Thursday, March 14, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்     J K  SIVAN
மஹா பாரதம்.
            

                                                       
         '' கௌரவ  சைன்யம் உள்ளே  நுழைந்தது''

பிரபு   வைசம்பாயன மஹரிஷே ,    நீங்கள்  என்  ஆவலை கட்டுக்கடங்காதபடி அதிகரிக்க செய்து விட்டீர்கள்.  விராட நகரத்தில் மேற்கொண்டு என்ன நடந்தது  என விவரமாக  சொல்லுங்கள்?  என்று ஜனமேஜயன் கேட்கிறான்.

'' சொல்கிறேன் கேள்.  சொல்லி வைத்தாற்போல், கௌரவ வீரர்களும், த்ரிகர்த்தன் படைகளும்  சீக்கிரமே  ரெண்டு மூன்று நாட்களில் தயாராகி விட்டன.                                s                      

சுசர்மன் மத்ஸ்ய தேசத்தில் நுழைந்தான். விராடனின் ஆயிரக்கணக்கான  பசுக்கள், கால்நடைகள்  திடீரென  எதிர்பார்க்காத  நேரத்தில் கைப்பற்றப்பட்டது.

விராடனின் ஆநிரைக் காவலன் படு வேகமாக  விராடன் அரண்மனையில் நுழைந்த போது  விராடன் அரசவையில் மந்திரி பிரதானி களோடு பேசிக்கொண்டிருந்தான்.    அவசரமாக ஓடிவந்த   எல்லை ஆநிரைக் காவலன் ஓடிவந்ததால் பேச்சு  நின்றது.
''என்ன விஷயம் எதிராக  இவ்வளவு அவசரம்?''   என்றான் விராடன்.

''மஹாராஜா, எங்களை விரட்டி, எதிர்த்து த்ரிகர்த்தர்கள் நமது  ஆயிரக்கணக்கான  பசுக்களையும் மற்ற  கால்நடைகளையும்  கவர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.   நமது நாட்டின் எல்லை தாண்டுவதற்குள்  உடனே  அவற்றை மீட்க வேண்டும் ''

விராடன் உடனே  தனது படை வீரர்களை தயார் செய்தான். விராடன் சகோதரன்  சதனிகன்  இரும்பு கவசங்களை அணிந்து கொண்டு போருக்கு தயாரானான்.

''சதனிகா, நீ போகும்போது  வல்லபன், கங்க  பட்டர், தாமக்ரந்தி, தந்திர பாலன்  ஆகியோருக்கும்  தக்க  ஆயுதங்கள் கொடுத்து அவர்களையும் அழைத்து செல், அவர்களுக்கும் கொஞ்சம் யுத்த அனுபவம் இருக்கலாம் என்று தோன்றுகிறது''  தேர்கள் தயாராக நிற்க  அவர்களும் விராடன் படையில் பங்கேற்றார்கள்.

சூரிய அஸ்தமன வேளையில்  த்ரிகர்த்த படைகளை  விராடன் படை வீரர்கள்  சூழ்ந்து கொண்டார்கள்.

மத்ச்ய  தேச விராடன் படையும் த்ரிகர்த்தன் படையும் மோதி எங்கும் ஓ வென்ற பேரிரைச்சல், யானை குதிரை, பசுக்களின் ஓலம். காயமடைந்த வீரர்கள், எல்லோருடைய சப்தமும் யானை குதிரை மாடுகள் எழுப்பிய  புழுதி, சாயங்கால  மங்கிய  வெளிச்சத்தோடு கூடி பயத்தை எழுப்பியது. பயத்தில் அலறிய பறவைகளின் கூச்சலும் சேர்ந்தது.  தேர்கள் மோதின. ஆயுதங்களின் உராய்வு, ரத்தம்,  விண்ணில் அம்புகள் காற்றில் கலந்து தாக்கின.  தலைகள் உருண்டன. துண்டான உடல்கள் நிரம்பின.

த்ரிகர்த்தன்  சேனை  போருக்கு  தயாராக இல்லாத  விராடன் சேனையை த்வம்சம் பண்ணிக்கொண்டிருந்தது.   த்ரிகர்த்த அரசன் சுசர்மன் விராடனைக் குறிவைத்து , அவன் குதிரை, தேர், எல்லாம் அழிந்து  விராடனைச் சிறைப் பிடித்துக்கொண்டு  செல்வதைப் பார்த்த  யுதிஷ்டிரன் '' பீமா நீ போய் விராடனை மீட்டு வா.  ஆனால் பீமா  உன்  வழக்கமான முழு  சாகசத்தை காட்டாதே, நீ பீமன் என்பது தெரிந்து  விடும் என்பதை கவனத்தில் வை''

வெகு வேகமாக   சென்று போரில்  கலந்து கொண்ட  பீமனின்  அம்புகளும்  ஆயுதங்களும்  சுசர்மன் படையில் பெரும்பாலானவரை கொன்றது. தேர்கள் உடைந்தன. .யானைகள் பிளிறி காயங்களின்  வலியோடு சுஸர்மன் படையையே   தாக்கின.

பீமனின் துணிவு  மற்ற மத்ஸ்ய வீரர்களை ஊக்குவிக்க,  விராடனை நெருங்கி  பீமன் அவனை சிறைப் பிடித்த த்ரிகர்த்த வீரர்களை கொன்றான். சுசர்மன் தேரை ஒடித்து, அவனை நிரயுதபாணி யாக்கி கீழே  தள்ளி அவன் மார்பில் கால்  வைத்து கொல்ல முற்பட்டான். பீமனின் தாக்குதலில் சுசர்மன் மயங்கி விழுந்தான். கோபத்தை அடக்கி, அவனைக் கொல்லாமல்  பிடித்து தேரில் கட்டி  பீமன்  திரும்பினான்.  திரிகர்த்தன்  படைகள்  பசுக்களை விட்டு விட்டு  தலை .தெறிக்க ஓடின.

