Tuesday, March 12, 2019

GEETHA GOVINDHAM


கீத கோவிந்தம் J K SIVAN
ஜெயதேவர்
பூர்வோத்தர விஷயம்

ஜெயதேவரின் அஷ்டபதி ஒலிக்காத இடம் இந்த பாரத தேசத்தில் எங்கும் இல்லை. வருஷா வருஷம் ஊரெங்கும் ராதா கல்யாண மஹோத்சவத்தில் பல பாகவதர்களால் பாடப்பட்டு வருகிறது. அதற்கென்று மனத்தை கொள்ளை கொள்ளும் அபூர்வ ராகங்களை அமைத்து கோஷ்டியாக அவர்கள் பாடும்போது நாம் இருப்பது நமது வீட்டிலோ, ஒரு பொது இடத்திலோ நிச்சயம் இல்லை. நம்மை அவர்கள் அழைத்து செல்லும் பிருந்தாவனம். ராதா கல்யாண உற்சவங்களில் வயதான பெண்கள் ஆண்கள் அநேகர் பிரசங்கம் செய்பவர் பாடல்களுக்கு ஏற்றவாறு சபையில் எழுந்து ஆடுவதும் கண்டிருக்கிறோம். பக்தி பரவசம் ஒன்றே காரணம்.

இப்பாடல்கள் உலகத்தின் ஒரு பிரஜையாக , நம்மைப் போல் ஒருவராக, ராதையைக் காட்டி கிருஷ்ணனின் பிரேமையை அவள் அனுபவிப்பதாக காட்டி நம்மை மகிழ்விக்கிறது. இயற்கையில் உண்மையைச் சொல்லப்போனால் நாம் தாம் ராதாக்கள். நம் எல்லோருக்கும் அவன் ஒரே கிருஷ்ணன். பிரபஞ்சமே, இயற்கையே ராதை என்றால் கிருஷ்ணனின் அன்பும் நேசமும், பாசமும் பிரேமையும் பூராவுமே நமக்குத்தான் அல்லவா?

இயற்கையும் இறைவனும் கூடுவது தான் ராதா- கிருஷ்ண பிரேம பாவம். இயற்கை தான் இறைவன்,இறைவனின்றி இயற்கை ஏது? கண்ணால் காண முடியாத பரமனைக் காணும் யாவிலும் காண்பது தான் ராதா-கிருஷ்ண தத்வம். .

இறைவன் எளியோர்க்கும் எளியவன் என காட்டத்தான், சாதாரண, பாமர, ஆயர்பாடி கோபியர்களோடு சேர்ந்து கோலாகலமாக அந்த கண்ணன் குலாவினான், ஆடினான், பாடினான், விளையாடினான். தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்து,வையகத்தையும் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தினான். உருவம் இல்லாவிட்டால் புரியாதே என்பதற்காக ராதையும் ஆனானோ? இரவும் பகலும் அந்த இறைவன் தன்னைப் பலராக்கிக்கொண்டு அந்த கோபியரோடு விளையாடியது தான் ராசக்ரீடை. வட்டமான அவர்கள் கூட்டத்தில் மைய நாயகன் அந்த மோகன கிருஷ்ணன். அவனது குழல் நாதம் அவர்களை ஆட வைத்தது. அந்த கோபியரில் ஒருவளாக பிறப்பதற்கு எத்தனை புண்யம் செய்திருக்க வேண்டும் ஒவ்வொரு ஆத்மாவும். இது நடந்தது புண்ய க்ஷேத்ரமான பிருந்தாவனத்தில் மட்டுமே. துளசி வனங்களின் சூழலில்.

ராதா யார் என்று புரியவேண்டுமா? நெருப்புக்கு சூடு எப்படியோ, பனிக்கு குளுமை எப்படியோ, தேனுக்கு இனிப்பு எப்படியோ, அப்படித்தான் கிருஷ்ணனுக்கு ராதை. அவளே அவன் குணம், தன்மை, பிரேமை,செயல் யாவும். கிருஷ்ணன் மீது ராதை கொண்ட பிரேமையே பிரேமை என்ற வார்த்தையின் உணர்வு. ப்ரேமையின் உருவம் தான் ராதா. உயர்ந்த நிலை அடைந்த ஆத்மாவின் பெயர் தான் ராதா. ராதை என்ற சக்தியே பிரபஞ்சத்தின் ஆதார ஜீவ சக்தி, உயிர்நாடி. .

சுகந்தமான தென்றல் வீச, மேலே பால் போல் நிலவு குளுமையால் பூமியைக் குளிப்பாட்ட, நிசப்தம் எங்கும் நிலவ, அந்த வசந்த கால முன் இரவில், நிலவொளியில், கோபியர்கள், கிருஷ்ணனின் குழல் நாதத்தில் , தம்மை இழந்து வீடு வாசல் எல்லாம் துறந்து ஓடி பிருந்தாவனத்தில் மதுவனத்தில் ஒன்று சேர்கிறார்கள். கண்ணிலே கிறக்கம், ஒருவித இன்ப மயக்கம். எதற்கு எல்லோரும் இங்கு வந்து கூடுகிறீர்கள் என்று அவன் அவர்களை திரும்ப போக சொல்கிறான். காது கேட்குமா அவர்களுக்கு? யமுனையும் ஆடி அசைந்து அந்த இன்பலோகத்தில் ஆணவமாக நகர்கிறாள். ராச லீலை தொடர்கிறது. அவனைச்சுற்றி அவர்கள். கண்ணும் கருத்தும் யாவும் அவர்களுக்கு அங்கே அந்த நேரத்தில் கிருஷ்ணன் ஒருவனே.

