Saturday, June 13, 2020

PESUM DEIVAM

பேசும் தெய்வம்  J K  SIVAN 

                                    நீ  இத்தாலியை  சேர்ந்தவளா?

டாக்டர்  R  நாகசாமியை தெரியாதவர்கள்  கல்வெட்டுகள்,  புதை பொருள் ஆராய்ச்சி  பற்றிய செயதிகள் தெரியாதவர்கள்.நம்மால் படிக்கமுடியாத சோழர் காலத்து கல்வெட்டு  எழுத்துகளை  ஏதோ குமுதம் ஆனந்த விகடன் படிப்பது போல்  படித்து சொல்பவர். மஹாபெரியவாளிடம் ரொம்ப பக்தி.  தமிழர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை.

ஸ்ரீ  நாகசாமியை நான் நங்கநல்லூரில் பார்த்திருக்கிறேன்.  40-45 வருஷங்களுக்கு முன்பு  ஒருவர் வீடுகட்ட தான் வாங்கிய நிலத்தை தூண்டினார். அவர் வீடுகட்டுவதற்கு பதிலாக  ஏற்கனவே  பல்லவன் ஒருவன் அந்த மனையில்  கட்டி வைத்திருந்த  சிவன் கோவில் ஒன்று தலையை  வெளியே நீட்டியது.   ஆச்சர்யத்துடன் எல்லோரும்  சூழ்ந்து நிற்க  நாகசாமி இரவு ஒருநாள் அந்த ஆலயத்தில் இருந்த கல்வெட்டு என்ன சொல்கிறது என்று எங்கள் எல்லோருக்கும் சொன்னார்.  அந்த ஆலயம் தான்  ராஜகோபுரத்துடன் நங்கநல்லூர் தெற்கு பகுதியில் இன்று நிற்கும்  தர்மலிங்கேஸ்வரர் கோவில்.   நாகசாமி சார்  சொன்ன விஷயம் ஒன்றை என் நண்பர்  மந்தைவெளி ரமணி ஸார்  எனக்கு சமீபத்தில் அனுப்பியதின் சாரம் இனி வருவது.

காஞ்சி மடத்தில்  மகா பெரியவா தங்கியிருந்த காலத்தில் ஒருநாள்  என்ன நடந்தது தெரியுமா?
அன்று காலையில்தான்  பழைய  ஜனாதிபதி  வெங்கட்ராமன்  பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு மனதுக்கு திருப்தியாக  பெரியவாளுடைய  ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு சென்றார்.  வழக்கம்போல் பூஜை, நித்யானுஷ்டானம். எண்ணற்ற  பக்தர்கள் கூட்டம்.  நடுவே சற்று நேரம் பெரியவாளுக்கு ஒய்வு. மறுபடியும் பக்தர்களுக்கு தரிசனம்....... சிலரிடம் பேச்சு. எல்லோருக்கும் அன்புடன் பிரசாதம்..

சாயந்திரம்  நான்கு மணியிருக்கலாம் .நாகசாமி அன்று காஞ்சியில் மடத்தில் தரிசனத்துக்கு வந்திருந்தார்.  அவரிடம்  மடத்து அதிகாரி ஒருவர் :    

''  நாகசாமி ஸார் , இன்னும் கொஞ்ச நேரத்திலே   பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள்.  நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் 

''ஆஹா  இருக்கிறேன்'' 

சில நிமிடங்கலில்  வெள்ளைக்கார  பேராசிரியர்கள் வந்தனர். மடத்து அதிகாரி  அவர்களை வரவேற்று பெரியவாளிடம் அவர்கள் வரவைப் பற்றி சொல்ல உள்ளே சென்றவர் திரும்பிவந்தார். 

 “''நாகசாமி ஸார்,  பெரியவா  பிரெஞ்சு  பண்டிதர்களை உள்ளே வரச்சொன்னவர்  நீங்கள் இருப்பதை பற்றி சொன்னேன்.   உங்களையும் கையோடு கூட்டிண்டு வா என்று சொன்னார்' 

ஸ்ரீ  நாகசாமி சொல்வதை கேட்போம்: 

''மகிழ்ச்சியுடன்  பிரெஞ்சு காரர்களுடன் நானும்  உள்ளே  சென்றேன்.  பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள்.  தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார்.   எனக்கு பிரென்ச் தெரியும்.   

''அவர்கள் சொல்வதை எனக்கு  ஆங்கிலத்தில் மொழில் பெயர்த்து சொல்லு''

வந்தவர்களில் மூவர் பெண்கள்;  இருவர் ஆண்கள்.  அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருந்ததார்களாம்.  மீண்டும்  பெரியவாளை தரிசிக்க  ஆர்வமாம், ஆசையாம், ஆவலாம் ''

பெரியவாள் சிரித்துக் கொண்டே  ''ஒவ்வொருத்தர் ஒவ்வொருவருடைய பெயரையும்,   அவர்கள் என்ன என்ன டிபார்ட்மென்ட்,  எதிலே  தேர்ச்சி பெற்றவர்கள்  என்று  கேட்டு சொல்லு ''.

அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறியதை நிதானமாக   பெரியவாளிடம்  சொன்னேன்.பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து,  

“நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார்.  அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர்.  அங்கு பேராசிரியர்.  அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன்.  அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது

 “ஓ ... ஆமாம்.   எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” 

''அப்படின்னா,   பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க்  என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா?''  என்று பெரியவா கேட்டதும்  அந்த பெண்மணி உட்பட மற்ற அங்கிருந்த எங்கள் அனைவருக்கும்  ஆச்சர்யம்..

 “ஆமாம்” என்றாள்  அந்த பெண்.   இதற்கு முன்   அவள்  இந்தியாவுக்கு வந்ததே இல்லை.  அவளை யாருக்கும் தெரியாது. அவளுக்கும் இங்கே யாரையும் தெரியாது.  எப்படி பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும்,  இந்தப் பகுதி தான் என்று துல்லியமாக  வரையறுத்துக் கூறுகிறார்?   ஆச்சர்யத்தை என்னால்  கட்டுப்படுத்தவே முடியவில்லை. 

பெரியவா எங்கள் எல்லோரையும் ஒரு முறை  பார்த்தவர் எங்கள்  முகத்தில்  பிரதிபலித்த ஆச்சர்யத்தை கவனித்து  தானே  விளக்கினார்: 

 “இத்தாலிய நாட்டினருக்கும்,  பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத்   தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும்.  இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்”  என்றார்

“ஆமாம்!  ஆமாம்!” என்று  பரம சந்தோஷத்தில்  துள்ளி குதித்தாள் அந்த பெண். 

காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு கிராம பகுதியிலிருக்கும் பெரியவாள்,  உலகில் எங்கிருந்து யார் வந்தாலும்,  எம்மொழி பேசினாலும்,  இந்த பகுதியிலிருந்து வந்தவர்,  இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது,  வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து  இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்''

என்று சொன்ன  டாக்டர் நாகசாமியின் வாயில் ஒரு கிலோ சர்க்கரை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக போடுவோமா? நமக்கு தெரியுமே   முக்காலமும் அறிந்த நடமாடும் தெய்வத்திற்கு தெரியாதது ஒன்றுமில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...