Monday, June 29, 2020

SEMBIYAN MAADHEVI






வணங்குகிறோம்  பெரிய பிராட்டி    J K   SIVAN  

எனக்கு  செம்பியன் மாதேவியை தெரியாது. எனக்கு மட்டுமா?  உங்களில் அநேகருக்கும்  தான்.  இவரை எனக்கு அறிமுகப்படுத்தியது நான் பள்ளியில் கற்ற கல்வி அல்ல.   இளவயதில் கல்கியில் வாராவாரம் வந்த பொன்னியின் செல்வன்.  கல்கி ஸாருக்கு  வாழ்நாள் பூரா நாம் எல்லோருமே கடமைப் பட்டிருக்கிறோம். ஏன்  தெரியுமா?  இப்போது நாம்  சோழநாட்டில் காணும் அநேக  சிவாலயங்களை செங்கல், காரை, சுண்ணாம்பு, மண்ணிலிருந்து காப்பாற்றி கற்றளியாக,  கருங்கல் கோவில்களாக  அற்புத சிற்பக்களஞ்சியங்களாக, பக்தி பேருக்கும் கருவூலங்களாக மாற்றி அமைத்து, அவற்றிற்கு பராமரிப்புக்காக  விளக்குகள் தினமும் எரிய, நித்ய பூஜைகள் நடக்க,   நிறைய   ஆடுகள், மானியங்கள், நிலங்கள்  நிவந்தங்கள் விட்டிருக்கிறாள்.  அடடா எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு, பிழைக்க வழி, பக்தியை எப்படி பரப்பி இருக்கிறாள்?  தமிழர்களுக்கு இவளை இருட்டடிப்பு செய்துவிட்டிருக்கிறார்களே.    கண்டராதித்த  ஏரி, வீராணம் ஏரி, செம்பியன் மாதேவி ஏரி என்று எவ்வளவு நீர்நிலைகளை ஸ்தாபித்திருக்கிறாள்.  எத்தனை ராஜாக்களை வளர்த்திருக்கிறாள். இன்று  ராஜராஜன் கட்டிய உலகப்புகழ் பெற்ற தஞ்சை   பெரிய கோவிலுக்கு யார் காரணம்? அவனை ஐந்து வயது முதல் வளர்த்த பாட்டி இவள் அல்லவா? குந்தவை தேவி  ராஜ்யதிகாரம் செலுத்து திறம்பட சோழ ராஜ்யத்தை நிர்வகிக்க யார் காரணம்? செம்பியன் மாதேவி எனும் பெரிய பிராட்டி தானே?    மூவேந்தர்கள்  சேர சோழ பாண்டியர்களில் பெரும் புகழ் பெற்று  ப்ரஸித்தமானவர்கள் சோழர்கள் என்பது  அவர்கள் விட்டுச்சென்ற செல்வங்கள், பக்தி, ஆளுமை, மக்கள் மேல் அன்பு  பொதுநல சேவைகள் . ஆறு  ராஜாக்கள் அவளது  85 வயது வாழ்வில் வழி நடத்தியவன் செம்பியன் மா தேவி.   எவ்வளவு பெரிய  சக்தி தெய்வம்.   
சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவி சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் குலத்தில் பிறந்து சோழ வம்சத்தில் புகுந்தவர். ++
அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள செம்பியக்குடி  அவள் பிறந்த ஊர் என்பதால் அவள் பெயரை தாங்கி இன்றும் இருக்கிறது.  ஊர் மக்கள் 1000 கிலோவில் ஐம்பொன் சிலை செய்து மணிமண்டபம் கட்டி  கௌரவித்திருக்கிறார்கள்.   நாம் அவள்  பெயரை, அவளது மகத்தான சேவையை   மறந்து இருட்டடித்துவிட்டு, அவள் எழுப்பிய கோவில்களுக்குச் செல்லக்  கூட நேரமின்றி  விருப்பமின்றி  உல வுகிறோம். 
செம்பியன் மாதேவி  வாழ்நாளில்  ஆண்ட சோழ மன்னர்கள். 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் 
இத்தனை  ராஜாக்களும் எழுப்பிய  சிவாலயங்கள், செய்த தர்ம காரியங்களுக்கு பின் புலமாக இருந்த  தெய்வீக பெண்மணி  செம்பியன் மாதேவி என்ற சிவபக்தை.   காவிரியின் இரு மருங்கிலும் எண்ணற்ற சிவாலயங்கள் வைணவ ஆலயங்கள் தோன்ற, பராமரிக்கப்பட காரணம்  இந்த பெண்மணி. ஒரு சில கோவில்கள் உள்ள ஊர்கள் பெயரை மட்டும் சொல்கிறேன்  
திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
திருமணஞ்சேரி
தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)
திருக்கோடிக்காவல்
ஆதாங்கூர்
குத்தாலம்
திருவக்கரை
திருச்சேலூர்
ஒவ்வொரு ஆலயத்துக்கும் சென்று அதன் நிலையை கண்டறிந்து உடனே புணருத்தாரணம் செய்ய வழிவகுத்தவர். ஆலய திருப்பணிகளை நேரில் சென்று மேற்பார்வை பார்த்தவர். 
செம்பியன் மாதேவி வாழ்ந்த காலத்தில்  நூற்றுக்கணக்கான  மண், செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்ட பழைய  கோவில்கள் சிதிலமடைந்திருந்த நிலை கண்டு கண்ணீர் வடித்தாள்.  அவற்றை புதுப்பிக்கும் பணி யில் தன்னை அர்ப்பணித்தாள்.   மலைகளோ, கருங்கற்களோ  இல்லாத போதும்  கற் பாறைகளை களை கொணரச் செய்து  ஆயிரக்கணக்கான சிற்பிகளை ஊக்குவித்து,  எங்கும் உளி சத்தம் கேட்க செய்தவள். செப்புச்சிலைகள், ஐம்பொன் சிலைகள் சிறந்த வேலைப்பாடுகள்  கொண்ட கோவில்கள் அமைந்தன.  செப்பு பட்டயங்கள், கல்வெட்டுகளில் செயதிகளை பரப்பினாள் . நிவந்தங்கள் ஆலயங்களுக்கு கொடுக்கும் முறையை  உண்டாக்கினாள் . ஏரிகள் குளங்கள் அமைத்து நீர் பஞ்சம் இல்லாதபடி செய்தவள்.  இதற்கெல்லாம் படிப்பு அவசியமா?
முதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் சிவாலயம்.  சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டாள். அவள்  திருநல்லத்தில் சிவாலய மேற்பார்வை செய்த ஒரு நிகழ்ச்சி மனக்கண்ணில் காண்போம்: ++++ 

