Sunday, March 17, 2019

ஐந்தாம் வேதம் 
மஹா பாரதம் 
                                                      
     அர்ஜுனன் பிரவேசம்

ஜனமேஜயா கேள். நீ  ஆவலாக  எதிர்பார்த்துக்கொண்டிருப்பதை சொல்கிறேன்

'அர்ஜுனன் உத்தரனை மயானத்தில் இருந்த ஒரு பெரிய  வன்னி விருக்ஷத்திடம்  கொண்டு சென்றான் அல்லவா?

'உத்தரா,  உன்னுடைய வில்  என்னுடைய  வலிமையைத்   தாங்காது என் வேகத்துக்கு  ஈடு கொடுக்காது. எதிரிகள் மிக பலம் வாய்ந்த அசகாய சூரர்கள். அவர்களை எதிர்ப்பது மற்ற எவராலும் முடியாத காரியம். அதோ பார்,   அந்த  வன்னி மரத்தில் உடனே ஏறு.  அதன் உச்சியில் நான்கு கிளைகள் பிரியும் இடத்தில் பள்ளமாக இருக்கும்.  அதில் பார். வில் அம்புகள் நிறைய இருக்கும். அந்த  கிளைகளோடு  எவர் கண்ணிலும் படாமல் நிறைய பச்சைத் தழைகளோடு பின்னி  கவசம் ஆயுதங்கள் நிறைய இருக்கும். அவை  பாண்டவர்கள் மறைத்து வைத்தவை. அவற்றை கீழே ஜாக்ரதையாக இறக்கு. நான் வாங்கிக் கொள்கிறேன்.'' என்றாள்  ப்ரஹன்னளா.

'ஐயோ  ஒரு செத்த பிணம் தொங்குகிறது  அதைப் போய் தோடு என்கிறாயே. நான்  ராஜகுமாரன். இதெல்லாம் செய்ய மாட்டேன். என்னை அவமதிக்கிறாய் நீ ப்ரஹன்னளா''



'நீ  எதற்கப்பா  பிணத்தை தொட வேண்டும்.  தெய்வீகமான வில் அம்புகள் ஆயுதங்கள் இந்த மரத்தில் பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை மட்டுமே எடுத்து என்னிடம் கொடு.''

உத்தரன்  மரமேறினான். அர்ஜுனன் சொன்ன கிளையை விலக்கி பார்த்தான்.  மேலே  இருந்த  இலைகளை தழைகளை வெட்டி உள்ளே கண்ணைப் பறிக்கும் காண்டிபம் வில்லையும் மற்ற  வில்களையும் வாள்களையும் அம்புகளையும் பார்த்தான்.

''ஆஹா,  இவ்வளவு பெரிய,  கம்பீரமான  முறுக்கேறிய  வில்  யாருடையது. எந்த  ராஜா இதை இங்கே  வைத்திருப்பவன் ? இந்த கனமான  வாள், சக்தி வாய்ந்த வாள்கள்  யாருடையவை?  ப்ரஹன்னளா,   இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?

''உத்தரா,  நீ சொன்ன  வில்  காண்டிபம்.  அர்ஜுனனுடையது.   பொன்னிறம் கொண்ட இந்த  சிறந்த வில் சிவனிடம்  ஆயிரம் வருஷங்கள் இருந்தது. பிறகு பிரம்மனிடம் 503 வருஷங்களும்,  அதற்கப்புறம், இந்திரனிடம் வந்து  85 வருஷங்கள்  இருந்தும், பிறகு சந்திரனும்  கிட்டத்தட்ட  500 வருஷங்கள் இந்த ஆயுதத்தை  ஆண்டான். வருணன் அவனிடமிருந்து இதை பெற்று ஒரு நூறு வருஷம் வைத்திருந்து பிறகு அர்ஜுனனிடம்  கை மாறியது.

நீ  சொன்ன  மற்ற  கனமான வில்  பீமசேனனுடையது. மற்றவை யுதிஷ்டிரன் நகுல சஹாதேவர்களுடையது. நீ பார்த்த வாள்களும் பாண்டவர்கள் ஐவருடையது தான்.''

