Tuesday, March 26, 2019

SUNDARAMURTHI NAYANAR

               ''சுந்தரா  என்னை  அறியவில்லையா?
                                          J  K SIVAN 

மாயையிலிருந்து விடுபட்டால் மட்டுமே ஜீவன் சிவனை  உணரமுடியும்.   பித்தன் என்று  சிவனுக்கு  ஒரு பெயர்.  அப்படி கூப்பிட்டால் கூட  அனந்தப்படுபவன் அரன்.  உயர்ந்த ஞானி பித்தனுக்கு சமம்.  ஒன்றுமறியாத குழந்தையின் செயல்களும் பேச்சும் பித்தன் பேச்சாக செயலாகத் தான் இருக்கும். 
சுந்தரர் சிறந்த சிவபக்தர். எங்கெல்லாம் சிவாலயங்கள் தென்பட்டதோ, அங்கெல்லாம் நடந்து சென்று தரிசித்து  வாயார, மனமார செவியினிக்க பாடுபவர். ஒருமுறை இவ்வாறு  ஊர் ஊராக சென்றவர்  திருவதிகை வந்து சேர்ந்தார். அஷ்ட வீரட்டானங்கள் என்ற சிவாலயங்களில் திருவதிகை ஒரு வீரட்டானம். அங்கு  தான்  அப்பர்  எனும் திருவநாவுக்கரசர் வீரட்டானேஸ்வரரை தொழுது அருள் பெற்றவர். 

அடடா  எவ்வளவு உயர்ந்த புனித ஸ்தலம் இது,  அப்பர் நடந்த இடம்..  இதில்  என் கால் படக்கூடாது. அந்த பாவத்திற்கு நான்  ஆளாக மாட்டேன் என மறுத்து  திருவதிகை கிராம எல்லையிலேயே  நிற்கிறார்.  சிவாலயத்திற்குள் சென்று வீரட்டானேஸ்வரரை  எப்படி  தரிசிப்பது?   அன்று இரவு  சத்திரத்து  திண்ணையில்  உறங்கிக்கொண்டிருந்த போது  சிவன் ஒரு  கிழவராக  தோன்றி  திண்ணையில் அவரருகில் தானும் படுக்கிறார்.  அவரது கால் சுந்தரர் தலைமேல்  படுகிறது.  சுந்தரர் கண் விழித்து பார்த்தால்  கிழவர்  அசந்து  தூங்குகிறார். அவர் காலை சௌகர்யமாக சுந்தரர் தலைமேல்  காலுக்கு  தலைகாணி போல் உபயோகித்தது  தெரிகிறது.  

''ஐயா  என்ன அக்கிரமம்  இது ?   எழுந்திருங்கள், காலை  அடக்கமாக வேறு பக்கம் வைத்துக் கொள்ளுங்கள்''? என்கிறார்  சுந்தரர். 
அடாடா  தூக்கத்தில் தெரியவில்லை,  மன்னித்துக் கொள்ளுங்கள்''  என்கிறார் கிழவர். சுந்தரர்  வேறு ஒரு மூலையில் சென்று படுக்கிறார். அவரைத் தொடர்ந்து  கிழவரும் வருகிறார். அருகில் படுக்கிறார்.  கால்-தலை  கதை திரும்ப நடக்கிறது.  இதில் என்ன வேடிக்கை என்றால்  சுந்தரருக்கு கோபம் வரவில்லை.   ஏன்  இந்த கிழவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று ஆச்சர்யபடுகிறார்.  
''ஐயா    நீங்கள் யார்  எந்த ஊர்?. ஏன் இப்படி நடந்து  கொள்கிறீர்கள் ?-  சுந்தரர் 
' சுந்தரா, தோழா, என்னை  உனக்கு தெரியவில்லையா ?''' என்று பதிலளித்த கிழவர் மாயமாக மறைகிறார்.  ''ஆஹா  என்  தந்தை பரமேஸ்வரன் அல்லவோ  என்னோடு விளையாடியவன்'' என்று அறிகிறார் சுந்தரர். நான்  திருவதிகை கிராமத்தில் நுழைந்து வீரட்டானேஸ்வரரை தரிசிக்க முடியவில்லை என்று வருந்தியதற்காக  வீரட்டானேஸ்வரனே வந்தல்லவோ காட்சி தந்தான்'' என  உணர்கிறார். 


