Tuesday, June 9, 2020

THIRUKKOLOOR PEN PILLAI



  திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்     J K   SIVAN

     

  69  கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!

யார்  இந்த  திருக்கோளூர் பெண்பிள்ளை?.  எந்த  வைஷ்ணவரின் கற்பனை பாத்திரம்? அல்லது அப்படி ஒரு பெண்மணி இருந்தாளா?   யாரோ  வைஷ்ணவர்  இந்த 81 உன்னத புருஷர்கள் ஸ்திரீகளை பற்றி உதாரணமாக  காட்ட  இப்படி ஒரு உத்தியை கையாண்டாரா ?  எனக்கு  எங்கு தேடியும் விபரம் இல்லை.  யாரும் எழுதாமல் தானாக இப்படி ஒரு சிறந்த  வைணவ நூல்  எப்படி  உருவாகும்? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்? ராமானுஜரை பார்த்து அந்த பெண் பேசுவது போல் உருவாக்கப்பட்டதால், அவர் காலத்திலோ  அதற்கு பின்னரோ  ஆயிரம்   வருஷங்களில் தான் இதை யாரோ  எழுதி இருக்கிறார்கள்?   அப்படி ஒரு பெண் இருந்தாளா?  அவள் இயற் பெயர் என்ன? திருக்கோளூர் பெண் பிள்ளை என்று யாரும் பெயர் வைத்துக் கொள்ள மாட்டார்களே.  நிஜ  பெயர் ஒன்று இருக்கவேண்டாமா?

பெரிய நம்பிகள், மஹா பூர்ணர், பூர்ணாச்சாரியார், பராங்குசதாசர்  என்று பல பெயர்கள் கொண்ட
வைஷ்ணவ ஆச்சாரியர், ராமானுஜரின் குரு.   '' நம்பி'' என்றால் எல்லா  நற்குணங்களுக்கும் உறைவிடம்  என்ற  அடையாளம்.  எம்பெருமானார்க்கு ஸம்ஸ்காரம்  செய்து வைத்ததால்  ''பெரிய''  நம்பிகள்.  மஹான் ஆளவந்தாரின் சிஷ்யன். 


ஆளவந்தார் எனும் யமுனாச்சார்யர்  ''ஸ்தோத்ர ரத்னத்தை''   பெரிய நம்பியிடம் கொடுத்து காஞ்சிக்கு அனுப்பி  ராமானுஜரை ஸ்ரீ ரங்கத்துக்கு அழைத்து  வர  பெரியநம்பிகள்  செல்கிறார். அதே நேரம்  காஞ்சிபுரத்தில் திருக்கச்சி நம்பிகள் ராமானுஜரை   ஸ்ரீ  ரங்கம் சென்று பெரிய நம்பிகளையும்    ஆளவந்தாரையும்  ஆச்சார்யனாக பற்றுக  என்று அனுப்ப, வழியில் மதுராந்தகத்தில் பெரியநம்பிகளும்  ராமானுஜரும்  ஏரிகாத்த  ராமர்  ஆலயத்தில் சந்திக்க   அங்கேயே  ராமானுஜருக்கு மகிழமரத்தடியில்  பஞ்ச ஸம்ஸ்காரம்  செய்வித்து ''ஆளவந்தார் திருவடிகளே தஞ்சம் என்று இரும்'' என  பெரியநம்பிகள்  உபதேசிக்கிறார்.   மதுராந்தகம்  ஏரி  காத்த  ராமன்  ஆலயத்தில் அந்த மகிழ மரம் இன்றும்  இருக்கிறது. பஞ்ச ஸம்ஸ்காரம்  செய்வித்த  இடம் இன்னும் இருக்கிறது.  நான் பார்த்து வணங்கி இருக்கிறேன்.  இதுவரை அறியாதவர்கள் அடுத்த முறை  மதுராந்தகம் செல்லும்போது இதை தவற விடவேண்டாம்.

ஆளவந்தாருக்கு பெரிய நம்பிகளை போல இன்னொரு சிஷ்யனும்  உண்டு.  அவர்  பெயர்  மாறனேரி நம்பி. உழவுத்தொழில்   செய்யும் விவசாய குடும்பம்.  சடகோப'' மாறன்'' என்ற பெயரை உடைய நம்மாழ்வாருக்கு நிகரானவர்  அவர்  என்று  கருதி,  அவருக்கு  ''மாறன் நேர் (இணையான) நம்பி''  என்று பெயர் சூட்டினதே  ஆளவந்தார் தான்.    இதற்கு  ஒரு காரணம்  உண்டு.  


ஒருநாள்  சிஷ்யர்களோடு  வைணவ க்ஷேத்ரங்கள் சென்று   விசிஷ்டாத்வைத  சித்தாந்தத்தை  பரப்பிக்கொண்டு செல்லும்போது வழியே  ஒரு  வயலில் உழவர் ஒருவர் கழனியில்  உழவு  செய்து கொண்டு  சேற்றில் நிற்பதை காண்கிறார்.    அப்போது அந்த உழவர்  தனது கரங்களை உயர்த்தி பெருமாளை வணங்கி துவாதச நாமாக்களை   சொல்லியவாறு   காலை உணவுக்கு பதிலாக  கழனி  பாத்தியில்  ஓடும்  சேற்று நீரை,  மண்ணைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்ததை   பார்த்து அதிசயிக்கிறார் ஆளவந்தார்.

உடன் இருந்த  பெரிய நம்பி  மாறனேரி நம்பியான அந்த உழவரிடம்   ''ஏன் இப்படி   மண்ணோடு கலந்த சேற்றுநீரை உண்கிறீர்கள் ? என்கிறார்.    

