஆழ்ந்த உறக்கத்தில் நமக்கு எதுவும் தெரியவில்லை. விழித்த அடுத்த கணமே  ''நான்'' முளைக்கிறது. இது உண்மையான ''நான்'' அல்ல.  அஹங்காரம். ''அகந்தையே  யாவுமாம் ''என்று அதனால் தான் கூறுகிறார்  
கீதையில் ஸந்யாஸ  யோகத்தில் ஒருவர்  கொடுத்து இன்னொருவர் பெற்றுக்கொள்வது சன்யாசம் இல்லை. ஆத்ம  ஞானத்தினால்  அஹங்காரம்  நசித்தால்  அதுவே ஸந்யாஸம். ரமணர் தானும் காஷாயம்  உடுத்தி தாடி, மீசை வைத்துக் கொள்ளவில்லை, மற்றவர்களையும் அப்படி இருக்க சொல்லவில்லை.  ஆத்ம ஞானம் தேடுங்கள் என்று வருவோர் போவோர்களுக்கெல்லாம் உபதேசித்தவர்.இதனால் வெளிமுக  ஸன்யாஸத்தை பகவான் ரமணர் ஒருபோதும் இழிவாகப்  பேசவில்லை. அதது அவரவர் விருப்பம் என்று விட்டுவிட்டார்.

பால் ப்ரண்டன்  ரமணரைப் பார்த்து   ''நான்  எல்லாவற்றையும்  துறந்தால் தானே  முக்தி சுகம் கிடைக்கக் கூடும்''  என்றார்.
''முதலில் துறப்பவனைத் துறக்க வேண்டும் '' என்று  பகவான் பதிலளித்தார். 

வேதாந்த  விசாரம் மேற்கொள்ள  நிறையும்  கேட்பது,  மனதில் நிலை நிறுத்திக் கொள்வது, அதை பற்றி சிந்திப்பது அவசியம். அனைத்து உறவுகள், உலகப் பற்றுகள் விடுபட்டு விட்டால் தான் துறவறம் எனும் ஸந்யாஸம் , இதெல்லாம் மட்டும் செய்து விட்டு மனத்தை அதன் போக்கில் விட்டு விட்டால் அத்தனையும் வீண்.  இருக்கும் இடத்திலேயே தனிமையில்  அந்தர்முகமாக ஆத்மாவை தேடி அதை அறிதல் போதும். அதுவே  உத்தம ஸந்யாஸம் . ஞானாக்னியில்  அகம்பாவம், மனம் தேகம் எல்லா நினைப்பும் சாம்பலாகிவிடும். ஸந்யாஸி என்று ஒருவனைச் சொல்லும்போது  வெளியே கண்ணுக்கு தெரியும்  ஆசாமியில்லை.  அது சரீரத்தின் பெயர் அல்ல. உள்ளே மிளிரும் ஆத்மாவின் பெயர். ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாவோடு ஒன்றிணைகிறான்.  அவனே நித்யஸந்யாஸி. தன்னை அறிந்தவன் அவன் தான்.


 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...