Sunday, March 31, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்.  J K SIVAN 

மஹா பாரதம்.

                    பயங்கர  விபரீதம்  நெருங்குகிறதே...

லக்ஷக் கணக்கான  ஸமஸ்க்ரித  ஸ்லோகங்களில்  வேத வியாசர்  இயற்றி  பிள்ளையார்  ஒரு  தந்தத்தை ஒடித்து எழுது கோலாக  உப்போயோகித்து  ஓலைச்சுவடிகளில் வடித்ததை  சிறந்த  ஞானஸ்தர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து  அதை  பூரா  அலசி,  வடிகட்டி,  வேண்டியதை, தேவையானதை மட்டும் திரட்டுப்பாலாக சுருக்கி  தந்தது தான்  என்னுடைய ''ஐந்தாம் வேதம்''  இரு பாகங்கள்.  இதில் ஒரு சிறப்பு அம்சம் இதில் விஷ்ணு ஸஹஸ்ரநாம, பகவத்கீதை, யக்ஷப்ரச்னம் அனைத்துமே  முழுமையாக தமிழில் வாடி கட்டி எளிமையாக்கி குழந்தைகளுக்கும்  மற்றவருக்கும்  விலையில்லாத புத்தகமாக்கினேன்.

இப்போது ஹஸ்தினாபுரம் செல்வோம்.
ஹஸ்தினாபுரத்தில்  மனதில் கொஞ்சமும் அமைதி இல்லாமல்  திருதராஷ்ட்ரன்   சஞ்சயன் வரவுக்காக ஆவலோடு காத்திருந்தான்.  யுதிஷ்டிரன் என்ன பதில் சொன்னானோ? கிருஷ்ணன் அங்கிருந்தால் அவன் எண்ணம் என்ன?????????? 

சஞ்சயன் வந்துவிட்டானா.......  வந்தவுடன் உடனே என்னிடம் அழைத்து வாருங்கள்  என்று கேட்டுக்கொண்டே இருந்தான் திருதராஷ்டிரன்.   சஞ்சயன்  அரண்மனையை அடைந்ததும்   வாயிற் காப்போன்  ஓடி ச்சென்று சஞ்சயன் வரவைச் சொன்னதும் ''உடனே என்னிடம் அழைத்து வா''  என்று கட்டளையிட்டான் விழியற்ற  வழியற்ற  திருதராஷ்டிரன்.    சஞ்சயன்  திருதராஷ்டிரனை  வணங்கி  தான் வந்திருப்பதை அறிவித்தான்.

''சஞ்சயா   வா,  என்னருகில் உட்கார் ..  நீ  போய்  வந்த  விஷயம் உடனே ஒன்று விடாமல் என்னிடம் சொல்''

''அரசே, யுதிஷ்டிரன் முதலில்  உங்களைத்தான்  வணங்கி விசாரித்தான். பிறகு இங்குள்ள  அனைத்து  பெரியோர்களைப் பற்றி கேட்டு  அவர்களுக்கு  பாண்டவர்களின்  வணக்கத்தை சொல்ல சொன்னான். 
அரசே.  யுதிஷ்டிரன்  காட்டில்  நாட்டில் எங்கு இருப்பினும்,  தனது சகோதரர்களோடு, த்ரௌபதியோடு  மற்ற ஆதரவான  அரசர்களோடு எல்லோராலும்  மதிக்கப்பட்டு சுகமாக உள்ளான்.

