Friday, March 8, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்             J K SIVAN 
 
மகா பாரதம்.                                                            
                                                             இவர்கள்  யாரோ? 

                                
விராட தேசம் அன்று காலை புதுமையாக காட்சியளித்தது.  மரங்கள்  காய்கள் கனிகளுடன் குலுங்கின. செடிகள் கொடிகள் நிறைய நறுமண மலர்களோடு வாசம் வீசின.  சிறிய  பன்னீர் தெளித்தால் போல தூறல் எல்லோர் மனதையும் கலைப்படையச்செய்தது. என்ன விசேஷம் இன்று?   யாரோ  சில புதிய மனிதர்கள் மன்னரின் அரண்மனை நோக்கி வருகிறார்களே.
                                                                    
கையில் ஒரு மூட்டையில் தங்கத்திலான தாயக் கட்டைகளை ஏந்தி கங்க பட்டன் விராடன் அரண்மனை
யில் நுழைந்தான். சிம்மாசனத்தில் விராடன் அமர்ந்திருந்தான். 
''அரசே, யாரோ ஒரு கம்பீரமான துறவி போன்ற ஒருவர் உங்களை காண வந்திருக்கிறார்''
''வரச்சொல்'    கங்கபட்டர் அரசனை  வணங்கி நின்றார்.
''யாரிவர்?  . பார்த்தால் மிகவும் லக்ஷணமாக, படித்தவராக, அனுபவஸ்தராகக் காண்கிறாரே என்று  யார்  நீங்கள் என்று விராடன்  விசாரிதான்..
'' அரசே, நான் ஒரு பிராமணன். யாசகன். உன்னிடத்தில் அண்ட வந்தவன்.
''பெரியவரே உங்களைப்பார்த்தால் எனக்கு மிகவும் நல்ல அபிப்ராயம் உண்டாகிறதே.உங்களுக்கு என்ன உதவி தேவையோ கேளுங்கள். ஆனால் நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், குலம் கோத்ரம் என்ன இதெல்லாம் சொல்லுங்கள்'' என விராடன் வினவினான்.
' என் பெயர் கங்கபட்டன், பிராமணன், வையாக்ரம் எனது ஊர் என்பதால் வையாக்ரன் என்று அழைப்பர். எனக்கு இந்த தாயக்கட்டை உருட்டுவதில் மிக்க அனுபவம். முன்பு பாண்டவ ராஜா யுதிஷ்டிரனிடம் அவன் நண்பனாக இருந்தவன்.''
' ஓஹோ. ரொம்ப நெருக்கமாகிவிட்டது நமது நட்பு. எனக்கு பாண்டவர்களை மிகவும் பிடிக்கும் யுதிஷ்டிரனைப்  போன்ற தர்ம நியாயமானவன் உலகிலேயே கிடையாது. அவனது நண்பன் என்று நீங்கள் சொல்லியதாலேயே. உங்களை என்னோடு இந்தக் கணம் முதல் இருக்க உத்தரவிடுகிறேன். மறுக்காதீர். '' என்றான் விராடன்.
'மகாராஜா உங்கள் ஆதரவு கிடைத்ததற்கு நான் அந்த யுதிஷ்டிரனுக்கு தான் நான் நன்றி சொல்ல
வேண்டும்''.
அன்று முதல் அரசவையில் விராடனோடு யுதிஷ்டிரன்  கங்கபட்டநாகை  வேலையில்  அமர்ந்தான்.
அன்று  மதியத்துக்கு முன்பு  பருத்த சரீரத்தோடு, இடையில் கருநிற எண்ணெய்க்கரை லக்ஷணமாக கையில் ஒரு பெரிய ஜல்லிக்கரண்டியோடு அரசன் பார்வை படும்படியாக   வாசலில் ஒரு ஓரத்தில் வந்து நின்றான் பீமன்.

''மந்திரி, அதோ நிற்கிறானே கட்டுமஸ்தாக ஒரு மனிதன்.  யாரவன்? எதற்கு இங்கு வந்திருக்கிறான் என்று விசாரி''
சில கணங்களில் ராஜா முன்னே கொண்டு வரப்பட்ட பீமன், அரசனை வணங்கி,  ''மகாராஜா, நான் வல்லபன், பாண்டவர்கள் அரண்மனையில் சமையல் கட்டுக்கு அதிபதி. எனக்கு உங்களிடம் வேலைக்கு அமர விருப்பமாகி இங்கு வந்துள்ளேன்.''

'என்னப்பா நீ சொல்கிறாய். உன்னைப் பார்த்தால் சமையல்காரனாக தெரியவில்லையே. ஒரு மாவீரன், மல்யுத்தன் போல அல்லவோ நீ தோற்றம் அளிக்கிறாய்'' எதற்கு பாண்டவர்களை விட்டு  வந்துவிட்டாய்?''