திருநல்லத்தில் ஏக போகமாக அலங்காரம். காலை வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக வலுத்தாலும் மரங்கள் சூழ்ந்த அந்த கிராமத்தில் வெயில் தெரியவில்லை. குளிர்ந்த காற்று வீசியது. கிராமத்தின் ஒரே பாதை முழுதும், வழியெல்லாம் தோரணங்கள் கட்டியிருந்தது. எங்கும் தென்னங்குருத்து மாவிலைகள், வாழைமரங்கள் கட்டி மலர் பந்தல் கோவில் கட்டும் இடம் வரை பரந்திருந்தது. நறுமணம் வீச அகில் புகை வளர்த்தார்கள். காற்றில் மணத்தது. வழியெங்கும் நீர் தெளித்து சுத்தமாக நடு வீடு போல காணப்பட்டது.

அழகுக்கு அழகு செய்வது போல் பெரிய மாக்கோலங்கள் பல பல வண்ணம் குழைத்து கண்ணை கவரும்படியாக பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு வரைந்திருந்தார்கள் . திருநல்லம் கிராம நுழைவாயிலில் மாவிலை தோரணம், வாழைமரம் கட்டி வரவேற்பு. ஊர் பிரமுகர்கள் கை கட்டி நின்றனர். கையில் பெரிய தாம்பாளங்களில் பழங்கள், வெற்றிலை பாக்கு இனிப்புகள், வாத்திய கோஷ்டி தங்கள் கைவரிசையை காட்டின. பெரிய பெரிய பாத்திரங்களில் பொறி கடலை, வெல்லம் நீர் மோர் பானகம் எல்லாம் வருவோர் போவோர்க்கெல்லாம் அளித்தனர்.

நாட்டிய பெண்கள் ஒரு ஓரத்தில் ''மதன காம ராஜன்'' தெருக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர். என்ன விசேஷம் இன்று?

'' நம்ம ஊர் கோவில் வேலை புதுசு பண்றாங்க , பெரிய ராணியம்மா வராங்க. அதோ வந்துவிட்டது பல்லக்கு'' . எல்லோர் விழியும் பல்லக்கையே பார்த்துக்கொண்டிருந்தது. சோழ பெரிய மஹாராணி, வரப்போகிறார் என்ற சேதி சில நாட்களுக்கு முன்பே காதில் விழுந்ததால் மக்கள் வெள்ளம். பெரிய மகாராணியை பார்த்தால் ஸ்ரீ லலிதாம்பிகையை பார்த்தது போல் என்பார்கள். எத்தனை கோவில்களுக்கு தான தர்மம். நிலம், விளக்குகள், அர்ச்சர்களுக்கு நிலம், மான்யம்... அடடா... பழங்கால காரை செங்கல் கோவில் எல்லாம் கல்லாக மாத்தறாங்க அந்த தெய்வம். இங்கே உமாமஹேஸ்வரர் கோவில் புதுசாவுது. உள்ளே ராஜா கண்டரா தித்தர் சிலை சாமி கும்புடுறாப்புலே வைக்கிறாங்க.''

பல்லக்கு திரைச்சீலையை விலக்கி அந்த முதிய சோழ ராணி வெளியே பார்த்தாள் . அவள் எதிர்பார்த்த கோபுரம் அங்கே விரைவில் தோன்றப்போகிறது. வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. தனது கணவர் சிவபாதசேகரன் சிவபக்தி செல்வர் கண்டராதித்த தேவரின் நினைவாக அந்த ஆலயம் இருக்கும் ஊருக்கு கண்டராதித்த புரம் என்று பெயர் சூட்டப்போகிறார்.

ரெண்டு மூன்று முறை நடராஜர் சிலை வடித்தது திருப்தியாக இல்லை.சிற்பிக்கு அரசர் ஏற்கனவே கட்டளை யிட்டுவிட்டார். இந்த முறை நடராஜர் சிற்பம் சரியாக அமையவில்லையென்றால் அவன் உயிர் பலியாகும் . சிற்பி பயத்தில் பொறுப்பை ஏற்றோ, உபவாசம் இருந்து சிலை வடித்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து யாரோ ஒரு கிழ தம்பதியர் சிற்பி யின் இல்லத்துக்கு வந்தனர்.

கவலையோடு தனது உயிரைப் பணயம் வைத்து நடராஜர் சிலை வடிக்க பஞ்சலோகங்களை காய்ச்சி வார்படம் செய்யும் நேரத்தில் வந்த கிழ தம்பதியர் வந்து பேச்சுக்கு கொடுப்பது சிற்பிக்கு எரிச்சலை தந்தது. .

''யார் நீங்கள், என்ன வேண்டும் இங்கே ? முக்கிய ராஜ காரியம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் உங்களோடு நேரம் ஒதுக்க முடியாது. வந்த விஷயம் சொல்லுங்கள் ?'' கோபமாக தான் சிற்பி பேசினான்.