 'அரசே, யுதிஷ்டிரன் தனது உரிமையான  இந்த்ரப்ரஸ்தத்தை உடனே தருமாறு கேட்கிறான்.  கௌரவர்கள் இழைத்த  தீங்கை, கொடுமையை அநியாய அதர்ம செயல் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.  அவனது உரிமையை பறித்து வைத்துக்கொண்ட   அவப் பெயர்  இனி இவ்வுலகில் தங்களை  விட்டு நீங்குமாறு  உடனே  ஏற்பாடு செய்ய வேண்டும்.  துரியோதனன் மீது தாங்கள் வைத்திருக்கும் பாசத்தினால் அவனது அடாத செயல்களுக்கு  துணை போகிறீர்கள். அபகரித்த சொத்து துரோகத்தினால் வந்ததால் துக்கத்தையும் சேர்த்து தான் தரும். உங்கள் குல நாசத்திற்கு  நீங்களே  காரணமாகி விடக் கூடாது.  யுதிஷ்டிரன் யுத்தத்திற்கும் தயாராக இருக்கிறான். ஆனால்  சமாதானத்தையே முதலில் விரும்புகிறான். யுத்தம் என்று வந்தால் உங்களுடைய மக்கள் அனைவரும் அழிவது நிச்சயம். அவர்களை காப்பது உங்கள் கையில் இருக்கிறது.  உடனே  சபை கூட்டி  உங்கள் முன் நிற்கும் இந்த பிரச்னைக்கு  தீர்வு காணவேண்டும்.''  என்றான்  சஞ்சயன்

திருதராஷ்ட்ரன்   சஞ்சயன் கொண்டுவந்த செயதியை  மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தவன், ''சஞ்சயா  உடனே  இங்கே விதுரனை அனுப்பு'' என்றான். ஆள் ஓடினான். விதுரன் வந்துவிட்டான்.

'அண்ணா, விதுரன் வந்திருக்கிறேன்''  என்று வணங்கினான்.
 ''விதுரா சஞ்சயனிடம் யுதிஷ்டிரன் சொல்லி அனுப்பிய  செய்தியை நாளை சபை கூட்டி நீ அறிவிப்பாயாக. என் மனம் ஒரு நிலையில் இல்லை.  உடல் நடுங்குகிறது. புத்தி பேதலித்து விட்டது.'

''அரசே, யுதிஷ்டிரன் எல்லா வகையிலும் மூவுலகும் ஆளும் சக்தி, திறமை உடையவன். உலகம் புகழ்பவன். அவனை வனத்திற்கு அனுப்பிவிட்டு அவன் ராஜ்யத்தை  அபகரித்த துரியோதனன் செயலை கண்டிக்கத் தவறிவிட்டீர்கள். பார்வை இல்லை என்பதற்காக அரசை துரியோதனனிடம் கொடுத்து அதற்கு பலன் அனுபவிக்கிறீர்கள்.  ஒரு மா பெரும் சக்தி வாய்ந்த  பொறுப்பை  சகுனி,  கர்ணன், துரியோதனன் துச்சாதனன் ஆகியோரிடம் விட்டால் என்ன அனர்த்தம் விளையும் என்று நீங்கள் அறியவில்லை.

''அண்ணா   என் மனதில் பட்டதை  உண்மையாக  சொல்கிறேன்.   உங்களிடம்  ஒப்படைக்கப்பட்ட  இறந்த நம் சகோதரன்  பாண்டுவின் ஐந்து குழந்தைகளை ஆளாக்கி  அவர்களை பாதுகாப்பது உங்கள்  பொறுப்பில் உள்ளபோது அவர்களை எதிர்த்து, அவர்களுக்கு சேரவேண்டிய உரிமையை தடை செய்து, அபகரித்து, அவர்களை துன்புறுத்தி, அவர்கள் பலம் பெற்றவர்களாக வளர்ந்து அவர்களால்  நமது குல அழிவையே  தேடிக்கொள்ளும்படி செய்து விடாதீர்கள். உங்கள்  குழந்தைகள் அவர்களையும் சந்தோஷமாக வாழவைத்து ஒற்றுமையை நிலைநாட்டுவது உங்கள் தலையாய பொறுப்பு. யுதிஷ்டிரனை அழைத்து  அவனை அரசனாக முடி சூட்டுவதால் நன்மையே விளையும்.  அவன்  தனது சகோதரர்களோடு  உங்கள் பிள்ளைகளையும் சேர்த்துத் தான்,   நன்றாக பாதுகாப்பவன்.