''அரசே, வாஸ்தவம் உங்கள் கணிப்பு. எனக்கு சமையல் கலயைத்தவிர மல்யுத்த பயிற்சியும் உண்டு. அனேக சிங்கங்கள், யானைகளைக் கூட வீழ்த்தியவன். யுதிஷ்டிர மகாராஜா அரண்மனையில் வரும் மற்ற மல்லர்களோடு போட்டியிட்டு வென்றிருக்கிறேன். தங்கள் அரண்மனை மல்லனாகவும் பணி புரிய சந்தர்ப்பம் கிட்டினால் நான் பாக்யசாலி . நீங்கள் கேட்ட இன்னொரு கேள்விக்கு பதில்:   பாண்டவர்களே  இப்போது இல்லையே.  அரசை அரண்மனையை பிரஜையை இழந்து நாடோடிகளாக  காட்டில் திரிகிறார்கள் என்று அறிந்தேன். என் விதி என்ன செய்வது?''

''ரொம்ப சௌகர்யமாகிவிட்டதே. நானும் ஒரு மல்லனே. நீ இன்று முதல் என் அரண்மனை சமையல் கட்டுக்கு அதிபதியும் மல்யுத்த விளையாட்டு பயிற்சியாளனும் கூட. அந்தக்கணம் முதல் வல்லபன் என்ற சமையல்காரனாக   பீமன் விராடன் அரண்மனையில் சமையல் காட்டில் குடியேறினான்.

பொழுது சாய்வதற்கு முன்பாக  கருப்பாக, அழகும் இளமையும் கூடிய மங்கை ஒருத்தி, தனது நீண்ட கரிய கூந்தலை அள்ளி முடிந்து பெண்மைக்குரிய நாணம் வேகம், சங்கோஜத்தோடு அங்கும் இங்குமாக அரண்மனை பெண்டிர் பகுதியில் அலைவதைப் பார்த்த சில பெண் சேடிகள் அவளை அரசியிடம் அழைத்து சென்றனர்.

''யாரம்மா நீ?''

''நான்... நான்... ஒரு ராஜாவின் அரண்மனையில் சைரந்திரி. என்னை ஆதரித்து ரட்சிக்க இந்த அரண்மனை தேடி வந்தேன். யாரெல்லாமோ சொன்னார்கள் இந்த அரண்மனையில் என் வாழ்க்கை நிம்மதியாக ஓடும் என்று.'' திக்கித் திக்கி திரௌபதி பயத்தோடு பேசினாள் .

விராடனின் பட்ட மகிஷி சுதேஷ்ணைக்கு சைரந்திரியை ரொம்ப பிடித்துவிட்டது என்று நான் வேறு சொல்லவேண்டுமா?   அவள் அழகு, பதவிசு, மிருது பாஷை, அடக்கம் எல்லாமே காந்தம் போல் ராணியை மயக்கி விட்டதே.

'' அம்மா, நீ உண்மையிலேயே ஒரு சைரந்திரியா, அல்லது தேவலோக பெண்ணா, கந்தர்வியா, பேசும் பொம்மையா? மகா ராணியா? பணியாளாக என்னால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லையே.'
உன்னைப்போன்ற அழகிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காகவே உனக்கு நான் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று நிச்சயித்து விட்டேன்.'

''தேவி, நான் யக்ஷியோ, கந்தர்வியோ, ராக்ஷசியோ, மகாராணியோ, ஒன்றும் இல்லை. ஒரு சாதாரணப் பெண், சைரந்திரி தான். கிருஷ்ணனுடைய தேவியர் சத்யபாமாவிற்கும், ருக்மணிக்கும், பாண்டவ மகாராணி துரோபதைக்கும் பணி புரிந்தவள். எனக்கு பூக்கட்டத் தெரியும், சிகை அலங்காரம் அவர்களுக் கெல்லாம் பண்ணியவள். மாலை தொடுக்க தெரியும். எனவே திரௌபதி தேவி என்னை மாலினி என்றே அழைப்பதுண்டு.  எள் என்பதற்கு முன் எண்ணையாக அவர்களுக்கு உழைத்தவள்.''

''அழகான பெண்ணாக இருக்கிறாயே. தனியாகவா வாழ்கிறாய். யார் துணை உனக்கு? உன் கணவன் யார், அவன் எங்கே ?

''கணவன் அல்ல. கணவர்கள். எனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்கள். எனக்கு எந்த ஆபத்தும் நேராமல் என்னை சதா காலமும் கண்காணித்து வருபவர்கள். எனவே எனக்கு யாராவது கெடுதல் புரிய முயற்சித்தால் அன்றிரவே அவன் மரணம் நிச்சயம். எனவே எனக்கு கவலையில்லை அம்மா.''

'' சைரந்திரி, நீ எனக்கு கிடைத்த பரிசு. உன்னை நான் விடப்போவதில்லை'' சந்தோஷமாக தலையாட்டிப் பேசினாள் சுதேஷ்ணை . பிறகென்ன? திரௌபதியும் விராடன் அந்தப்புரத்தில் ஐக்கியமானாள்.

சற்று நேரத்தில் மாட்டிடையன் கோலத்தில் ஒருவன் நுழைந்தான். வெளியூரிலிருந்து விராட நகரில் பிரவேசித்த அவன் நேராக அரண்மனை அருகே வந்தபோது அரசனிடம் கொண்டு செல்லப்பட்டான்.

