Friday, January 15, 2021

SWAMI VIVEKANANDA

 


ஒரு அக்னிக் குஞ்சு பிறந்தது - J .K.SIVAN மூன்று நாள் முன்பு , ஜனவரி 12 , ஒரு மகத்தான நாள். இந்த நாளில் தான் 1863ல் எத்தனையோ குழந்தைகள் பிறந்தன. அவ்வளவுமா நினைவில் இருக்கிறது? எல்லாமுமே போய் சேர்ந்து மறுபடி எங்கோ எதுவாகவோ பிறந்து மீண்டும் இறந்து, மறுபடியும் எங்கோ எதுவாகவோ பிறந்திருக்கலாம். ஒரு குழந்தை முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது. கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா-புவனேஸ்வரிக்கு பிறந்து புவனத் தையே சுண்டி தன் பக்கம் இழுக்கும் மஹேஸ்வரனாக பிறந்த குழந்தை அல்லவா அது!. நரர்களுக்குள் இந்திரனாக ஜொலிப்பான் என்று தெரிந்து தான் ''நரேந்திரன்'' என்று பெயரிட்டார்களோ? நரேந்திரன் எல்லாரையும் போல வளர்ந்தான், இசை, வாத்தியங்கள் வாசிப்பது, தியானம் எல்லாம் பழகிக் கொண்டான். சிறந்த ஞாபக சக்தி. எதையும் அலசி ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று சிந்தனை செய்பவன். பள்ளிப்படிப்பு முடிந்தது. கல்கத்தா மாநிலக் கல்லூரி (Presidency College) மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் கற்றான். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு பற்றி ஆர்வமாக தெரிந்துகொண்டான். B.A . பட்டதாரி ஆனான். மனதில் இறைவனைப் பற்றிய உண்மை களைப் பற்றி பல கேள்விகள், சந்தேகங்கள் கிளம்பியது. இறை வழிபாடு ஏன்? அதில் எதற்கு இத்தனை வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள், முரண்பாடு? நிறையபேரை சந்தித்து விளக்கம் கேட்டும் திருப்திகாரமான பதில் கிடைக்கவில்லை. அப்போது பிரபலமாக இருந்த பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தான்.
''கடவுள் இருக்கிறாரா?, இருந்தால் யாராவது பார்த்ததுண்டா? பேசியதுண்டா?
''ஓ பார்த்தேனே, பேசினேனே என்று நீ சொன்னால் நான் காதில் பூ சுற்றிக்கொண்டு இருப்பவன் இல்லை. அது போதாது எனக்கு. நானும் அப்படி பார்த்து பேசினால் தான் நம்புவேன். '' என்றான். ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அவனை திருப்திப்படுத்த முடியவில்லை.. அவனது கல்லூரி ஆசிரியர் ராமச்சந்திரா , பேராசிரியர் ஹேஸ்டி ,இருவருமே அவனை ஒருவரிடம் அனுப்பினார்கள்.
''நரேந்திரா, ஒரு எளிய மனிதர் அருமையாக நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விடை வைத்திருக்கிறார். புரியும்படியாக விளக்குகிறார் அவரிடம் போ '' '' யார் அவர்? 'யாரோ ஒரு ராமக்ரிஷ்ணராம். தக்ஷிணேஸ்வரத்தில் ஒரு கோயில் பூசாரி'' ''அவசியம் அவர் யார் என்று சென்று பார்க்கிறேன்'' என்றான் நரேந்திரன். அவரை சென்று பார்த்தான் நரேந்திரன். ''ஹுஹும் இந்த ஆள் சரியில்லை.யார் இவர்?. எங்கோ எதையோ யோசித்தபடி எதுவும் அதிகம் பேசாமல், எதையும் விளக்கமாக தெரியாத மனிதராக இருப்பார் போல் இருக்கிறதே இந்த ஆள் ''