என்ன மாயம் இது? திடீரென்று கிருஷ்ணனைக் காணோமே! கண நேரத்திற்கு முன் இங்கிருந்தானே .சகல இன்பமும் துன்பமாக மாறிவிட்டதே. ''கிருஷ்ணா, கிருஷ்ணா'' என்று ஆதங்கத்தோடு, மனதில் ஆசையோடு அவனை அங்கும் இங்கும் எங்குமே தேடுகிறார்கள், ஓடுகிறார்கள், செடி பின்னாலும், மரத்தின் பின்னாலும், மேலே கிளைகளிலும் சிலர் யமுனை நதியிலும் தேடி அலைகிறார்கள். களைத்துப் போய் சக்தியின்றி துவண்டு சரிந்து விழும் நிலையில் இதோ அவர்கள் முன்னே அவன் தோன்றுகிறான். புத்துணர்ச்சி, ஒரு சக்தி, புதிதாக அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? பிறகென்ன? ஆடல் பாடல் தான். எல்லோரும் அவனை கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்கள், , அவனோடு ஓடுகிறார்கள், விளையாடுகிறார்கள், நதியில் தாவி நீந்தி ஒரே கோலாகலம்.

ராதை பிறந்த விவரம் தெரியுமா? ஆச்சர்யமாக இருக்க்கும். நந்தகிராமத்தில் நந்தகோபன் யசோதை இருந்தார்கள் அல்லவா? அதற்கு சற்று தூரத்தில் வர்ஷனா / பர்சானா கிராமத்தில் வ்ருஷபானு கீர்தித சுந்தரி என்கிற கோப கோபியர் வாழ்ந்து வந்தனர். குழந்தை இல்லை.

ஒருநாள் குளத்தில் குளிக்க சென்ற வேறு;வ்ருஷபானு குளத்தில் ஒரு தாமரைஇலையில் ஒரு சிறு குழந்தை இருப்பது தெரிகிறது. நீந்தி சென்று அதை எடுத்து வருகிறான். அந்த பெண் குழந்தைக்குக் கண் மூடியே இருந்தது. அவள் முதலில் கண் திறந்து பார்த்தது கிருஷ்ணனைத்தான்.!! !

வ்ருஷபானு ராஜா கண் திறவா குழந்தையை ஒருநாள் தனது வீட்டுக்கு வந்த நாரதரிடம் கொடுக்க அவர் ராதையை பார்த்து "இவள் தெய்வாம்சம் பொருந்திய அழகின் சிகரம். இவள் உனக்கு கிடைத்தது உன் பேரதிர்ஷ்டம்'' என்கிறார். கிருஷ்ணனே கட்டுண்ட மந்திர சக்தியுடைய தூய பக்தி ராதையிடம் மட்டுமே இருந்தது. ராதையின் உயிர் மூச்சு கிருஷ்ணன்.
கிருஷ்ணனின் ஜீவ சக்தி ராதை. இரண்டையும் எப்படி தனித் தனியாக பிரிக்க முடியும், பார்க்க முடியும்?. கிஷ்ணனின் குழலில் தனை மறந்து, உலகை மறந்து ஏதோ ஒரு நாக பாசத்தில் கட்டுண்ட எத்தனையோ ஜீவன்களில், கோபியரில், ராதை முதன்மை யானவள். ஏன் கிருஷ்ணனின் குழல் மீதே பொறாமை கொண்டு அதை ஒளித்துவைத்தவள். ராதா லக்ஷ்மியின் அவதாரம் என்று சொல்வது உண்டு

கிருஷ்ணன் பிறந்தவுடன் கர்க முனிவர் கோகுலம் வருகிறார். '' நந்தகோபா இந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் வை'' என்கிறார். கிருஷ்ணன் பெயர் அர்த்தம் வெகு அழகானது பிறகு சொல்கிறேன். இப்போது நந்தகுமாரனுக்கு ஜெயதேவர் கீத் கோவிந்தத்தில் சில அழகான பெயர்கள் கொடுத்துள்ளதை மட்டும் சொல்கிறேன்.

ராதா பந்து,(கிரிக்கெட் பந்து மாதிரி இல்லை, உறவினன் என்கிற பதத்தில் வரும் BHA )
ராதிகாத்மா (ராதாவின் ஆத்மா)
ராதிகா ஜீவனா ( ராதையின் ஜீவனால் வாழ்பவன்) ,
ராதிகாங்கோ (ராதையின் அங்கமே தனது அங்கமானவன் )
ராதா மானசபுரக (ராதையின் மனதே தன மனதானவன்)
ராதா தனோ (ராதை என்கிற செல்வத்தை உடையவன்)
ராதிகா சக்த மானச ( ராதை என்கிற சக்தியையும் மனசையும் கொண்டவன்)
ராதா ப்ராணோ (ராதையே தன் பிராணன் ஆனவன்)
ராதிகேஷோ (ராதையின் ஈசன்)
ராதிகாசித்தோ (ராதையின் சித்தமானவன்)

இன்னும் எத்தனை வர்ணனைகள். எல்லாம் எதற்காக. ராதா என்பது கிருஷ்ணனின் பெண் உருவம் என்று காட்டத்தான் . போதுமா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...