Tuesday, January 19, 2021

ICE HOUSE

 

           பனிக்கட்டி வீடும் பரிபூரண ஞானியும்   J K  SIVAN 


இனி வெயில் காலம்.   சில்லென்று  குடிக்க நீர்  தேடுவோம். இப்போதெல்லாம்  நீரை சூடாக்கி ஆவியாக்கி  பனி யாக உறையவைக்கும் வித்தை தெரிந்து வீட்டிலேயே  குளிர் சாதன  பெட்டிகள் மலிந்து விட்டது.  இருநூறு வருஷங்களுக்கு முன்பு  இது தெரியாதே.

சென்னை  மெரினா பீச் அருகே பெரிதாக கம்பீரமாக ஒரு ரவுண்ட் கட்டிடம் நிற்கிறது. அதன் சரித்திரம் தெரியுமா?

அதன் பெயர்  ஐஸ் ஹவுஸ், பனிக்கட்டி வீடு.   1842ல்  கட்டியது.  பிரெட்ரிக் ட்யூடர்  FREDRICK TUDOR  என்கிற  வெள்ளைக்காரர்  அமெரிக்காவிலிருந்து  ஐஸ் இறக்குமதி செய்து சென்னையில் அதை வைக்க கட்டிய கட்டிடம்.  பாறை பாறையாக  ஐஸ்கட்டிகளை    வைத்து,   கிட்டத்தட்ட  40 வருஷம்   வியாபாரம் செய்தார்.  ஐஸ்  உள்ளூரிலேயே பண்ண தெரிந்ததும் இந்த ஐஸ் இறக்குமதி பிஸினஸ்  செத்து விட்டது. இந்த கட்டிடம்  வெள்ளைக்காரரிடமிருந்து  பிரபல சென்னை வக்கீல்  பிலிகிரி  ஐயங்காரிடம் கை  மாறியது.  

ஐயங்கார் அதற்கு நிறைய  ஜன்னல்கள் வைத்து அந்த  ரவுண்ட் கட்டிடம் அழகாக மாறியது.  தனது  ஜட்ஜ் நண்பன்  கெர்ணன் ஞாபகமாக  கெர்ணன்  கோட்டை   KERNAN CASTLE  என்று பெயர் வைத்தார்.  

 சில காலம் அது   ப்ராமண விதவைகள் இல்லமாக இருந்தது.   1897ல்  சென்னைக்கு  விவேகானந்தர் வந்தபோது ஒன்பது நாள்  (FEB 6-14, 1897) அதில் தங்கி இருந்தார்.  சுபபலக்ஷிமி அம்மையார்  குழந்தைகள்  காப்பகமாக்கி  சிலகாலம் கல்வி கற்றனர்.   ஏலத்துக்கு வந்த  அந்த கட்டிடத்தை  தமிழக அரசு வாங்கி, விவேகானந்தர்  ஞாபகமாக இன்று அது விவேகானந்தர் இல்லம்.

சாதாரண அதிகம் அறிமுகம் இல்லாத சந்நியாசியாக இருந்த  விவேகானந்தரை அமெரிக்க  உலக ஆன்மீக மாநாட்டிற்கு அனுப்பிவைத்ததில்  இந்த சென்னை நண்பர்கள்  முயற்சிக்கு  பெரும் பங்கு உண்டு. அவர்கள்   விவேகானந்தர் மேல் பக்தி கொண்டவர்கள்.   அதில் ஒருவர் விவேகானந்தரின் சிஷ்யர்  பிலிகிரி அய்யங்கார். முக்கியமான  இன்னொருவர் டாக்டர் நஞ்சுண்டராவ். உலக மத கலாச்சார  ஆன்மீக மாநாடு முடிந்து வெற்றிகரமாக இந்தியா திரும்பிய விவேகானந்தர் இலங்கை கொழும்பு வழியாக,  ராமேஸ்வரம் வந்து  ரயிலில் எழும்பூர் ரயில் நிலைய  வரவேற்பு பெற்று  மேலே  சொன்ன  பிலிகிரி ஐயங்காரின் கெர்ணன்  கோட்டையில்  ஒன்பது நாள்  தங்கினார்.

இங்கு  ஒரு சந்நியாசியின் ரயில் பிரயாண சம்பவம் பற்றி  சொல்லத்  தோன்றுகிறது.

