Monday, June 22, 2020

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J K  SIVAN 

           

Dinamalar book review.


                   மாம்பழ குழந்தை

செய்திகள் எந்த காலத்திலும் பரவுவதில் கொஞ்சமும் வேகத்தை குறைத்துக் கொண்டதில்லை. எவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் அடையுமோ அவ்வளவு வேகமாக பரவியது.    

தந்தி அடித்து செயதிகளை சீக்கிரம்  பரப்பினோம். ஒவ்வொரு எழுத்துக்கும் காசு உண்டு. ஆகவே எவ்வளவு குறைத்து  ''கண்டேன் சீதையை''  மாதிரி அனுப்புகிறோமோ அவ்வளவு காசு குறைவாக கட்டவேண்டும்.  தந்தியை காட்டிலும் இன்னொரு வசதி ஆதிகாலத்திலிருந்து காசு கொடுக்காமலே, வார்த்தைகள் அளவில்லாமல் மாறி மாறி வெகு சீக்கிரம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இன்னொரு இடத்துக்கு பரப்பி வருகிறோம்.   அதுவும் ஒருவகை தந்தி ஆனால்  வசதியாக காசுகொடுக்காத  தந்தி  என்பதால்  அதன் பெயர் வதந்தி.

துவாரகையில் யுதிஷ்டிரன் அனுப்பிய தூதுவன் கிருஷ்ணன் அரண்மனையில் கிருஷ்ணனைச் சந்தித்தான். சேதி அறிந்த கிருஷ்ணன் உடனே இந்திரபிரஸ்தம் விரைந்தான். அத்தை குந்தியை வணங்கிவிட்டு பாண்டவர்களோடு பேச உட்கார்ந்தான். நண்பனைக் கண்டதில் அர்ஜுனனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

''கிருஷ்ணா, ராஜசூய யாகம் நடத்துவது எளிதல்ல. உனக்கே தெரியும். மிகவும் சக்தி வாய்ந்த எல்லா ராஜாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பைப் பெற்ற ஒருவனால் தான் அது நிறைவேறும் எனவே தான் .உன்னைக் கண்டு உன் ஆலோசனையின் படி நடப்பதென்று நாங்கள் தீர்மானித்தோம். தம்பிகள்  அர்ஜுனன் பீமன், நகுல சகாதேவர்கள் கட்டாயம் ராஜசூய யாகம் நடத்தவேண்டும் என்று அபிப்ராயப்படுகிறார்கள். எனக்கென்னவோ நீ சொன்னால் தான் அதற்கு நான் ஒப்புதல் தெரிவிப்பேன்.'' என்றான் யுதிஷ்டிரன்.

''யுதிஷ்டிரா , இதிலென்ன உனக்கு சந்தேகம். நீ எல்லா விதத்திலும் ராஜசூய யாகம் நடத்த யோக்யதாம்சம் கொண்டவன். ஆனால்.....

''கிருஷ்ணா என்ன ஆனால் என்று ஏதோ சிந்திக்கிறாய்? என்றான் யுதிஷ்டிரன்.

ஒருவனால் மட்டுமே இடர் ஏற்படலாம். அவன் சாதாரணமானவன் அல்ல. மிக சக்தி வாய்ந்தவன்.
மதக நாட்டு அரசன் ஜராசந்தன். அசுர பலம் வாய்ந்தவன். ஏனைய அரசர்களை தன் பிடியில் வைத்திருப் பவன். அவன் இரு பெண்களைத் தான் கம்சன் மணந்தான். கம்சனை நான் கொன்றதிலிருந்து ஜராசந்தன் என்னை எதிரியாகவே பார்ப்பவன். அவனை வெல்வது முடியாத காரியம்.

சிசுபாலன் என்கிற அரசனும் அவனுடன் சேர்ந்து விட்டான். இருவரின் பலமும் சேர்ந்து மற்ற ராஜாக்களை சக்தியற்றவர்களாக அவர்களுக்கு அடிமையாக்கிவிட்டிருக்கிறது. போஜர்களும் அவனை அண்டி தான் வாழ்கிறார்கள். அங்கு ருக்மி என்பவன் சிசுபாலன் நண்பன்.

