Tuesday, January 12, 2021

BHARATHIYAR

 

 வேலைக்கு  ஆள் கிடைத்தான்.    J K  SIVAN 


இது கொஞ்சம்  புரியலை .  கொரோனாவால்  எத்தனையோ  பேருக்கு  வேலை போயிட்டுது.  இந்தியாவில்  அமெரிக்காவில் என்று இதில் பாகுபாடு இல்லை.
''வேறே வேலை தேடறேன் சார்''  என்று சொல்வதும் காதில் விழுகிறது. .  சிலர் வேலைக்கு கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள்.  அலையாய் அலைந்து  பிளம்பர், எலெக்ட்ரிஷி யன், வீட்டு வேலைக்கு  ஆள்  கிடைப்பது குதிரைக்கு கொம்பாகவும் இருக்கிறது.  

கொரோனாவைப்பற்றி தெரியாத பழங்காலத்தில்,  ஒரு எஜமானனிடம் ஒரு  வேலைக்காரன்  தானாகவே   ''எதனாச்சும்  வேலை இருக்குதுங்களா'' என்று   வந்து சேர்ந்தான்.  அவனும் அவன் எஜமானனும்  பேசும் சம்பாஷணையைத்தடன்  நான் கேட்க  நேர்ந்து உங்களுக்கும் சொல்கிறேன்.

''யாருப்பா  நீ ?''
 
"இஞ்செ ஊர்  தானுங்க -  நாங்க  மாடுகன்னு மேய்க்கிற  இடையருங்க.  

''என்னன்ன  வேலை செய்வே நீ ?''

''எனக்கு தெரியாதது இன்னா வேலை  இருக்குதுங்க?  வீட்டோட  இருந்து  எல்லா  வேலையும்  செய்வேனுங்க. வழக்கமா   வீடு  பெருக்கிறது, துணி துவைக்கிறது.  சின்ன புள்ளைங் களை பொறுப்பா  பாத்துக்கிறது.  ஸ்கோலு   கூட்டி போறது  கூட  செய்வேனுங்க.  டமாசா   பாட்டு  எல்லாம்  கூட  சொல்லித்தருவேனுங்க. நானு  வளக்கிற  பசங்க  அழுவவே  அழுவாதுங்க.  சதா  சந்தோசமா  சிரிக்கும்.  ராவிலே  தனியா ஊட்டிலே யாரவது தனியா இருட்டிலே   போவ  சொல்ல   துணைக்கு வருவேனுங்க.  ஒரு கஷ்டமும்  இல்லைங்க. கூப்பிட்ட  குரலுக்கு  ஓடியாருவேனுங்க.  எவனாச்சும்  கோணா   மாணான்னு  வாலாட்டினா  ஒரே  போடு தாங்க.  அவன்  டவுனாய்டுவான்.  நம்ம கிட்டே  எவனும்  வாலாட்ட முடியாதுங்க''.

''இவ்வளவு சொல்றே  உன்  பேர்  என்னான்னு  சொல்லலியே பா''
.
''என்னைத்  தெரிஞ்சவங்க  கிஸ்டா ன்னு  கூப்புடுவாங்க.''.

''தம்பி  உன்னைப்பார்த்தா  நல்லவனா இருக்கே. சிரிச்ச  முகம்.  சந்தோஷமாக இருக்கு  உன்கூட  பேச. மகிழ்ச்சி.  நீ  சொன்னதெல்லாம்  பிடிச்சிருக்கு.   அது சரி.  என்ன கூலி  கேட்பே  வேலை செய்ய?''