 கோடை வெய்யில்  கொளுத்தி வாட்டி வதக்க,  சூடான  ரயில் பெட்டியில்  ஜன்னலோரம்  உட்கார்ந்திருந்த  ஒரு துறவியின் வயிற்றிலும் நெருப்பு.  ஆமாம்  பசி எனும் அக்னி. உத்தர  ப்ரதேசத்தில்  நத்தை வேகத்தில்
ரயில்  ஊர்ந்தது.  ரயில் பெட்டிக்குள்   துறவிக்கு எதிரே  ஆசனத்தில்  யாரோ ஒரு வியாபாரி உட்கார்ந் திருந்தான். நல்ல கூட்டம் அந்த பெட்டியில் நெருக்கி அடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.  மற்ற  எல்லோரும்  எதையாவது  சாப்பிட்டுக்கொண்டே  வந்தபோது  அந்த  துறவி  ஒன்றுமே  சாப்பிடாமல் இருந்ததை   வியாபாரி கவனித்தான்.  காவி உடை,  தலைப்பாகையும்  தவிர  துறவியின்  ஜோல்னா பையில்  சில  புத்தகங்கள்.  வேறே எதுவும் அவரிடம் இல்லை. 

 பல  வெள்ளைக்காரர்களும்  பெட்டியில் இருந்தனர்.  எல்லோர் பார்வையும்  துறவி மீது விழுந்து,  அவரவர் மொழியில்   கேலியாகவும்  கேவலமாகவும்  பேசினதை எல்லாம் துறவி கேட்டுக் கொண்டி ருந்தாலும்  அதை  லட்சியம் பண்ணவே இல்லை. வியாபாரியும்  ஒவ்வொரு ஸடேஷனிலும் வண்டி நின்றதும்  எதையாவது  வாங்கி  வயிற்றை நிரப்பிக்கொண்டே இருந்தான்.   துறவியைக்  கேலி செய்த கூட்டத்தில் அந்த  வியாபாரியும் உண்டே.    

தரிகொட்  ஸ்டேஷனில்  அந்த  சிக் புக்  கரிவண்டி ரொம்ப நேரம் நின்றது.  துறவி வெளியே வந்தார். கையில் கமண்டலமும் இல்லை  கொஞ்சம் தண்ணீர்  நிரப்பி குடிக்க.  பேசாமல்  வெளியே கொளுத்திய வெயிலில் எங்காவது நிழலில்  உட்கார இடம் தேடியபோது  மூட்டை தூக்கும் போர்ட்டர்  ஒருவன்  ஒரு  சிறு  மேடையில் நிழலில் உட்காரப்போன  அவரை  தெரு  நாயை விரட்டுவது போல்  விரட்டவே  அவர்  சூடான  கட்டாந்தரையில் வெயிலில் அமர்ந்தார். ரயில்  புறப்பட  நேரமாகிவிட்டது.  மீண்டும்  அனைவரும் ரயில் பெட்டியில் ஏறி விட்டனர்.  துறவியும் தனது இடத்துக்கு திரும்பினார்.  

வியாபாரி  அவரையே  கண்காணிப்பவன்,  சிரித்தான்.  அவரும்  பதிலுக்கு  சிரித்தார்.

''சாமியாரே,  பணமே  வேண்டாம்  என்று  துறந்ததால் வந்த  துன்பத்தை இப்போது உணர்கிறீர்களா. பணம் இருந்தால்  இப்படி எதுவும்  வாங்கி  உண்ணமுடியாமல்  தவிக்க வேண்டாமே. என்னைப்போல  சம்பாத்யம் இருந்தால்  சவுகர்யமாக  சாப்பிட  குடிக்க  எதையாவது  வாங்க  முடியும்  என்று புரிகிறதா?  

சுவாமிகள் சிரித்தார். ஒன்றுமே பேசவில்லை.

சில நிமிஷங்களில் பெட்டிக்கு வெளியே  பிளாட்பாரத்தில்  யாரோ  ஒரு  ஆசாமி  எதையோ எவரையோ   ஒவ்வொரு பெட்டியிலும் தேடிக்கொண்டு   ஓடி வந்தான்.   துறவி  இருந்த பெட்டிக்கு வந்துவிட்ட அவன்  கண்ணில்  சாமியார்  தென்பட்டதும்  மிக்க  மகிழ்ச்சி அவனுக்கு.  கையில் ஒரு  பையிலிருந்து ஒரு பெரிய  பொட்டலம், ஒரு  கூஜாவில் தண்ணீர். ஒரு  சிறு  பாய் எல்லாம்  எடுத்தான்.''

