Wednesday, January 20, 2021

 


நடராஜ பத்து   3ம்  பாடல்   J K  SIVAN 


       3    சிந்தையறிந்து வா சிதம்பரேசா.


சிறுமணவை  முருகேச முதலியார்  தில்லை நடராஜனை மனதில் சிக்கென பிடித்து அவன் மீது பாசத்தோடு பாடிய  அற்புத 3வது  நடராஜ பத்து இன்று  ரசிப்போம்..

ஆதி சிவன் தந்தை தாய் அற்றவன். கல் தோன்றி மண் தோன்றாத காலத்துக்கும் முந்திய பழமனாதி . அருவமானவன் . உருவமாக லிங்கமாக முதல் முதலாக உருவானவன். அடி முடி காணாத ஸ்தாணு எனும்  ஒளிப் பிழம்பானவன். தோன்றாத்துணை,  தான் தோன்றி ( ஸ்வயம்பு). முழு முதல் கடவுள் என பக்தர்களால் வழிபடப் படுபவன்.

சிவன் பஞ்சபூதங்களாகவும் நவகிரஹங்களாகவும் கோயில் கொண்டவன்.

''அப்படிப்பட்ட சிவனே,    ஒரு கற்பனை என் நெஞ்சில் உருவானதைச்  சொல்கிறேன் கேள்.

இந்த பூமி பறந்து விரிந்து இருக்கிற ஒரு கடல் என கொள்வோமா? அதில்  ஓயாது மோதும்  அலைகளோ  எண்ணற்றவை. அவை தான் மனிதர்களும் சகல ஜீவன்களும்.  நீர்  அலைமேல் குமிழி தான் வாழ்க்கை. இது கனவு போன்று சில வினாடிகளிலும்  நிஜம் போல்  பல சமயம்  தோன்றியும்  மறையக்கூடியது. இதை  உசுப்பி விடும்  காற்று மாதிரி தான்  நம்மை ஆட்டி வைக்கும்  மூவாசைகள். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை.  அப்பப்பா ஒவ்வொருவனையும்   என்னமாக அலைக்கழிக்க வைக்கிறது. அதில் சிக்கி அதை சுகமென நம்பி தேடி இரவும் பகலும் அலையும்  அநேகரில் நானும் ஒருவன். 

கிழவி  ஒளவை சொன்னது ஞாபகம் இருக்கிறதா? இந்த வயிறு எவ்வளவு தின்றாலும் பசி அடங்காதது. எவ்வளவு தான் நிரப்பினாலும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்கும். தூங்கும். அவ்வளவு தான் சுகம். ஜீரணமானவுடன் பிறகு ''ஓடு இன்னும் ஏதாவது கொண்டுவா பசிக்கிறது'' என விரட்டும்.  இப்படிப்பட்ட வாழ்க்கையை எத்தனை வருஷங்கள் வாழ்ந்து விட்டேன். உண்பது உறங்குவது ஊர் வம்பு  மறுபடியும் அதே. என்றே பொழுதைப் போக்குகிறேன்.  இதனால் உண்மையில் என்ன பயன் அடைந்தேன்? ஒன்றுமில்லை.

இந்த உலக வாழ்க்கையில், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக திரும்ப திரும்ப அர்த்தமில்லாத வாழ்க்கையை என்னைப்போல  பலரும்  வாழ்கிறோம் . பந்தம் பாசம், உறவு, பகை, கோபம் தாபம் என்று வாடுகிறேனே,   தாய், சேய் , அப்பன், பிள்ளை, மாமன் மாமி, என்ன உறவெல்லாம் சொல்லி மாய வாழ்க்கை வாழுகின்ற  என்னைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாய். உன்னையே  கதி என்று வந்து அடைந்துவிட்டேனே , அப்படியும்   நீ செய்வது உனக்கே அழகா சொல்லப்பா, சிதம்பரேசா, தில்லை வாழ் ஆடலரசனே ! வா வந்து என்னை சிக்கலிலிருந்து மீட்டு அருள்வாய் என்கிறார் முருகேச முதலியார்.  அருமையான எளிமையாக அர்த்தம் புரியும் இந்த மூன்றாவது பாடல் இது தான்:  கடைசி வரி அதி அற்புதம்.

''கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''


 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...