Tuesday, March 5, 2019

UTHTHAVA GITA



உத்தவ கீதை J K SIVAN
1
" ஒரு மகரிஷியின் கதை"

பட்டம், புகழ், பெயர் வாங்க ஆசை எல்லாக்காலத்திலும் தான் சிலருக்கு இருந்திருக்கிறது. துவாபர யுகம், கலியுகம் காலங்களிலும் அது உண்டு. ஆகவே தான் உத்தவருக்கும் ஒரு விருப்பம் இருந்தது. இப்போது எப்படி சிலர் நம்மிடம், ''சார் நிறைய படித்து பிரவசனம் பண்ணி என்ன பலன். கதா காலட்சேபங்களுக்கும் வருபவர்களை ஒரு கைவிரலில் எண்ணிவிடலாம் போல அல்லவா இருக்கிறது. முப்பது நாப்பது வருஷங்களாக பல கோவில்களில் சொல்கிறேன். ம்ம்ம் கலிகாலம் என்று அங்கலாய்க்கும் பௌராணிகர்களை எனக்கு தெரியும்.

நிறைய வேதம், உபநிஷத், வேதாந்தம் எல்லாம் தெரிந்த என்னை போல் ஒரு மேதாவி உண்டா? என்கிற எண்ணம் எப்படியோ உத்தவருக்குள்ளும் இருநதது. தன்னை ஏன் யாரும் "மகரிஷி" உத்தவர் என்று புகழ்ந்து போற்றி மதிக்கவில்லை என்ற ஒரு தாபம் அவருக்கு இருந்ததை கிருஷ்ணன் அறிவான். கிருஷ்ணன் தன்னுடைய ரிஷிகள் நண்பர்களிடம் சொல்லி தனக்கும் மகரிஷி அந்தஸ்து இன்னும் ஏன் அளிக்கவில்லை என்ற ஏக்கமும் அவருக்கு இருக்கிறது என்றும் கிருஷ்ணனுக்கு தெரியும்.

ஒருநாள் கிருஷ்ணன் "உத்தவா, நீ சகல சாஸ்திரங்கள், வேத வேதாந்தம், உபநிஷ த்துக்கள் எல்லாம் கற்று தேர்ந்துவிட்டாயா?"
"இதிலென்ன சந்தேகம் உனக்கு கிருஷ்ணா ''
" ஓ அப்படியா, எனக்கு ரொம்ப சந்தோஷம் . இன்னும் நீ கற்றுக்கொள்ளவேண்டியது அநேகம் இருக்கிறது. நானே உனக்கு உபதேசிக்கிறேன். கட்டாயம் நான் உன்னை நாளைக்கு சந்திக்கிறேன் உன்னிடம் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமே".
“சரி, கிருஷ்ணா, நாளை காலையில் நானே வருகிறேன்”.

மறுநாள் அதிகாலையிலேயே உத்தவர் வந்துவிட்டார் கிருஷ்ணனைத் தேடி.

"வா வா உத்தவா, உனக்காக தான் காத்திருந்தேன். உன்னைத்தவிர வேறு யாரிடமும் இந்த வேலையை கொடுக்க எனக்கு இஷ்டமில்லை நீ ரொம்ப நெருங்கியவன் எனக்கு. ஆகவே தான் மிக ரகசியமான இந்த விஷயம் உன்னிடம் சொல்கிறேன். இது நம்மோடயே இருக்கட்டும். உனக்கு என் பிரிய சகி ராதாவைத் தெரியுமே , அவளுக்கு நான் ஒரு சேதி சொல்ல வேண்டும் உன் மூலம். நீ நேரே பிருந்தாவனம் உடனே சென்று அவளிடம் அந்த சேதியைச் சேர்த்துவிடு. செயகிறாயா?''

கிருஷ்ணனுக்கு சேவை செய்ய, அதுவும், தான் மட்டுமே செய்யக்கூடிய சேவை என்ற பெருமை உத்தவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷம் அவருக்கு. பிறகு வேறு ஏதேதோ விஷயங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு '' உத்தவா இப்போதே புறப்பட்டு. நான் அவசரமாக ஒரு வேலையாக போகவேண்டும்''. திடீரென்று கிருஷ்ணன் அங்கிருந்து சென்றுவிட்டார். உத்தவரும் உடனே கிளம்பினார். போகும்போது கை அசைத்து விடை அளித்தான் கிருஷ்ணன். "கிருஷ்ணா நீ ராதாவுக்கு கடிதம் எதுவும் எழுதி கொடுக்கவில்லையே".

