Friday, January 8, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்       J K SIVAN  

                                       
        ''மறக்கமுடியாத அந்த துவாதசி..''...

அதற்குள்  27 வருஷமா ஆகிவிட்டது.   ஒரு  அழியாத வடுவை  ஆழமாக  நெஞ்சுக்குள் விதைத்து இன்று  அவ்வளவு வருஷங்களா ஓடிவிட்டது. நாள் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறது.. 
அடாடா,  கண்களில்  நீர் வற்றாத ஒரு  நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது  1994 ஜனவரி 8  அன்று. அது தான்  27 வருஷம் முன்பு....  ஏன்  என்ன காரணம்?  காஞ்சியில்  8.1.1994 அன்று   நடந்தது தான் இன்னும்  மறக்கமுடியாத....கண்ணீர் வற்றாமல் வடிய  காரணம்.

வழக்கமாக  ஏகாதசி உபவாசம் முதல் நாள். அருகில் இருந்த ஒருவர்  சொல்கிறார்:

''பெரியவா கொஞ்சம் கஞ்சியாவது  பருகணும் .  ராத்திரி பூரா  உடம்பிலே ட்ரிப்ஸ்  DRIPS ஏற்றி இருக்கு.''

 ''அவருக்கு கொஞ்சநாளாகவே  தேஹ நிலை  சரியில்லை.  அருகிலேயே  தொண்டர்கள்  படுத்திருந்தார்கள்.  கையில் ட்ரிப்ஸ் ஏற்றியதால்,  நான் அவர்  கையை பிடித்துக்கொண்டே  இருந்தேன். டாக்டர்கள் ஸ்ரீதரும்  பாஸ்கரும் அருகிலேயே இருந்தார்கள்.  

அடுத்தநாள் துவாதசி.   அனுஷம். ஜென்ம நக்ஷத்ரம் வேறு.   காலை 3 மணிக்கே  முழிப்பு கொடுத்து விட்டது.  முதல் நாள் நடந்தது எதுவுமே நடக்காதது போல்  அவர்  சுறுசுறுப்பாக இருந்தார். குரல் ஈனஸ்வரமாக இல்லை. உரத்த குரல் வழக்கம்போல.  எல்லோரையும்  பேர் சொல்லி அழைக்க   நினைவு ஆற்றல் மங்கவில்லை.

''பசிக்கிறதுடா...''

கொஞ்சம் கஞ்சி  உள்ளே சென்றது.  பூஜ்ய ஜெயேந்திரர் பெங்களூர்  ஹரியோடு வந்தார்  நமஸ்கரித்தார்.  
''பூஜை பண்ணியாச்சா?''
''இனிமே தான் ஆரம்பிக்கப்போறேன்''  என்கிறார் ஜெயேந்திரர்.
''பூஜையை விடப்படாது''

பெங்களுர்  ஹரி கையில் வெள்ளிப்  பாதுகைகள்.  அதோடு  மஹா பெரியவாளின் அப்பா அம்மா படம்.  பாதுகைகளில் பாதங்களை நுழைத்தார்.  பெரியவாளால்  படத்தில் இருக்கும் பெற்றோரை அடையாளம் காண இயலவில்லை..  படிக்கும் கண்ணாடியை கழற்றி விட்டு வழக்கமான பார்வை கண்ணாடியை அணிவித்தார்கள். பெற்றோர் படத்தை கண்ணருகே வைத்து தரிசித்தார். தன்னோடு அணைத்துக் கொண்டார்.

''பாதுகை  எங்கே''
''பெரியவா பாதங்களிலேயே இருக்கு ''
கால்விரல்களால்  பாதுகையை கெட்டியாக இறுக்கிக்கொண்டார்.  ஹரி நமஸ்கரித்து  விடை பெறுகிறார்.
பெரியவா தனது கைகளால்  பாதுகையை கழற்றி  அவர் கைகளில் அளிக்கிறார். பெற்றோர் போட்டோவையும் அவரிடமே திரும்ப தருகிறார்.  அவை  இரண்டுமே  பெரியவா ஜென்ம ஸ்தலமாகிய   ஈச்சங்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே  பூஜா கிரகத்தில்  ஸ்தாபிதம் செய்யப்பட்டது பின்னால் நடந்த விஷயம்.

