Thursday, January 21, 2021

ORU ARPUDHA GNANI

 ஒரு அற்புத ஞானி J K SIVAN


ஞானசூர்யோதயம்

தமிழகத்தில் சில க்ஷேத்ரங்கள் ஈடு இணையே சொல்லமுடியாத அளவு புண்ய ஸ்தலங்கள். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் போன்றவை. இன்னும் நிறையவே இருக்கிறது. உதாரணத்துக்கு மூன்று.

''நகரங்களில் விசேஷமானது காஞ்சி. '' நகரேஷு காஞ்சி''. ஆதி சங்கரர் விஜயம் செய்தது. நமது காலத் தில் மஹா பெரியவர் வாழ்ந்த ஊர். ''ஏக ஆம்ரம்'' (ஒத்தை மாமரம்) புகழ் பெற்ற ஏகாம்பரேஸ்வரர் அருள் பாலிக்கும் இடம். இடறி விழுந்தால் ஏதாவது கோவில் மேலே என்று சொல்லும்படியான ஏராளமான கோவில்களைக் கொண்ட ''இன்னொரு கும்பகோணம்''. பல்லவர்களின் தலைநகரம். எங்கள் நங்கநல்லூர் அப்படி வளர்ந்து வருகிறது.

ஆதிசங்கரர் காஞ்சி வந்தபோது லோக க்ஷேமத்துக்காக, நன்மைக்காக, ஸ்ரீ வித்யா உபாசனை பயிற்சி பெற்ற அனுஷ்டானம் பண்ணிவரும், அம்பாள் உபாஸகர்கள்காஞ்சியில் வேண்டும் என்று மத்திய பாரதத் திலிருந்து முப்பது தேவி பக்த குடும்பங்கள் காஞ்சிக்கு வரவழைத்தார். அந்த முப்பது வைதிக குடும்பங்கள் மொத்தமாக காம கோடியார் என்ற பெயருடன் காஞ்சியில் குடியேறினார்கள். ஒவ்வொரு குடும்பமும் ரிஷி குடும்பம் மாதிரி என சொல்லலாம். அந்த முப்பதில் பத்து குடும்பங்கள் பௌரகுத்ஸ கோத்ரத்தை சேர்ந்தவை. இன்னொரு பத்து கௌண்டின்ய கோத்ரம். மீதி பத்து கௌசிக கோத்ரம்.

இந்த முப்பது குடும்பத்தில் பாதிக்கு மேல் எங்கள் அஷ்டஸஹஸ்ர வகுப்பு. மீதி பாதி வடமர். காலப்போக்கில் இவர்கள் சாஸ்த்ர வேத வித்தையில் சிறந்து இருந்ததால் பிழைக்க வழி தேடி பல ராஜ்யங்களுக்கு, சமஸ்தானங்களுக்கும் சென்றாலும் சுற்றியடித்து ஒரு சில குடும்பங்கள் மீண்டும் காஞ்சிபுரத்துக்கே வந்தன.
இப்படி காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காமகோடியார் குடும்பத்தில் 1790ல் காமகோடி சாஸ்திரி என்பவர் பிறந்தார்.

காமாக்ஷி அருள் பெற்ற ஒரு குடும்பம் காமகோடி சாஸ்திரி குடும்பம். வேத, சாஸ்திரம் சகலமும் அறிந்த ரிஷி அவர். ஆயிரக் கணக்கான காயத்ரி மந்திரம் தினமும் உச்சரித்து நித்ய அக்னி ஹோத்ர ஹோமம் செய்யும் குடும்பம். எனவே அவருக்கு நிறைய சிஷ்யர்கள். கந்தர்வ வேதம் தெரிந்தவர்.எனவே காமகோடி சாஸ்திரி மனமுருகி அற்புத கானம் செய்வார். நிறைய கீர்த்தனைகள் எல்லா தேவதைகள் மேலும் இயற்றியவர்.