 யுதிஷ்டிரன் விடுவித்த  விராடன் எதிரே  நின்ற சுசர்மனை மன்னித்து ''திரும்பி உயிர் பிழைத்து ப்போ , இனியும் இம்மாதிரி  காரியங்கள் செய்யாதே.    நீ இப்போது என்னுடைய அடிமையாக இருந்தாலும் உனக்கு   உயிர்ப்பிச்சை அளிக்கிறேன்  என்றான்  விராடன்.   சுசர்மன்  விராடனை விழுந்து  வணங்கி திரும்பி  சென்றான்.

விராடன் மிக்க மகிழ்ச்சியோடு    எல்லோருடனும்  படை  வீரர்களோடும் வெற்றிகரமாக  அரண்மனை  திரும்பிக்   கொண்டிருந்தான்.    கங்கபட்டன், வல்லபன், தாமக்ரந்தி, தந்திரபாலன் ஆகியோர் வீரத்தையும்   யுத்த அனுபவத்தையும் மெச்சி புகழ்ந்து அவர்களுக்கு நல்ல பதவிகள் தருவதாக வாக்களித்தான்.    விராடன்  இவ்வாறு  த்ரிகர்த்தர்களோடு  போரிட்டு  வென்று  வெற்றியோடு திரும்புவதற்குள்  மற்றொரு  ஆபத்து  விராட நகரை சூழ்ந்து கொண்டிருந்தது  விராடனுக்கு  தெரியவில்லை.

திட்டமிட்டபடியே, விராடன்  ராஜ்யத்தில் ஒரு பகுதிக்குள்  துரியோதனனின் கௌரவ சைன்யம் நுழைந்தது.  பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், சகுனி, துச்சாசனன்  ஆகியோர் பெரும்படையோடு  தாக்க ஆரம்பித்தனர்.

 இடையர்களை அடித்து விரட்டி  எல்லா பசுக்கள் கால்நடைகள்  பறிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. எண்ணற்ற  தேர்கள், யானை, குதிரை, ஆயுதம்  தாங்கிய வீரர்களும் தாக்க, விராடனின்  எஞ்சிய  சில வீரர்கள் ஒட்டமெடுத்தனர்.   அரண்மனைக்கு .அவசரமாக  செய்தி வந்தது.     விராட தேசத்தில்  விராடனோ அவன்  சேனாதிபதிகளோ  இல்லையே.  விராடனின்  மகன் பூமிஞ்ஜயன் என்கிற  உத்தரன்   மட்டுமே  இருந்தான்.  அவனிடம்   ஒற்றன் அவசர சேதியை சொன்னான்:

'இளவரசே, விராட மன்னர்   உங்களை  அவரை மிஞ்சும் வீரன் என்று சொல்வாரே,  நீங்கள் தலைமை தாங்கி  கௌரவர்களின்  ஆக்ரமிப்பை  இந்தக் கணமே புறப்பட்டு  தடுத்து  போரை எதிர்கொள்ளவேண்டும். ஆநிரைகளை மீட்க  வேண்டும்.

 ''அர்ஜுனன் போல் வீரன் அல்லவா நீ  என்று பெண்கள் எதிரே சொன்னதும்  உத்தரன் பெருமிதம் அடைந்தான். மகிழ்ந்தான்.  எனக்கும்  வில் அம்பு விடத் தெரியும்  நானே  எதிர்கொள்கிறேன். எனக்கு  யாராவது தேரோட்டவேண்டுமே. என் தேரோட்டி மாண்டுவிட்டான்.  வேறு யாராவது அவசரமாக  இப்போது  தேவை. அப்போது தான்  நான் கௌரவப்படையை எதிர்கொண்டு வென்று,  பசுக்களை மீட்க முடியும் ''  என்றான் உத்திரன். 

ப்ரஹன்னளையாக  அந்தப்புரத்தில்  உத்தரையோடு  இருந்த அர்ஜுனன்  நிலைமை எவ்வளவு ஆபத்தான கட்டத்தை நெருங்கியிருக்கிறது என்று  அறிந்து  திரௌபதியிடம் ஜாடை காட்டவே  சைரந்திரி,  உத்தரனிடம் சொல்கிறாள்: 

'' அரசே, இந்த ப்ரஹன்னளா  கொஞ்சம் தேரோட்ட பழகியவள்.  அர்ஜுனன் தேரை முன்பு பலமுறை ஒட்டி இருக்கிறாள். அவளை உங்கள் தேரோட்டியாக  அழைத்து செல்லுங்கள். நேரம்  இப்போது முக்கியம்'' என்றாள் .அதிருப்தியோடு எல்லாரும் பார்க்க  சைரந்திரி மேலும் ''ப்ரிஹன்னளா  அர்ஜுனனிடம் வில் வித்தையும் பழகியவள். தேரோட்டியாகவும்  யுத்தத்தில் பங்கேற்கும் ஆயுதம் தாங்கியாகவும்  உதவுவாள் . தயங்காதீர்கள். இது உண்மை.''  

''ப்ரஹன்னளாவை அழைத்து வாருங்கள்  என்று  உத்தரைக்கு   ஆணையிட அவள் அர்ஜுனனை நாட்யசாலையில் கண்டு  ''உடனே உங்களை அழைத்து வர இளவரசர் ஆணை '' என்றான் உத்தரன் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...