Monday, June 29, 2020

GITANJALI



கீதாஞ்சலி          J K  SIVAN          
தாகூர்  
                              
     
      2.    நினைத்தாலே  இனிக்கிறாய்  கண்ணா

நண்பர்களே,  நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  நான்  படித்த  மூலங்களை  அப்படியே  வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பவன் அல்ல.  நான் படித்து ரசித்ததை  என் மனதில் தோன்றியவாறு உங்களுக்கு கொடுப்பவன். எத்தனையோ  மஹான்களின் ஸ்லோகங்கள், உபநிஷத், வேத சாரங்கள், மஹான்களின் வார்த்தைகள், கருத்துகள் இவ்வாறு தான் உங்களை இதுவரை அடைந்து வருகிறது.   


தாகூரை மொழிபெயர்ப்பது எளிதல்ல. மனப்பக்குவம் வேண்டும். அவரது எண்ணங்கள் எழுத்தாக வரும்போது உருவம் சரியாக தெரியாது. உணர்ச்சி மட்டுமே கொப்புளிக்கும். அது தான் அவருக்கு உலகப்புகழ் தந்தது. நோபல் பரிசும் தந்தது.    மோனத்தின் எல்லா ஞானம்.    கீதாஞ்சலியை அப்படியே  வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால்  ஜூக்நு   என்று  முன்பெல்லாம் டிவியில் வருமே   அதில் பேசுவார்கள்   ''நீ   போகிறாய்  அங்கே  அப்போ  என்று   சொன்னார்   மாமா  கேட்க ''   என்போது போல்  இருக்கும். 

இனி கீதாஞ்சலி  2வது கவிதைக்கு  செல்வோம்.

2.When thou commandest me to sing it seems that my heart would break with pride;
and  I look to thy face, and tears come to my eyes.
All that is harsh and dissonant in my life melts into one sweet harmony---
and my adoration spreads wings like a glad bird on its flight across the sea.
I know thou takest pleasure in my singing.
I know that only as a singer I come before thy presence.
I touch by the edge of the far-spreading wing of my song thy feet which I could never aspire to reach.
Drunk with the joy of singing I forget myself and call thee friend who art my lord

 '' நீ பாடு என்று சொல்லி விட்டாய். என்னை பாடகனாக பார்க்கிறாய்.  என்னைப்பார்க்கும்போதெல்லாம் நீ பாடு.... என்கிறாய். அப்போதெல்லாம் என் இதயம் எப்படி மகிழ்ச்சியில் பெருத்து,பருத்து வெடிக்கும் போல் ஆகிவிடும்   என்பது உனக்கு தெரியுமா கிருஷ்ணா?

எனக்கு பாட வராது.  எதைப்பாடுவது, எப்படிப் பாடுவேன், எவ்வளவு நேரம் ?  பாட முடியாமல் நான் உன்னையே பார்த்துக்கொண்டிருப்பேன். கண்கள் பனித்து திரை விழும். 

உன்னை நினைக்கையில் தான்  என்ன ஒரு பெருமிதம் எனக்கு.     எங்கோ ஆகாசத்தில்  திசையின்றி மனம் போன போக்கில்  சஞ்சரிப்பதை போல் இருக்கிறதே. கண்களில் ஆனந்த கண்ணீர். முகம் நூறு சூரியனாகி விட்டதே.   என்னுள் இருந்த  கடினங்கள், இளகிவிட்டன.  முன்னுக்குப் பின் முரணாக எண்ணங்கள்  எல்லாம் காணாமல் போய்விட்டது. ஏதோ ஒரு சொல்லத்தெரியாத  இனிய  அனுபவம்....

எத்தனை சொல்லொணா கஷ்டங்கள் ஏமாற்றங்கள் இதுவரை நான்  பார்த்து விட்டேன். எல்லாம் உருகி ஒன்றாய் மனக்கடலில்  கரைந்து கலந்து மறைந்து  விட்டது. 

உன்நினைப்பு போற்றி மனதிற்குள் பாடும்  நான்   சந்தோஷத்தில் திளைத்த  ஒரு பறவை   பெரிய சிறகடித்து   பெருங் கடலையை தாண்டி பறக்கும் பறவையாகி விட்டேனா?   இவ்வளவு பெரிய கடலை சுலபத்தில் சந்தோஷமாக ரெக்கை அடித்து தாண்டிவிடுவேனே. ஏன் தெரியுமா ரகசியத்தை சொல்கிறேன் கேள். உனக்கு என் பாட்டு பிடிக்கும்.  அந்த ஒரு பெருமை எனக்கு கிடைத்துவிட்டதே.

உனக்கு நான் என்றுமே ஒரு பிரபல பாடகன். நான் எப்போதும் உன் எதிரில் இருக்கும்போது ஒரு பாடகனாகவே தான் தெரிவேன். அப்படி  உன் முன்னே மனம் உருகி பாடி தானே  நான்  பழக்கப்பட்டவன். 

 என்னுடைய  பாடலின்  இறகு   பெரிதோ சிறிதோ  எதுவாயினும்  அதன் முனையால்,  நுனியால்  எப்படியாவது உன்  திருப்பாதங்களை வருடுவேன் கண்ணா.    ஆஹா,  உன் திருப்பாதங்களை அவ்வளவு எளிதில் எவராலாவது தொடமுடியுமா? 

உனக்கு  பிடித்த பாடகன்,   நீ விரும்புவதை  என்னை மறந்து நான்  பாடுகிறேன் என்ற பெருமை, கர்வத்தோடு கூடிய  ஆனந்தம் தலைக்கேறி  கூத்தாடுகிறேன், பாடுகிறேன்.  கிருஷ்ணா,  நீ   என் ஆருயிர்த் தோழன்   என்று  மகிழ்ந்து,  நீ தந்த  உரிமையோடு உன்னை  நினைத்தாலே   நீ  இனிக்கிறாய் கிருஷ்ணா  ''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...