எனவே அந்த தீயவர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து மேலும் பலமடைந்து விட்டது. எஞ்சிய யாதவர்களைக் காப்பாற்ற நாங்கள் மதுராவை விட்டு துவாரகைக்கு சென்றோம் .ரைவத பர்வதங்களுக்கு அப்பால் குசஸ்தாலியில் ஒரு கோட்டை கட்டிக்கொண்டோம்.

''யுதிஷ்டிரா, உனக்கு நான்  எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் ஜராசந்தன் இருக்கும் வரை,  உன் ராஜசூய யாக கனவு பலிதமாகாது. நூறு அரசர்களின் தலையை யாகத்தில் பலியிட்டு மேலும் பலம் பெற ஜராசந்தன் மும்முரமாக இருக்கிறான். அவனால் சிறைபட்ட 86 அரசர்களை உயிர் தப்ப வைக்க வேண்டாத முதலில் அத்யாவசியம். இன்னும் 14 அரசர்களை அவன் சிறைபிடித்தால் யாகம் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் ஒரு அழிக்கமுடியாத சக்தி என்பதை நினைவு கொள்' என்று சொல்லி நிறுத்தினான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா,   நீ சொல்வது புரிகிறது. ஜராசந்தனின் பலத்தை நீ மிகவும் கவனத்தோடு எடை  போடு வதிலிருந்து என்னால் அவன் சக்தியை அறிந்துகொள்ளமுடிகிறது. நீயோ, பலராமனோ, பீமனோ, அர்ஜுனனோ கொல்ல முடியாத பலசாலியா அவன்?''

பீமன் குறிக்கிட்டு, ''அண்ணா,   கிருஷ்ணனின் சமயோசிதம், என்னுடைய பலம், அர்ஜுனனின் வீரம் இதால் மகத தேச அரசன் ஜராசந்தனை முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் '' என்றான்.

விரக்தியுடன் யுதிஷ்டிரன் தலை அசைத்தான். ' கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டவுடன் நமது தந்தை பாண்டுவின் கனவு, இந்த 'ராஜசூய யாகம் நிறைவேறாது என்று தான் எனக்கு தோன்றுகிறது.''

''அண்ணா, தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது என் கடமை. நான் வீரனென்று பெயர் பெற்று என்ன பயன். என் வில்லின் சக்தியால் அவனைக் கொன்று உங்களுக்கு ராஜசூய யாகத்தில் ராஜாதி ராஜன், சக்கரவர்த்தி என்ற பெருமை பெறுவதற்கு என் உயிரைப் பணயம் வைத்தாலாவது பாடு படுவேன்'' என்று அர்ஜுனன் சபதமிட்டான்.

''அர்ஜுனா , நீ சொல்வதை கேட்பதற்கு தான் சந்தோஷம் தருகிறது. ஜராசந்தன் படை வலிமை முன்பு உனது படைபலம் போதாது. தெரிந்து ஒரு வலிய சக்தியிடம் மோதி தோற்கக் கூடாது. வேறு வழியில் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். எதிரி ஜராசந்தனைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் மோதுவது மடமை.'' என்றான் கிருஷ்ணன்.

''ஜராசந்தனைப் பற்றி அப்படி என்ன இருக்கிறது தெரிந்துகொள்ள'' என்றான் யுதிஷ்டிரன்

''ஜராசந்தன் யார், அவன் சக்தி, பலம் என்ன, ஏன் எங்களால் அவன் இன்னும் கொல்லப் படவில்லை என்று சொல்கிறேன் கேள்'' என்றான் கிருஷ்ணன் :