''திரு நல்லம் க்ஷேத்ர தரிசனம் வந்தோம். களைப்பாக இருந்தது இங்கே கொஞ்சம் நேரம் அமர வந்தோம். நீ தான் நடராஜா சிலை வடிக்கிறாயாமே அதைப்  பார்க்க வந்தோம்.

''ஐயா பெரியவரே, தொண தொணவென்று பேசாமல் இருக்கிறீர்களா, இப்போது தான் வார்ப்படம் தயாராகிறது. இப்போது நடராஜர் சிலை பார்க்கமுடியாது. சென்று அப்புறம் வாருங்கள்''

ஓ அப்படியா. தாகமாக இருக்கிறதே கொஞ்சம் குடிக்க தண்ணீர் தருவாயா மகனே? கால் நீட்டி சற்று உட்காரு கிறோம்'' முதியவர் சொன்னார்.

சிற்பிக்கு எரிச்சல் . இங்கே உட்காரமுடியாது. எழுந்திருந்து செல்லுங்கள்.

''தாகமாக இருக்கிறது, என்று தண்ணீர் கேட்டோமே அப்பா''

''ஆமாம் இங்கே தண்ணீர்ப்பந்தல் வைத்திருக்கிறேன் வருவோர் போவோர்க்கு உபசாரம் செய்ய. வேண்டுமானால் இதோ கொதிக்கிறதே உலோக குழம்பு அது நிறைய இருக்கிறது, தாகம் தீர தாராளமாக எடுத்து குடியுங்கள்.'' கோபத்தோடு சொல்லிவிட்டு சிற்பி எழுந்து அவர்களுக்கு தண்ணீர் கொண்டுவர போனான்.

''ஆஹா சரியப்பா, நீ சொல்கிறபடியே செய்கிறோம். நீ ரொம்ப நல்லவன்.'' என்கிறார்கள் இருவரும்.

சிற்பி தண்ணீர் சொம்புடன் திரும்பி வந்தபோது அந்த கொதிக்கும் பஞ்சலோக குழம்பை காணோம். அந்த முதியவர் கிழவி இருவரும் இருந்த இடத்தில் நடராஜர் அம்பாள் சிலைகள் தான் இருந்தது. அவர்கள் அந்த உலோக குழம்பை அவன் சொல்லியபடி குடித்து சிலையாகி விட்டார்களா????

இந்த செய்தி அரண்மனைக்கு எட்டி பெரிய மஹாராணி செம்பியன் மாதேவி நேரே  நல்லம் வந்துவிட்டார்கள் 

கும்பகோணம் அருகில் கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரன் ஆலயத்தில் அற்புதமான நடராஜனின் கதை மேலே சொன்னேன். அவன் அழகைப் பார்த்து வியந்தேன். கூடவே ஒரு கொசுறு செய்தியும் கிடைத்து புல்லரிக்கவைத்தது.

பெரிய சிவன் கோயில் என்று அழைக்கப்படும் உமாமஹேஸ்வரர் ஆலயத்திற்கு வட மேற்கே ஊரின் ஆரம்பத்திலேயே ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. எஸ். புதூரிலிருந்து லிருந்து கொடியமங்கலம் வழியாக கோனேரி ராஜபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது .

திருநல்லம் என்ற புராணப்பெயர் படைத்த ஊரில் பிற்காலத்தில் ஒரு சோழமன்னனின் அதிகாரி கோனேரி ராஜன் என்பவன் பொறுப்பேற்று நிர்வகித்தான். பிரதான சிவன் உமாமஹேஸ்வரர் ஆலயத்தை புதுப்பித்து நிறைய தான தர்மங்கள் அளித்து அந்த கிராமத்தை தனது பெயருள்ளதாக மாற்றினான். திரு நல்லம் காலப்போக்கில் கோனேரி ராஜபுரம் ஆகிவிட்டது. உமாமஹேஸ்வரர் ஆலயம் பெரிதாக சோழ மஹாராணி செம்பியன் மாதேவியால் புனருத்தாரணம் செய்யப்பட்டு கற்றளி ஆலயமாகி பின்னர் பல அரசர்களால் பராமரிக்கப்பட்டு பெரிய கோவிலாக இன்று நமக்கு காட்சி தருகிறது. அந்த கோவிலை சுற்றி ஒரு சில பழைய கோவில்கள் இருந்தன .