முன்னேயெம் பெருமானை மறந்தென்கொல் மறவா
  தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்
  குன்றமே ஈசனென் றுன்னையே புகழ்வேன்
அன்னேயென் அத்தாவென் றமரரால் அமரப்
  படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேயென் எறிகெடில வடவீரட் டானத்
  துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.  

 வேதத்தின் உட்பொருளே, கருணைக்கடலே, உன் திருவடியை அடைய எத்தனை கோடி ஜென்மங்கள் தமிருக்கும் ஞானிகளுக்கு கூட கிடைக்காத பாக்யம், உன் திருவடிகள் என் சிரத்தில் வைத்து ஆசிர்வதித்த பெம்மானே. என்னை ஒரு  பொருட்டாக மதித்து  உன் ஆலயத்திலிருந்து என்னைத் தேடி வந்தவனே, பெம்மானே'' என்று கதறுகிறார்.

  சுந்தரரின்  பத்து பாடல்கள் திருவதிகைப் பதிகத்தில் பக்திரசத்தோடு   பாடியதை பன்னிரு திருமுறைகளில் ஏழாம் திருமுறையாக  படிக்கலாம்.  நடை தொடர்கிறது..

தூரத்தில் சிதம்பரம்  சபேசனின் ஆலய கோபுரம் வானைத் தொடுவதை காண்கிறார் சுந்தரர், கண்களில் பக்தி பரவசம் ஆறாக பெருக , சமாதி நிலை கிட்டுகிறது. தரையில் உருள்கிறார்.  நடராஜனை கண் குளிர காண்கிறார்.  

''சுந்தரா, திருவாரூருக்கு வா ''  என்று  காதில் ஒரு குரல் சொல்கிறது.  திருவாரூர்  செல்கிறார். அவரை எதிர் பார்த்து  தில்லை வாழ்  அந்தணர்கள் வேத கோஷங்களோடு, பூரண கும்பம் ஏந்தி வரவேற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். நடராஜன் அந்தணர்களை சுந்தரராய் வரவேற்று கோவில் மரியாதைகள் செய்யுங்கள் என்று கட்டளையிட்டது அவருக்கு தெரியாதே. 

ஆலயத்தில் பிரவேசித்து நடராஜனைப் பாடுகிறார். 
''சுந்தரா, என் ஆருயிர்த் தோழா,   உன்னை   நான் தான்   திருமணம் செய்து கொள்ளாமல் தடுத்தவன். இனி என்றும்  மாப்பிள்ளை கோலத்தில் இருக்கவேண்டும்''   சுந்தரரை அதனால் தம்பிரான் தோழர் என்பார்கள்.   திருவாரூரில் ஒரு சிவ பக்தை இருந்தாள்.  அவள் பெயர்  பறவை.  கைலாசத்தில்  பார்வதியின்  தோழியாக இருந்த கமலினி தான் பறவையாக பிறந்தவள்.  பறவை தினமும் ஆரூர் அழகனை தரிசித்து  பூக்களால் அர்ச்சித்து வணங்குபவள் . 

அன்று  வழக்கம் போல்  நடராஜ தரிசனத்துக்கு வந்தவள்  மாப்பிள்ளை கோல சுந்தரர் சிஷ்யர்கள், அந்தணர்களோடு  நுழைவதை காண்கிறாள். அவரது உருவம், பக்தி அவளை கவர்கிறது. மனதை அவர் பால் இழக்கிறாள்.  பறவையை  சுந்தரருக்கும் பிடித்து விட்டது.  ''நடேசா, எனக்கு  பறவையை  திருமணம் செயது கொள்ள  ஆவலாக இருக்கிறது'' என்று  சொல்கிறார். சுந்தரர் பறவை இருவர் கனவிலும் தூது செல்கிறார் பரமேஸ்வரன். சிதம்பரம் பக்தர்கள் கனவிலும் இறைவன் தோன்றி விமரிசையாக  சுந்தரர் பறவை  திருமணம் முடிந்துவிட்டது. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...