மகதநாட்டு அரசன் வ்ரிஹத்ரதன். காசி ராஜனின் பெண்கள் இரட்டையரை மணந்தான். இருவரையும் பாரபட்சமின்றி அன்போடு நடத்துவதாக வாக்களித்தான். சகல பலமும் அதிகாரமும் இருந்தும் அவனுக்கு ஒரு குழந்தை இல்லை. அந்த தேசத்துக்கு கௌதமர் பரம்பரையைச் சேர்ந்த சந்தகௌசிகர் என்ற ரிஷி வந்து ஒரு மாமரத்தின் அடியில் தங்கியிருக்கிறார் என்று அறிந்தான். இரு மனைவியரோடு அவரை சென்று தரிசித்தான். தன் பிள்ளையில்லா மனக்  குறையை சொன்னான்.

முனிவர் கண் மூடி மந்திரம் உச்சாடனம் செய்து த்யானித்தார். ''சொத்'' என்று அந்த மாமரத்தின் மேலிருந்து ஒரு முழு மாம்பழம்  எந்த அணிலும், பறவையும் கடித்தோ, கொத்தியோ குறையில்லாமல் , முழுசாக தங்க நிறத்தில் அவர் மடியில் விழுந்தது.

''அரசே இனி கவலை விடு. இந்த பழத்தின் மூலம் இணையற்ற பலமும் சக்தியும் கொண்ட ஒரு மகன் உனக்கு பிறப்பான்'' என்று அந்த பழத்தை ராஜாவிடம் கொடுத்தார்..

ராஜாவும் பழத்தை இருபாகமாக்கி சரி சமமாக இரு மனைவியருக்கும் அளித்து அவர்களும் கருவுற்று ஒவ்வொருத்தியும் பாதி தலை பாதி உடம்போடு குழந்தை பெற்றாள். இந்த அரை குறைப் பிரசவ குழந்தைகளை தாதிகள் துணியில் சுற்றி காட்டில் எறிந்துவிட்டனர். அந்த காட்டில் நரமாமிசம் உண்ணும் ஒரு ராக்ஷசி ஜரா என்பவள் கண்ணில் இந்த இரு பாதி குழந்தைகள் பட்டு அவள் அவற்றை உண்ண இரு பாதியையும் ஒன்றாக சேர்த்து கட்டினாள் . அந்த மாமிச பிண்டங்களுக்கு உயிர் இருந்ததால் அவள்  அவற்றை இணைத்ததும் ஒரு முழு குழந்தையாக மாறிவிட்டது. கனமான அந்த குழந்தையை அவளால் தூக்கிச் செல்ல முடியவில்லை. அது ஒரு பலத்த கர்ஜனை செய்தது.  அரண்மனையிலும் கேட்டது. அரண்மனையில் இருந்து குரல் கேட்ட திசைக்கு ஓடி வந்தார்கள். ஜரா குழந்தையை அரசனிடம் ''இது உன் குழந்தை என்று சொல்லி'' கொடுத்தாள். அவனும் மகிழ்ந்து ''ஜராவினால் ஒன்று சேர்க்கப் பட்ட'''என்ற பொருள் படும் ஜரா- சந்தன் என்ற பெயரை சூட்டினான்.

சந்த கௌசிக ரிஷி மீண்டும் ஒருமுறை மகத தேசம் வந்தபோது ராஜா நன்றியோடு அவரைச்சென்று தரிசித்தான். ''தங்கள் அருளால் எனக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன் எதிர்காலம் பற்றி கூறவேண்டும் '' என்று கேட்டான்.

''உன் மகன் எவரும் வெல்லமுடியாத பலம் கொண்டவன். அவன் எல்லா அரசர்களையும் வென்று சிறை பிடிக்கப்  போகிறான். அவனது சக்தி ருத்ரன் சக்தி போன்றது. வினோதமான பலசாலி.'' என்று கூறி விடைபெற்றார்.