''இன்னா சாமி இது. டபாய்க்கிறே.  பொஞ்சாதியா, குழந்தையா, குட்டியா.  ஒத்தை ஆளு  நானு.  தனியா  எனக்கு   வீடு  வாசல் எதுவும் இல்லீங்க.  பார்க்கறதுக்கு   அறியாத வயசுக்காரன் மாறி  இருப்பேனுங்க.  எனக்கு  ஆன  வயசு எனக்கே  தெரியாதுங்க. காசு  என்னங்க  காசு. இன்னிக்கு வரும்  நாளைக்கு  போவும்.  எனக்கு  வேண்டியதெல்லாம்   மனசு தாங்க.  என்னை  பிடிக்குதா .  உங்களுக்கு  எது வேண்டுமின்னாலும்  செய்யறேன்.''
 
இது மாதிரி  ஒரு  வடிகட்டின  பழஙகால  பைத்தியம் எங்கியாவது யாருக்காவது  கிடைக்குமா?.  உடனே  வேலைக்கு  எடுத்துக்கொண்டேன். என்னோடேயே  இருக்கிறான்.  நிழலாக  கூடவே  இருந்து  எல்லா  வேலையும்   செய்யறான்.  கட்டு மஸ்தான ஆள் . மற்போர் குத்துச்சண்டை, கத்தி வீச்சு  எல்லாம் கூட  தெரிந்தவனாம் .  குழந்தை மனசு, கல்மிஷம் இல்லாத வெகுளி.


நாளாக நாளாக  அவன்  இல்லாமல்  நான்  இல்லை   என்று  ஆகிவிட்டது.  இவனைப்போல்  இன்னொருத்தன்  இந்த  வையகத்தில்  இல்லை  எனலாம்.  .என் குடும்பத்திலே அவனும்  ஒருத்தன் என்கிற மாதிரி  எல்லோருக்கும்  அவனைப்  பிடித்து விட்டது. தக்காருக்கு தக்க மாதிரி  வேறே  யாரால்  பழக  முடியும்?.  சுருக்கமாகச்  சொன்னால்,  அவன்  தான்  எல்லாம்.  பெருக்கிறது, அலம்பறது, துடிக்கிறது, தோய்க்கறது, தண்ணீ   தொட்டி நிரப்புவது.   யாரவது  தப்பு செய்தா அடக்கு கிறது. புத்தி மதி சொல்றது. பசங்களுக்கு  வாத்தியார். வளர்ப்புத் தாய்  என்று கூட  சொல்லலாம். உடம்பு யாருக்காவது  சரியில்லை என்றால்  ஓடி யாடி  உதவுகிற  வைத்யனும் கூட.  
விடியல்  காலை  வீடு பெருக்கி  வாசல் தெளித்து  பால்  வாங்குவது முதல்  இரவு  கதவு  எல்லாம்  தாழ்ப்பாள்  போட்டு விளக்குகளை  அணைப்பது வரை  அவன்  இல்லாமல்  முடியாது.  அவனுக்கு  தெரிந்த  வேதாந்தம் விஞ்ஞானம் அசர வைக்கும். பண்பில், நட்பில்,  நேர்மையில்,  பாசத்தில்  அவனிடம்  கட்டுண்டு  அனைவரும்  எங்கள்  வீட்டில்  திளைக்கிறோம். இவ்வளவு சொல்லியும்  இன்னும்  நிறைய  சொல்ல இருக்கிறது.  பாரதியார்  சொன்னதைத் தான்  நான்  சொல்கிறேன்.  

கண்ணனை  நான்  ஆட்கொண்டேன், கண் கொண்டேன், கண்டு கொண்டேன், கண்ணன்  எனை  ஆட்கொள்ள  காரணமும்  உள்ளனவே.  

''எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் 
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்;

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் .

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ... 30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு'' கென்றேன். ''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 35

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ... 45

வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் ... 50

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ... 55

இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ... 60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

மேற்சொன்னது  யாவும்  பாரதியாரின் ''கண்ணன்  என்  சேவகன்''  பாட்டின்  சில  வார்த்தைகள் ''  கண்ணன்  உங்கள்  மனத்திலும்  வீட்டிலும்  ''வேலைக்கு''  ' வேளா  வேளை  வரட்டுமே. 
   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...