Tuesday, June 30, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K  SIVAN   

           77   நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

 இன்னும்  நான்கு  உதாரண புருஷர்களை  திருக் கோளூர்  பெண்பிள்ளைசொல்லி அறியப்போகிறோம்.  81 நாட்கள் நாம் திருக்கோளூர் பெண் பிள்ளையோடு  பழகிய  இனிய அனுபவம் நிறைவுக்கு வரும். 

 அப்புறம்  இந்த தொடர் ஒரு   புத்தகமாக உரு மாறி  இலவசமாக வேண்டுவோர்க்கு அளிக்கப்படும்.  இந்த கைங்கர்யம்  ஒருவராலா, பலராலா என்பது   கிருஷ்ணன் மட்டுமே அறிவான்.   யார் முன்வரப்போகிறார்கள்.?  நிச்சயம்  200 பக்கங்கள் வரும் என்று தோன்று
கிறது. ஆயிரம் பிரதிகள் குறைந்தது
அச்சிடுவதன் மூலம்  செலவினம்   குறையும். 

இதுவரை  30 புத்தகங்கள் இது போலவே  நண்பர்களின்,  அன்பர்களின்,   பங்கேற்பால் எங்கள்  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது.   

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகளை  அச்சிட்டு புத்தகமாக்கி  வெளியிட நன்கொடை உதவியர்கள் பெயர் புத்தகத்தில் நன்றியோடு அறிவிக்கப்படும்.  அது தான் எங்கள் வழக்கம்.    விருப்பமுள்ளவர்கள்  என்னை அணுகலாம்; நன்றி   ஜே .கே.  சிவன்.   வாட்ஸாப்ப் 9840279080
+++ 

இன்றைக்கு  திருக்கோளூர் பெண்பிள்ளை உதாரணமாக  காட்டுவது காசியில் வாழ்ந்த ஒருவனைப் பற்றி.  இந்தப்  பெண் ஆயிரம் வருஷங்களுக்கு முன்  எப்போது  எப்படி காசியில் இருப்பவனை தெரிந்து கொண்டி ருக்கிறாள்.? அவள் சொல்வதெல்லாம் ஆச்சர்யமாக அல்லவோ இருக்கிறது?
வடக்கே  காசி மா நகரத்தில்  ஒரு வீர வைணவன் இருந்தான்.  அவன் பெயர் சிங்கன். நாராயண பக்தன். அவன் நீச்சலில் சிறந்த மனித மீன்.    கடல் போன்ற கங்கையின் ஒருகரையிலிருந்து மறு கரைக்கு அனாயாசமாக  நீந்தி செல்வது எளிதல்ல. கங்கையில் நீந்தாத நாட்களில் ஒரு தாமரைக்குளத்தில்  நீந்துவான். குளத்தில் நீர்மேல் மிதக்கும் தாமரை மலர்களை நீந்திச்சென்று பறித்து    எடுத்து வந்து  நாராயணனை அலங்கரிப்பது அவனுக்கு பிடித்த அன்றாட வழிபாடுகளில் ஒன்று.  
நீச்சலில் தன்னை வெல்லக்கூடியவர் எவரும் இல்லை என்ற   மமதை , அகம்பாவம்,  அவனுக்குள்  நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. 
வல்லவனுக்கும்  ஒரு நாள் சோதனை வரும்.  நாரயணன்  அந்த  நாளை  தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது.  ஆனைக்கும்  அடி  சறுக்கும் என்பார்களே அது போல், அவன் போறாத  வேளை  ஒரு நாள்   காசி சிங்கன்   கங்கையில் குதித்து  ஒரு கரையிலிருந்து அடுத்த கரைக்கு நீந்தினான்.  அந்த   நாள்  கரையில் நின்று அவனை எல்லோரும் வேடிக்கை பார்ப்பது அவனுக்கு பெருமையாக இருந்தது.   அன்று என்றுமில்லாமல்  வெள்ளத்தின் வேகம் அதிகம். நீரோட்டம் வேறு திசையில் பலமாக  இழுத்தது.   சுழலில் வகையாக சிக்கிக்கொண்டான்.  கங்கையின் நடுவே  நீரின்  இழுப்பு சக்திக்கு முன் சிங்கனின்  நீச்சல் சக்தி ஈடுகொடுக்க முடியவில்லை.    நீரில் அடித்து செல்லப் பட்டான்.  
 முடிந்தவரை நீந்தியவன்  கொஞ்சம் கொஞ்சமாக சக்தியை இழந்து முழுக ஆரம்பித்தான்.  ''ஆஹா  இனி தப்புவது இயலாத காரியம்.  என் முயற்சி தோற்றுவிட்டது.  நாராயணா  உன் அருள் இருந்தால் தான் நான் தப்ப முடியும்''   என்று  சிங்கன்  மனம் வேண்டியது.
 கரையில் இருந்து  கவனித்தவர்கள்  அவன் தடுமாறுவதைப்  பார்த்து யாரும் கவலைப் படவில்லை. அவன் தான் நீச்சலில் வல்லவனாயிற்றே . ஏதோ வேடிக்கை காட்டுகிறான் என்று  பேசாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டார்கள்.  