."மண்ணால் ஆன உடலுக்கு மண்ணை இடுகிறேன்' எனச்  சொல்லி.  ''கண்ணனும் மண்ணை உண்டவன்  தானே '' என்கிறார் மாறனேரி நம்பி. 
   அவரை  ரொம்ப  பிடித்து விட்டது ஆளவந்தாருக்கு.   மாறனேரி
  நம்பிக்கு பஞ்ச சமஸ்காரம் செய்வித்து வைணவ சித்தாந்தம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பகவத் கீதை முதலிய சகல வேத சாத்திரங்களை உபதேசம் செய்தார் ஆளவந்தார். நம்பியும் அனைத்தையும் கற்றுத் தெளிந்து சிறந்த ஞானியாக விளங்கினார். பெரிய நம்பியும் மாறனேரி  நம்பியும் குருபக்தியிலும் குருவிற்கு சேவை புரிவதிலும், குருவிடம் இருந்து கற்றுக்கொள்வதிலும் என அனைத்தையும் ஒன்றாகவே செய்து, குல பேதம் பாராது நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

 ஆளவந்தார் ராஜபிளவை நோயினால் அவதியுற்றபோது, மாறனேரி நம்பிகள்,  உபதேசங்களை கேட்டு வாங்குவதைப் போல்   குருவின்  ராஜபிளவை நோயையும், குருவின் வலியினையும்  தான்  வாங்கிக் கொண்டார்.   அதெல்லாம் அந்தக்  காலத்தில்  முடியும் போல் இருக்கிறது. 

சரித்திர புத்தகத்தில்  பாபர் தனது மகன் ஹுமாயூனின்  நோயை தான் பெற்றுக்கொண்டு  ஹுமாயுன் உயிர் பிழைத்தார் என்று  எட்டாம் வகுப்பில் படித்திருக்கிறேன். 

ஆளவந்தாருக்கு பணிவிடைகள் செய்து,   மாரனேரி   நம்பியும்  அவரிடமிருந்து பெற்ற  ராஜ பிளவை நோயினால் அவதியுற்றார்.   அப்போதெல்லாம்  சரியான ரண சிகிச்சை இல்லை. ராஜ பிளவையில்  அவதியுற்றவர்  மரணத்தை தவிர்க்க முடியாத நிலைமை.   அதுவரை  அவருடைய  புண்ணைக் கழுவி , மருந்திட்டு  அவரை பராமரித்து உணவளித்தவர் பெரிய நம்பி.  சிறந்த ப்ரம்ம ஞானியான  மாறனேரி நம்பிகள்  இறுதி காலத்தில், பெரிய நம்பியிடம்,   ''நண்பரே,     நமது  குருநாதரின்  இராஜபிளவை நோயை   நான் குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டதால்   எனது உடலும் குருப்பிரசாதம் ஆகும். அதனை வைணவ  ஸம்ப்ரதாயப்படி தான்   அந்திம கிரியைகள் செய்து மரியாதையோடு கரை சேர்க்கவேண்டும்.  எனது இறுதி சடங்குகளை   நண்பா,  நீயே  பொறுப்பேற்று  செய்.”  என்றார்.

 அவ்வாறே, மாறனேறி நம்பி மறைந்த  பின்  பெரிய நம்பியே, அவருக்கு இறுதி சடங்குகளை செய்தார்.   வைணவர்கள்   ஆச்சார்யன்   குல வழக்கத்தை  மீறி வேறு  எவருக்கோ இறுதி சடங்குகளை செய்ததால்  பெரிய நம்பியை தள்ளி வைத்தனர்.  அக்காலத்தில்   உயர்ந்த  தாழ்ந்த குலம்  தீண்டத்தகாதவர்  என்ற தீமைகள் வழக்கத்தில் இருந்தது. 
ராமானுஜர், பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்க, பெரிய நம்பிகள் -"ஜடாயு விற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்யவில்லையா ? விதுரருக்கு தர்மபுத்திரர் செய்தாரே! மாறனேரி நம்பி இவர்களைவிட தாழ்ந்தவரா? ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள்  எவ்வளவு பாசுரங்கள் பாடியுள்ளனர்.  அவை நாமும் அது போல் பின்பற்றி  வாழ்வதற்கு தானே. ராமர், தருமர் செய்த செயல்களை  பிராமணரல்லாதார் என்ற போதிலும்   ஆழ்வார்கள்   குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்களா   அல்லது   எவரப்பியும்  லக்ஷியம் செய்யாத  கடலோசை போன்றவையா?’’ என்று  கேட்டார்.

இது நமக்கு இப்போது தான் தெரியவருகிறது என்றாலும்  திருக்கோளூர் பெண்பிள்ளைக்கு ராமானுஜர் காலத்திலேயே தெரிந்திருக்கிறது.  அவள் நாரதர் என்கிற  திரிலோக சஞ்சாரி   பல  விஷயங்கள் சேகரித்ததை போல் எப்படியோ எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறாள்.   ராமாநுஜரிடமே   “ஆழ்வார்களின் பாசுரங்களை வெறும் கடலோசை என எண்ணாமல், பாசுரங்களில் உள்ள அர்த்தங்களை உணர்ந்து,  அதன் வழியில் எப்போதாவது  நான் நடந்ததுண்டா. எவ்விதத்தில்  நான்  இந்த திருக்கோளூர் புண்ய ஸ்தலத்தில் வசிக்க   தகுதி உள்ளவள்?  என்று  கேட்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...