Friday, January 29, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்   -       J K   SIVAN   


''இரு மஹாத்மாக்கள் சந்திப்பு''
        
ஜனவரி 30.   இதே நாளில்  73 வருஷங்களுக்கு முன்பு  இந்தியாவே அதிர்ச்சியில் ஆழ்ந்த மாபெரும்  இழப்பு நேர்ந்தது. மஹாத்மா  காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நினைவாகவே நடந்து கொண்டிருந்தேன்.  ஒரு குரல் கேட்டது.
'ஹாப்பி நியூ இயர் சார்'. 
'ஆஹா   உங்களுக்கும்  அதே''     என்  வாய் பதிலளித்ததே தவிர என் அருகே வந்து,  இப்படி,   ஒரு மாசம் லேட்டாக  வாழ்த்திய  ஆசாமி யார் என்று மனதுக்குள் ஒரு போராட்டம்.  எங்கே பார்த்திருக்கிறேன்?. பழகிய முகமாக இல்லையே?  ஆள் மாறாட்டமாக  இந்த வாழ்த்தா?  எங்கே, எப்போது, ...... யார்  இவர்?.....
என்னோடு  நங்கநல்லூர்  பார்க்கில்  அவரும்   கூடவே  நடந்தார். 

' தினமும் இந்த பார்க்குக்கு வருவீர்களா''  என்று பேச்சு கொடுத்தார் '
'ஆமாம்'
'உங்களோடு  கோவில்களுக்கு  ஒரு முறை  என் சகோதரியோடு வந்திருந்தேன்''
''ஓ அப்படியா.  எங்கோ  பார்த்தமாதிரி இருக்கிறதே என்று யோசித்தேன்.
''நான்  தான்  சார்  கபாலீஸ்வரன் ... மறந்துட்டீளா .  மதுரை...... என் தங்கை தான்  டீச்சர்  கமலா''
''ஓ    இப்போ  புரியறது...அடடா  கமலாவின் அண்ணா  அல்லவா நீங்கள்  அடையாளம் தெரியாமல் தடுமாறினேன்''
''இப்போ தாடி மீசை.  அதால் உங்களுக்கு  உடனே தெரியவில்லை அல்லவா?
'' அதனால் ஒருவேளை  இருக்கலாம்.''
''நான்  உங்களை தூரத்திலிருந்தே  அடையாளம் கண்டுகொண்டேன்.   நீங்கள் மாறவே இல்லை சார்.  நாம்  இதே  30ம் தேதி  ஜனவரி  2014 லே  கேரளா கோவில்கள்  சென்று பார்த்தோம்''
''ஆமாம்...  என் மனதிற்குள்  அது ஆறு ஏழு வருஷங்களுக்கு முன்னால் என்பது தெரிந்தது'' நான் ஏற்பாடு செய் து  16 பேரோடு  சென்ற   எத்தனையோ  யாத்திரைகள், புனித பயணங்களில்  அது  ஒன்று. 

''நெல்லிச்சேரியிலே  மத்தியானம்  சாப்பிட்டுட்டு  ரெஸ்ட்  எடுக்கும்போது  எல்லோருக்கும்   மஹாத்மா காந்தி    அங்கே  மஹா பெரிய வாளை சந்தித்தது பற்றி சொன்னீர்கள்.''

''ஆஹா,    பரவாயில்லையே  இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறீர்களே''

''சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாதவை அல்லவா. நீங்கள் சொன்னது கதை மாதிரி இருந்தது''
''ஓ '' என்றேன். என் மனத்தில்  அந்த சம்பவம் பற்றிய நினைப்பு  மீண்டும் திரையில் ஓடியதால்  உங்களுக்கும்  அந்த விஷயம் சொல்கிறேன். 
 ++++
 ஆயிற்று  கிட்டத்தட்ட  93-94  வருஷங்கள்.  நாள் எப்படி பறக்கிறது பார்த்தீர்களா?

அப்போது நமது நாடெங்கும்  ஒரு  புத்துணர்ச்சி.  இந்தியா சுதந்திரம் பெறவேண்டும். எப்பாடுபட்டாவது  அதை  அடைந்தே தீருவோம். அமைதி வழி, அஹிம்சா வழியில்  மட்டுமே  என்ற  காந்திஜியின்  பின்னால் நாடு முழுதும்  தொண்டர்கள்.   டிவி,  போட்டோ கவரேஜ்,  வீடியோ,  மீடியா, பேனர்,  கட்  அவுட்  என்று  எதுவுமே   தெரியாத  காலம்.   காந்தி நாடு முழுதும்  ரயிலில் மூணாம்  கிளாஸில்  தான் பிரயாணித்தார்.
 