''குருஜி,   நீங்கள்  இதையெல்லாம்  சாப்பிட வேண்டும்  என்று உங்களை  எங்கெல்லாமோ  தேடி அலைந்து  கடைசியில்  இந்த பெட்டியில்  கண்டு பிடித்து விட்டேன்""

''அப்பனே,  நீ  யாரென்றே  எனக்கு தெரியாது.  நீ  வேறு  யாரையோ  தேடி,  யாருக்கோ இதையெல்லாம்  கொண்டு வந்திருக்கிறாய்.  நீ  தேடும்  ஆசாமி  நானாக  இருக்க முடியாது. எடுத்துக்கொண்டு போ இதெல்லாம் '' என்றார் துறவி.

''சுவாமிஜி  நீங்களே தான்  நான்  தேடி வந்தது. சந்தேகமே இல்லை எனக்கு''

''நீ யார்  என்றே  எனக்கு தெரியவில்லை.  என்னை உனக்கு எப்படித்   தெரியும் ?  எங்கு  எப்போது பார்த்திருக்கிறாய்?'

''சுவாமி  நான்  இந்த  தரிகொட்  ஊரில்  ஒரு  இனிப்பு வியாபாரி. ராம  பக்தன்.  இன்று காலை  என்  கடையில்  வெயிலில்  களைத்து  சற்று தூங்கி விட்டேன்.  என்  கனவில் நான்  வழிபடும்  ராமர்  தோன்றினார்.

 'என் மகன்  ரெண்டு நாளாக  ஒன்றும்  சாப்பிடாமல்  பசியாக  ரயில் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறான். உடனே  சில  பூரி  போன்ற  உணவுப்பண்டங்களை  தயார் செய்துகொண்டு  குடிக்க  நீருடன்  ரயில் நிலையத்துக்குப்போ. அங்கே  வண்டி நிற்கும் அதில் ஜன்னலோரம் ஒரு பெட்டியில்  ஒரு  சாமியார் அமர்ந்திருப்பார்  அவர்  இப்படித்தான் இருப்பார்  என்று  உங்கள்  உருவமும் காட்டினார்.  சுவாமி  நான்  உடனே  அலறி அடித்துக்கொண்டு  எழுந்தேன். அவசரம் அவசரமாக  இந்த  உணவுப்பண்டங்களை  என் மனைவி  தயார் செய்தாள். எடுத்துக்கொண்டு  இந்த  ரயில் நிலையத்துக்கு  வந்தேன்.  நீங்கள்  ரயில் பெட்டியிலிருந்து  கீழே இறங்குவதை  வரும்போதே  பார்த்து விட்டேன்.  பிறகு உங்களைத்தொடர்ந்து  இந்த பெட்டியில்  நீங்கள்  ஏறிக்கொண்டு  ஜன்னல் ஓரம்  உட்கார்வதையும்  பார்த்துதான்  வேகமாக  வந்தேன். சுவாமிஜி  உங்களை வணங்குகிறேன். உடனே  நீங்கள்  இதை உண்ண  வேண்டும்  என்பது  என்  சுவாமி  ராமனின்  கட்டளை'' என்று  அந்த   பணக்கார  வியாபாரி  துறவியின்   காலடியைத்  தொட்டு  வணங்கினான். 

எதிரே இருந்த வியாபாரி  இதெல்லாம்  பார்த்துக்கொண்டிருந்தவன், கேட்டுக்கொண்டிருந்தவன்  தனது  தவறை உணர்ந்தான்.

சாக்ஷாத்  ராமனே  அந்த  துறவியைத்   தனது  மகன் என்று  சொன்னபோது  தான்  அந்த  வியாபாரிக்கு  அந்த துறவி  எப்படிப்பட்ட  மகான் என்பது  புரிந்தது.   அந்த  வியாபாரி  தானும் அவர் பாதத்தைத் தொட்டு  கண்ணில்  ஒற்றிக்கொண்டான்.
 
சுவாமி விவேகானந்தரின்  பாதத்தைத் தொட்டு  வணங்க  அந்த வியாபாரி  எவ்வளவோ  பாக்கியம் செய்திருக்கவேண்டும் அல்லவா?  அவர்  வாழ்நாளில் எத்தனை பேருக்கு  அது கிடைத்ததோ! நமக்கு படம் கிடைத்திருக்கிறதே  அதற்கே நாம் அதிர்ஷ்ட சாலிகள் தான். 





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...