ராஜா பல ஆண்டுகள் சென்று ஜராசந்தனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வானப்ரஸ்தம் சென்றான். ஜராசந்தன் பல அரசர்களை கொன்று வென்று மிகவும் பலம் பொருந்திய ஒரு சக்தியாக மாறிவிட்டான். அவனது இரு பெண்களை கம்சனுக்கு மணமுடித்தான். மதுரா அவன் வசம் வந்தது. நான் கம்சனை வதம் செய்ததில் ஜராசந்தன் என் முதல் எதிரியானான்.'' என்று முடித்தான் கிருஷ்ணன்

அமைதியாக எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு கணம் யோசித்த கிருஷ்ணன் தொடர்ந்தான். கிருஷ்ணன் முகத்தில் ஒரு க்ஷண காலம் கோபம் உறுதி  ஏதோ முடிவு  எல்லாம் ஒரு சமயம் தோன்றியது.

''யுதிஷ்டிரா, ஒன்று நிச்சயமாக தெரிகிறது. ஜராசந்தன் முடியும் நேரம் வந்துவிட்டது. அவனைப்  போரில் யாராலும் வெல்ல முடியாது. என் மனதில் ஒரு திட்டம் உள்ளது. நான், பீமனுடனும் அர்ஜுனனுடனும் ஜராசந்தனை நேரில் சந்திக்க செல்லப் போகிறேன். உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் பீமனையும் அர்ஜுனனையும் என்னோடு அனுப்பு''

''அச்சுதா, கோவிந்தா, கேசவா என்ன சொல்கிறாய் நீ.     எங்களை வாழ்விக்க வந்த தெய்வமே. நீ சொல்லி நான் தட்டுவதா? நீ போடும் திட்டத்தில் ஜராசந்தன் மாய்ந்தான், எனக்கு ராஜசூய யாகம் வெற்றிதான் என்று தோன்றிவிட்டதே'' என்ன வேண்டுமோ ஆணையிடு,   நான் செய்கிறேன்'' என்றான் யுதிஷ்டிரன்.

இதைத் தொடர்ந்து மூன்று சனாதன  ஹிந்து  பிராமணர்கள் சூரிய, சந்திர, அக்னி ஸ்வரூபமாக பிரகாசத்துடன் மகத தேசத்தை நோக்கி நடந்தார்கள். வழியில் கண்டகி நதி மற்றும் , சரயு, கோசலநாடு மிதிலா எல்லாம் கடந்து கிழக்கே வெகுதூரம் நடந்தார்கள். கங்கை குறுக்கே வந்தது. அதையும் கடந்து மகத நாடு வந்து சேர்ந்தார்கள்.

'பார்த்தா, பார்த்தாயா மகத நாட்டின் செழிப்பை?'' என்றான் கிருஷ்ணன். கௌதமர் காலத்தில் அங்க வங்க அரசர்கள் எல்லோரும் இங்கு குழுமி இருந்தனர். இதெல்லாம் போதாதென்று ஜராசந்தன் மற்ற அரசர்களின் தேசங்கள் மீது கண்ணை வைக்கிறான். போகட்டும், பாவம், அவன் தான் இன்று தனது கடைசி நாளை அனுபவிக்கப்போகிறானே '' என பெருமூச்சு விட்டான் கிருஷ்ணன்.

அன்று ஜராசந்தனுடைய அரசவையில் பிராமணர்கள் சில அப சகுனங்களை கண்டனர். அவற்றை உடனே ஜராசந்தனுக்கு தெரிவித்தனர். ஜராசந்தன் கிலேசமுற்றான்.

அன்று மாலை  கோட்டை காவலன் ஜராசந்தனிடம்   வந்தான்.


 '' மஹாராஜா, யாரோ மூன்று வெளி ஊர் பிராமணர்கள் உங்களை காண விருப்பம் தெரிவிக்கிறார்கள். என்ன பதில் சொல்லவேண்டும்?'' என்றான்.

''வரச்சொல் ''     மூன்று பிராமணர்களையும்  ஜராசந்தன் எழுந்து  உபசரித்தான்.