தென்னிந்தியாவுக்கு  1927 பிற்பகுதியில் காந்தி   வந்தார்.  யாரோ  சொல்லி  கேள்விப்பட்டு  வெகு ஆர்வமுடன் '' இந்த  பிரதேசத்தில் காஞ்சிபுரம்  மட  சங்கராச்சர்யார்  வந்திருக்கிறார்  என்கிறார்களே, அவரை நான் 
 பார்க்கவேண்டும்''   என்ற உந்துதல்  காந்திக்கு  ஏற்பட்டது. விசாரித்ததில்  அப்போது  விஜய  யாத்ரையில் காஞ்சி  மஹா பெரியவா  கேரளாவில்  நெல்லிச்செரி என்கிற  ஊரில்  தங்கியிருக்கிறார்  என்று அறிந்தார்.
 
காந்திஜி  பாலக் காட்டில் நெல்லிச்செரி சென்றநாள்  15.10.1927.
''இங்கே  காஞ்சி  பரமாச்சார்யர் எங்கே  தங்கியிருக்கிறார்?''
''பாபுஜி  அவர் அதோ  அந்த  மாட்டுத்  தொழுவத்தில் தான்  வாசம் பண்ணுகிறார்''
''மாட்டுத்  தொழுவத்திலா?  ஜகத்  குருவா?''  
''அவர்  எங்கும்  இது  போன்ற  இடத்தில்  தான்  தங்குகிற சந்நியாசி''

பசுமாட்டுத்  தொழுவத்தில்  வாசலில்  பெரிய  கும்பல் சேர்ந்துவிட்டது.  
வாசலில்  மஹாத்மா  காந்தி வந்திருக்கிறார் என்ற விஷயம்  உள்ளே  இருந்த பெரியவாளுக்கு சென்றதும் வாசல் வந்து  நின்ற  மகாத்மாவை பரமாச்சாரியார்  வெளியே வந்து வரவேற்றார்.   காந்திக்கு  இது  ஒரு  புது அனுபவம்.  காவி   பருத்தி  ஆடையில்  ஆதி சங்கரரின் வாரிசாக,   மாலை  வெயிலில்  முகம்  பொன்னிறமாக  ஜொலிக்கபுன்னகை  அணிந்து நின்ற  சிறிய உருவம்  காந்தியை ஒரு  கலக்கு கலக்கியது.  உருகிப்போய் விட்டார்.  இரு கரங்களும்   தானாகவே உயர்ந்தன.  சேர்ந்தன.அவற்றின் பக்தி த்வனி அலாதியாக  வெளிப்பட்டது,  பேச்சின்றி.  பேச்சுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆனந்தானுபவம்  காந்திக்கு .    
 
பரமாசார்யருக்கோ,   இந்த  நாடு  செய்த புண்யத்தால்  தோன்றி,  வெகு எளிமையின் சின்னமாக, சத்ய ஸ்வரூ பமாக நாட்டின் சுதந்திர  விழிப்பின்  தலைவன்,  இந்த மாபெரும்  தேசத்தில் ஒரு  ஏழை விவசாயியின்  கோலத்தைக்  கொண்டவரைச் சந்தித்ததில் மட்டற்ற  மகிழ்ச்சி.  
 
மகாத்மாவுக்கோ தெய்வீகத்தின், தெய்வத்தின், வேதகால உருவாக காட்சியளிக்கும் ஒரு  பரமாச்சார்யரை  சந்தித்ததில் ஆனந்தம்.  

''தாங்கள் அமர வேண்டும்'' என்றார்  மஹா பெரியவா ஆங்கிலத்தில்.

தனது மதிப்பையும்  மரியாதையும்  வணக்கத்தையும் காந்திஜி   ஆச்சர்யருக்கு  தலை குனிந்து  மனப்பூர்வமாக  அளித்தார். அவரும் பெற்றுக்கொண்டார். அவர் அருகிலேயே காந்திஜி தரையில் அமர்ந்தார்.  சுற்றியிருந்தோர் அமைதியாக  தூரத்தில்   வெளியில்  நின்றுகொண்டு  இந்த அற்புதத்தை கண்ணாரக்  கண்டு ஆனந்தித்தனர்.
   
நிசப்தத்தில்  பரிபூர்ண  அமைதியில் இரு  உயர்ந்த  உள்ளங்கள் கலந்தன.  ஒன்றின.  சில நிமிஷ  ஆன்ம விசாரத்திற்குப்  பிறகு, சம்பாஷணை   துவங்கியது.

''ஸம்ஸ்க்ரிதத்திலேயே  பேசுவோமா?'' என்றார்  மஹா பெரியவா .

''நீங்கள்  ஸம்ஸ்க்ரிதத்திலேயே   பேசுங்கள்.  நான்  புரிந்துகொள்ள முடியும்.  நான்  ஹிந்தியில்  பதில் சொல்கிறேனே.'' என்றார்  தேச பிதா.

''ஆஹா,  அப்படியே  பேசுவோமே. எனக்கும்  அந்த பாஷையில்  நீங்கள்  பேசுவது  புரிந்து கொள்ள முடியும்.''

