Saturday, March 9, 2019

AINDHAM VEDHAM



 ஐந்தாம் வேதம்       J K SIVAN 
மஹா பாரதம்  


                                                         சோதனை மேல் சோதனை


வாழ்க்கை   விரும்பப்படுகிறது என்பதற்கு ஒரு முக்கிய  காரணம் அது நம் மனம்போல் அமைவதில்லை. அதன் ஒவ்வொரு கணமும்  எதிர்பாராதவை, எதிர்பார்த்தவை என்று  காலம் நேரம் இல்லாமல் தொடர்ந்து நடப்பது தான்.  மனிதனின் கனவுக்கும் அவன் வாழும் வாழ்க்கைக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்பது தான் அதன் பலம்.

பாண்டவர்கள்  அஞ்ஞாத வாசம்  எனும் ஒரு வருஷ மறைந்து வாழும் காலத்தில்  ஒவ்வொரு நாளையும் எண்ணி பயந்து கொண்டே பாண்டவர்களுக்குள்ளேயே  ஒருவரை ஒருவர் அறியாதவர்களாக  விராட தேசத்தில் வசித்து இதுவரை  மூன்று மாதம் ஓடிவிட்டது.

நான்காவது மாதம் நடக்கும்போது ஒரு சம்பவம்.

விராடன் தேசத்தில் பிரம்ம தேவனைப் போற்றி வருஷா வருஷம்  ஒரு விழா  பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம். ஆயிரக்கணக்கான வீரர்கள் நாலா பக்கங்களிலிருந்தும் வருவார்கள். பிரம்ம லோகம், சிவலோகம் அங்கெல்லாமிருந்தும் தேவர்கள் ராக்ஷசர்கள் வருவதுண்டு.  எல்லா கேளிக்கைகளிலும் மல்யுத்தம் தான் பிரதானமான போட்டி.    வீரர்களில் மிக பலசாலி ஒருவன் வருஷா வருஷம் வந்து  ஜெயிப்பவன்.  அவன் பெயர்  ஜிமுதன். மற்றவர்களைவெகு எளிதில் வெல்பவன். சிலரை கொன்றதும் உண்டு.  மல்யுத்த வீரர்களால்  போற்றப்பட்டவன். அவனை தன்னுடைய சமையல் காரன் வல்லபனுடன் மோத விராடன் அழைத்தான். பீமனுக்கு இதில் விருப்பமில்லை. எனினும் அரசன் ஆணையை மீறமுடியாமல் போட்டி நீண்ட நேரம் தொடர்ந்தது. முட்டி மோதி, கவிழ்த்து,எரிந்து, தரையில் வீழ்த்தி, அடித்து உதைத்து வெற்றி தோல்வி தெரியவில்லை.

ஒரு கண நேரம் பீமன்  தான்  ஒளிந்து வாழ்கிறோம் என்ற நினைப்பை  மறந்த நிலையில் ஜிமுதனை அப்படியே சுழற்றி மேலே தூக்கி தரையில் அடித்ததில் ஜிமுதன் உயிரை விட்டான்.

விராடன் வல்லபனின் வீரத்தில் மகிழ்ந்து வேறு யாரும் போட்டியிட வரவில்லை என்பதால்   காட்டிலிருந்து ஒரு சிங்கத்தை  கொண்டுவந்து  அதோடு சண்டையிட வைத்தான்.    சுலபமாக  சிங்கத்தைக் கொன்று  பீமன் ஜெயித்தான்.   நல்லவேளையாக  இதுவரை பாண்டவர்களை  யாரும்  அடையாளம் கண்டுகொள்ளவில்லை.  இப்படியே பத்து மாதம் ஓடிவிட்டது. எவ்வாறோ கஷ்டப்பட்டு காலம் தள்ளினார்களே.  இன்னும் பல்லைக்கடித்துக்கொண்டு  ரெண்டு மாத காலம்  .தள்ளவேண்டும்.

