Thursday, January 28, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்    ---   J K  SIVAN   


            காய்ச்சிய  பால்  நைவேத்தியம்.

மஹா  பெரியவா  ஒரு ப்ரத்யக்ஷ தெய்வம்.  கலியுகத்தில் கண்கண்ட கடவுள்.  நமக்கெல்லாம்  ஒரு பழக்கம். 
தினமும் குளித்துவிட்டு அவசர அவசரமாக  ஆபிஸ் எட்டுமணிக்கெல்லாம்  போகும் காலம்.  வேகுவேகு  என்று சமையல் செய்து மத்தியானம் சாப்பிட  டப்பாவில் அடைத்து,  மீதியை  தட்டில் போட்டு  FAN  அடியில் சூடாற வைப்பதற்கு முன்  சில வீடுகளில்  ஒரு  பாத்திரத்தில் சாதம், பருப்பு, நெய் மற்றும்  பால்  எல்லாம்  சூடாக காய்ச்சி வீட்டில்  பூஜை அறையில்  ஸ்வாமிக்கும்  நைவேத்தியம்   அர்ப்பணிக்கிறோம். 
 
திருச்சியில் ஒரு  போட்டோ ஸ்டுடியோ   நடத்தியவர். மஹா பெரியவா படங்கள் அற்புதமாக  செலக்ட் செயது டெவெலப் பண்ணி கருப்பு வெளுப்பில்  பெரிய  சிறிய  படங்களாக  விற்பார்.  நல்ல விற்பனை.  அவர் குடும்பம்  சந்தோஷமாக நடந்தது.   போட்டோக்ராபர்  மஹா பெரியவா பக்தர்.  அவரது   பூஜையறையில் காஞ்சி மகானின் பெரிய  படம் பிரதானமாக இருக்கும்.   தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு  நைவேத்யம்  மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப் பார். பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு தடவை  மஹா  பெரியவா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவோ உஷ்ணப் பிரதேசம். வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருந்தது.

திருச்சியில் இருந்த போட்டோகார பக்தருக்கு  அப்போது  மஹா பெரியவாளைச்சென்று தரிசிக்க வேண்டும் என்று மனதில் ஆசை உண்டானதால் ஒருநாள்  காலை ரயிலில் புறப்பட ஏற்பாடு செய்துவிட்டார்.  செய்தார்.

வீட்டைப்  பூட்டி விட்டு கிளம்புமுன்  மனதில் ஒரு  முள்  குத்தியது.  பெரியவாளை வணங்கி நைவேத்தியம் அற்பணிக்காமல் கிளம்புகிறோமே. வீட்டுக்குள் ஓடினார்.  அன்று காலை வாங்கி வைத்த பால் இருந்தது.  பாலக் காய்ச்சி  நைவேத்யமாக  ஒரு டம்ளரில் ஊற்றி  பெரியவா படம் முன்னால் வைத்து  ''மஹா பெரியவா உங்களை பட்டினி போட்டுவிட்டு  போகாமல்  காப்பாற்றினீர்களே.  இதை உங்களுக்கு தந்துவிட்டு  உங்களை பார்க்க வருகிறேன்''  கதவைச் சார்த்தி  பூட்டிவிட்டு  கிளம்பினார்.

கர்நூலில் அதிகமான பக்தர் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம்.  போடோக்காரர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை. சற்றுத் தூரத்தில் இருந்த மணற்குவியல் ஒன்றின்மீது ஏறி நின்று மஹா  பெரியவாளைத் தரிசிக்க முயன்றார். வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது. கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார். இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.

ஏமாற்றத்துடன்  கனமான  மனத்துடன்  சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார். யாரோ அவரைக் கூப்பிடுவது போல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார்.

யாரோ  ஒரு பக்தர் வேகமாக போட்டோக்ராபரிடம்  வந்தார். “ நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க ?”
“ஆமாம்”
“பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”
“என்னையா ?” — பக்தருக்கு வியப்பு.
“நீங்க  போட்டோகிராபர தானே ?”
“ஆமாம் ”
“ அப்படியென்றால் வாருங்கள்”
விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார், அந்தச் சிஷ்யர். 

கைகளைக் கூப்பியவாறு, கண்களில் நன்றிக்கண்ணீர்  பெருக்கெடுத்து ஓட, புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.

அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த ,மஹா பெரியவா “ என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே… கடைசியில் பார்க்காமலே போனால் என்னப்பா அர்த்தம் ?”  என்கிறார் .

“கும்பல் நிறைய இருந்தது  சுவாமி   அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு ......'' தடுமாற்றத்துடன் இழுத்தார் போடோகாரர்.

“சரி. சரி.. சாப்பிட்டியோ ? “
“ சாப்பிட்டேன் ! ”
சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார். “ என் வாயைப் பார்த்தியோ ?”
மஹா பெரியவா  நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது. பிறகு கேட்டார். “ உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது.''

போடோக்ராபருக்கு    என்ன  சொல்றதுன்னு  புரியவில்லை.

“நீ பாலைச்   காய்ச்சி கொதிக்க கொதிக்க சூடா வச்சிட்டு  சாப்பிடுன்னுட்டே...அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! “

திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் சூடாக  அவர்  படத்தின் முன்பு  பாலைக்காய்ச்சி வைத்துவிட்டு  வந்தது நினைவுக்கு வந்தது.

சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு, என்னை மன்னியுங்கள் “ என்று கதறினார்.
எந்த அளவுக்கு பக்தி.  காஞ்சி  மகானுக்கு பக்தர்கள்  அளிப்பதை  விரும்பி ஏற்கும்  கருணை!
பேசும் தெய்வம் என்பது வாஸ்தவம்.

பகவானுக்கு நைவேத்தியம் அளிக்கும்போது  இனிமேல்  ஜாக்கிரதையாக இருப்போம். பேசும் தெய்வம் உணர்த்திவிட்டது. மற்ற தெய்வங்கள் பேசாமல் இருக்கிறது அவ்வளவு தான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...