ஒருவன் பேசினான்:  ''அரசே,   இவர்கள்  இன்று நள்ளிரவு வரை மௌன விரதம் கொண்டிருக்கிறார்கள் பேச மாட்டார்கள். பிறகு தான் உன்னோடு அவசியம் பேசுவார்கள்''   என்றான். நள்ளிரவு வந்தது. ஜராசந்தன் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு தானே வந்தான்.     பார்ப்பதற்கு பிராமணர்களாக இருந்தும் அவர்களிடம் க்ஷத்ரியத் தன்மை இருந்ததை ஜராசந்தன் கவனித்தான்.

''நீங்கள் யார், என்ன வேண்டி இங்கு வந்தீர்கள்'' ?

''அரசே    ஸ்நாதக பிராமணர்கள் மற்ற க்ஷத்ரிய, வைஸ்ய தர்மங்களும் அனுசரிப்பவர்கள். இங்கு அவர்கள் க்ஷத்ரிய தர்மத்தை அனுஷ்டிக்க வந்துள்ளார்கள். அவர்களை  நீ  விழுந்து வணங்க தேவையில்லை. உன்னிடம் சில விஷயங்களை   ஆலோசனை செய்ய இவர்கள் வந்துள்ளனர். இங்கு பல க்ஷத்ரியர்களை நீ அடைத்து சிறை செய்து வைத்திருப்பது க்ஷத்ரிய தர்மத்துக்கு விரோதமானது.அவர்களை யாகத்தில் ருத்ரனுக்கு பலி கொடுக்க முயற்சிப்பது தவறு. அதை தட்டிக் கேட்க வந்திருக்கும் நாங்கள் மூவரும் பிராமணர்கள் அல்ல. க்ஷத்ரியர்களே. நான் ஹ்ருஷிகேசன், இவர்கள் இருவரும் பாண்டு புத்ரர்கள், அர்ஜுனன், பீமன். உடனே அந்த அரசர்களை விடுவித்தால் உனக்கு நல்லது ''

''கிருஷ்ணா,   நீ சொல்வது தப்பு. இந்த அரசர்களை யுத்தத்தில் வென்று, அவர்கள் என்னிடம் தோற்று சிறை பட்டிருக்கிறார்கள். இதுவும் க்ஷத்ரிய தர்மம் தான். இவர்களை விடுதலை செய்ய முடியாது. உங்களோடும் தனித் தனியாகவோ, சேர்ந்தோ நான் யுத்தம் புரிந்து உங்களையும் தோற்கடித்து இங்கேயே இப்போதே சிறை  படுத்துவேன். யாகத்தில் பலி கொடுக்க நீங்களும்  எனக்கு வேண்டும். நீங்கள் தயாரா?'' என்றான் ஜராசந்தன்.

''உன் சவாலை ஏற்கிறோம். எங்களில் யாருடன் நீ யுத்தம் செய்ய விரும்புகிறாய்'' என்று கிருஷ்ணன் கேட்க ஜராசந்தனின் பார்வை பீமனின் மீது சென்றது.

'' இவன் பார்ப்பதற்கு வாட்ட சட்டமாக இருக்கிறான். மற்ற இருவர் எனக்கு சரியான ஜோடி இல்லை  என தோன்றுகிறது . எனவே இந்த பீமசேனனோடு மல்யுத்தம் புரிகிறேன். முதலில் அவனைக் கொல்கிறேன். பிறகு நீங்கள்'

ஜராசந்தன் தன்னை யுத்தத்துக்கு தயார் செய்துகொண்டு பீமனை நெருங்கினான். ''நீ தான் எனக்கு கொஞ்சமாவது சமமாக தோன்றுகிறாய். வா என்னோடு யுத்தம் செய்ய. நமது பலத்தை பரிட்சித்து பார்த்து விடுவோம்'' என்று மல்யுத்தத்துக்கு அழைத்தான்.

அவர்களது யுத்தம் இரு பலம் கொண்ட மத யானைகள் பிளிறிக்கொண்டு மோதினதை போல் இருந்தது .

