Friday, January 15, 2021

GEETHANJALI


 

கீதாஞ்சலி - தாகூர்                       J K  SIVAN 


 2.  நினைத்தாலே  இனிக்கிறாய்  கண்ணா 

மொழி பெயர்ப்பு என்பது  ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்கு  விஷயத்தை கொண்டு சேர்ப்பது.  வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பதால்  அசலிலிருக்கும்  அற்புத  ருசி  நகலுக்குப்  போய் சேர்வதில்லை.    அசலில்  கிடைக்கும் ஆனந்த அனுபவம்  நகலில் பெறமுடிவதில்லை.   நான் அப்படி  செய்பவன் இல்லை.  நான் படித்து ரசித்ததை  என் மனதில் தோன்றியவாறு உங்களுக்கு கொடுப்பவன். எத்தனையோ  மஹான்களின் ஸ்லோகங்கள், உபநிஷத், வேத சாரங்கள், மஹான்களின் வார்த்தைகள், கருத்துகள் இவ்வாறு தான் உங்களை இதுவரை அடைந்து வருகிறது.   

தாகூரை மொழிபெயர்ப்பது எளிதல்ல. மனப்பக்குவம் வேண்டும். அவரது எண்ணங்கள் எழுத்தாக வரும்போது உருவம் சரியாக தெரியாது. உணர்ச்சி மட்டுமே கொப்புளிக்கும். அது தான் அவருக்கு உலகப்புகழ் தந்தது. நோபல் பரிசும் தந்தது.    மோனத்தின் எல்லை  ஞானம்.    கீதாஞ்சலியை அப்படியே  வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால்  ஜூனூன்   என்று  முன்பெல்லாம் டிவியில் வருமே   அதில் பேசுவது  ஞாபகம் இருக்கிறதா?
 ''நீ   போகிறாய்  அங்கே  அப்போ  என்று   சொன்னார்   மாமா  கேட்டபோது''     என்பது போல்  இருக்கும்.

இனி கீதாஞ்சலி  2வது கவிதைக்கு  செல்வோம்.

2.When thou commandest me to sing it seems that my heart would break with pride;
and  I look to thy face, and tears come to my eyes.
All that is harsh and dissonant in my life melts into one sweet harmony---
and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.
I know thou takest pleasure in my singing.
I know that only as a singer I come before thy presence.
I touch by the edge of the far-spreading wing of my song thy feet
which I could never aspire to reach.
Drunk with the joy of singing I forget myself
 and call thee friend who art my lord

 '' கிருஷ்ணா, நீ பாடு என்று சொல்லி விட்டாய். என்னை பாடகனாக பார்க்கிறாய்.  என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீ பாடு.... என்கிறாய். அப்போதெல்லாம் என் இதயம் எப்படி மகிழ்ச்சியில் பெருத்து,பருத்து வெடிக்கும் போல் ஆகிவிடும்   என்பது உனக்கு தெரியுமா ?
எனக்குப்   பாட வராது.  எதைப்பாடுவது, எப்படிப் பாடுவேன், எவ்வளவு நேரம் ?  பாட முடியாமல் நான் உன்னையே பார்த்துக்கொண்டிருப்பேன். கண்கள் பனித்து திரை விழும்.
உன்னை நினைக்கையில் தான்  என்ன ஒரு பெருமிதம் எனக்கு!.     எங்கோ ஆகாசத்தில்  திசையின்றி மனம் போன போக்கில்  சஞ்சரிப்பதை போல் இருக்கிறதே. கண்களில் ஆனந்த கண்ணீர். முகம் நூறு சூரியனாகி விட்டதே.   என்னுள் இருந்த  கடினங்கள், இளகிவிட்டன.  முன்னுக்குப் பின் முரணாக எண்ணங்கள்  எல்லாம் காணாமல் போய்விட்டது. ஏதோ ஒரு சொல்லத்தெரியாத  இனிய  அனுபவம்....

எத்தனை சொல்லொணா கஷ்டங்கள் ஏமாற்றங்கள் இதுவரை நான்  பார்த்து விட்டேன். எல்லாம் உருகி ஒன்றாய் மனக்கடலில்  கரைந்து கலந்து  அடையாளம்  இன்றி   மறைந்து போய்  விட்டது.

உன்னை  நினைத்து   போற்றி மனதிற்குள் பாடும் போது , நான்   சந்தோஷத்தில் திளைத்த  ஒரு பறவை   பெரிய சிறகடித்து   பெருங் கடலையை தாண்டி பறக்கும் பறவையாகி விட்டேனா?   எவ்வளவு பெரிய கடலையும்  சுலபத்தில் சந்தோஷமாக ரெக்கை அடித்து தாண்டிவிடுவேனே. ஏன் தெரியுமா?
ரகசியத்தை சொல்கிறேன் கேள்.  நான் பாடினாலும் உனக்கு  பிடிக்கிறதே!  உனக்கு என் பாட்டு பிடிக்கிறது என்ற  ஒரு பெருமை எனக்கு கிடைத்துவிட்டதே.!
உனக்கு நான் என்றுமே ஒரு பிடித்த  பெரிய  பாடகனோ ?   நான் எப்போதும் உன் எதிரில் இருக்கும்போது ஒரு பாடகனாகவே தான் தெரிகிறேனா? அப்படி  உன் முன்னே மனம் உருகி பாடித்  தானே  நான்  பழக்கப் பட்டவன்.  உன் மீது, உனக்கு, பாடும்போது  நான்  எங்கோ  ஆகாயவீதியில்  சிறகடித்து பறக்கும் பறவை. என்னுடைய  பாடலின்  சிறகு  பெரிதோ சிறிதோ  எதுவாயினும்  அதன் முனையால்,  நுனியால்  எப்படியாவது உன்  திருப்பாதங்களை வருடுவேன் கண்ணா.    ஆஹா,  உன் திருப்பாதங்களை அவ்வளவு எளிதில் எவராலாவது தொடமுடியுமா?

உனக்கு  பிடித்த பாடகன் நான் ,   நீ விரும்புவதை  என்னை மறந்து நான்  பாடுகிறேன் என்ற பெருமை, கர்வத்தோடு கூடிய  அந்த  ஆனந்தம் தலைக்கேறி  கூத்தாடுகிறேன், பாடுகிறேன்.  கிருஷ்ணா,  நீ   என் ஆருயிர்த் தோழன்  என்று  மகிழ்ந்து,  நீ தந்த  அந்த  உரிமையோடு உன்னை  நினைத்தாலே   நீ  இனிக்கிறாய் கிருஷ்ணா  ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...