ஜெயேந்திரர் பூஜை முடித்து திரும்பினார் . பெரியவாவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு அவரும்  விஜயேந்திரரும்  ஹிந்து மிஷன்  மீட்டிங்குக்கு  புறப்பட்டார்கள். 

ஸ்னானம் முடிந்தது.  சாய்வு நாற்காலியில் அமர்ந்து  தரிசனம் தந்தார்.   அனுஷம் என்பதால் பெரிய கூட்டம். பிரதோஷம் மாமா, அவர் மனைவி, மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்  அனுஷம் பிரசாதம் அளித்தனர். 
தீர்த்தத்தை தனது சிரசில்   ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டார். விபூதியை  நெற்றியில் அணிந்து கொண்டார் . 

'' சங்கர ஜெயந்தி ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது?''

''பெரியவா அனுகிரஹத்திலே  எல்லாம் நன்னா நடக்கிறது'' --  மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்.

இந்த செய்தியை சொல்பவர்  துவாதசி  ஆகாரத்தை பெரியவாளுக்கு   ஸ்ரீகண்டனோடு சேர்ந்து  தயார் செய்தவர்: 

''பெரியவா திருப்தியாக  பிக்ஷை   (பாயசம், பாதம் ஹல்வா,  புல்லரிசி  வாழை இட்லி)எடுத்துக் கொண்டு மற்றவர்களை எல்லாம் பார்த்து
''எல்லோரும் நன்றாக  சாப்பீட்டீர்களா?'' என வினவுகிறார். கழிவறைக்கு செல்ல வேண்டும் என்கிறார்.   
 வைத்தா, அரக்கோணம் பாலு இருவரும் கால்களை பிடித்துக்கொள்ள, பாலு தோளை  தாங்கியவாறு தூக்கி செல்கிறார்கள்.  உட்கார வைக்கும்போது கால்களை உதறுகிறார்.
மூன்றுபேரும் விழுகிறார்கள்.  

மஹா பெரியவா இனி இல்லை.

''பெரியவாளை படுக்க வையுங்கோ '' டாக்டர் பாஸ்கர்  அவசரப்படுகிறார்.  மற்ற டாக்டர்களும் ஓடி வந்தனர்.  பரிசோதித்து கண்களில் ஏக்கத்தோடு  

'' மஹா பெரியவா சித்தி அடைஞ்சுட்டா'' என  ஊர்ஜிதம் செய்தார்கள்.   பரமேஸ்வரன் விடை பெற்று சென்றுவிட்டார். சேதி பறந்தது. உலகத்தில் அவரை அறிந்த  தெரிந்த பக்தர்கள்  அனை வரும்   வினாடிகளில் அதை கேட்டு அதிர்ந்தனர் .  இரு பெரியவர்களும் திரும்பி காஞ்சி வந்து  பாதங்களில் விழுந்து  துக்கம் தாளாமல் கதறினார்கள்.

ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பட்டு சாஸ்திரிகளிடம்  ட்ரைவர்   
''ஐயா  உங்களுக்கு விஷயம் தெரியுமா?''
''என்ன விஷயம்  பா?'' 
''பெரியவா போய்ட்டா'' ''

 சொன்ன   டிரைவருக்கு  கன்னத்தில்  பளார் என்று ஒரு அறை .
 
''இப்போ தானேடா பார்த்துட்டு வரேன். அப்படி அபசகுனமா சொல்லாதே''  

ட்ரைவர் சொன்னது உண்மைதான்   என அறிந்ததும்   குடும்பத்தோடு காஞ்சிக்கு மீண்டும்  ஓட்டம்.

காஞ்சியில்  கடைசி தரிசனத்துக்கு   ஜன வெள்ளம். முஸ்லிம்கள் நமாஸ் ஓத, கிறித்தவர்கள்  மலர் வளையம் கொண்டுவந்தார்கள்.  எல்லோராலும் விரும்பப்பட்ட,  மதிக்கப்பட்ட மஹாத்மா அல்லவா?  பிரதோஷ காலம், அனுஷம், துவாதசி, கிருஷ்ண பக்ஷம் உத்தராயண புண்யகாலம்.  சந்யாசிக்கான அந்திம கிரியைகள் நடந்தது, சமாதி , அதிஷ்டானம் எழும்பியது  எல்லாம் தான் நாம் அப்புறம் அறிந்தோமே.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...