''ஹே  நாராயணா,  என்  அகம்பாவம் என்னை இன்று இந்த இக்கட்டில் மாட்டிவிட்டது . இனி வீண் பெருமை அகம்பாவம், கர்வம் என்னிடம் இல்லை. எல்லாம்  இந்த நீரில் தலை முழுகி விட்டேன்.   இனி எதுவும்  உன் செயல் என  புரிந்து  கொண்டேன்.  பகவானே,  முன்பு ஒருமுறை  குளத்தில்  முதலையிடம் காலை கொடுத்து உயிர் தப்ப முயன்ற  கஜேந்திரன் நிலையில் நான் உள்ளேன்.  நான் மாட்டிக்கொண்ட  முதலை  என்   காலை அல்ல என் தலை  வரை  என்னை பிடித்து இழுக்கும் சுழல் .   இதிலிருந்து என்னை  உயிர் மீட்க உன் னால் தான் முடியும்.  உன்னை  முற்றிலும்   சரணடைகிறேன். நாராயணா, இனி  எந்த தவறும் செய்யமாட்டேன் என்னை காப்பாற்று''   என்று கதறினான்.  

ஆஹா  என்ன  ஆச்சர்யம்,  வெள்ளம் வேகம் குறைந்தது,  சுழலின் அழுத்தம்  சற்று  நேரத்தில் மிதமானது..   காற்று பலமாக  கரையை நோக்கி வீச நீரின் 
போக்கு கரையை நோக்கி அவனைப்  பிடித்துத்  தள்ள  சிங்கன் மெதுவாக நீந்தி கரை சென்றடைந்தான்.  அவன் அப்புறம் கங்கையில் நீந்துவதில்லை, குளத்தில்  தினமும்  நீந்தி தாமரை மலர் பறித்து தாமரைக்கண்ணனை  அலங்கரித்து வழிபட்டு  அவன் காலம் கழிந்தது.  

திருக்கோளூர் பெண்பிள்ளை உபயோகப் படுத்தும்  நீரோருகம் எனும்  சொல்  நீரில்  பிறந்து மலரும் தாமரைபுஷ்பத்தை குறிக்கும் சொல்.

அடேயப்பா,   திருக்கோளூர் பெண்பிள்ளை  ஆயிரம் வருஷத்துக்கு முன் தோன்றிய  அபூர்வ பெண். 

ராமானுஜருக்கு பதிலளித்த  திருக்கோளூர் பெண்பிள்ளை  அவரைப்பார்த்து 77வது  உதாரண புருஷனாக  மேலே சொன்ன   காசி வாழ்  சிங்கனை குறிப்பி டுகிறாள். 
இத்தனை வருஷம் எனக்கு  காசி சிங்கனைத் தெரியவே இல்லையே. அவள் மூலம் அல்லவோ  அறிந்து கண்டேன். உங்களுக்கும் சொல் கிறேன். 

''சுவாமி    நான்  என்ன  “காசியில் வாழ்ந்த   சிங்கனைப் போல   நாள் தோறும் மஹா விஷ்ணுவாகிய   ஸ்ரீமன்  நாராய ணனுக்கு  அலங்காரம்  செய்ய  தாமரைக்  குளத்தில் நீந்தி  அலர்ந்த அழகிய புதிய  தாமரை மலர் பறித்து  சூட்டி  அலங்கரித்தவளா?    அப்படி செய்ய முடியாவிட்டாலும் மனதால் ஒருவேளையும்  அப்படி  செய்ய நினைக்க கூட இல்லையே, நான் எந்த விதத்தில்  இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்  கோளூரில் வாழ  அருகதை உள்ளவள்?  என்கிறாள். 
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...