'ப்ரஹன்னளா, நீ இவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாயே,  அந்த  பாண்டவர்கள்  திரௌபதி எல்லோரும் என்ன  ஆனார்கள். அவர்களைப் பற்றி ஏதாவது உனக்கு தெரியுமா?

''உத்தரா,  நான்  தான்  அர்ஜுனன், பார்த்தன்  எல்லாமே. உன் தந்தையோடு இருக்கிறாரே  கங்க பட்டர் , அவர் தான் யுதிஷ்டிரன், உங்கள் அரண்மனை சமையல்காரன் தான்  பீமன்,  அஸ்வங்களை பராமரிக்கும் தந்திர பாலன் தான் நகுலன்.  தாமக்ரந்தியாக உங்கள்  பசுக்களை காப்பவன் சஹாதேவன்.  திரௌபதி வேறு யாரும் இல்லை, உன்னை என்னோடு அனுப்பிய  சைரந்திரி.''

''என்ன  ஆச்சர்யம் இது.   நம்பமுடியவில்லையே.  அர்ஜுனனுக்கு வேறு என்னென்ன பெயர் சொல்லுங்கள்:

''என் பெயர்களை நானே சொல்கிறேன் கேள்.  அர்ஜுனன், பல்குணன் , காண்டீபன், விபத்சு, விஜயன், நரன், சவாஸாசின், கிரீடி, கௌந்தேயன், தனஞ்சயன், பார்த்தன், ஜிஷ்ணு,  இன்னும் எத்தனையோ''.

அர்ஜுனன் தனக்கு  அந்த பெயர்கள் எப்படி வந்தன  என்பதை விளக்குக்கிறான்.  உத்தரன்  பூரித்து போகிறான்.

'என் பயம் என்னை விட்டு நீங்கி விட்டது. நீங்கள் சொல்படி கேட்கிறேன்'. தேரை  எங்கே செலுத்த வேண்டும், உத்தரவிடுங்கள் ''என்றான் உத்தரன்.

'நல்லது உத்தரா,  பயம்  வேண்டாம். இவர்களை பொடியாக்கி விடுகிறேன் பார். எல்லா  அம்புகளையும்  இந்த  அம்புராத்துணியில் சுற்றி எடுத்துக்கொள்.  உங்கள் பசுக்களை  மீட்கிறேன். அந்த  வாளை  எடுத்து  அருகில் வை.

உத்தரன் புது தெம்பு பெற்றான். முற்றிலும் மாறிவிட்டான்'.

அர்ஜுனன்  தேரில் ஏறினான். காண்டிபத்தின் நாண்  ஏற்றிய சப்தம் எங்கும்  எதிரொலித்தது.

'நீங்கள் ஒருவரே  இத்தனை பெரிய மகா சைன்யத்தை எதிர்கொள்ள முடியுமா என்று தான் ஆச்சர்யமாக இருக்கிறது'  என்றான்  உத்தரன்.

'சந்தேகமே வேண்டாம். நீ ஒருவனே போதும் எனக்கு'. தேரை வேகமாக செலுத்து'. தேரில்  தனது ஆஞ்சநேயன் கொடி மேலே பறக்க அர்ஜுனன் தனது சங்கை ஊதி வரவைத் தெரிவித்து  கௌரவர்களை நோக்கி சென்றான் '

"இது அர்ஜுனனின் சங்க நாதம். எனக்கு பழக்கமானது. நமது சைன்யம் ஒரு பேரிழப்பை சந்தித்தால் ஆச்சர்யமில்லை. தயாராகுங்கள்'' என்றார் துரோணர்.

துரியோதனன் மிக சந்தோஷத்துடன்  கர்ணனிடம் 'அர்ஜுனனை பார்ப்பதில்  எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பதிமூன்றாவது வருஷம் முடியும் முன் அவனைக் கண்டு விட்டோம். எனவே  அவர்கள் ஒப்புக்கொண்டபடி மீண்டும் பன்னிரண்டு வருஷங்கள் வனவாசம் நிச்சயம் அப்புறம் ஒரு வருஷம் மறைந்து வாழவேண்டும்''  என்றான்.