''நீ யார், எந்த ஊர், இங்கெதற்கு வந்தாய்?""

கௌரவர்கள் ராஜ்யத்தில் ஆநிரை அதிபனாக நான் பணியாற்றியவன். என் பெயர் அரிஷ்டநேமி . பிறகு பாண்டவர்களிடம் பணி புரிந்தவன். என் மேல் யுதிஷ்டிர மகாராஜா அபிமானம் உடையவர். அவர்கள் இப்போது ஆட்சியில் இல்லாததால் நான் வேறு வேலை தேடி இங்கே வந்தேன்'' என்றான் சஹாதேவன்.

''அடேடே நீ ரொம்ப பெரிய இடத்தில் இருந்து வந்திருக்கிறாய். அது சரி, பாண்டவர்களுக்கு நீ என்ன வேலை செய்தாய்?""

'' பிரபோ, பாண்டவர்களிடம் லக்ஷம் பசுக்கள் உண்டு. அவற்றை பராமரிப்பது சாதாரண காரியம் அல்ல. பசுக்கள், அவற்றின் குணம், முன் பிறப்பு, பல் அமைப்பு, நெற்றியில் சுழி போன்ற சாஸ்த்ரங்களில் நான் அநுபவப் பட்டவன். இதனால் தந்திர பாலன் என்ற பெயரும் உண்டு''

விராடனுக்கு இவனையும் பிடித்து விட்டதால் அரண்மனையில் பசுக்களைகாத்து நிர்வகிக்கும் வேலையில் அமர்ந்தான். விராடனும் இனி தனது ஆநிரைச் செல்வத்துக்கு எந்த குறையும் இல்லை, வளமாக பெருகும் என்று மகிழ்ந்தான்.

வாசலில் யாரோ தயங்கி நிற்பதை காவலாளிகள் சொல்ல விராடன் முன்னே ஒரு புதிய உருவம் நின்றது.
ஆஜானுபாகுவான சரீரம் கொண்ட ஒரு பெண். ஆபரணங்கள் அணிந்து அழகாகவும் இருந்தாள் .அரசனை வணங்கி நின்றாள் .

''யார் இவள், எங்கிருந்து வந்தவள், எதற்கு என்று விசாரியுங்கள்''

" அரசே, நான் ஆடல் பாடல்களில் தேர்ந்தவள். உங்கள் பெண் உத்தராவுக்கு நாட்டியம், சங்கீதம், நடனம் எல்லாம் கற்றுத்தர ஆசைப்பட்டு இங்கு வந்தேன். என் பெயர் ப்ரஹன்னளா .

எங்கே ஒரு நாட்டியம் ஆடு என்று ஆணையிட்டான் விராடன். அர்ஜுனன் ஊர்வசியை மனதில் வேண்டி ஆடினான். நேர்த்தியான அந்த நடனம் விராதனை மயக்க உத்தராவின் அந்தப்புரத்துக்குள் ப்ரஹன்னளை நுழைந்தாள் .

விராடனின் அரண்மனையிலிருந்து ஒருவன் வேகமாக அரசனிடம் வந்து யாரோ ஒரு வாலிபன் நமது குதிரைகளுடன் பழகுகிறான். அவையும் அவனிடத்தில் மிக்க அன்பாக நேசமாக பழகுகின்றன. அவனை இங்கே அழைத்து வந்திருக்கிறோம் மகாராஜா.''

''யாரப்பா நீ, உன்னைப்பற்றி நல்ல விஷயங்கள் என் காதில் விழுந்தனவே.''

''மகாராஜா, நான் அஸ்வசாஸ்திரம் பயின்றவன். க்ரந்திகன் என் பெயர். குதிரைகளை எப்படி எதிரிகள் படையில் ஆபத்தின்றி உள்ளே செல்வது, வெளியே வருவது வேகமாக தேரில் எப்படி பல குதிரைகள் ஒன்றாக, ஒரே வேகமாக, ஒரே பக்கமாக, தேர்ப் பாகன் கூட இல்லாமல் செல்ல இயலும் என்று பழக்குபவன். எதிரே நோக்கி வரும் ஆயுதங்கள் தன்மையை அறிந்து தப்பிக்க அவற்றின் மார்க்கங்களிலிருந்து மறைய சொல்லிக் கொடுப்பவன். இந்த்ரப்ரஸ் தத்தில் அர்ஜுன மகாராஜாவுக்கு தேர்க் குதிரைகளை பாதுகாத்து வந்தேன். இப்போது தான் அவர்கள் எங்கே என்றே தெரியவில்லையே''

''கெட்டிக்காரனப்பா நீ.உனக்கு என்னுடைய தேர்கள், குதிரைகள் அனைத்தையும் வசதியாக தங்குமிடமும் தருகிறேன்'' நகுலன் விராடனின் குதிரைகளிடையே குதிரையாக வாழ்க்கையை துவங்கினான்.

பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் இவ்வாறு  துவங்கியது. நாட்கள் ஓடின.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...