இருவரின் மல்யுத்தத்தில் பிரதானமான ப்ரிஷ்ட பங்க யுத்தத்தில் வீறிட்ட சப்தங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கினார், வீசி எறிந்தார்கள், மேலே சுற்றி கீழே அடித்து தள்ளினார்கள். பார்ப்பவர்கள் கதி கலங்கி னார்கள். பேச்சின்றி சிலை போல் நின்றார்கள். இரவு பகலாக வெற்றி தோல்வியின்றி யுத்தம் தொடர்ந்தது.

முடிவில் ஜராசந்தனை தனது முழங்கால் மீது வைத்து அவன் முதுகை இரண்டாக பிளந்து அவன் எலும்புகள் முறிக்கப்பட்டு அவன் வலியினால் பயங்கர கூச்சலுடன் மாண்டான்.

(நான் இதுவரை படித்து கேள்விப்பட்ட விஷயம் ஒன்று முக்யமாக இங்கு காணோம். ஜராசந்தனை இரு கூராக பிளந்து அவனை கால் மாடு தலைமாடாக பிரித்து போடும் வரை அவனுக்கு உயிர் இருந்து கொண்டே இருந்தது என்று தான் கேள்விப்பட்டோம். ஆனால் லக்ஷம் ஸ்லோகங்களை படித்து எழுதிய பி.சி. ராய் 19ம் நூற்றாண்டிலேயே ஏன் இதை சொல்லவில்லை? எப்படி மாண்டாலென்ன. ஜராசந்தன் இனி பாரதத்தில் பங்கேற்க முடியாது. கதையில் வரமாட்டான். கிருஷ்ணன் பீமனுக்கு ரகசியத்தை சொல்லிகொடுத்து ஒரு புல்லை எடுத்து இரண்டாக வெட்டி ஜாடை காட்டி அதனால் பீமன் ஜராசந்தனை கொன்றதாக கிருஷ்ணனுக்கு இதனால் சேரும் புகழ் எழுதியவருக்கோ சொன்னவருக்கோ படித்தவருக்கோ அல்லது கிருஷ்ணனுக்கோ போகட்டும். அதனால் கிருஷ்ணனுக்கு அபவாதம் நம்மால் வேண்டாம் .).

பீமனும் அர்ஜுனனும் ஜராசந்தனால் சிறை பிடிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருந்த 86 அரசர்களையும் விடுவித்து அவர்களால் போற்றப் பட்டனர். பிறகு வெற்றி வீரர்களாக கிருஷ்ணன் ஜராசந்தனின் தேவலோக குதிரைகள் பூட்டப்பட்ட தேரை ஒட்ட, ( இங்கும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தான் தேரோட்டினான்!!) மூவரும் ஜராசந்தனின் தலை நகரமான கிரிவ்ரஜத்திலிருந்து திரும்பினார்கள்.

ஜராசந்தன் சிறையிலிருந்து விடுபட்ட அரசர்கள் அனைவரும் கிருஷ்ணனிடமிருந்து யுதிஷ்டிரன் நடத்தப்போகும் ராஜசூய யாகத்தை பற்றி அறிந்து மகிழ்ந்து தங்களது ஒத்துழைப்பை தர வாக்களித்தனர். ஜராசந்தனின் மகன் சகாதேவன் கிருஷ்ணனை வணங்கி ஆசியோடு மகத தேச அரசனானான்.

இந்த்ரப்ரஸ்தம் அடைந்த மூவருக்கும் யுதிஷ்டிரன் மகத்தான வரவேற்பு கொடுத்து இனி ராஜசூய யாகத்தில் தன்னை எதிர்க்க எவரும் இல்லை என்று பெருமூச்சு விட்டான். ஏற்பாடுகள் நடந்தன. கிருஷ்ணன் அவர்களிடமிருந்து விடை பெற்று துவாரகை திரும்பினான்.

THOSE INTERESTED IN THE AINDHAM VEDHAM TWO VOLUMES  MAY CONTACT ME  ON MY WHATSAPP NO. 9840279080 FOR DETAILS.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...