கிருஷ்ணன் பதில் பேசவில்லை.

ரதத்தில் சென்று கொண்டிருந்த உத்தவன் பிருந்தாவனம் அடைந்தபோது தான் அவருக்கு சுரீர் என்று இருந்தது. ''அடாடா ! ராதாவிடம் என்ன சேதி சொல்ல வேண்டும் என்று கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவுமில்லை, எழுதியும் கொடுக்கவில்லை. நானும் கேட்டு வாங்கி வரவில்லையே. சொல்லாமலோ எழுதாமலோ ஒரு செய்தி எப்படி இருக்கமுடியும்? இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். சரி . நாம் செய்த தவறை நாமே சரி செய்வோம் என்று ஒரு ஓலைச்சுவடியை எடுத்தார்.

'' என் பிரியமுள்ள ராதா நீ எவ்வாறு இருக்கிறாய்?. நான் நன்றாக இருக்கிறேன் . உன் நினைவு ஒன்றே தான். மற்றவை நேரில்'' -- உன் கிருஷ்ணன் '' என்று கிருஷ்ணன் எழுதியது போல் தானே எழுதி வைத்துக் கொண்டார் உத்தவர்.

பிருந்தாவனத்தில் ராதா வீட்டை அடைந்தார் உத்தவர் .
ராதைக்கு பரம சந்தோஷம் கிருஷ்ணனிடம் இருந்து ஆள் வந்தது கண்டு. நன்றாக உபசரித்தாள். க்ஷேம லாபங்கள் எல்லாம் குசலம் விசாரித்த பிறகு உத்தவர் "இந்தா ராதா, கிருஷ்ணன் உனக்கு ஒரு கடிதம் கொடுத்தான்" என்று ஓலையை நீட்டினார். ராதா அதை கை நீட்டி வாங்கினாள். அதை படிக்காமலேயே ராதா வாய் கொள்ளாமல் சிரித்தாள்.

“ஏன் ராதா, சிரிக்கிறாய் என்ன விஷயம்?”
“கிருஷ்ணன் எழுதியது தான்”
“அப்படி என்ன கிருஷ்ணன் எழுதியிருக்கிறான்? நீ படிக்கக்கூட இல்லையே '' என்று தெரியாதவன் போல் நடித்தார் உத்தவர் .

"ஓ அதுவா. அதில் உத்தவர் இன்னும் சரியாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை" என்று எழுதியிருக்கிறான் கிருஷ்ணன்'' என்றாள் ராதை..

"என்ன இது விந்தையாக இருக்கிறதே. இவளுக்கு தான் கிருஷ்ணன்னோடு பேசியது எல்லாம் எப்படி தெரிகிறது?" உத்தவர் அசந்து போய் நின்றார் .

“ஆச்சர்யம் வேண்டாம் நான் விவரமாக சொல்கிறேன்' என்று ராதா தொடர்ந்தாள்.
"நானும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவரை நேசிப்பதற்கு ஈடு இணை இல்லை. எங்கள் நேசம்
எப்படிப்பட்டது என்று யாராலும் புரிந்து கொள்ள இயலாது. நாங்கள் இரு வேறு உடல்கள் தாமே ஒழிய எங்களின் உயிர் மனம் இரண்டும் ஒன்றே தான். நான் ஏதாவது எழுதியோ கிருஷ்ணன் ஏதாவது சொல்லியோ எங்களுக்கு தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ தனியாக ஒன்றுமில்லை. எங்கள் இருவருக்குள்ளும்
தனியாக ஒரு எண்ணமோ எதிர்பார்ப்போ, நோக்கமோ, ஒன்றுமே இல்லையே. நான் எதை நினைக்கிறேனோ அதுவே கிருஷ்ணனின் நினைப்பு, நான் எதைச் சொல்கிறேனோ அது கிருஷ்ணன் சொல்வதேயாகும். எங்களுக்குள் வேறுபாடு என்று ஒன்றில்லை. எங்கள் பிரேமை அமரத்வமானது. பரஸ்பர நம்பிக்கை,. தன்னலமற்ற ஒருமித்த மனப்பான்மை, தியாகம், பரிபூர்ண அன்பு இவை கலந்த ஒரே உயிர் நாங்கள் என்றபோது எதற்கு ஒருவருக்கொருவர் கடிதமோ, செய்தியோ அனுப்ப வேண்டும்?. வேறாக இருக்கும் இருவர்க்கு அல்லவோ அது தேவை?'' .