மூன்றாம்  மனிதர்  ஒருவர்  இல்லாமல்  இரு மனித  ரூப  தெய்வங்களும்  ஒரு மணி நேரத்துக்கும்  மேலாக  சம்பாஷித்தனர்.  இன்று  வரை  என்ன பேசினார்கள்  இருவரும்  என்று  ஒருவருக்கும்  தெரியாது.

காந்திஜியோடு  உடன்  வந்திருந்த  ராஜாஜி  வெளியே  மற்றவர்களோடு சேர்ந்து   நின்று கொண்டிருந்தார்.   மாலை நேரம்  6 மணியாகப் போகிறது.  காந்திஜி  இரவு  உணவு  அருந்தும்  நேரம்  அது.  6 மணிக்குப்  பின்  அவர்  எந்த  உணவும்  அருந்த மாட்டாரே.   ராஜாஜிக்கு  கவலை.  6  மணிக்கு சில  நிமிஷங்கள்  முன்பு  மாட்டுத்  தொழுவத்திற்குள்  நுழைந்தார்.  இருவரையும்  வணங்கிவிட்டு  

''பாபுஜி  நீங்கள்  உணவு  அருந்தும்  நேரம்''  என்று  நினைவூட்டினார்.
கைகளை  உயர்த்தி,  ''நிறுத்து''    என்ற  சைகையில்  காந்திஜி  ராஜாஜியிடம்  ''இந்த  மகானோடு  நான்  அனுபவித்த  சம்பாஷணையே   எனது  இன்றைய  உணவு.   உள்ளம்  வயிறு  இரண்டும் நிரம்பியிருக்கிறதே''  என்றார்,.

''சுவாமிஜி  நான்  விடைபெறுகிறேன்  நன்றி''
''எனக்கும்  ரொம்ப  சந்தோஷம்.  இந்தாருங்கள்'' .  ஒரு  பொன்னிற  ஆரஞ்சு பழத்தை   நீட்டினார்  மஹா பெரியவா..

''எனக்கு  ஆரஞ்சு  ரொம்ப  பிடிக்கும்.   மீண்டும் நன்றி''  என்று  புன்னகையோடு  பெற்றுக்கொண்டு சென்றார்  காந்திஜி.
 
அன்று  கோயம்பத்தூரில் ஒரு கூட்டம். காந்திஜி-மஹா  பெரியவா  என்ன  பேசினார்கள்  என்று  நிறைய பேர்  ஆவலாக  கேட்டதற்கு  தேச பிதா  கூட்டத்தில்  சொன்னது:   '' இது உண்மையிலேயே  எனக்கு  ஆன்ம திருப்தி அளித்த  ஒரு  சந்திப்பு.  எனது எத்தனையோ  கேள்விகளுக்கு ஜகத் குருவிடமிருந்து  விடை கிடைத்தது''
 
பல வருஷங்களுக்கு  அப்புறம், 1968ல் நவம்பர்  மாதம்  ஒரு  விழாவில்  மஹா  பெரியவாளிடம்  
சிலர்  நீங்கள் மகாத்மாவோடு  கேரளாவில் நெல்லிச்சேரியில்  சந்தித்து  பேசியது  பற்றி  சொல்லுங்கள்  என்று  கேட்டார்கள். 

'' காந்திஜி  பாலக்காடு  வருவதுற்கு  சில  நாட்கள்  முன்பு கொல்லப்பட்ட ஒரு  ஆர்ய சமாஜ்  துறவி  சுவாமி  ஸ்ரத்தானந்தாவைப்  பற்றி பேச்சு வந்தது. அப்போது காந்திஜி   இத்தகைய சம்பவங்கள்  எதிர்காலத்திலும்  நேரிடலாம். கொலையாளிகள்  மீது  எனக்கு  எக்காலத்திலும்  வெறுப்போ,கோபமோ  பகை உணர்ச்சியோ தோன்றாமல் அவர்களை  அன்போடு  அணைக்க எண்ணம்  உருவாக வேண்டும் என்பது என் வேண்டுதல் சுவாமி. இதைபெற  நான்  முயற்சிப்பேன் ''  என்று  கூறினார்.  அவ்வாறே தான்  1948 ஜனவரி 30 அன்று நடந்தது''

 பரமாச்சார்யர்  தொடர்ந்தார்.  ''இந்த 'பூலோகத்தில்  இப்படி ஒரு  அபூர்வமான பகைவனுக்கும்  அருள்வதற்கு  நெஞ்சம்  வேண்டும்'' என்று பாரதியார் வாக்குக்கு  உதாரணமாக திகழ்ந்தவர்  மஹாத்மா காந்தி '' என்று  தோன்றியது.  சத்தியத்தை கடைப்பிடித்தவர்  ஒருவரை  சந்திப்பது அரிது '' 
+++
அப்புறம்  நானும் கபாலீஸ்வரனும்  பார்க்கில்  எதைப்பற்றி  என்னவெல்லாம் பேசினோம் என்பதா இங்கு முக்கியம்?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...