ஆனால் அவனைப் பார்த்த ராமகிருஷ்ணர் என்ன சொன்னார் தெரியுமா ? ''எனக்கு ஏனோ சொல்ல முடியாத ஒரு பரபரப்பு. எதிர்பார்த்திருந்த ஒன்று கிடைத்தது போல் மகிழ்ச்சி. அன்றிலிருந்து ஆறு மாத காலம் கழித்து அவனை மீண்டும் பார்க்கும் வரை மனம் பிரார்த்தனையில். அவனைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கிறது '' என்கிறார் பரமஹம்சர். . ''அவனை முதலில் எப்படி பார்த்தேன்?'' என்று நினைவு கூறுகிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்: ''கங்கையைப் பார்த்தபடி உள்ள மேற்கு வாசல் வழியாக தான் உள்ளே நுழைந்தான். தனது ஆடை அலங்காரம் பற்றி கவன மோ லட்சியமோ இல்லாதவன் போல் காணப்பட்டான். சீவாத தலை முடி. அழுக்கு ஆடை. வெளியுலகம் பற்றிய எண்ணம் இல்லை. அவன் கண்களைப் பார்த்தேன். அவை உள்நோக்கி சிந்தனையில் ஈடுபடுபவை என்று புரிந்தது. இப்படி ஒருவன் கல்கத்தாவில் உண்டா? என்று வியக்க வைத்தது. ''வா அப்பா . வா வந்து இந்த பாய் மீது உட்கார்.'' எதிரில் அமர்ந்தான். ''பாடத்தெரியுமா உனக்கு . தெரிந்தால் ஒரு பாட்டு பாடேன்'' '' ஓ பாடுவேனே''
பாடினான். அருமையான வெண்கலக்குரல். அவன் பாடின வங்காள மொழி பாடலின் அர்த்தம்: ''ஹே மனமே, உள்ளே செல், அதுவே உன் இருப்பிடம். வெளியே சுற்றாதே. இந்த ஐம்புலன்கள் பஞ்சபூதங்கள் வெறும் வெளிப்பாடு. இருப்பது போல் தோன்றும் இல்லாதவை, அந்நியமானவை. நீ யார் என்று ஏன் மறந் தாய்?''
''எனக்கு என்னவோ பண்ணியது. அவன் பாடி முடித்ததும் உணர்ச்சி மேலிட்டு அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். கண்களில் நீர் வடிய அவனை காளி கோவில் வடக்கு தாழ்வாரம் அழைத்து சென்றேன். ''ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்? மனதில் இரக்கமில்லாமல் என்னை காக்க வைத்துவிட்டாயே ! உலக விஷயங்களை மற்றவர் பேச கேட்டு காது புளித்துவிட்டது. என்னைப் புரிந்து கொள்ளும் ஒருவனுக்காக என் உள்ளத்தை கொட்டித் தீர்க்க, என்னைப் புரிந்து கொள்ள முடிந்த உன்னைத் தான் தேடிக்கொண்டிருந்தேன் '' ராமகிருஷ்ணர் தழுதழுத்த குரலில் சொன்னார். இரு கைகளை கூப்பி நரேந்திரன் 'ப்ரபோ, நீங்கள் தான் வேதகால ரிஷி நர நாராயணன். மனித குலத் துயர் நீக்க அவதரித்தவர்.'' என்றான். திரும்பி வந்து இருவரும் அறையில் அமர்ந்தபோது என்னை உற்று பார்த்தவன் .......ஒரு கேள்வி கேட்டான். .
''சுவாமி நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?'' ''ஆஹா பேஷாக. உன்னை இப்போது எப்படி பார்க்கிறேனோ அப்படி. யாருமே பகவானை பார்க்கலாம், பேசலாம். ஆனால் யாருக்கு அக்கறை? . ஏதோ அவரவர் குடும்ப கவலை, சுயநல தேவைகள் இது பற்றி தானே முறையிட்டு விட்டு போகிறார்கள். உண்மையில் பகவானைத் தேடுபவர் யார்? அவனை உருகி மனமார தேடினால் உடனே கிடைப்பானே'' அதற்கு பிறகு நடந்ததெல்லாம் உலகம் அறியும்.
சுவாமி விவேகானந்தர் நமக்கு கிடைத்தார்.உலகம் பெரும் பயனுற்றது. அந்த அறிவுக்கனல் பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் ஒரு நமஸ்காரம் பண்ணவேண்டாமா? மூன்று நாள் லேட்டானாலும் பரவாயில்லை. நினைக்க வேண்டும். அது தான் முக்கியம் . எந்த பிரதிபலனும் காசும் நம்மிடமிருந்து எதிர்பார்க்காத ஒரு பொது நல நோக்கம் கொண்ட ஞானி அவரைப்போல் இன்னொருவர் பிறக்க, அல்லது அவரே வந்து மீண்டும் பிறக்க காத்திருக்கிறேன் உங்களோடு சேர்ந்து. வணங்குவோம். அவர் வழி நடப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...