Sunday, January 3, 2021

KARMA


 

கர்மா என்றால் என்ன ஸார் ? J K  SIVAN 


 கர்மா  என்பது நம்மை விடாதா ஸார் ?

கர்மா என்றால்  ஏதோ  பேயோ  பிசாசோ  அல்ல பிடித்துக் கொள்ள? ஜலதோஷமும் தும்மலும் கூட இல்லை, கொரோனா போல தொற்றும் இல்லை,  ஒருவரிடமிருந்து நம்மை பிடித்துக் கொள்ள ?

பின் அது என்ன ஸார்?

அது வேறே எதுவும் இல்லை  குப்புராவ் ,   நீங்க செய்தது, நீங்களே உங்களைபிடிச்சுக்கிறது?
எப்படி சார், புரியலையே?

நமக்கு பல ஜென்மம் இருக்கு குப்புராவ் ?  அது ஒண்ணு  ஒண்ணுலேயும் நாம  செய்யற நல்ல கெட்ட  காரியங்களுடைய  பலன் நம்மை  நிழல் மாதிரி தொடர்கிறது.  அதாவது நல்லது செய்தால்  அதற்கேற்ற  பலன், கெட்டது  செய்தால்  அதற்
குண்டான  பலன், அந்தந்த பிறவியில் மட்டும் இல்லாம, அடுத்தடுத்த பிறவியிலும்  தொடர்ந்து  பலன்  அனுபவித்து முடியும்  வரை  நம்மோடு வரும்.  நமக்குள்ளேயே  சர்க்கரை, சிறுநீரக நோய், புற்று நோய்   இருக்கிறாமாதிரி, வாட்டும்.

ஓஹோ  அப்போ  முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்? னு ஒரு கட்டுரை படிச்சேன் குப்புராவ் அது  பாரதத்தை  நான் எழுதும்போது கண்ணுலேயே படலை.  வேறே எங்கிருந்தோ எடுத்திருக்கலாம்''

அது என்ன நிகழ்வு ஸார்?

குருக்ஷேத்திரத்தில் மஹா பாரத யுத்தம்  முடிந்து, எல்லோரும் செத்துப் போனதுக்கப்பறம்  தர்ம புத்ரர்  என்கிற யுதிஷ்டிரன் முடி சூட்டிக்கிறான்.
கண்ணில்லாத திருதராஷ்டிரன்  அப்போ  கிருஷ்ணரை கேக்கறான்

''கிருஷ்ணா,  எனக்கு  கண்ணில்லை. நீதி நியா யம் தெரிந்த  என் சகோதரன்  விதுரன்  சொன்ன
படி தான் அரசாட்சி செய்தேன்.  அப்படி இருக்க  எதுக்கு  ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு  பிள்ளைகளும்  ஒருத்தன் பாக்கியில்லாமல் இறந்தார்கள். என்னகாரணம் சொல்லு ? ''

ஒரு கதை சொல்றேன்  புரிஞ்சுக்கோ. அது முடிஞ்சதும்  ஒரு கேள்வி கேக்கறேன், அதற்கு நீ பதில் சொன்னால்  நீ கேட்ட கேள்விக்கு நான்  பதில் சொல்றேன் '' என்றான் கிருஷ்ணன்.

நேர்மையான  ஒரு  ராஜா.  அவன் கிட்ட  ஒரு  ஏழை சமையல்காரன் வேலைக்கு சேர்ந் தான். ராஜாவுக்கு பிடிச்சதை சமையல் செயது  அவரை கவனித்துக் கொண்டான்.   இதுவரை இல்லாத ருசியில் ஒரு சமையல் செய்து ராஜாவை திருப்திப்படுத்தினால் என்ன?  என்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியபோது   அவன் கண்களில் அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு  பட்டது.  அதைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறி னான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியா மல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய  ராஜா ''நீ செய்தது  நன்றாக  ருசியாக இருந்தது அடிக்கடி செய்'' என்று பரிசும் கொடுத்தான்.
திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல்காரன்  இந்த  ரெண்டு பேரில்  தவறிழைத்தவன்  யார் ? 

வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்ததை  வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்ட கதை ஒன்று  உண்டு.  அந்த  விவேகம்   எச்சரிக் கை  எதுவும் இந்த  ராஜாவிடம்  இல்லையே.   சமையல்காரன்  பணம், பரிசுகளுக்கு ஆசைப் பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. 

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத   ராஜா  தான் அதிகம் தப்பு செய்தவன்''  என்றான் திருதராஷ்டிரன்.

''திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.  அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. 

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளை களை இழந்து நீ  இப்போது அனுபவிக் கிறாய்.
ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக் கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!  தன்வினை தான்  தன்னைச் சுடும்  என்று  உணர்ந்த திருதராஷ்டிரன் மௌனமானான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...