Sunday, March 10, 2019

SURDAS


ஸ்ரீ  சூர்தாஸ்.         J.K. SIVAN 

          ''தாத்தா  என் கையை பிடித்துக்கொள் '' 
                                                      
ஒரு  நல்ல குடும்பம் எனக்கு பழக்கமானது. அந்த குடும்பத்தினர் அனைவருமே   அற்புத ஞானி  ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்கள். அவர்களால் தான் ''ஒரு அற்புத ஞானி'' என்று அந்த   மஹானின்  சரித்திரத்தை புத்தமாக்கினேன்.   அந்த புத்தகம் வெளியிடும் விழாவில் ஸ்ரீ ''கிருஷ்ண குமார்''என்ற அன்பர்   ஒரு அன்புக்கட்டளை எனக்கு இட்டார். 


''நீங்கள் பக்த சூர் தாஸ் பற்றி எழுதவேண்டும். அதை புத்தகமாக்க என்ன செலவானாலும் நான் தருகிறேன். இதோ பிடியுங்கள் அட்வான்ஸ் ரூபாய் இருபதாயிரம்.....''

ரூபாயை முதலில் வாங்கி வைத்துக்கொண்டால் போதுமா? எழுதவேண்டாமா? அதற்கு நிறைய படிக்க வேண்டாமா? கன்னாபின்னா விஷயமா இது? கண்ணா என் மன்னா உன் சமாச்சாரம் ஆச்சே ? அன்றிரவே கிருஷ்ணன் கட்டளையாக தலைமேற்கொண்டு  சிரத்தையாக அதை தொடங்க முடிவெடுத்தேன். அப்படி  நான் சேகரித்த   எண்ண  முத்துக்கள் இனி தொடராக வரும்.

அது சரிதான்..முதலில் உங்களில் யாருக்காவது சூர்தாஸை தெரியாமல் இருந்தால் இதோ அறிமுகம் செய்விக்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள் அந்த அபூர்வரை .

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விழியற்ற கிருஷ்ண பக்தர் சூர்தாஸ். இது அவர் பெயர் அல்ல. சூர் என்றால் அவர்கள் பாஷையில் குருடன் என்று அர்த்தம்...பிறவிக்குருடர் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். ஆறு வயதில் உலகில் தள்ளப்பட்ட சூர் தாஸ் மெதுவாக நடந்து ப்ரஜ் என்கிற உ.பி. தேசத்தில் வாழ்ந்தார். கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.

ஹிந்தியில் கவிதைகளை ப்ரஜ் பாஷா எனும் அந்த ஊர் ஹிந்தி பாஷையில் தான் பாடினார். நம்மூரில் கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், மெட்ராஸ் டமில் என்று இருப்பதை போல. சூர்தாஸ் கிருஷ்ணனை பற்றி ப்ரஜ் பாஷை ஹிந்தியில் பாடினார். 'எழுதினார்' என்று பார்வையற்றவரைப் பற்றி எப்படி சொல்ல முடியும்.

சூர் தாஸ் பாடிய கண்ணன் பாடல்களை சூர் சாகர் ( கிருஷ்ண சமுத்திரம்) என்று சொல்வார்கள். எல்லாமே குழந்தை கண்ணனை பற்றியே என்றால் எவ்வளவு சுகம்!

வழக்கம் போலவே சூர்தாஸ் எப்போ பிறந்தார் என்பதில் ஏதாவது  தகராறு இருப்பின் அது நமக்கு தேவையற்ற சமாச்சாரம்.  வேண்டவே வேண்டாம். சூர்தாஸ் தான் இன்னும் இருக்கிறாரே சூர் சாகரில், அவரது அற்புத  கவிதைகளில். அது போதும்.

''ராதா--  கிருஷ்ணா''    என்று இரு பெயர்களை நினைத்தாலே கடல் போல பொங்கும் கற்பனை சூர் தாஸ் என்ற பிறவிக் குருடருக்கு.     இதயம் நிரம்பிய  அந்த அமுத பிரவாகத்தை  மனம் பார்க்கும் போது  புறத்தில் கண் விழி இருந்தென்ன இல்லாதென்ன.'      ஒரு லக்ஷத்துக்கும் மேலே கண்ணன் பாட்டுகள்.... யாரையா அதையெல்லாம் பாதுகாத்து அச்சடித்து புத்தகமாக இலவசமாக செய்ய ? கிருஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட்டா  இருந்தது அப்போது? எவ்வளவோ நமக்கு கிடைக்காமல் போய் விட்டதே!!! எவ்வளவு பெரிய துர்பாக்கியம். ஏதோ அவர் எழுதியதாக ஒரு 8000 மிஞ்சி இருக்கிறது. தெற்கே தான் அபாக்யசாலில் நிறைய  என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வடக்கேயுமா? நல்ல விஷயங்களை கோட்டைவிடுவதில் மன்னர்கள் நாடெங்குமா?

சூர்தாஸ் வாழ்ந்த  காலத்தில்  நமது பாரதத்தை அப்போது முகலாய பேரரசன் அக்பர் ஆண்ட சமயம். அவன் சூர் தாஸ் கவிதை ரசிகன்.

காட்டு வழியாக கண்ணற்ற சூர்தாஸ் நடந்து செல்லும்போது ஒரு நாள் தரையோடு தரையாக இருந்த பெரிய கிணறு ஒன்றில் விழுந்து விட்டார். கண்ணன் காப்பாற்றினான். அவனைப் பாட அவர் வேண்டாமா அவனுக்கு.?  
அதனால் அவர்  அவனுக்காகவும் நமக்காகவும் கிடைத்தார். இந்த கதை அப்புறம் சொல்கிறேன். 