செய்த  பாபத்திற்கு இதுவே பிராயச்சித்தம்.

முழு ராஜ்யத்தையும் அரசாள விட முடியாவிட்டால், பாதி ராஜ்யமான அவர்களது இந்த்ரப்ரஸ்தத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுவும் இல்லா விட்டால்  ஐந்து  கிராமங்களையாவது அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஒற்றுமை நிலவும்.  உங்கள் பெயர் விளங்கும்.''   விதுரன் சொல்லி முடித்தான்.

 ''விதுரா  நீ  சொல்லும் நியாயங்கள்  பாண்டவர்களைப் பற்றிய  உண்மைகள், தர்ம நியாயம், நேர்மை  எல்லாமே  துரியோதனன்  என்னிடம் வந்து பேசும்போது எனது  மனதை விட்டு நீங்கி விடுகிறதே  நான் என்ன செய்வது? .

அன்று இரவு கழிந்தது.   மறுநாள்  அரசவை கூடியது. பாண்டவர்கள் அனுப்பிய  செய்தி என்ன என்று அறிவதில் மிகுந்த ஆர்வமோடு  அனைத்து அரசர்களும் பிரதானிகளும் கூடியிருந்தனர்.

சஞ்சயன்  பாண்டவர்கள்   ஹஸ்தினாபுரத்தில்   அனைவருக்கும்  வாழ்த்துகள்  தெரிவித்ததை அறிவித்து  அர்ஜுனன் யுதிஷ்டிரன் கிருஷ்ணன் ஆகியோர் ஆமோதித்து  சொன்ன செய்தி என்னவென்றால் 

''துரியோதனன், யுதிஷ்டிரனிடம் தங்களுக்கு சேரவேண்டிய  ராஜ்யத்தை உடனே ஒப்படைக்க வேண்டும். தவறினால்,  யுத்தம் ஒன்றே  பதில் என்றால்  இதுவரை கௌரவர்கள் செய்த பாவத்துக்கு  தக்க கூலி பெறுவார்கள்.அர்ஜுனன் பீமனோடு  நடக்கும்  யுத்தத்தில்  கௌரவர்கள்  உயிரோடு மீள்வது அவர்களது அதிர்ஷ்டம்.''

கர்ணன் குறுக்கிட்டான்.  ''என்னைப் பொறுத்தவரை, நான்  நேர்மையோடு  தான் துரியோதனனுக்கு உழைக்கிறேன். எந்த துன்பத்தையும் யாருக்கும்  விளைவிக்க வில்லை. பாண்டவர்களை  யுத்தத்தில்  நான் ஒருவனே கொல்வேன் ''

 பீஷ்மர் குறுக்கிட்டு '' கர்ணன் பேச்சு கவைக்குதவாத வெறும் பேச்சு. பாண்டவர்கள் முழு வீரத்தில்  பதினாறில் ஒரு பங்கு கூட  இல்லாத கர்ணன் அவர்கள் அனைவரையும் கொல்வதாவது.  திருதராஷ்டிரா, உன் குல நாசத்திற்கு  முக்ய காரணம் இந்த கர்ணன் ஒருவனே.  அவனை நம்பி உன் மகன் துரியோதனன் மோசம் போகிறான். அவன் சகோதரனை விராடநகரில் அர்ஜுனன் கொன்றபோது  கர்ணன் என்ன செய்ய முடிந்தது. நம் அனைவரையும் தனி ஒருவனாக  அர்ஜுனன்   ஒரு சிறு பயலை  தேர்ப் பாகனாக வைத்துக்கொண்டு தோற்கடித்து நமது வஸ்த்ரங்களை  பறிகொடுத்தபோது  கர்ணன் என்ன செய்தான்?. மூவுலகிலும் அர்ஜுனனை வெல்வதென்பது நடவாது. அர்ஜுனன் கிருஷ்ணன் ஜோடி  நர நாரயணர்களின் அம்சம் என்பதை நான் அறிவேன் .வரட்டுப் பேச்சு பேசி காலத்தை வீணாக்க வேண்டாம்.''