'துரியோதனா, சண்டை என்று வந்தாலும் நாம் தயார். எப்போதும்  துரோணரும் பீஷ்மரும்  அர்ஜுனனை மெச்சுவதும் பாண்டவர்களை நேசித்தும் தான் பேசுவார்கள் புகழ்வார்கள். அவர்களை ஆலோசனை கேட்க தேவையே இல்லை. இன்றே யுத்தத்தில் எதிரே வருவது அர்ஜுனனாக இருந்தால் அவனை அழிப்பேன் '' என்றான் கர்ணன்.

கிருபர் ''கர்ணா  நீ அவசரக்காரன்.  நாம்  சற்றும் இங்கு அர்ஜுனனனை  எதிர்பார்க்கவில்லை. அவன் தயார் நிலையில் உள்ளவன். அவன் இருக்குமிடத்தில் வந்து வகையாக  நாம்  சிக்கி யுள்ளோம். அவனுடன் போர் புரிவது எளிதல்ல. நாம்  த்ரிகர்த்தனுக்கு துணையாக இங்கு வந்துள்ளோம்.  பாண்டவர்களை எதிர்த்து போர் புரிவது வேறு.   நீ, துரோணர், துரியோதனன் பீஷ்மன், நான்  எல்லோருமாக ஒன்று சேர்ந்து தான் எவனை எதிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு பேசு''

''கர்ணா,  இன்னும்  பசுக்களை  நாம் கைப்பற்றவில்லை, பசுக்களும் விராடன் எல்லையை விட்டு வெளியேறவில்லை. மேலும்  த்ரிகர்த்தர்ன் பசுக்களை  கைப்பற்ற போனவன்  வெற்றிகரகமாக  இன்னும் திரும்பவில்லை என்பதை மனதில் கொள். வீம்புப் பேச்சு வேண்டாம்'' என்றான் அஸ்வத்தாமா.

''துரியோதனா , அர்ஜுனன் உன்னையே  குறி வைப்பான். கைது செய்து விராடன் முன்பு நிறுத்த முயல்வான். அதை தடுக்க நாங்கள் ஒன்று சேர்ந்து உன்னை காப்போம்.  தவிர, எனது கணக்குப் படி,  பதிமூன்றாவது வருஷம் முடிந்து விட்டது. எனவே தான் அர்ஜுனன் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறான். யுதிஷ்டிரனுக்கு தெரியாத  நீதியா, நேர்மையா, தவறு செய்ய விடுவானா'? இன்னும் ஒன்று சொல்வேன் கேள். உன்னுடைய முழு சொத்தையும் இழப்பதற்கு பதிலாக  பாண்டவர்களுக்கு சேரவேண்டியதை தந்து அமைதியாக ஒற்றுமையாக  வாழ்வது உசிதம், உத்தமம்'  என்றார்  பீஷ்மர்.

"தாத்தா , பாண்டவர்களுக்கு  தேசத்தில் பங்கு என்பது என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அவர்களை போரில் வெல்வதற்கு ஆயத்தமாகுங்கள் ''

''துரியோதனா,  உனக்கு நன்மை செய்ய  நான் விரதம் பூண்டவன்.  இந்த சேனையில் நாலில்  ஒரு பாகத்தோடு நீ ஹஸ்தினாபுரம் உடனே திரும்பு. நாலில் இன்னொரு பங்கு  இந்த  ஆநிரை களைக்  காத்து நிற்கட்டும்.  மீதி சேனையோடு  நான், துரோணர், கர்ணன், கிருபர், அஸ்வத்தாமா  ஆகியோர் அர்ஜுனனை எதிர்ப்போம்.'' என்றார்  பீஷ்மர்.  துரியோதனன் அவ்வாறே செய்தான்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...