வழக்கமாக  உட்கார்ந்து பாடும்  கிருஷ்ணன் கோவிலில் ஒருநாள்   ராதையின் கொலுசை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு ''அவனை வரச்சொல்லு'' என்று சொல்லி அவள் கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டு வர ....... இது ஒரு கதையும் இருக்கிறது சொல்கிறேன்.

சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட சூர் தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். ஒரு நாள் அவர் உட்கார்ந்த திண்ணை அருகே தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது. ''ஆஹா எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட  வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?  ஏன் முடியாது ஒருநாள் என்னையும்  கிருஷ்ணன் பாட வைப்பான்'' என்ற நம்பிக்கையோடு  மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் ஒருவன் ''டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?""
'கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு''
''சரி வா''
இரவு வந்தது. சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்'' இந்த முடிவு சூர்தாஸிடம் சொல்லாமலேயே அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை   அவரை அங்கேயே  விட்டு விட்டு  சென்றதற்கு காரணம்.

ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டு பண்ணி கிருஷ்ணன் பாடல்களை பாடினார் சூர்தாஸ். அதை கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர் அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள் மூலம் காதில் விழுவது தான் உலக ஞானம்.

பதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது. சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா? ஒரு வழி காட்டினான்  . ''இவன் ஒரு அதிசய பையன்'' என்று  அந்த ஊரே நம்பியது.
அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை  ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன்  திண்டாடுகிறான். சூர் தாஸ்   மனதில் தோன்றிய  ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங்கே சென்று பார்க்க  அந்த பையன்  அழுதுகொண்டு நின்றான்.   அப்புறம் என்ன  கிருஷ்ணன் அருளால்  சூர் தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி  ''டொய்ங்   டொய்ங் ''  வாத்யம் சூரதாஸிடம்  கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து கூடவே  பாடுவார் சூர்தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் சூர் தாஸ் பாட பாட எழுதி வைத்தவர்கள்.  அதில் தான் நமக்கு  8000 மிஞ்சியது  என்று சொன்னேன்.  அதில்  ஒரு  நூறாவது எனக்கு  ஆங்கில அர்த்தத்துடன் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக உங்களுக்கு எழுதுவேன்!!எல்லாம் கிருஷ்ணன் அருள்!

''சூர் தாஸ் இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.'' ஒரு இரவு கண்ணன் சூர் தாசை  அழைத்தான்.

ஆஹா அப்படியே '' -- சூர் தாஸ் கிளம்ப சிஷ்யர்கள் வருந்தினார்கள். ''ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்?''

''அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு பிருந்தாவனம் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பிக்கிறேன். வழியெல்லாம் கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். இங்கேயே இருங்கள் என்று போகும் வழியெல்லாம் அழைப்பு. ''நான் ஒரு பர தேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன்'' என்று ஒரே பதில் அனைவருக்கும் கிடைக்கிறது. . சூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத சூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது? பசியோடு ஏழு நாள் கிணற்றில்.

''தாத்தா உன் கையை நீட்டு. மேலே இழுக்கிறேன்'' எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் அருகில் கேட்கிறது. கிணற்றில் இறங்கி உதவுகிறான். மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான்? . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா? . எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவனாச்சே!

''சூர்தாஸ்,   விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்று பிரபல கிருஷ்ண பக்தர் சுவாமி வல்லபாச்சாரியார் இந்த ஊர் வருகிறார்.''
''அடடா நான் அவரை சென்று நமஸ்காரம் பண்ண முடியுமா?''
சூர்தாஸ் எப்படியோ தட்டு தடுமாறி தன்னை சந்திக்க வரும் முன்பே வல்லபாச்சாரியார் சூர்தாஸை தேடி வந்துவிட்டார். வல்லபாச்சார்யர் திருவடிகளை பிடித்துக்கொண்டு கதறுகிறார் சூர்தாஸ்.

''சூர்தாஸ், நான் வந்ததே உங்கள் திவ்ய கிருஷ்ண கானத்தை கேட்கத்தான்''. தொடர்ந்து வெகுநேரம் சூர் சமுத்திர சுனாமி அங்கே கான  வெள்ளமாக பெருகுகிறது.  

வல்லபாச்சார்யர் சில நாள் தங்கிய போது கிருஷ்ணனை பற்றிய சகல சரித்திரங்களையும் விஷயங்களையும் சூர்தாஸ் காதல் கேட்டு மனதி  இருத்தி வைத்துக் கொள்கிறார்.  அவ்வளவும் பாடல்களாகியது.

வல்லபாச்சாரியார் சூர்தாஸை பிருந்தாவனம் அழைத்து செல்கிறார். பிருந்தாவனத்தில் கோவர்தன கிரிதாரி ஆலயத்தில் சூர்தாஸ் ஆஸ்தான வித்துவான் ஆகிறார்.

தான்சேன் மூலம் சூர் தாஸ் கீர்த்தனங்களை கேட்ட அக்பர்  '' சூர்தாஸ் நீங்கள் எனது சாம்ராஜ்ய அரண்மனை வந்து 
பாடுங்கள்'' என்று செய்தி அனுப்புகிறார்.  
''சக்ரவர்த்தி, என்மேல் இவ்வளவு அன்பா. எனக்கு கிருஷ்ணனின் சமஸ்தானம் ஒன்றில் தான் பாட்டே வரும் '' என்று பதில் அனுப்புகிறார் சூர்தாஸ். 
 அக்பர் நேரில் வந்து சூர்தாஸை ஆலயத்தில் சந்தித்து அவர் கிருஷ்ண கானாம்ருதத்தை கேட்டு மகிழ்கிறார்.
சூர்தாஸ் இயற்றிய கிருஷ்ண கான சமுத்திர அலை இன்னும் பல இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறதே. தமிழ்நாட்டிலும்  பரவ வேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...