 இந்த அஞ்ஞாத வாச காலத்தில்  மிகவும் துன்பப்பட்டவள் திரௌபதியே. சுதேஷ்ணைக்கும் அந்தப் புர  பெண்களுக்கும் பணிவிடை ஓயாமல் ஒழியாமல் செய்யவேண்டியதாயிருந்தது. இன்னும் சிறிது காலத்தில் ஒரு வருஷம் முடியும் என்று இருக்கும்போது ஒரு சோதனை. கீசகன் ரூபத்தில் வந்தது.

கீசகன், மகா பலசாலி, விராடனின் மைத்துனன் உறவு. விராட நகர பலம் வாய்ந்த  சேனாதிபதி. ,அடிக்கடி தனது சகோதரி சுதேஷ்ணையைப் பார்க்க நேராக அந்தப்புரத்திற்கே வருவான். அவன் கண்களில் திரௌபதி பட்டு விட்டாள் வேலைக்காரியாக இருந்தும் அவள் அழகு அவனை மயக்கியது.

''யார் இந்த அதிரூப சுந்தரி. இத்தனை காலம் இங்கு இல்லையே. எங்கிருந்து, எப்போது இங்கே வந்தாள் ? இவளைப் போய் நீ ஒரு பணிப்பெண்ணாக வைத்திருப்பது கொடுமை. அவள் என் ராணியாக இருக்க வேண்டியவள். என்னிடம் அனுப்பு அவளை.'' என்றான் கீசகன்.

திரௌபதியிடம் போய் ''பெண்ணே நீ யார்? எப்போது இந்த விராட நகர் வந்தாய்? உன்னைப் போன்ற அழகியை நான் பார்த்ததே இல்லை. உன்னை ஒரு கணமும் இனி பணிப்பெண்ணாக  இங்கே இருக்க அனுமதிக்க மாட்டேன். நீ என் ராணி. என் மற்ற மனைவியர் அனைவரையுமே  உனக்கு அடிமைகளாக்குவேன்.

திரௌபதி  அவனை ஏற இறங்கப் பார்த்து ''அரசே, ஒரு பணிப்பெண்ணிடம்   நீங்கள் தகாத வார்த்தை பேசுகிறீர்கள்.  உங்கள் கௌரவத்திற்கு அது அழகல்ல.   நான் பிறன்  மனைவி என்பது கவனமிருக்கட்டும். பண்பை, நல்லொழுக்கத்தை இழக்காதீர்கள்''

''ஏய்   பெண்ணே,  நான் யார் என்பது தெரியாமல் பேசுகிறாய். என் சொல்லை எவரும் மீறியதில்லை. மீறி உயிரோடு இருந்ததுமில்லை. பிறகு வருந்தாதே'' என்றான் கீசகன்.

''ஐயா, மீண்டும் சொல்கிறேன்.நீங்கள் யாராயிருந்தாலும் சரி, மனதாலும் என்னை நெருங்க முடியாது. என்னை என் ஐந்து கந்தர்வ கணவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். சக்தி பொருந்திய அவர்கள் கோபத்துக்கு ஆளாகி வீணாக உயிரிழக்க வேண்டாம்.''

''சுதேஷ்ணா, நீ என்ன செய்வாயோ தெரியாது. இந்தப்பெண்ணை நான் அடைய வேண்டும். அதுவும் வெகு சீக்ரம் என்று ராணியிடம் கீசகன் அதிகாரமாக  கட்டளையிட்டான்.அதில் கோபமும் கண்டிப்பும்  அதிகம்.

'' அண்ணா,   நான் ஒரு உபாயம் சொல்கிறேன் கேள்.  இந்த  பெண்ணிடம்  நான்  நிறைய மது பான வகைகள் உனக்கு கொடுத்தனுப்புகிறேன். நீ அவற்றில் சிலவற்றை அவள் மூலம் எனக்கு கொடுத்தனுப்பு. அதை வாங்க வரும்போது தனியாக உன்னிடம் இருப்பாளே . அவளிடம் அதிகாரமோ, ஆக்ரமிப்போ வேண்டாம். மெதுவாக அன்போடு பழகி அவள் மனதை உன் பால் ஈர்த்துக்கொள்'' என்றாள் சுதேஷ்ணை .

கீசகன் மதுபான வகைகளோடு திரௌபதியின் வருகைக்காக காத்திருந்தான்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...