'உத்தவ ரிஷி, என்ன திகைத்து நிற்கிறீர். உம்மை ஒன்று கேட்கிறேன். நீர் தான் நிறைய படித்தவராயிற்றே. உங்கள் அத்வைதம் என்ன சொல்கிறது. எல்லாமே இரண்டற்ற ஒன்று என்றுதானே? இதை புரிந்து கொண்டால் வேறென்ன புரிய இருக்கிறது?. பக்தி என்பது இறைவனோடு ஒன்றரக் கலப்பது தானே? நான் எங்கிருந்தால் என்ன?. கிருஷ்ணன் என்னிடம், என்னுள், என்னோடு மூச்சாக கலந்திருக்கும்போது நான் ஏன் அவனைத் தேடி செல்லவேண்டும்? அவன் ஏன் என்னை தேடி வரவேண்டும்.? இதில் பேச்சென்ன, எழுத்தென்ன?” பேசி முடித்தாள் ராதா.

“ராதா, படிக்காத ஒரு கிராமத்துப்பெண் நீ இப்படியெல்லாம் உயர்ந்த வேதாந்தமெல்லாம் எப்படி சர்வ சாதாரணமாக பேசுகிறாய்? என்று அசந்து போய் கேட்கிறார் உத்தவர்

“உள்ளன்போடு தன்னை இறைவனுக்களிக்க படிப்பெதற்கு, பட்டண வாசம் எதற்கு ?. பார்க்கும் எதுவும் எவரும் கிருஷ்ணனாகவே எனக்கு இருக்கும்போது தனியாக அவன் எங்கிருக்க முடியும் ?”

மனதார அவளை வணங்கிவிட்டு உத்தவர் துவாரகை திரும்பும்போது முற்றிலும் மாறுதல் அவரிடம் இருந்தது. "தான்" கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வந்தது. மறுநாள் கிருஷ்ணனை சந்தித்தார் உத்தவர். அவரிடம் நிறைய மாறுதல் இருப்பதை உணர்ந்து சிரித்தான் கிருஷ்ணன்.

"என்ன உத்தவா பிருந்தாவனம் போய் வந்தாயா. நீ வந்தவுடன் தான் உனக்கு என் நண்பர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்து ஒரு "மகரிஷி" பட்டம் வாங்கித்தருவது பற்றி பேசவேண்டும் என்று நினைத்தேன்".

ஷாக் அடித்தது போல் ஆகிவிட்டது உத்தவருக்கு. எழுந்து நெடுஞ்சாண்கிடையாக கிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கினார்.

"கிருஷ்ணா எனக்கு மகரிஷி பட்டம் வேண்டாம். அந்த எண்ணம், ஆசை, படித்த கர்வம் எல்லாம் ராதையைப் பார்த்தபின் நேற்றோடு காற்றில் போய் விட்டது.

"உத்தவா, இந்த பிருந்தாவன விஜயம் உன்னை திருப்பிப் போடும், உன் அகக்கண் திறக்கும் என்ற என் நம்பிக்கை வீண் போகவில்லை. உன் மீது இருக்கும் நம்பிக்கையால் தான் என்னுடைய உபதேசங்களை எவ்வளவோ மகரிஷிகள் இருந்தும் உன் மூலம் எழுதவைத்து மகரிஷி யாகவோ, பட்டம் பெறவோ, சிறிதும் எண்ணம் இல்லாத உன்னால் மக்களுக்கு அவற்றை எளிதில் புகட்ட, புரிய வைக்க எனக்குள் ஒரு தீர்மானம்.

கிருஷ்ணன் இந்த பூமியில் கடைசியாக உபதேசித்தது உத்தவருக்கு. கிருஷ்ணன் அவருக்கு உபதேசித்த உத்தவ கீதை தான் (ஹம்ச கீதை என்றும் பெயர்) இதுவே கிருஷ்ண அவதாரத்தில் கடைசியாக செய்த உபதேசம்.இதை கிருஷ்ணனிடம் பெற்று நமக்கு அளித்த உத்தவர் “மஹர்ஷி” என்றே அழைக்கப் படுவதில் என்ன அதிசயம்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...