அப்படி சுற்றியிருந்த சில கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் முழுதுமாக க்ஷீணமாகி தற்போது ஒரு சில பக்தர்களால் ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு புதிய சிறிய கோவிலாக வளர்கிறது. கைலாச நாதர் இருந்த கோவில் அது. முழுதும் மறைந்து ஆலயத்தில் இருந்த சிலைகள் சிலரால் பாதுகாக்கப்பட்டு கோனேரிராஜபுரம் உமாமஹேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாப்பாக இருக்கிறது என்று ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள். 150 வருடம் முன்பு வடக்கு தெரு ஸ்ரீ சியாமா மாமா என்பவர் ஸ்ரீ ராமசாமி அய்யர் டிரஸ்டி ஆக இருந்த காலத்தில் பெரிய கோயில் சுற்று பிரகாரத்தில் இந்த கோயில் சுவாமிகள் அனைவரையும் முறைப்படி பிரதிஷ்டை செய்தார். ஒரு கோயில் பெரிய கோயில் என்று அழைக்க பட்டால் இன்னும் சில கோயில் உள்ளது என்று தானே அர்த்தம்! இவ்விரண்டு சிவன் கோயில்கள் தவிர வேறு 3 கோயில்கள் உள்ளன.

கோவிலோ சிலைகளோ முழுதும் காணாமல் போனாலும் கோவில் இருந்ததற்கு சான்றாக ஒரு பெரிய பாம்பு புற்று ஒன்று செம்பியன் மாதேவி காலத்து செங்கல்லோடு நிற்கிறது. நல்லவேளை நாகராஜன் காப்பாற்றினான். இல்லையென்றால் அந்த இடமும் அடையாளம் தெரியாமல் போயிருக்கும். செம்பியன் மாதேவி கால செங்கல்லும் அவளோடு சேர்ந்து மறைந்திருக்கும். அபேஸ் பண்ணியிருப்பார்கள்.

ஆலயத்தை சுற்றிலும் பச்சை பசேல் என வயல்கள் . அமைதியான கிராம சூழ்நிலை. கோனேரி ராஜபுரம் 18 வாத்திமா கிராமங்களில் ஒன்று. 200 க்கும் மேல் பட்ட பிராமண குடும்பங்கள் வாழ்ந்த வசித்த ஊர். ஏழு அக்ரஹாரங்களை கொண்டது. கோவில் மடவிளாகம் உமா மஹேஸ்வரர் ஆலயத்தை ஒட்டி இருந்தது. அங்கே கோவிலை தனி அக்ரஹாரமாக குருக்கள் மற்றும்  பரிஜாரகர்கள் வசித்தனர். கால ஓட்டத்தில் பிழைப்பை தேடி நிறைய பேர் புலம் பெயர்ந்த காரணத்தால் கோவில்களும் அதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குடும்பங்கள் மட்டுமே எஞ்சியவை.

கோனேரி ராஜபுரம் நிறைய சாம வேதக்காரர்கள் நிறைந்த ஊர். 1950 களில் ஸ்ரீ மஹா பெரியவா கும்ப கோணத்தில் முகாம் இருந்த காலத்தில் இங்கு வந்து அநேகமாக எல்லா வீடுகளிலும் தங்கி ஆசிர்வதித்து உள்ளார். உமா மகேஸ்வர கோயில் ஸ்தல வ்ருக்ஷம் அரசமரம். குளக்கரையில் பலி பீடமும் மஹா வில்வ மரமும் உள்ளன.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...