வந்த வாசியில் வழூர் என்று ஒரு கிராமத்தில் ஒரு ஆஸ்ரமம் போன்ற வீடு ஒன்று பக்தர்களால் அவருக்கு தரப்பட்டது. அதில் தான் பலகாலம் வாழ்ந்த காமகோடி சாஸ்த்திரிக்கு புத்ர பாக்கியம் இல்லை. சேஷம்மாள் என்று ஒரு பெண் மட்டுமே. அண்ணா சிதம்பர சாஸ்திரி யின் குழந்தைகளை தம் குழந்தைகளாக பாவித்து மகிழ்ந்தார். சிதம்பர சாஸ்திரிக்கு ரெண்டு பிள்ளை ரெண்டு பெண். ஒரு பெண் மரகதம் காமாக்ஷி தேவியின் அம்சம் போல் வளர்ந்தாள். காமகோடி சாஸ்திரி மரகதத்தை தனது மகளாக வளர்த்தார்.

பன்னிரண்டு வயசுக்குள்ளேயே அவளை சாஹித்ய சங்கீத கலாநிதியாக்கினார் காமகோடி சாஸ்திரி. அழகும் அறிவும் வாய்ந்த தனது சிஷ்யன் வரதராஜனுக்கு அவளை மணமுடிக்க அவன் தந்தை சேஷாத்திரி ஜோசியரும் ஒப்புக்கொள்ள ஜாம் ஜாம் என்று கல்யாணம் நடந்தது.

வரதராஜன் ஒரு கர்க்க ரிஷி என்று சொல்லும் படியாக சகல சாஸ்திரங்களும் அறிந்து சிஷ்யர்களுக்கு நன்றாக போதிப்பவன். மரகதமும் சாஸ்த்ர சங்கீத கலைகளில் நிபுணி. ரெண்டு பெரும் ideal couple என்போமே அதுபோல் ஒருவருக்காகவே படைக்கப்பட்ட மற்றொருவர். ஆனால் இதுவரை அவர்களுக்கு குழந்தை பாக்யம் ஏற்படவில்லையே? சேது யாத்திரை சென்றார்கள்.தான தர்மம், மங்கள சஷ்டி விரதம் ஓன்று பாக்கியில்லை. காமகோடி சாஸ்திரி காமாக்ஷி கோவில் சென்று அம்பாள் முன் அமர்ந்தார் த்யானம் செய்தார். மனமுருகி வேண்டினார்.

''நவநீதம் கொடு, ஞான கலை உதிக்கும் '' என்று அருள் பாலித்தாள் காமாக்ஷி. பசுவின் வெண்ணை எடுத்து காமாட்சியை ஜெபித்து மரகதம் வரதராஜன் தம்பதிக்கு காமகோடி சாஸ்திரி அம்பாள் அருளோடு அளித்தார்.
உத்தராயணம் பிறந்தது. நதிகள் தடாகங்கள் நிரம்பின. நெல் கதிர்கள் வயல்களில் உயர்ந்தன.காமாக்ஷி புன்னகை புரிந்தது
தீப ஒளியில் தெரிந்தது.

சுக்ல வருஷம் தை மாதம் கிருஷ்ண ஷஷ்டி, சனிக்கிழமை, ஹஸ்த நக்ஷத்திரத்தில் 'சேஷாத்திரி' மரகதம் வரதராஜன் தம்பதிக்கு மகனாக (சனிக்கிழமை என்பதால்) பிறந்தான். ஆங்கில தேதியில் சொன்னால் இன்று தான் அந்த நாள். ஜனவரி 22, 1870. நூற்று ஐம்பத்தொரு வருஷங்களுக்கு முன்பு.

சேஷாத்ரி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சேஷ: மிகுதியாக இருப்பது. உலகத்தில் எல்லா விஷயங்களையும் தள்ளிவிட்டாள் எஞ்சி உள்ளது ஸத் எனும் நிலையான வஸ்து. '' அத்ரி'' என்றால் மலை, கருடாத்ரி, சிம்ஹாத்ரீ , தோயாத்ரி, என்று மலைகள் நாம் அறிந்தது தானே. சேஷாத்திரி என்றால் ஞான, சத்யமலை.

சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றி, அவர் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் எனது புத்தகம் ''ஒரு அற்புத ஞானி '' என்ற புத்தகத்தில் முடிந்தவரை தந்திருக்கிறேன். இன்னும் சில பிரதிகள் கைவசம் உள்ளது. வேண்டுபவர்கள் பெறலாம் வாட்ஸாப்ப் நம்பர் 9840279080. ஒரு சம்பவத்தோடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

ஒருமுறை திருவண்ணாமலையில் எங்கோ ஒரு மண்டபத்தில் சேஷாத்திரி ஸ்வாமிகள் அமர்ந்திருக்கிறார். அவர் எப்போது எங்கே இருப்பார் என்று ப்ரம்ம தேவனுக்குக் கூட தெரியாது. வயிறு பசித்

தாலும் சொல்லத் தெரியாது. யாரோ பக்தர் ஒருவர் பார்த்து விட்டார். ஓடிப்போய் உணவு பொட்டலம் ஒன்றைக் கொண்டுவந்து ஸ்வாமிகளிடம் கொடுத்து, ''சுவாமி இதை சாப்பிடுங்கோ'' என்கிறார்.
ஸ்வாமிகள் அரைமனதாக கைகளில் அதை வாங்கிக்கொண்டு ஒரு வாய் போட்டுக்கொள்கிறார். என்ன தோன்றியதோ? அப்படியே பொட்டலத்தில் இருந்த உணவை கைகளால் அள்ளி மேலும் கீழும் பக்கத்திலும் வீசினார்.
பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி செய்தீர்கள் என்று எப்படிக் கேட்பது? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு '' சாப்பிடாமல் இப்படி கீழே இறைக்கிறீர்களே, சுவாமி" என முனகினார்.
''நீ எனக்கு தந்தை நான் மாட்டும் எப்படிடா சாப்பிடுவேன்.? எல்லா தேவதைகளும் ''எனக்கு எங்கே?'என்று கேட்கிறார்களே. அது தான் அவர்களுக்கும் கொடுத்துட்டேன்'' என்று சொல்லிக்கொண்டே மீதி பொட்டலத்தில் இருந்ததையும் வீசி எறிந்தார்.
பக்தருக்கு இது பைத்தியம் என்று தானே தோன்றும்.
''நீங்க சொல்ற 'பூதம் தேவதைகள்" என் கண்ண்ணுக்கு தெரியலையே'' "ஓஹோ நீ அவ்வளவு பெரிய ஆளா? பூதம், தேவதைகளை எல்லாம் கண்ணால் பார்த்தால் தான் நான் சொல்றதை நம்புவியா ?'
தன்னையறியாமல் பக்தர் "ஆமாம்" என தலையாட்டி விட்டார் .
''என்கிட்டே வா ''.
அருகில் வந்த பக்தரின் ரெண்டு புருவங்களுக்கு மத்தியில் தனது வலது கட்டை விரலை வைத்து கொஞ்சம் அழுத்தி விட்டு ''கண்ணை மூடிட்டு திறந்து பார்''
பக்தர் கண்களைத் திறந்து பார்த்தார். அவர் அருகே எதிரே, பக்கத்தில் எங்கெல்லாம் சேஷாத்திரி ஸ்வாமிகள் உணவை வீசி எறிந்தாரோ அங்கெல்லாம் கோரைப்பற்களும் நீளமான நாக்கும் கொண்ட பெரிய பூதங்கள் வேகமாக எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தன. ''ஐயோ'' என்று பெரிதாக அலறிய பக்தர் அப்படியே சேஷாத்திரி ஸ்வாமிகள் திருவடிகளில் விழுந்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...