துரோணர் தன்  பங்குக்கு  என்ன சொன்னார்  என்பதையும்  கேட்போம்:

''திருதராஷ்டிரா,    அவனது குரு என்பதால்  அர்ஜுனனை நான் எல்லோரையும் விட வெகு நன்றாக  அறிவேன். அவன் சொன்னதைச்  செய்பவன். சமாதானமாக அவர்களோடு இருப்பதே  உனக்கு இருக்கும் ஒரே வழி. பீஷ்மர் கணிப்பு  சரியானது.  அர்ஜுனனன் ஒருவனையே  சமாளிக்க  முடியாத போது  பீமனோடும் மற்ற பாண்டவர்களையும்  அவர்களது பெரும் சைன்யத்தோடு  ஒன்று சேர்ந்து வெல்வது அரிது''.

திருதராஷ்டிரன் புத்தி வேறு வழியில் சென்றது.  ''சஞ்சயா  நீ பார்த்தவரை  நமது சைன்யங்கள், பாண்டவ சைன்யங்களை  விட  எவ்வளவு  பலம்வாய்ந்தது என்று சொல்.''

சஞ்சயன் ஞான திருஷ்டி பெற்றவன். எதிர்காலத்தை அறியக்கூடியவன்.  ஒரு கணம் கண்மூடி யோசித்தான்.  திடீரென்று மயங்கி கீழே விழுந்தான்.   அவனை  மீண்டும் நிலைப் படுத்திக் கேட்டபோது  சஞ்சயன்  ''அரசே, இரண்டு பக்க சைன்யங்களை  நான் பார்த்தவரை, என் கணிப்பில்,  இருவர் மட்டுமே  கண்ணில் தென்படுகிறார்கள்.  பீமசேனன்  அர்ஜுனன்.   பீமன்,   துரியோதனன் மற்றும் உனது  மற்ற 99 பிள்ளைகளின் ரத்தத்தை குடிக்க  தயாராக உள்ளான். பதினாயிரம் யானை பலம் உடைய அவனை  எவரும் நெருங்க முடியாது.  மற்றும்  அனைத்து  கௌரவ சைன்யங்களும், பீஷ்மர், துரோணர் கர்ணன்  அனைவரையும்  அர்ஜுனன் ஒருவனே  கொல்வான் என்பது எனக்கு உறுதியாக தெரிகிறது. அதுவே  என்னை மயங்கச் செய்தது''  என்கிறான்  சஞ்சயன்.

''சஞ்சயா,  நீ  விவரித்த  சேனை விவரம் போதும்.   நீ  சொன்ன  நமது பக்க அணி அத்தனையும் அந்த பீமசேனன் ஒருவனுக்கு  ஈடாகாது. ஆரம்பத்திலிருந்தே என் மக்கள் அனைவரும் அந்த பீமன் ஒருவனிடம் மட்டுமே அஞ்சினார்கள். என்னென்னவோ செய்தார்கள் அவனை அழிக்க முடியவில்லை. இப்போது அவனாலேயே  அனைவரும் அழிவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. நான் அஞ்சுவது அவன் ஒருவனைத் தான்.  அரசவையில் அன்று அவன் செய்த சபதம்.  நினைத்தாலே  நடுங்கி பல இரவுகள் தூக்கமின்றி தவித்திருக்கிறேன்.   ஐயோ  என் காதில்  விடாமல் நாராசமாக  பீமன்  சபதம் செய்தது எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...''   ...... துரியோதனன் தொடையைப்  பிளந்து ரத்தத்தை குடித்து...... மற்ற  99 பேர்களையும் நானே  கொன்று....'  '  என்று  வார்த்தையின்றி தவித்தான்  திருதராஷ்டிரன்.






No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...